Wednesday 15 July 2015

என் ஊர் அம்பாசமுத்திரம்.

என் ஊர் அம்பாசமுத்திரம்.

அங்கே ஒரே தெருவில் தேவாலயமும் பள்ளிவாசலும் சுடலைமாடனும் இலங்கத்தமன்
கோவிலும் இருக்கும் தெருவில் பிறந்தவன்.

எங்கள் தாத்தாவின் உயிர்நண்பர் பெயர் fakhir என்பது ஆனால் அவரை எல்லாரும்
பக்கிரி என்றுதான் அழைப்பார்கள்.
எங்கள் நண்பர் பெயர் shaik என்பது நாங்கள் அவனை (ச்)சேக்கு என்றுதான் அழைப்போம்.

அவன் குடும்பத்திலேயே அப்படித்தான் உச்சரிப்பார்கள்.
பங்கு என்று ஒரு சிறுவன் இருந்தான் அவனுடைய பெயரினுடைய உண்மையான
உச்சரிப்பு தெரியவில்லை.
எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஒலி என்ற பெயரை தனக்குப் பின்னால்
சேர்த்துக்கொள்ளும் இசுலாமியர்கள்.
அந்த வீட்டு அக்காவை எங்கள் அம்மா ஒலிப்பிள்ளை என்றுதான் குறிப்பிடுவார்கள்
அதாவது இசுலாமியப் பெயர் தமிழ் உச்சரிப்பு பெற்றிருக்கும்.
இசுலாமியர்களே அப்படித்தான் உச்சரிப்பார்கள்.

மறவரிலிருந்து 50ஆண்டு முன்பு இசுலாத்துக்கு மாறிய குடும்பத்துப் பையன்
திவான் ஒலி என் தம்பியின் உயிர்நண்பன்.

திருநெல்வேலி மாவட்டத்திர் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் என்று ஒன்று உண்டு.
தீராத நோயாளிகள் எம்மதத்தினரானாலும் அங்கே கொண்டு சேர்க்கலாம்.
நோய்தீரும்வரை அல்லது சாகும்வரை அங்கே எளிமையான (சித்த)இயற்கைவழி
சிகிச்சை அளித்து பராமரிப்பார்கள்.

தமிழகத்திலேயே அதிகம் இசுலாமியர் வாழும் பொட்டல்புதூர் நெல்லை மாவட்டம்தான்.
அங்கே எங்கள் பெரியப்பா வீடு உள்ளது.
அதன் உள்ளே கல்மண்டபம் தமிழ் கோயில்கள் மாதிரியேதான் இருக்கும்.
அங்கே பேருந்து நிற்கும்போது எல்லாமதத்தினரும் கீழே நிற்பவரை அழைத்து
சில்லறைகளை கொடுத்து வெளிப்பக்க உண்டியலில் போடச்சொல்வார்கள்.
யாருமில்லாவிட்டால் சில்லறையை உண்டியல் பக்கம் எறிந்துவிடுவார்கள்.
யாராவது அதைக் கண்டால் உண்டியலில் எடுத்துப் போட்டுவிடுவார்கள்.

எங்கள் தெருவில் பானுஅத்தை என்று ஒருவர் இருக்கிறார்.
அவர் இசுலாமியப் பண்டிகைகளின் போது தெருமுழுக்கவும் கறிபிரியாணி கொடுத்துவிடுவார்.
நாங்கள் தளவாய்மாடனுக்கு கிடாவெட்டும்போது அவர்களுக்கு கொடுப்போம்.

எங்கள் ஊர்(சாதி)மடம் அருகிலேயே மாயாண்டி கோவில் உண்டு.
அதனுள் பூடம் கட்டி இசுலாமியப் பிறை போட்ட ஒரு சாமி இருக்கும்.
கொடையன்று ஒருநாள் இசுலாமியர்களை அழைத்து ஒரு பூசை நடக்கும்.
பாட்டெல்லாம் படிப்பார்கள்.
அதன்பின்னால் என்ன கதை என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்த முறை ஊருக்கு போகும்போது அதைப்பற்றி கேட்டு பதிவிடுகிறேன்.

நான் சிறுவயதில் திண்ணையில் தவழ்ந்து கொண்டிருப்பேன்.
எங்கள் தெருவில் பழைய பாத்திரங்கள் விற்கவரும் ஒரு தாத்தா குல்லா போட்டிருப்பார்.
அவருக்கு குடும்பம் கிடையாது.
அவர் தொழுகைக்குப் போகும்போது என்னைத் தூக்கிக்கொண்டு போவார்.

பள்ளிவாசலில் உடல்நலமில்லாத குழந்தைகளை மந்திரிக்க எல்லா மதத்தினரும் வருவார்கள்.
செங்கோட்டையில் எங்கள் மாமா வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் இசுலாமியர்கள்.
எப்போது பிரியாணி செய்தாலும் கொடுத்தனுப்புவார்கள்.

2008 ல் தென்காசியில் இந்து முன்னனி மற்றும் ஒரு இசுலாமியக் குழு மோதிக்கொண்டனர்.
இரண்டு பக்கமும் 7,8பேர் வெட்டிக்கொண்டு செத்தனர்.
ஆனால் துளியும் சலசலப்பு ஏற்படவில்லை.

பல மாநிலங்கள் சுற்றியிருக்கிறேன்.
மெய்சிலிர்க்கும் இந்த மதம் தாண்டிய  இனவொற்றுமையை தமிழர்களன்றி
வேறெங்கும் நான் பார்த்ததில்லை.

https://m.facebook.com/photo.php?fbid=336032163167110&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment