Showing posts with label சேரர். Show all posts
Showing posts with label சேரர். Show all posts

Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Tuesday, 7 April 2020

இலக்கியத்தில் எருமையூர்


இலக்கியத்தில் எருமையூர்
 
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இது பொருத்தமான வாதமாகத் தோன்றவில்லை.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
மைசூர் என்பது உண்மையில் எருமையூர் ஆகும்.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிஷம்.
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.

  ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
இதற்கு இலக்கியச் சான்றாக வேளிர் குடியைச் சேர்ந்த 'மையூர் கிழான்' என்பவர் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது (காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு).
மைசூர் நகரின் பெயராலே அம்மாநிலம் முழுவதும் 1980 வரை வழங்கப்பட்டது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
எருமையூர் பற்றி இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்,
வடிகட்டப்பட்ட கள் கிடைக்கும் எருமையூர் எனுமாறு
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
குடநாடு என்பது சேரநாட்டின் வடபகுதி.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
சேரநாட்டு வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை (41- 46) செங்கழுநீர்ப் பூக்களை எருமைகள் மிகுதியாக மேய்ந்துவிட்டு பலாமர நிழலில் உறங்கின என்று கூறுகிறது.
அதாவது சேரநாட்டிலும் அதையொட்டிய எருமைநாட்டிலும் எருமைகள் அதிகளவு இருந்தன.
ஆனால் அயிரி ஆறு (ஹரங்கி ஆறு) பாயுமிடத்தில் வடுகரின் எருமை நாடு இருந்தது எனுமாறு,
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
இதை கன்னடர் தமது தரப்பு சான்றாக வைக்கக்கூடும்.
ஆனால் 'வடுகனான எருமை என்பான் ஆளும் நாடு'
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
ஏனென்றால் இப்பாடல் வரிகள் முதலில் அவனது பண்புகளைக் கூறி அத்தகைய எருமையின் நாட்டில் அயிரியாறு பாய்கிறது என்று அவனைப் பற்றித்தான் கூறுகிறதே தவிர அவனது நாட்டைப் பற்றி கூறவில்லை.

எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும்  ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட குடியின் தலைவனை அக்குடிப் பெயருடன் 'பெருமகன்' என்று சேர்த்துக் கூறுவது வழக்கம்.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
ஆக 'வடுகரின் தலைவனான எருமை' என்று பொருள்கொள்வதே சரி!
அயிரி ஆறு எனும் ஹரங்கி ஆறு காவிரி உற்பத்தி ஆகி சிறிது தூரம் ஓடியதும் அதில் வந்து கலக்கும் குறுகிய நீளமுள்ள ஆறு ஆகும் (717 கி.மீ).
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
இந்த சிற்றாறு எருமை ஆண்ட நாட்டின் முக்கிய நதி என்று கூறுவதன் மூலம் அவனது நாடு மிகவும் சிறியது என்பதையும் ஊகிக்கலாம்.
என்றால் குடகு வரை சேரர் ஆண்டதும்.
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
பிற்பாடு ஹொய்சள அரசர் சாசனத்திலும் எருமை என்னும் பெயரால் மைசூர் குறிக்கப்பட்டுள்ளது
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு


Friday, 15 June 2018

காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...

காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...

"குடகு மாநிலம் உருவானால் காவிரி நீர் தருகிறோம்"

"எங்கள் குடகுப் பகுதி 1956 க்கு முன்புவரை குடகு தனிமாநில அரசாகத்தான் இருந்தது"

"குடகுவாழ் மக்களை கர்நாடக அரசு நசுக்குகிறது"

"ஊர்களின் பெயர்களையெல்லாம் கன்னட மொழியில் பெயர் மாற்றம் செய்கிறார்கள்"

"கன்னட மொழியை குடகுமொழி பேசும் மக்கள்மீது திணிக்கிறார்கள்"

"கொடவா பகுதியில் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆட்சி நடத்தியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன"

"புதுவை போல 'சி' அந்தஸ்துள்ள தனி மாநிலமாக குடகை அறிவித்தால் தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை தடையின்றி தருவோம்"

- நஞ்சப்ப கொடவா

ஜூனியர் விகடன் 06.06.2018

Thursday, 6 July 2017

மோடி இஸ்ரேலுக்கு அளித்த தமிழ் செப்பேடு


பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேல் பிரதமருக்கு அளித்த 9 -10நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வட்டெழுத்து செப்பேடு, சேர அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் வணிகம் செய்ய வந்த யூதர்களுக்கு அளித்தது.
(மோடி அவரை இந்திய அரசர் என்று மழுப்பினார்)

தகவல்: Karthikeyan Rathinavelu .

Friday, 12 May 2017

பழங்காலத் தமிழகம் நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2

பழங்காலத் தமிழகம்
நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2
(எளிமையான வரைபடம்)

இடமிருந்து வலமாக வரிவரியாகப் படிப்பது போல

கொங்காண நாடு
பாழி (மல்லி நாடு)
கடம்ப நாடு
இருங்கோ நாடு (அருவா நாடு)
வெளிமா நாடு
வொளிமா நாடு
இடைச்சுரம்
பாயல நாடு
நல்லமலை
வெள்ளிமலை
கனிமலை
வேளாவி நாடு (வேங்கி)

பாயல் (சேர பாயல் மலை)
மேகுட்டுவம் (குட்டுவ நாடு)
குடநாடு
எருமையூர்
விச்சிகோ நாடு
குதிரைமலை
புங்கிநாடு
வேங்கட நாடு
புல்லி நாடு

சேரர்
தோட்டிமலை
தகடூர் (அதிகன் நாடு)
வாணர் நாடு
ஒய்மான் நாடு
ஆமூர் (முக்காவல் நாடு)
முழம்புல நாடு

பறம்புமலை
ஆழுந்தூர்
மிலாடு (முள்ளூர் நாடு)
கொல்லிமலை நாடு
பழுவூர்
தோன்றிமலை
புண்நாடு
தொண்டை நாடு
முதியமலை
நடுநாடு
கண்கெழு நாடு

கரூவூர் நாடு
பாண்டிய நாடு
காணப்பேரெழில்
(எவ்வியின்) நீடூர் மிழலை
யாழ் நாடு
மணிபல்லவம்
நாகர்நாடு

மலை நாடு
கோடைமலை
பொதிகை (ஆய் நாடு)
கறநாடு
காந்தள்
நாஞ்சில் நாடு
இயக்கர்கண்
ஈழம்
வேட்டரைய நாடு

சிங்க ஈழம்
கோனார்மலை நாடு

(ஆங்கிலத்தில் இருந்து எடுத்ததாலும் தெளிவின்மையாலும் சில தவறுகள் இருக்கலாம்)

நன்றி: Senthil Kumaras

Friday, 21 April 2017

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

கோச்செங்கணான் சிறையில் அவமதிக்கப்பட்டு இறந்தானா?

சோழன் கோச்செங்கணான் சேரமன்னனான கணைக்கால் இரும்பொறையுடன் போர்செய்து தோற்றுவிடுகிறான்.

பிறகு குணவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்படுகிறான்.

அப்போது குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தராததால் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி உண்ணாமல் பட்டினி கிடந்து இறந்தான் என்று கூறப்படுகிறது.

இதற்கு வலுவில்லாத ஒரு சான்று உள்ளது.
அது புறநானூறு 9 வது பாடலுக்கான அடிக்குறிப்பு ஆகும்.

(அடிக்குறிப்பு என்பது அப்பாடல் பற்றிய ஒரு செய்தி,
அது அப்பாடல் எங்கே பாடப்பட்டது, யாருக்காக பாடப்பட்டது,
எதற்காகப் பாடப்பட்டது,
யார் பாடியது போன்ற செய்தியாக இருக்கலாம்)

'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்ற அந்த அடிக்குறிப்பு புலவர் அப்பாட்டை பாடிய புலவர் எழுதியதாகவோ அல்லது அதை ஆராய்ந்த மொழிபெயர்த்த யாரும் எழுதியதாகவோ இருக்கலாம்.
அதனால் இதை வலுவான சான்றாக எடுத்துக்கொள்ள இயலாது.

உண்மை என்னவென்றால் பொய்கையார் எனும் புலவர் சேரமான் கணைக்கால் இரும்பொறையை புகழ்ந்து பாடி அதற்குப் பரிசாக சோழன் செங்கணான் விடுதலையைக் கேட்டார்.
சேரனும் சோழனை விடுதலை செய்துவிட்டான்.

இதற்கு பல சான்றுகள் உள்ளன.

'சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று'
என்று களவழி நாற்பதுக்கு உரையெழுதிய ஆசிரியர் தனது உரையை முடிக்கிறார்.

இதுவும் வலுவான சான்று கிடையாது.

தமிழ் நாவகர் சரிதையில் ஒரு செய்யுள் புறநானுற்றுப் பாடலை (74) எடுத்தாளுகிறது.
அதில் அப்பாட்டின் அடிக்குறிப்பும் சேர்த்து அதில் உள்ளது.

'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு'
என்பதுதான் அது.

இதுவும் வலுவான சான்றில்லை.

அதே தமிழ் நாவலர் சரிதையின் செய்யுளுக்கான அடிக்குறிப்பு
'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்'
என்று உள்ளது.
இதுவும் வலுவான சான்றில்லை.

ஆனால்,

ஒட்டக்கூத்தர் தனது மூன்று உலாக்களிலும் சேரன் சோழனை விடுவித்ததைக் குறிப்பிடுகிறார்.

"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)

"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)

"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)

இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,

"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"
என்று குறிப்பிடுகிறார்.

நன்றி:
டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் முதல் ஆய்வுத்தொடர்.
'செந்தமிழ்ச்செல்வி' (1982 நவம்பர் - 1983 மே )

ஆகவே அதிகமான சான்றுகள் எதை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றனவோ அதுவே உண்மை.

ஆக சோழன் சிறையில் அவமதிக்கப்படவில்லை.

  இது மூவேந்தர் ஒற்றுமையின்றி அடித்துக்கொண்டனர்.
சிறைபிடித்தவனை அவமதித்து சாகடித்தனர் என்ற எண்ணத்தை விதைக்க ஒரு அடிக்குறிப்பை பெரியதாக்கி தமிழ்ப் பகைவரால் புனையப்பட்ட சூழ்ச்சிக் கதை.

Tuesday, 11 April 2017

குருதியில் நனைந்த குமரி -17

குருதியில் நனைந்த குமரி -17
---------------------------------------------
நாள்: 28.08.1954
நேரம்: நண்பகல்
இடம்: தேரூர்

காங்கிரஸ் குழு நேரில் பார்வையிட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு பலரும் வலியுறுத்தியபடி வரலாற்று தகவல்களைக் கேட்டறிய நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் தேரூருக்குச் சென்றனர்.

அங்கே தமிழ்க்கவிஞர் மற்றும் ஆராய்ச்சியாளரான கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர்.

வாசலில் அவரது வளர்ப்புப்பிள்ளையும் மருமகனுமான சிவதாணுப்பிள்ளை நின்றிருந்தார்.
காங்கிரஸ் குழுவினர் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். 

78 வயதான கவிமணியார் அப்போது மரணப்படுக்கையில் இருந்தார்.

"மாமா தற்போது பேசும் நிலையில் இல்லை.
இந்த இறுக்கமான சூழலில் மாமாவுக்கு தேவையான மருந்துகளும் உணவும் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எழுப்புகிறேன், கண்விழிக்கிறாரா பார்க்கலாம்"

அனைவரும் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.

"மாமா! மாமா! உங்களைப்பார்க்க தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வந்திருக்கிறார்கள்."

கவிமணி கண்விழித்தார்.

"யார்?! தமிழ்நாட்டிலிருந்தா?!
என்றால் குமரிநாடு இன்னமும் தமிழ்நாட்டுடன் இணையவில்லையா?"

கரையாளர் "அதற்காகத்தான் ஐயா வந்திருக்கிறோம்.
கவலை வேண்டாம்.
காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் உதவி தேவை.
உங்களுக்குத் தெரிந்த சரித்திர தகவல்களைக் கூறுங்கள்"

கவிமணி "இங்கே சரித்திரம் என்றாலே அது நமது சரித்திரம்தானே ஐயா,
இந்த நாடு முழுவதுமே தமிழருக்குச் சொந்தம்.
மூழ்கிய குமரிநாடு முதல் இமயமலை வரை நமது மண்.
இந்த திருவிதாங்கூர் உட்பட மலையாள நாடு முழுவதுமே சேரநாடு.
சேரர் தமிழர்தான்.
மூவேந்தரில் ஒரு வேந்தன் அழிந்து போனானே?!
திருவிதாங்கூர் என்ற பெயர் அதங்கோடு என்ற தமிழ்ப்பெயர்தான்.
அதங்கோடு, திருவதங்கோடு ஆகி திருவிதாங்கூர் ஆகிவிட்டது.
தமிழ்ச்சங்கத்துக்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசான் பிறந்த இடமிது.
போனது போகட்டும் இன்று தமிழ்பேசும் பகுதியையாவது ஒன்றிணைத்து தமிழ்ராஜ்ஜியம் அமையுங்கள்."

கரையாளர் "ஐயா, சேரநாடு மலையாள நாடாக ஆனது எப்படி?"

கவிமணி "நில அமைப்பு முதல் காரணம்.
இன்றைய தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.
இங்கே பேசப்படும் தமிழ் சிறிது வேறுமாதிரியாக ஆனது.
அதுவே மலைகளை ஆளும் மலையாளத் தமிழ்.
ஆனாலும் மலைகளுக்கு நடுவே இரு நாட்டையும் இணைக்கும் வழிகள் உள்ளன.
தெற்கே ஆரல்வாய் மொழி கணவாய்,
அதற்கு கொஞ்சம் வடக்கே சிறிய கணவாயான செங்கோட்டை கணவாய்,
வடக்கே பெரியதாக பாலக்காடு கணவாய்.
இன்று இந்த கணவாய்களுக்கு அருகே இருக்கும் நாங்கள்தான் தமிழ்த் தொடர்புடன் இருக்கிறோம்.
தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம் பீருமேடு தொழிலாளர்கள் 100 ஆண்டுகள் முன்பு வந்தவர்கள்.
அவர்களும் தமிழ் அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் மலையாளிகள் ஆகிவிட்டனர்.

இரண்டாவது காரணம் நம்பூதிரிகள்.
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாது.
அவர்கள் கடல் வழி வந்ததாகவும் கங்கைக் கரையிலிருந்து வந்ததாகவும் கூறுவர்.
இவர்கள் வேதங்களை வைதீக முறையில் செய்யும் புதியதொரு இந்துமதப் பிரிவைக் கொண்டுவந்தனர்.
யாகம் வளர்ப்பது, சோதிடம் பார்ப்பது, தீட்டுக்கழிப்பது, செய்வினை வைப்பது, என மூடநம்பிக்கையை வளர்த்து ஏதோ தங்களிடம் அதிசய சக்தி இருப்பதாக மக்களை நம்பவைத்தனர்.
நாளடைவில் செல்வாக்கு அதிகரித்தது.
அவர்கள் மணிப்பளவம் அல்லது மணிப்பிரவாகம் என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.
அதாவது 'தாயை வணங்கி' என்பதை 'மாதாவை நமஸ்கரித்து' என்று 'சமஸ்கிருதத்தைத் தமிழ்நடையில் எழுதும்' ஒரு செயற்கையான மொழியை உருவாக்கினர்.
  மன்னர்களையும் பூசை செய்துதரவாதகச் சொல்லி அவர்களுடன் நெருக்கமாகி மணிபிரவாகத்தை ஆட்சிமொழி ஆக்கினர்.
மன்னனுக்கு அடுத்த நிலையில் இடம்பிடித்தனர்.
மன்னர்கள் மூலம் உழைக்கும் சாதியினரை கீழ்சாதியாகவும் தீண்டத்தகாதோராகவும் ஆக்கினர்.
மன்னனின் படைத்தளபதிகளாக இருந்த தமிழரல்லாத வடுக வம்சாவழிகளான நாயர் வீட்டுப் பெண்களை தனக்கு உரிய பொருள் என்று கட்டுப்பாடு விதித்து அவர்களுடன் கலந்து கலந்து அவர்களைக் கலப்பினம் ஆக்கிவிட்டனர்.
இப்படியாக மேல்தட்டு வர்க்கம் மணிப்பிரவாக மயமானது.
நாளடைவில் அது நடுத்தட்டுக்கும் பரவியது.
ஆனால் அடித்தட்டில் இருந்த தமிழர்களுடன் இனக்கலப்பு நடக்கவில்லை.
மொழி மட்டும் கலந்தது
மணிப்பிரவாகமும் மலையாளத் தமிழும் கலந்து இன்றைய மலையாள மொழி உருவானது.
பழைய தமிழ் வட்டெழுத்துக்களை நகலெடுத்து தனியான புதிய எழுத்துமுறையை நம்பூதிரிகள் உருவாக்கினர்.
தமிழ் வார்த்தையின் கொச்சையான உச்சரிப்பையே மலையாள வார்த்தை என சேர்த்துக்கொண்டனர்.
அதாவது ஆமை என்பதை ஆம என்று உச்சரிப்போம் இதை மலையாளத்தில் ஆம என்ற வார்த்தையாக ஆக்கிக்கொண்டனர்.
இன்றும் இது பாதி தமிழ்.
தமிழர்களுக்கு மலையாளமும் மலையாளிகளுக்குத் தமிழும் அப்படியே புரியும்.
ஐக்கிய கேரளம் அமைந்ததும் முதல் வேலையாக மலையாளத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை நீக்கி அதற்கு இணையான சமஸ்கிருத சொற்களை புகுத்தி புதிய பாடத்திட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்"

கரையாளர் "என்றால் பிராமணரெல்லாம் சுத்த மலையாளிகளா?"

கவிமணி " இல்லை.
சோழர் காலத்தில் இங்கே வந்த தமிழ்நாட்டு பிராமணரான தமிழ் ஐயர்கள் இன்றும் தமிழையே பேசுகிறார்கள்.
தமிழராகவே இருக்கிறார்கள்.
தமிழ் ஐயர்கள் பாலக்காடு, கொடுங்காளூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அக்ரகாரம் அமைத்து வாழ்கிறார்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு வைத்துள்ளனர்.
இவர்கள் நம்பூதிரிகளைப் போல தாந்திரீக முறையை பின்பற்றாமல் தமிழ் ஆகம முறையைப் பின்பற்றுகிறார்கள்.
கோவில்களும் தனித்தனிதான்.
பிராமணர்கள் செய்துவரும் கொடுமைகளில் இவர்களுக்கு 1% கூட பங்கு கிடையாது.
மன்னர்களின் திவான்களாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டோர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனர்கள்.
அந்த வகையில் அரசுக்கு உடந்தையாக இருந்ததாகக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் வேளாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் எனலாம்.

தமிழ் ஐயர்களை இன்றும் தமிழர்களாகவே மலையாளிகள் பார்க்கிறார்கள்.
தமிழ்ப்பட்டர் என்றே அழைக்கிறார்கள்.
தமிழையர்கள் அமைத்துள்ள 'சமூகங்கள்' அவ்வப்பகுதி தமிழர்களை ஒன்றிணைத்து ஆகம அடிப்படையில் கோவில் ஒன்று கட்டி அந்தப் பகுதி நிலங்களை ஒன்றாக்கி கோயில் மூலம் நிர்வகிக்கும் குத்தகை உரிமையை வைத்துள்ளன.
மலையாளிகள் தனக்கான அரசு அமைந்ததும் முதலில் அதில்தான் கைவைப்பார்கள்.
தமிழையர்கள் கையில் இருக்கும் நிலம் பறிபோனால் தமிழர்கள் ஒருங்கிணைப்பும் பொருளாதாரமும் பறிபோகும்"

கரையாளர் "என்றால் நிலத்தின் விளைச்சலை சுரண்டும் நம்பூதிரிகளுக்கும் ஐயர்களுக்கும் என்ன வேறுபாடு?"

கவிமணி " நம்பூதிரிகளைப் போல நிலத்தில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் முறை கிடையாது இது.
குத்தகை உரிமை மட்டும்தான்.
இது நமது மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திய முறை ஆகும்.
ஆரம்ப காலத்தில் நம்பூதிரிகள் இங்கே வந்து சிறிது வலுப்பெற்றதும் சேர மன்னர் ஆதரவுடன் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சாலை எனுமிடத்தில் ஒரு கல்விக்கூடம் கட்டி அதில் தமிழ்ப்பாணர்களை அழைத்து வந்து போர்ப்பயிற்சி சொல்லிக்கொடுத்தனர்.
சேரர்களுக்கு உதவிப்படையாக இருக்கும் என்று மன்னனிடம் கூறினாலும் உண்மையில் சேரர்களை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கத்தான் அந்தப்படை.
ஆனால் அதற்குள் ராசராசன் சேரநாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்தும், விழிஞ்சம் துறைமுகம் வழியே கப்பல்களை உள்ளே நுழைத்தும் இருமுனைத் தாக்குதல் நடந்தது.
வென்றதும் காந்தளூர் சாலையை இடித்து தரைமட்டமாக்கி அது இருந்த அடையாளமே இல்லாமல் செய்துவிட்டான்.
போர்ப்பயிற்சி பெற்ற மாணவர்களை தனது படையில் சேர்த்துக்கொண்டான்.
நம்பூதிரிகள் கொண்டுவந்த தாந்திரீக முறையை ஒழித்து மீண்டும் ஆகம முறையை நடைமுறைப்படுத்தினான்.
தனது கல்வெட்டுகளில் 'காந்தளூர்சாலை கலமறுத்தருளி' என்றே அவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.
இது பற்றி நான் 32 ஆண்டுகள் முன்பே ஆராய்ந்து எழுதியுள்ளேன்."

கரையாளர் "பிராமணரில் தமிழர் உள்ளது போல தாழ்த்தப்பட்டோரிலும் மலையாளிகள் உண்டா?"

கவிமணி "இல்லை. ஆனால் ஈழவர், புலையர், தீயர் என தாழ்த்தப்பட்டோர் இந்த உண்மையை மறந்துவிட்டனர், தங்களை மலையாளிகளாகவே கருதுகின்றனர்.
இன்று மலையாளிகளில் மூன்று பெரும்பான்மைக் குழுக்கள் சிரியன் கிறித்தவர், நாயர்.
அவர்களுக்குள் எத்தனையோ பிரச்சனை இருக்கும் ஆனால் தமிழருக்கு எதிராக ஒன்றாகிவிடுவார்கள்.
உடனே நம்பூதிரியிடம் போய் ஆலோசனை கேட்டு அதுபடி நடப்பார்கள்"

கரையாளர் "உயர்சாதியானரில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் சிலர் மலையாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்"

கவிமணி "சிலர் இருக்கிறார்கள்.
பூணூல் போட்ட நாடார்களும் கூட அந்த வகையில் உண்டு.
நான் வெள்ளாளன்தான்.
குமரி மீட்புக்காக முதலில் விடுதலை அமைப்பு நிறுவிய அப்பாவுப்பிள்ளை வேளாளர்தான்.
நேசமணியின் கட்சியை நிறுவிய பி.எஸ்.மணி வெள்ளாளர்தான்.
இவ்வளவு ஏன்?!
நாஞ்சில் நாட்டுக்காக சேரநாடும் பாண்டியநாடும் மோதிக்கொள்ளும் என்று முன்பே கணித்து அதை மனோன்மணீயம் என்ற காவியமாகத் தீட்டிய சுந்தரம்பிள்ளை வெள்ளாளர்தான்.
அவர் கண்டெடுத்த கல்வெட்டு இன்றும் ஒரு முக்கிய சான்று.
அதுவே பாண்டிய நாட்டின் பகுதியான நாஞ்சில்நாட்டின் மீது சேரநாடு படையெடுத்தபோது காத்துநின்று வீரமரணம் அடைந்த வீரனின் கதையைக் கூறுகிறது.
அதாவது மலையாளிகள் சேரர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் நாஞ்சில் நாடு அவர்களுக்குச் சொந்தமில்லை என்பதை அவர் ஆணித்தரமாகக் கூறிச்சென்றுள்ளார்.
இது போல தொடக்ககால திருவனந்தபுரம் அரசர்கள் பாண்டிய வம்சமான வேணாட்டு அரசர்கள் என்பதையும் அவர்கள் காலத்தையும் சான்றுடன் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் மன்னருக்கு நெருக்கமானவர்.
நானும் அவரைப்போல திருவனந்தபுரத்தில் ஆசிரியராக இருந்தவன்தான்.
அவரைப்பற்றி ஆய்வும் செய்துள்ளேன்"

கரையாளர் " என்றால் திருவனந்தபுரம் வரைதான் மலையாளநாடு என்றால் இப்போது திருவனந்தபுரத்தில் தமிழர்கள் எத்தனை சதவீதம்"

கவிமணி " திருவனந்தபுரம் நகரில் 70% வரை இன்று தமிழர்கள்.
மலையாளிகள் தொடர்ந்து அந்நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியேறி வருகின்றனர்.
அந்நகரின் உணவுப் பொருட்கள் வணிகம் வேளாளர்கள் கையிலும்
மளிகை மற்றும் துறைமுகப் பொருட்கள் வணிகம் நாடார்கள் கையிலும் உள்ளது.
திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகள் கடைவீதிகள் என எல்லாமே தமிழர்கையில்தான் உள்ளது.
அந்நகர் மலையாளிகள் கைக்குப் போனாலும் முழுதும் மலையாள மயமாக குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.

செங்கோட்டையிலிருத்து கடலுக்கு நேராக ஒரு கோடு கிழித்து அதற்கு தெற்கே உள்ளதை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்.
அதற்கு மூழ்கிய குமரிக்கண்டம் நினைவாக பெயர்வைக்கவேண்டும்.
நமது குமரிநாடு மூழ்கிவிட்டது.
அதன் எஞ்சிய அடையாளம் cape comarin என்று ஆங்கிலேயர் அழைக்கும் குமரி முனையும் அங்கே இருக்கும் குமரியம்மன் கோவிலும்தான்"

கரையாளர் "இங்கே நம்பூதிரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மார்பை மூடமுடியாத அளவுக்கு சாதிக்கொடுமை நடந்ததாக அறிகிறோம்.
அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?"

கவிமணி "நம்பூதிரி சொன்னால் தமிழன் மானங்கெட்டுப்போய் அப்படியே செய்வானா?
இன்றும் பழங்குடிகளிடம் மாரை மூடும் வழக்கம் கிடையாது.
தமிழர்களிடமும் மார்பை மூடும் வழக்கம் முன்பு கிடையாது.
இதை கோவில் சிலைகளில் நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பழக்கம் இங்கே மற்ற பகுதிகளை விட அதிககாலம் தொடர்ந்தது.
அதைத்தான் நம்பூதிரி சட்டமாக்கினான்"

கரையாளர் "தங்களது பிரச்சனைகள் தமிழகத்துடன் இணைந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?"

கவிமணி "கட்டாயம் சரியாகிவிடும்.
நாங்கள் தாய்நிலத்துடன் இணைவது எங்களின் பிரச்சனைகளால் அல்ல.
தமிழ்ப் பற்றினால்தான்.
இந்த பற்றுக்கு மதிப்பிருந்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும்"

கரையாளர் "சரி ஐயா, நேருவிடம் இது பற்றி எடுத்துச்சொல்கிறேன்"

கவிமணி "காந்தி இருந்த வரை நேரு மருமகள் போல இருந்தார்.
இப்போது பதவிக்கு வந்தவுடன் மாமியார் போல நடந்துகொள்கிறார்.
அவர் தயவை எதிர்பார்க்காமல் தமிழர்கள் போராடவேண்டும்.
தெலுங்கர்களை இந்த விசயத்தில் நாம் பின்பற்றவேண்டும்.
தென்குமரியும் வடவேங்கடமும் போய்விட்டாலும்
குறைந்தபட்சம் குமரி முனையிலிருந்து வேங்கடமலையான திருப்பதி வரையாவது நம் நாடு ஒரு சிற்றரசாகவேணும் இந்தியாவில் இருக்கவேண்டும்.
நான் உயிருடன் இருக்கப்போகும் காலம் குறைவு.
என் காலத்தில் இது நடக்கவேண்டும்.
என் கடைசி ஆசை இது"
என்று கூறிவிட்டு கண்ணை மூடினார் கவிமணி.
மூடிய கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

திடீரென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்.
"தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்மிட்டு போற்றுகின்றேன் மன்னுபுகழ்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நாடு ஒத்து உலகில்
சந்தமும் வாழ வரம் தா"
பாடி முடித்ததும் அப்படியே அயர்ந்துவிட்டார்.
---------------------
தொடரும்