Wednesday 15 July 2015

தமிழ் மதமானால்...

தமிழ் மதமானால்...

தமிழர்கள் வல்லரசாக இருந்தபோது
வேற்றினத்தாரிடம் தமது கொள்கைகளையும் கருத்துக்களையும் திணித்திருந்தால்?

கைப்பற்றிய இடங்களிலெல்லாம் தமிழர்களைக் குடியேற்றியிருந்தால்,

இனக்கலப்பு நடத்தி தமது எண்ணிக்கையைப் பெருக்கி தமது பழக்கவழக்கங்களை திணித்திருந்தால்,

இன்று இந்திய துணைக்கண்டமும், கிழக்கு ஆசியா முழுதும், உலகில் ஆங்காங்கும்
.
.
.
.
மக்கள் பிள்ளைகளுக்கு மொட்டைபோட்டு தாய்மாமன் மடியில் வைத்து காது குத்துவார்கள்.

பொங்கல் உலகம் முழுவதும் அரசு விடுமுறையுடன் கொண்டாடப்படும்.

முருகன்கோவில்கள் எல்லாநாடுகளிலும் இருக்கும்.

காவடி தூக்குதல் அலகு குத்துதல் ஆகியவை உலகம் முழுவதும் நடக்கும்.

திருக்குறள் பல நாடுகளில் புனித நூலாக அறிவிக்கப்பட்டு,
பலதரப்பட்ட மக்கள் தமிழ்கற்று அதைப் படித்திருப்பார்கள். சட்டதிட்டங்கள் அதன்படி அமைக்கப்பட்டிருக்கும்

உலகம் முழுவதும் தமிழ்ப்பெயர்கள் வைக்கப்படும்.

தமிழ் நாள்காட்டி உலகம் முழுவதும் பின்பற்றப்படும்.

வேளாண்மை, கப்பல்துறை என இரண்டும் தமிழர்கள் இந்த உலகுக்கு அளித்த கொடை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.

தமிழ் எழுத்துகளும் எண்களும் உலகமொழிகளிலும் தொழில்நுட்பத்திலும் ஆதிக்கம் செலுத்தும்.

இராசராச சோழனின் வாழ்க்கையை உலகமே படிக்கும்.
அவரை இறைமகன் என்றிருப்பார்கள்.
உலகம் முழுவதும் அவருக்கு சிலை வைத்திருப்பார்கள்.

உலகம் முழுக்கத் தமிழர்களின் உடையமைப்பைப் பின்பற்றுபவர்கள் இருப்பார்கள்.

திருநீறு இடுவதும், வேல்சின்னத்தைக் கழுத்தில் அணிவதும் பரவலாகக் காணப்படும்.

மீனாட்சியம்மன் கோவில் தலைமைப் பூசாரி உலக அரசியலையே தன் கைக்குள் வைத்திருப்பார்.

தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

தமிழர்கள் மேல் சிறு கீறல் விழுந்தாலும் உலகமே பிரச்சனைக்கு உள்ளாகும்.

பிரபாகரனாருக்கும் வீரப்பனாருக்கும் பெரிய அளவில் ஆதரவாளர்கள் கிடைத்திருப்பார்கள்.

அகழ்வாராய்ச்சி நடந்து தமிழினப் பழமை நிறுவப்பட்டு தாமே மூத்தகுடி என்ற பெருமையுடன் தமிழர்கள் வலம் வருவார்கள்.

வரலாற்றில் பெரிய பெரிய வல்லரசுகள் தோன்றியிருக்கும் அவர்களால் பாதி உலகமாவது கைப்பற்றப்பட்டு தமிழுணர்வு உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கும்.

தற்போது தமிழருக்கென்று பல்வேறு நாடுகள் இருந்திருக்கும்.

உலகில் தமிழ் பேசுவோரும் கற்போரும் கனிசமான அளவு இருந்திருப்பார்கள்.

உலகம் முழுவதும் முறைப்பெண்களை மணத்துகொள்ளும் வழக்கம் காணப்படும்.

சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் குறைகளைக் கண்டுபிடிக்கவே ஒரு கூட்டம் இருக்கும்.

உலகம் முழுவதுமிருந்து தமிழகத்துக்கு மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள்.

தமிழர்களால் அடிமைப்படுத்தப்பட்டு தமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை இழந்த அதே மக்கள்
தமிழுக்காக தமிழருக்காக உயிரைவிடவும் ஆயத்தமாக இருப்பார்கள்.

தமிழின் பெயரால் பல போர்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடந்தபடி இருக்கும்.

தாய்மண் தமிழர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்திருப்பார்கள்.

உலகின் தாய்மண்ணில் பல்வேறு பிரச்சனைகளால் அல்லல்படும் மக்கள் தமிழ் மதத்திற்கு மாறியபடி இருப்பார்கள்.

(கோடியில் ஒருவன்
இறைமறுப்பாளன்
https://m.facebook.com/photo.php?fbid=479366048833720&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

தமிழர் மதம்
https://m.facebook.com/photo.php?fbid=368994183204241&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 )

No comments:

Post a Comment