Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts

Tuesday, 18 February 2025

1920 இல் இந்தியெதிர்ப்பு

1920 இல் இந்தியெதிர்ப்பு

 இந்தியை முதலில் எதிர்த்து போராடியவர் ஈழத்தமிழரான ஈழத்தடிகள் என்று அறிவோம்! 
 அதன்பிறகு அவருடன் இணைந்து சோமசுந்தர பாரதியார் மற்றும் மறைமலையடிகள் ஆகியோர் இணைந்து போராடி இந்தியெதிர்ப்பு போரை நடத்தி வெற்றி கண்டனர்.
 அதில் கடைசியாக வந்து ஒட்டிக்கொண்டது தான் திராவிடம்! 
 ஆனால் இவர்களுக்கு முன்பே (ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நடுவே இருக்கும் பாம்பன் இல் வாழ்ந்த) பாம்பன் சுவாமிகள் 1899 ஆம் ஆண்டிலிருந்தே இந்தி திணிக்கப்படும் என்று உணர்ந்து அதை எதிர்த்து பேசிவந்துள்ளார்.
 சைவ அடியாரான இவர் எழுதிய நூல் 1920 இல் அச்சேறிய பிரதி உள்ளது.
 "இந்தி முதலிய வேறு பாடைகளை 
இந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும்
வடநாடரது சுயநலத்தினை ஆதரித்தல் தமிழர்
கடன்மை யன்று"
-திருப்பா, நூன்முகம், பக்.17

 அதாவது தமிழகத்தில் இந்தி திணிக்கப்படும் அதை தமிழர்கள் ஆதரித்தல் கூடாது தெளிவாகவே கூறியுள்ளார்.

நன்றி: கதிர் நிலவன்

Saturday, 8 July 2023

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

கற்பனையில் கொல்லப்பட்ட நந்தனார்

 நந்தனார் பற்றிய முதல் குறிப்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது.
 அதில் ‘செம்மையே! திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’ என்று மட்டும் வருகிறது.
 அதாவது சிவ பக்தி உள்ளவர்களுக்கு நான் அடிபணிகிறேன் என்று பல சிவ பக்தர்களைக் குறிப்பிடும்போது 'நாளைப் போவார்' என்று அறியப்பட்ட ஒரு சிவ பக்தரைக் குறிக்கிறார்.
 இதில் அவர் இயற்பெயரோ ஊரோ சாதியோ செயல்களோ எதுவுமே குறிக்கப்படவில்லை.

 அதன் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பத்தாம் நூற்றாண்டில் 'நம்பியாண்டார் நம்பி' மேற்கண்ட குறிப்பை தம் கற்பனையால் கொஞ்சம் விரித்து எழுதுகிறார்.

 'நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே'
 எனது பார்வையில் இதன் பொருள்,
"தில்லை நடராஜர் அருள் பெற்ற நாளைப் போவான் என்பவன், வெளியே இருந்த தொண்டன், தன் அசுத்தம் நீங்கி, தில்லை அந்தணர்களும் வணங்கும் முனிவன் ஆனான்" என்கிறார். இவருடைய ஊர் ஆதனூர் என்றும் குறிக்கிறார்.  

  இதில் வரும் புன்புலை என்கிற சொல்லே எல்லா குழப்பத்திற்கும் காரணம்.
 புன் மற்றும் புலை இரண்டுமே அசுத்தமான எனும் பொருளும் தரும். எனவே 'புன்புலை போய்'  என்பதன் பொருள்  'பாவ அசுத்தம் நீங்கி' என்று என்று நான் கொள்கிறேன். ஒருவர் அசுத்தமானவர் என்கிற எண்ணம் பார்த்தவுடன் வருகிறது என்றால் அது தொழுநோய் போன்ற நோயாளிகள் மீதுதான் வரும். அத்தகையோரை 'செய்த பாவத்தின் பலன்' என்று மக்கள் தூற்றுவது உண்டு. எனவே நோய்த் தொற்று கொண்ட ஒருவர் சிவனைச் சரண்டைந்து கோவிலுக்குள் போகாமல் வெளியே இருந்து வணங்கி வந்துள்ளார் என்று கொள்ளலாம். அவர் காண்போரிடம் நம்பிக்கையுடன் தான் குணம் பெற்று கோவிலுக்குள் 'நாளைப் போவேன்' என்று நெடுங்காலம் கூறியதால் அவருக்கு 'நாளைப் போவார்' சாமி என்று பெயர் வந்திருக்கலாம். அவர் நாள்தோறும் தில்லை அந்தணர் ஓதுவதைக் கேட்டு மனப்பாடம் செய்து தானும் வெளியே ஓதியிருக்கலாம். திடீரென்று அந்த நோய் நீங்கப் பெற்று நன்கு ஓதும் திறத்தால் தில்லை அந்தணரை விட உயரிய அடியார் நிலையை அடைந்துள்ளார். 
 எனது பார்வையில் 'நம்பியாண்டார் நம்பி' கூறவந்த கருத்து இதுவே! 
 இதுவும் அவருடைய ஊகமாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்க வேண்டும்.


 மேலும் இந்த புலை எனும் சொல் புலையரைக் குறிக்காது.  ஏனென்றால் புலையர் பற்றி இழிவாக தமிழ் இலக்கியத்தில் இல்லை. உயர்வாகவே குறிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்களும் செய்துள்ளனர்.

 நம்பியாண்டார் நம்பி காலத்திற்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து பனிரெண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் மேற்கண்டவற்றை தம் கற்பனையால் மேலும் விரிவாக்குகிறார்.

 'நாளைப் போவார்' சேக்கிழாரால் 'நந்தன்' என்று பெயர்பெறுகிறார். இதில் "புன்புலை" என்ற சொல் சேக்கிழாரால் தவறாகப் பொருள் உணரப்பட்டு அவர் புலையர் என்று எழுதுகிறார் (சங்க காலத்தில் புலை, புலையர் இரண்டும் வெவ்வேறு பொருள் வழங்கி வந்துள்ளது. வள்ளுவர் கூட புலை வினைஞர் என்றுதான் கூளியுள்ளார்). 
 தான் புலையர் என்பதால் கோவிலுக்குள் வரத் தயங்கிய நந்தனாரின் கனவில் இறைவன் தோன்றி தீயில் இறங்கி உடலைத் துறந்து தன்னை அடையச் சொன்னதாகவும் அதேபோல தில்லை அந்தணர் கனவிலும் சொன்னதாகவும் அவ்வாறே நந்தன் வந்து தீயில் இறங்கி அந்தண வடிவெடுத்து இறைவனை அடைந்ததாகவும்  எழுதுகிறார். 

 அதாவது உண்மையான திருநாளைப் போவாருக்கும் சேக்கிழார் உருவாக்கிய நந்தனுக்கும் குறைந்தது 350 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது.

புலையர் கீழ்ச்சாதி என்று கூறவரும் அதே சேக்கிழார் புலையர் பற்றி கூறுவதில் கூட இழிவாக எதுவும் இல்லை. 
அன்றைய புலைப்பாடி எப்படி இருந்தது என்று சேக்கிழார் கூறுகிறார்,
 ஊருக்கு வெளியே வயல்வெளிகள் அருகே திறந்தவெளி நிலம்,
 சமூக ஒற்றுமையுடன் வாழ்கின்ற உழும் தொழில் செய்யும் உழவர்கள்,
 வைக்கோல் கூரை வேயப் பெற்ற சிறிய குடிசைகள்,
 அவற்றின் மீது சுரைக்காய் கொடிகள், 
வாசல் முன்பு கிழித்து காயத் தொங்கவிடப்பட்ட தோல் பட்டைகள், 
குஞ்சுகளுடன் மேயும் கோழிகள், 
நாய்களின் குட்டிகளைக் கவர்ந்து விளையாடும் இரும்பு சலங்கை அணிந்த சிறுவர்கள், 
உழத்தியர் (பெண் உழவர்கள்) தோலாலான தொட்டிலில் குழந்தைகளை உறங்குவித்தல், 
வஞ்சி மர நிழலடியில் புதைக்கப்பட்ட பானைகளில் கோழிகள் முட்டையுடன் அடைகாத்தல், 
தோல் வார்கள் கட்டிய பறைகள் தொங்குகின்ற மாமரங்கள், 
வங்குள்ள தென்னை மரங்கள் அவற்றினுள் ஈன்ற குட்டிகளுடன் உறங்கும் தாய் நாய்கள், 
இரவில் காவல் காக்கும் சாமக் கடைஞர்கள் அவர்களைக் கூவி அழைக்கும் சேவல்கள்,
 காஞ்சிமரத்தின் நிழலில் நெல் குத்தியபடி புலை மகளிரின் பாடுதல்,
(விசேச நாட்களில்) அருவிக் கரை சென்று நெற்கதிர்களையும் குவளை மலர்களையும் கூந்தலிற் செருகிய புலைச்சிகள் பறையொலிக்கு ஏற்ப கள்ளுண்டு ஆடுதல், (சங்க காலத்தில் இருந்து பெண்கள் கள் குடித்ததும் விற்றதும் சர்வ சாதாரணம்).

 இப்படியான புலைப்பாடியில் காவல் காக்கும் கடைஞர் இருந்த பகுதியில் நந்தன் வாழ்கிறார்.  இவருக்கு அரசு ஒதுக்கிய புன்செய் நிலம் இருந்தது (பறைத்துடவை - அதாவது பறையடித்து ஏலம் விட்டு கொடுக்கப்படும் நிலம்) அதன் உணவு உரிமை அதாவது குத்தகைக்கு விட்டு (இன்று பணம் பெறுவது போல அன்று) விளைச்சலில் ஒரு பகுதி பெறுவது அவருக்குக் கிடைத்தது. இவர் வெட்டிய மாடுகளில் இருந்து கிடைக்கும் தோல், நரம்புகள் மற்றும் பசு வயிற்றில் கிடைக்கும் ஒரு வகை வாசனைத் திரவியம் போன்றவற்றை கோவிலுக்குக் கொடையளித்து வந்துள்ளார். 
 நந்தன் விவசாயம் செய்தாரா?! அல்லது புலைப்பாடியில் கடைஞர் பகுதியில் இருந்ததால் பயிர் காவல் புரிந்தாரா? அல்லது மாடு வெட்டும் தொழில் செய்தாரா என்பது தெரியவில்லை. 
 மேற்கண்ட எதுவும் இழிவானதாகவும் தெரியவில்லை.

  நந்தன் தன் பிறப்பு தாழ்ந்தது என்று எதன் காரணமாக எண்ணினார் என்பது விளக்கப்படவில்லை. உயிர்க் கொலையும் சைவ மதத்தில் கண்டிக்கப்பட வில்லை. சேக்கிழாரே சிவன் சிவனடியார் வேடத்தில் வந்து கன்றுக் கறி கேட்டதாக எழுதியுள்ளார். 

 சேக்கிழாருக்கு 800 ஆண்டுகள் கழித்து கோபாலகிருஷ்ண பாரதியார் கி.பி.1850 களில் நந்தன் சரித்திரம் எழுதுகிறார். இதில் நந்தன் ஒரு பிராமண ஜமீன்தாரிடம் வதை படுவதாக எழுதுகிறார்.  அதன் பிறகு அயோத்தி தாசர் தனது பௌத்த கற்பனைகளைக் கலந்து எழுதுகிறார். நந்தன் சிற்றரசன் என்றும் அவர் பௌத்தர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அரசர் நுழையும் சிறப்பு வாசல் தான் தற்போது நந்தன் வாசல் என்றும் எழுதுகிறார்.  அதன் பிறகு திராவிட எழுத்தாளர்கள் நந்தனை சிதம்பரம் தீட்சிதர்கள் எரித்து கொன்றுவிட்டதாக எழுதினர்.
 பிறகு 1942 இல் நந்தன் ஒரு தீண்டத்தகாத பறையன் என்று உருவகித்து திரைப்படம் ஒன்றும் வந்தது. 

 இப்படி ஆளாளுக்கு 'நாளைப் போவார்' மீது தமது கற்பனைகளைத் திணித்துள்ளனர்.

 எவருடைய கற்பனையிலோ உதித்து இறந்த நந்தனின் கொலைப் பழியை இன்று வரை உயிருடன் இருக்கும் தீட்சிதர்கள் சுமக்கிறார்கள்.

 சீதை தீக்குளித்து உயிருடன் வந்தாள் என்றும் கண்ணகி ஆணைப்படி தீ மதுரையை எரித்தது என்றும் நாம் புராணம் படித்திருக்கிறோம்.
  அது போல ஒரு கற்பனை கதைதான் நந்தன் தீயில் விழுந்து ஆதி அந்தணரான பிரம்மன் உருவில் எழுந்து சிவனை அடைந்தார் என்பதும்.

 

Tuesday, 21 January 2020

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.

இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .

இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .

இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.

இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.

இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .

சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .

[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]

பதிவர்: Annamalai Sugumaran

Wednesday, 24 July 2019

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

பாண்டிய மன்னன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் என்பவன் திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன சைவ குரவரின் பேச்சைக் கேட்டு எண்ணாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படுவது உண்மையா???

இல்லை!

சமணர் கழுவேற்றம் என்பது உண்மையில் நடந்த சம்பவமல்ல.

அது ஒரு கற்பனையான பழைய நம்பிக்கை மட்டுமே!
அதை தொன்மம் என்று கூறமுடியுமே தவிர வரலாறு என்று ஒத்துக்கொள்ள ஆதாரங்கள் வேண்டும்.
 
சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு ஆதாரமாக திராவிட தத்துவவாதிகள் காட்டுவது கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமய பக்தி இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் உள்ள கற்பனைகளைத் தான்.

ஆனால் சமணரை வாதத்தில் வென்ற  (கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய பாடல்களில் கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
அவர்கள் சமணர்களை வாதத்தில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டுமே செய்துள்ளனர் என அறியமுடிகிறது.

250 ஆண்டுகள் கழித்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் நாயன்மார்களின் இலக்கியங்களை சேகரித்து தொகுத்து அதற்கு அவர் உரை எழுதுகிறார்.
அதுவே பெரிய புராணம் ஆகும்.

அதில்தான் நாயன்மார்களுக்கு ஆன்மீக சக்தி இருப்பதாகக் காட்ட பல புனைவுக் கதைகள் செருகப்பட்டன.
  சுண்ணாம்புக் காளவாசலுக்குள் இருந்து உயிருடன் வந்தது,
வெள்ளெலும்பை ஒரு பெண்ணாக மாற்றியது,
கோயில்க் கதவுகளைத் திறக்கவும் மூடவும் பாடியது,
சமணர் கழுவேற்றம் போன்ற பல கற்பனைக் கதைகள் பின்னிட்டு சேர்க்கப்பட்டன.
இவற்றை ஆதாரங்களாக எந்த வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கமாட்டார்கள் (திராவிட தத்துவவாதிகளைத் தவிர!).

கழுவேற்றம் நடந்தது குறித்த கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ எதுவுமே இல்லை.
சமணர்களின் நூல்களில் கூட கழுவேற்றம் நடந்தது குறித்த சான்றுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.

கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் சமண மடாலயங்களும், சமணக் கோயில்களும் கி.பி. 10ம் நூற்றாண்டு முதல் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் செழிப்புடன் இருந்துள்ளன என்பதை கோ.செங்குட்டுவன் எழுதிய "சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்" எனும் நூல் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கூட ஒரு சமணன் தான்.

எண்ணாயிரம் என்பது வணிகர் குலப்பெயர்.
அக்காலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் (எ-டு: கோவலன்).
வணிகர்கள் எண்ணாயிரத்தவர் கூட்டம் நாலாயிரத்தவர் கூட்டம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
கொள்ளையர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய வணிகர்கள் பத்தாயிரம் நபர்கள் முதல் நானூறு நபர்கள் வரையுள்ள குழுக்களாகத் தான் இருப்பார்கள்.
ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய போர்ப்படையாகவே அவர்கள் இருப்பார்கள்.
(கோவலனுடைய இது போன்ற வணிகப் படையே மதுரையை எரித்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு)
அது போன்ற ஒரு எண்ணாயிரத்தவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகன் (எண்ணாயிரம் சமணன்) செய்த ஏதோவொரு குற்றத்திற்காக அவன் கழுவேற்றப்பட்டிருக்கலாம்.

அதை வைத்துக் கொண்டு எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற திரைக்கதை உருவாக்கப்பட்டு பரப்புரை நடபெறுவதாகவே ஊகிக்க முடிகிறது.

இந்த கட்டுக்கதையை தமிழ்ச் சமூகம் எந்தவித ஆய்வுமின்றி ஏற்றது தான் திராவிடத்தின் திட்டமிட்ட சதி.

  தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு
மண்டபச் சுவரிலும்,
புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலிலும்,
திருச்செந்தூர் கோயிலிலும்,
வைகுந்த பெருமாள் கோவிலும்
காஞ்சி கோவிலிலும் (இதன் தலை சிதைக்கப்படுள்ளது) கழுவேற்ற சிலைகள் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் கழுவேற்றும் ஓவியங்கள் உள்ளன.
 
மேற்கண்ட அனைத்திலுமே கழுவேற்றப்பட்ட மனிதனின் சிலை நீளக்குடுமி,மீசை தாடியுடன் காணப்படுகிறது.

சமண முனிவர்கள் மீசை மழித்து மொட்டையடித்து இருப்பவர்கள்.
ஆகவே இதை எப்படி ஆதாரமாகச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை.

எந்த மூல ஆதாரங்களையும் காட்டாமல் இப்படியான பிற்கால பின்னொட்டு சான்றுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டே போவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்?!

உண்மையில் சமணர் மொட்டைத் தலையுன் இருந்தனரா?!

இதற்கு ஒரு சான்றினைப் பார்ப்போம்.
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி.
(சமணர் அதிகம் வாழ்ந்த ஊர்.
இங்கே இருக்கும் சமண கோவில் இன்றும் இயங்கிவருகிறது.
செயங்கொண்டார் சமணரா என்பது தெரியவில்லை)

இவர் பாடிய கலிங்கத்துப் பரணி சமணரின் தோற்றம் பற்றி கூறுகிறது.
அதாவது முதலாம் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்கத்து படைவீரர்கள் தலையை மழித்துக்கொண்டு தாங்கள் சமணர் என்று பொய்கூறி தப்பிக்கப் பார்த்ததாக கூறியுள்ளார்.

சரி! இந்த சமணர் கழுவேற்றத் திரைக்கதையை திராவிட தத்துவவாதிகள் இன்றும் ஓட்டி வரக் காரணம் என்ன??

தமிழ் வளர்த்த சைவ சமயத்தை பார்ப்பன மயமானது என்றும் பார்ப்பனர்கள் மற்றும் பாண்டியர்கள் இனப்படுகொலை செய்யுமளவு கொடூரமானவர்கள் என்றும் நம்பவைப்பதற்காக மட்டுமே இந்தச் “சமணர் கழுவேற்றம்” என்ற பொய்யை திராவிட தத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

சமணர் கழுவேற்றம் எனும் கட்டுக்கதை உருவானதும் பரவியதும் எப்படி?!

இக்கதையை முதன்முதலாக உருவாக்கிய நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள்.
இதனாலேயே இவர்களது நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.

  நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு கற்பனையைப் பதிவு செய்கிறார்.

சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடச் செய்கிறார்.

பிற்பாடு அருணகிரிநாதர் கூட இந்த கழுவேற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கழுவேற்றம் எனும் சடங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் நடத்தபடும் திருவிழா நாடகங்களில் இடம்பெற்று வந்தது.

பெரியபுராணம் 1860 களில் அச்சில் வெளிவந்த பிறகு மீண்டும் இந்த கட்டுக்கதை மக்களிடையே பிரபலமாகிறது.

வள்ளலார் இது பற்றி மனம் பதறி சிவனிடம் முறையிடுவது போல எழுதியுள்ளார்.

அதன்பிறகு தமிழறிஞர்களுக்கு இடையே நடந்த விவாதங்களில்
அ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர், மயிலை. சீனி.வெங்கடசாமி போன்றோர் சமண கழுவேற்றம் உண்மை என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா.ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய பெரும்பாலோர் சமணர் கழுவேற்றம் நடந்திருப்பதாக கூறுவதை மறுத்திருக்கின்றனர்.
இதையெல்லாம் விட தமிழ்ச் சமண அறிஞரான டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களும் நன்கு ஆராய்ந்து "இது வரலாற்றுச் சம்பவம் அல்ல" என்று முடிவாகக் கூறியுள்ளார்.

ஆக,

சம்பந்தர் , அப்பர் தேவாரங்களில் வாதத்தில் தோற்ற சமணர் தண்டிக்கப்பட்டதற்கான அகச்சான்றுகள் இல்லை.

பல்லவ , பாண்டிய, சோழர்கள் வெட்டிய அனைத்து கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.

சமணர்களை கழுவிலேற்றிக் கொன்றதாக பாண்டியர்கள் மீது வீண்பழி போடப்படுகிறது.
  ஆனால் உண்மையில் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகும் சமணர்க்கு குகைகளும் கற்படுக்கைகளும் பாண்டியர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அவை வருமாறு,

மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை
( சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்டது)
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
(யானைமலை நரசிங்கர் குடைவரை
பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது)
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை.

இத்தனை குழப்பத்திற்கும் காரணம் யார்?!

12 ஆம் நூற்றாண்டில் சோழர்களுடன் திருமண உறவின் மூலம் கலந்த சாளுக்கியர் அநாபய சாளுக்கியன் காலத்தில் சோழ அரசைக் கைப்பற்றி சோழர் என்ற பெயரிலேயே ஆட்சி செய்கிறார்கள்.
இவர்கள் சைவ  மதவெறியர்கள்.
பாண்டியநாடு வரை இவர்கள் ஆட்சியே என்பதால் பாண்டியர் மீது களங்கம் கற்பிக்கும் இந்த கழுவேற்ற கட்டுக்கதை இவர்கள் தூண்டுதலால் உருவாக்கப்படுகிறது.

மற்றபடி சமணரே கூட இப்படி ஒரு பழியை பாண்டியர் மீது போடவில்லை.
சமண மதம் சார்ந்த புராணங்களிலேயோ நூல்களிலோ  கல்வெட்டுகளிலேயோ கூட கழுவேற்ற சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.

கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்படும் 7 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணர்கள் தமிழில் எழுதிய நூல்கள் வருமாறு,
1. சிந்தாமணி
2. வளையாபதி
3. நீலகேசி
4. யசோதர காவியம்
5. உதயணகுமார காவியம்
6. சூளாமணி
7. பெருங்கதை
8. நன்னூல்
9. சூடாமணி நிகண்டு
10. யாப்பெருங்கலக் காரிகை
11. யாப்பெருங்கலம்
12. அமுதசாகரம்
13. அருங்கலச் செப்பு
14. அறநெறி சாரம்
15. திருநூற்றந்தாதி
16. திருப்புகழ்ப் புராணம்
17. மேருமந்தர புராணம்
18. திருக் கலம்பகம்
19. தீபக்குடி பத்து
20. ஸ்ரீ புராணம்

சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன.

சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?

கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

இவர்களுள் ரொமிலா தாபரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும் அடங்குவர்.

இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுக்கப்படவில்லை.
சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று தீக்கதிரில் கட்டுரை எழுதிய (தெலுங்கரான) கம்யூனிஸ்டு
அருணன் கூட சரியான முறையில் இதுவரை இதை மறுக்கவில்லை.

முடிவாக,
கன்னட சாளுக்கியரால் உருவாக்கப்பெற்று
மதுரை தெலுங்கு நாயக்கர்களால் பரப்பப்பட்டு
வந்தேறி திராவிடவாதிகளால் மெருகேற்றப்பட்டு
தமிழர் மீது போடப்படும் வீண்பழியே "சமணர் கழுவேற்றம்" எனும் கட்டுக்கதை!

Tuesday, 18 June 2019

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

திருமூலர் பார்வையில் பார்ப்பனர்

சித்தர்கள் பார்ப்பனர்களை எதிர்த்ததாக கூறும் பலர் காட்டும் முக்கிய சான்று திருமூலர் பாடிய ஒரு பாடல். அது வருமாறு,

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."

இதன் பொருள் தம் பெயரால் மட்டுமே (அதாவது பெயருக்கு பார்ப்பனர் மற்றபடி ஒழுக்கமில்லாதவர்) பார்ப்பானராக இருப்பவர் இறைவனை அர்ச்சனை செய்தால் நாட்டுக்கும், அரசனுக்கும் வேதனைகளும், வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை நந்தி என்பவர் கூறியதாக உரைக்கிறார்.

இந்த நந்தி யார்?
இவர் நிச்சயம் திருமூலரின் மதிப்பிற்குரிய குருவாகத்தான் இருக்கவேண்டும்.
இவர் இறைவனுடன் கலந்த அறவாழி 'அந்தணன்' என்றே திருமூலர் கூறுகிறார்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."

பூசை செய்வோர் பற்றிய திருமூலரின் இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே"

சத்தியம், ஞானம், இறையுணர்வு, பக்தி, இறைவிசுவாசம் போன்றவை இல்லாமல் தன்னைத்தாமே பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் திருமூலர்.

என்றால் தகுதியுள்ள பிராமணரிடம் உண்மை, அறிவு, இறையச்சம் ஆகியன இருக்கும் என்று அவர்களை உயர்வாகத்தானே கூறியுள்ளார்?!

(மாலைத்தென்றல் Subash Kumar அவர்களது பதிவின் தழுவல்)

Friday, 6 July 2018

சிவனுக்கு தமிழ் தெரியுமா?

சிவனுக்கு தமிழ் தெரியுமா?

ஒண்ணுமில்ல.
நீங்க என்ன பண்றீங்க...

1000 வருசத்துக்கும் மேல பழமையான சிவன் கோவில்கள ஒரு வரைபடத்துல குறிங்க.
அதுல அதிகமான கோவில்கள் எங்கே இருக்குனு பாருங்க.
அங்க என்ன மொழி பேசப்படுது/பேசப்பட்டது னு பாருங்க!
அந்த ஆளு என்ன மொழி பேசினாருனு தெரிஞ்சிடும்.

வரைபடம்: பாடல்பெற்ற 276 சைவ  திருத்தலங்கள்

Wednesday, 4 July 2018

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?

தற்போது ஸ்ரீ காளஹஸ்தி (sri kalahasti) என்று அழைக்கப்படும் காளத்தி புகழ்பெற்ற சைவ திருத்தலம் ஆகும்.

  கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் "சந்தமார் அகிலொடு" என்று தொடங்கும் பதிகமும் "வானவர்கள் தானவர்கள்" என்று தொடங்கும் பதிகமும் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் "விற்றூணொன் றில்லாத" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

கிபி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் "செண்டா டும்விடையாய்" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

இக்கோவில் உள்ள மலை (கைலாசகிரி என்று ஆவணங்கள் குறித்தாலும்) சிவனுக்கு கண்கொடுத்த கண்ணப்ப நாயனார் பெயரால் "கண்ணப்பர் மலை" என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

இது பண்டைய தமிழ்நாடான தொண்டைநாட்டின் பகுதியென்பதால் காளத்திக்கு அருகே தொண்டமநாடு அல்லது தொண்டைமான் நாடு எனும் ஊர் உள்ளது.

கிபி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரதேவ நாயனார் "கயிலை பாதி காளத்தி பாதி" எனும் அந்தாதி பாடியுள்ளார்.
இது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
இதே ஆசிரியர் எழுதிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

இதே நூற்றாண்டில் வாழ்ந்த "கல்லாட தேவ நாயனார்" இயற்றிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் அதே பெயரைக் கொண்ட இன்னொரு நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

கிபி 11 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழன் இத்தலத்தை கோவிலாகக் கட்டினான்.

இங்கே உள்ள கண்ணப்பர் கோவிலுக்கு மண்டபமும் தாழ்வாரமும் ராஜேந்திர சோழன் காலத்து வேளிர் மன்னன் "கங்கைகொண்டான் இருங்கோளன்" என்பவரின் தாயார் "புத்தங்கையார்" கட்டிக்கொடுத்துள்ளார்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் "காளத்தி உடையான் மரக்கால்" என்ற அளவுக் கருவி பயன்பாட்டில் இருந்ததாகக் கல்வெட்டு உள்ளது.

இக்கோவிலின் கல்வெட்டுகள் இறைவனை "தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார்" என்று குறிக்கின்றன.

இப்பகுதியில் ஓடும் ஆறு தற்போது "சொர்ணமுகி" என்று அழைக்கப்படுகிறது.
இது கிபி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் நாயன்மார்களின் வரலாற்றினைத் தொகுத்து படைத்த திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணம்) கண்ணப்ப நாயனார் பற்றிய பகுதியில் "பொன்முகலி" என்று குறிக்கப்பட்டுள்ளது.
(தேவாரம் "முகலி" என்று மட்டும் குறிக்கிறது).

கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் காளத்திநாதரைப் புகழும் பாடல் "சிரத்தானத்தில்..." என்று தொடங்கி "திருக்காளத்திப் பெருமாளே" என்று முடிகிறது.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த "சேறைக் கவிராயர்" (கவிராச பிள்ளை அல்லது ஆசுகவிராயர் என்றும் அறியப்படுபவர்) பாடிய உலா ஒன்று உள்ளது.
"திருக்காளத்திநாதர் உலா" அல்லது "காளத்தியாள்வார் உலா" என்று இது அழைக்கப்படும். சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட படைப்பு ஆகும்.
அதே புலவர் "திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை" எனும் நூலையும் எழுதியுள்ளார்.
இதைக் கண்டெடுத்து பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா ஆவார்.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் "வேளாக்குறிச்சி ஆதின" சீடரான "வீரை ஆனந்தக் கூத்தர்" இத்தலத்தின் மீது இயற்றிய "திருக்காளத்திப் புராணம்" புகழ்பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டில் சிவப்பிரகாசர் என்பவரும் அவர் தம்பியும் சேர்ந்து இயற்றிய "சீகாளத்தி புராணம்" எனும் படைப்பும் உண்டு.

இதன் தலபுராணம் 18 ஆம் நூற்றாண்டில் கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரால் சேர்ந்து பாடப்பட்டுள்ளது.

பொன்முகரி ஆற்றுக்கு செல்லும் படித்துறை முகப்பில் ஒரு சிலை உள்ளது.
1912 ஆம் ஆண்டிலேயே 9 லட்சம் செலவில் திருப்பணி செய்த "தேவக்கோட்டை இராமநாதன் செட்டியார்" என்பவரின் சிலைதான் அது.

"பொங்கல்" அன்றும் திருவிழா அன்றும் ஆக ஆண்டின் இரண்டு நாட்களில் மட்டும் உற்சவர் மலையை வலம் வரும் சடங்கு நடக்கிறது.

தமிழக எல்லையில் இருந்து வெறும் 64கி.மீ தொலைவில் இருக்கும் காளத்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதி ஆகும்.

திருப்பதி போல காளத்தியும் தமிழகத்தின் பகுதியே ஆகும்.

  இது ஆந்திராவுக்கு போனது ஏன்?

கிபி 1516 ல் கிருஷ்ணதேவ ராயர் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று கட்டியுள்ளார்.
63 நாயன்மார் சிலைகளுக்குப் போட்டியாகத் தொடர்பேயில்லாமல் பாண்டவர் சிலைகளை கொண்டுவந்து வைத்தார்.
கிருஷ்ண தேவராயரின் அவைப்புலவர் தூர்ஜாட்டி "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர மகாத்யம்" எனும் நூலும் "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர சதகம்" எனும் நூலும் இயற்றியுள்ளார்.

அதன்பிறகு அச்சுதராயர் ஒரு பதினாறுகால் மண்டபம் கட்டியுள்ளார்.

இது தவிர தெலுங்கருக்கும் காளத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.