Tuesday, 18 November 2025
இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
Friday, 11 October 2024
ஆய்த பூசனை
Saturday, 28 September 2024
மூவேந்தர் மற்றும் பாரி மோதல் பற்றி
Wednesday, 28 August 2024
தேவேந்திரர் தாழ்ந்தது எவ்வாறு
தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை
Tuesday, 13 February 2024
குலாலா மட்டும் இல்லன்னா
Monday, 19 June 2023
இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்
Friday, 17 April 2020
இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்
ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.
அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.
மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.
நளிமலை :-
நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும் குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.
நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!
குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்: கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.
சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.
--------------
கண்டீரமலை :-
நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------
தோட்டிமலை :-
தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.
இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.
பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------
குதிரைமலை :-
தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.
பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.
நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.
உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.
குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.
Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------
ஏழில்மலை :-
ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
(ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).
இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.
[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
இங்கே எருமைகள் மிகுதி.
கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
"நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]
ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.
யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.
ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------
முதுமலை:-
சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------
குடகு மலை:-
குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.
குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.
குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.
குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.
காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.
குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.
குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.
ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.
இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
Tuesday, 7 April 2020
இலக்கியத்தில் எருமையூர்
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.
ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும் ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு
Wednesday, 6 November 2019
குறளை
குறளை
குறள் வேறு! குறளை வேறு!
கோதை (அதாவது ஆண்டாள்) "திருக்குறள் ஓதமாட்டோம்" என்று சொல்ல நினைத்திருந்தால்
"தீக்குறளை ஓதோம்" என்று மட்டும் கூறியிருக்கலாம்.
அதென்ன 'சென்று' ஓதுவது?!
ஒருவேளை அக்காலத்து பாடசாலை படிப்பு சொல்லிக் கொடுக்கும்போது திருக்குறளையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் இல்லையா?!
அங்கு 'சென்று' ஓதமாட்டோம் என்று கூறியிருக்கலாம் இல்லையா?!
அப்படியே சொல்ல நினைத்திருந்தால் "தீக்குறளைச் சென்றோதோம்" என்று 'ச்' போட்டு சொல்லியிருக்க வேண்டும்.
என்றால் கோதை கூறிய பொருள் என்ன?!
அவள் கூறவந்ததோ "தீக்குறளையைச் சென்றோதோம்" என்றுதான்.
ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் கூறிவிட்டால் அதாவது 'யை' தொக்கிவிட்டது.
அதாவது மறைந்துவிட்டது.
குறளை என்றால் என்ன?!
"குறளை ஓதுதல்" என்றால் "கோல் மூட்டுதல்" அல்லது "புறம் பேசுதல்" என்று பொருள்.
ஒருவரிடம் கேட்டதை அவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் 'சென்று' கூறி கோள் மூட்டமாட்டோம் என்கிறாள் கோதை.
பொதுவாக புறங்கூறுதல் பெண்களின் குணம் என்பார்கள்.
கோதையும்
"நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்;
மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்"
என்று பெண்கள் செய்வதை தொடர்ச்சியாகக் கூறும்போதுதான் இதையும் சொல்கிறாள்.
'குறளை' பற்றி பெருஞ்சித்திரனார் தனது "திருக்குறள் மெய்ப்பொருளுரை" யில் எழுதியுள்ளார்...
‘கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி'
- நாலடியார் 1891
‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென'
- மணிமேகலை 30:68
‘குறளையுள் நட்பளவு தோன்றும்’
- திரிகடுகம் 371
‘பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்’
- ஆசாரக்கோவை 381
‘கடையாயார் முன்னின்று கூறும்
குறளை தெரிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு'
- பழமொழி நாற்பது 13.34
‘பொருளல்லார் கூறிய பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1471
‘காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1932
‘குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது'
- முதுமொழிக்காஞ்சி 74
‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் நான்கும்
மறலையின் வாயின வாம்’
- ஏலாதி 28:3-4
'கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்'
- கந்த சஷ்டி கவசம்
குறள் என்றால் குறுகிய என்று பொருள் உண்டு.
திருக்குறள் குறுகத் தரித்ததால் அப்பெயர் பெற்றது.
குறளை என்பது வேறு!
"ஆண்டாள் ஒரு பாப்பாத்தி!
அவள் தமிழர் வேதமான திருக்குறளை ஓதமுடியாது என்று கூறிவிட்டாள்"
என்று ஒரு சிலர் பார்ப்பனரை தமிழர் இல்லை என்று திரித்துக் கூற முற்படுகின்றனர்.
அந்த சதிகாரர்கள் பேச்சை நம்பவேண்டாம்.
பார்ப்பனர் தமிழரே!
Wednesday, 24 July 2019
சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு
சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு
பாண்டிய மன்னன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் என்பவன் திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன சைவ குரவரின் பேச்சைக் கேட்டு எண்ணாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படுவது உண்மையா???
இல்லை!
சமணர் கழுவேற்றம் என்பது உண்மையில் நடந்த சம்பவமல்ல.
அது ஒரு கற்பனையான பழைய நம்பிக்கை மட்டுமே!
அதை தொன்மம் என்று கூறமுடியுமே தவிர வரலாறு என்று ஒத்துக்கொள்ள ஆதாரங்கள் வேண்டும்.
சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு ஆதாரமாக திராவிட தத்துவவாதிகள் காட்டுவது கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமய பக்தி இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் உள்ள கற்பனைகளைத் தான்.
ஆனால் சமணரை வாதத்தில் வென்ற (கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய பாடல்களில் கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
அவர்கள் சமணர்களை வாதத்தில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டுமே செய்துள்ளனர் என அறியமுடிகிறது.
250 ஆண்டுகள் கழித்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் நாயன்மார்களின் இலக்கியங்களை சேகரித்து தொகுத்து அதற்கு அவர் உரை எழுதுகிறார்.
அதுவே பெரிய புராணம் ஆகும்.
அதில்தான் நாயன்மார்களுக்கு ஆன்மீக சக்தி இருப்பதாகக் காட்ட பல புனைவுக் கதைகள் செருகப்பட்டன.
சுண்ணாம்புக் காளவாசலுக்குள் இருந்து உயிருடன் வந்தது,
வெள்ளெலும்பை ஒரு பெண்ணாக மாற்றியது,
கோயில்க் கதவுகளைத் திறக்கவும் மூடவும் பாடியது,
சமணர் கழுவேற்றம் போன்ற பல கற்பனைக் கதைகள் பின்னிட்டு சேர்க்கப்பட்டன.
இவற்றை ஆதாரங்களாக எந்த வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கமாட்டார்கள் (திராவிட தத்துவவாதிகளைத் தவிர!).
கழுவேற்றம் நடந்தது குறித்த கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ எதுவுமே இல்லை.
சமணர்களின் நூல்களில் கூட கழுவேற்றம் நடந்தது குறித்த சான்றுகள் காணப்படவில்லை.
இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.
கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் சமண மடாலயங்களும், சமணக் கோயில்களும் கி.பி. 10ம் நூற்றாண்டு முதல் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் செழிப்புடன் இருந்துள்ளன என்பதை கோ.செங்குட்டுவன் எழுதிய "சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்" எனும் நூல் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.
கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கூட ஒரு சமணன் தான்.
எண்ணாயிரம் என்பது வணிகர் குலப்பெயர்.
அக்காலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் (எ-டு: கோவலன்).
வணிகர்கள் எண்ணாயிரத்தவர் கூட்டம் நாலாயிரத்தவர் கூட்டம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
கொள்ளையர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய வணிகர்கள் பத்தாயிரம் நபர்கள் முதல் நானூறு நபர்கள் வரையுள்ள குழுக்களாகத் தான் இருப்பார்கள்.
ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய போர்ப்படையாகவே அவர்கள் இருப்பார்கள்.
(கோவலனுடைய இது போன்ற வணிகப் படையே மதுரையை எரித்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு)
அது போன்ற ஒரு எண்ணாயிரத்தவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகன் (எண்ணாயிரம் சமணன்) செய்த ஏதோவொரு குற்றத்திற்காக அவன் கழுவேற்றப்பட்டிருக்கலாம்.
அதை வைத்துக் கொண்டு எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற திரைக்கதை உருவாக்கப்பட்டு பரப்புரை நடபெறுவதாகவே ஊகிக்க முடிகிறது.
இந்த கட்டுக்கதையை தமிழ்ச் சமூகம் எந்தவித ஆய்வுமின்றி ஏற்றது தான் திராவிடத்தின் திட்டமிட்ட சதி.
தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு
மண்டபச் சுவரிலும்,
புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலிலும்,
திருச்செந்தூர் கோயிலிலும்,
வைகுந்த பெருமாள் கோவிலும்
காஞ்சி கோவிலிலும் (இதன் தலை சிதைக்கப்படுள்ளது) கழுவேற்ற சிலைகள் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் கழுவேற்றும் ஓவியங்கள் உள்ளன.
மேற்கண்ட அனைத்திலுமே கழுவேற்றப்பட்ட மனிதனின் சிலை நீளக்குடுமி,மீசை தாடியுடன் காணப்படுகிறது.
சமண முனிவர்கள் மீசை மழித்து மொட்டையடித்து இருப்பவர்கள்.
ஆகவே இதை எப்படி ஆதாரமாகச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை.
எந்த மூல ஆதாரங்களையும் காட்டாமல் இப்படியான பிற்கால பின்னொட்டு சான்றுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டே போவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்?!
உண்மையில் சமணர் மொட்டைத் தலையுன் இருந்தனரா?!
இதற்கு ஒரு சான்றினைப் பார்ப்போம்.
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி.
(சமணர் அதிகம் வாழ்ந்த ஊர்.
இங்கே இருக்கும் சமண கோவில் இன்றும் இயங்கிவருகிறது.
செயங்கொண்டார் சமணரா என்பது தெரியவில்லை)
இவர் பாடிய கலிங்கத்துப் பரணி சமணரின் தோற்றம் பற்றி கூறுகிறது.
அதாவது முதலாம் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்கத்து படைவீரர்கள் தலையை மழித்துக்கொண்டு தாங்கள் சமணர் என்று பொய்கூறி தப்பிக்கப் பார்த்ததாக கூறியுள்ளார்.
சரி! இந்த சமணர் கழுவேற்றத் திரைக்கதையை திராவிட தத்துவவாதிகள் இன்றும் ஓட்டி வரக் காரணம் என்ன??
தமிழ் வளர்த்த சைவ சமயத்தை பார்ப்பன மயமானது என்றும் பார்ப்பனர்கள் மற்றும் பாண்டியர்கள் இனப்படுகொலை செய்யுமளவு கொடூரமானவர்கள் என்றும் நம்பவைப்பதற்காக மட்டுமே இந்தச் “சமணர் கழுவேற்றம்” என்ற பொய்யை திராவிட தத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
சமணர் கழுவேற்றம் எனும் கட்டுக்கதை உருவானதும் பரவியதும் எப்படி?!
இக்கதையை முதன்முதலாக உருவாக்கிய நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள்.
இதனாலேயே இவர்களது நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.
நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு கற்பனையைப் பதிவு செய்கிறார்.
சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடச் செய்கிறார்.
பிற்பாடு அருணகிரிநாதர் கூட இந்த கழுவேற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கழுவேற்றம் எனும் சடங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் நடத்தபடும் திருவிழா நாடகங்களில் இடம்பெற்று வந்தது.
பெரியபுராணம் 1860 களில் அச்சில் வெளிவந்த பிறகு மீண்டும் இந்த கட்டுக்கதை மக்களிடையே பிரபலமாகிறது.
வள்ளலார் இது பற்றி மனம் பதறி சிவனிடம் முறையிடுவது போல எழுதியுள்ளார்.
அதன்பிறகு தமிழறிஞர்களுக்கு இடையே நடந்த விவாதங்களில்
அ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர், மயிலை. சீனி.வெங்கடசாமி போன்றோர் சமண கழுவேற்றம் உண்மை என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா.ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய பெரும்பாலோர் சமணர் கழுவேற்றம் நடந்திருப்பதாக கூறுவதை மறுத்திருக்கின்றனர்.
இதையெல்லாம் விட தமிழ்ச் சமண அறிஞரான டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களும் நன்கு ஆராய்ந்து "இது வரலாற்றுச் சம்பவம் அல்ல" என்று முடிவாகக் கூறியுள்ளார்.
ஆக,
சம்பந்தர் , அப்பர் தேவாரங்களில் வாதத்தில் தோற்ற சமணர் தண்டிக்கப்பட்டதற்கான அகச்சான்றுகள் இல்லை.
பல்லவ , பாண்டிய, சோழர்கள் வெட்டிய அனைத்து கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.
சமணர்களை கழுவிலேற்றிக் கொன்றதாக பாண்டியர்கள் மீது வீண்பழி போடப்படுகிறது.
ஆனால் உண்மையில் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகும் சமணர்க்கு குகைகளும் கற்படுக்கைகளும் பாண்டியர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அவை வருமாறு,
மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை
( சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்டது)
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
(யானைமலை நரசிங்கர் குடைவரை
பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது)
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை.
இத்தனை குழப்பத்திற்கும் காரணம் யார்?!
12 ஆம் நூற்றாண்டில் சோழர்களுடன் திருமண உறவின் மூலம் கலந்த சாளுக்கியர் அநாபய சாளுக்கியன் காலத்தில் சோழ அரசைக் கைப்பற்றி சோழர் என்ற பெயரிலேயே ஆட்சி செய்கிறார்கள்.
இவர்கள் சைவ மதவெறியர்கள்.
பாண்டியநாடு வரை இவர்கள் ஆட்சியே என்பதால் பாண்டியர் மீது களங்கம் கற்பிக்கும் இந்த கழுவேற்ற கட்டுக்கதை இவர்கள் தூண்டுதலால் உருவாக்கப்படுகிறது.
மற்றபடி சமணரே கூட இப்படி ஒரு பழியை பாண்டியர் மீது போடவில்லை.
சமண மதம் சார்ந்த புராணங்களிலேயோ நூல்களிலோ கல்வெட்டுகளிலேயோ கூட கழுவேற்ற சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.
கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்படும் 7 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணர்கள் தமிழில் எழுதிய நூல்கள் வருமாறு,
1. சிந்தாமணி
2. வளையாபதி
3. நீலகேசி
4. யசோதர காவியம்
5. உதயணகுமார காவியம்
6. சூளாமணி
7. பெருங்கதை
8. நன்னூல்
9. சூடாமணி நிகண்டு
10. யாப்பெருங்கலக் காரிகை
11. யாப்பெருங்கலம்
12. அமுதசாகரம்
13. அருங்கலச் செப்பு
14. அறநெறி சாரம்
15. திருநூற்றந்தாதி
16. திருப்புகழ்ப் புராணம்
17. மேருமந்தர புராணம்
18. திருக் கலம்பகம்
19. தீபக்குடி பத்து
20. ஸ்ரீ புராணம்
சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன.
சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?
கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
இவர்களுள் ரொமிலா தாபரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும் அடங்குவர்.
இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுக்கப்படவில்லை.
சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று தீக்கதிரில் கட்டுரை எழுதிய (தெலுங்கரான) கம்யூனிஸ்டு
அருணன் கூட சரியான முறையில் இதுவரை இதை மறுக்கவில்லை.
முடிவாக,
கன்னட சாளுக்கியரால் உருவாக்கப்பெற்று
மதுரை தெலுங்கு நாயக்கர்களால் பரப்பப்பட்டு
வந்தேறி திராவிடவாதிகளால் மெருகேற்றப்பட்டு
தமிழர் மீது போடப்படும் வீண்பழியே "சமணர் கழுவேற்றம்" எனும் கட்டுக்கதை!

