Showing posts with label திருவனந்தபுரம். Show all posts
Showing posts with label திருவனந்தபுரம். Show all posts

Tuesday, 11 April 2017

குருதியில் நனைந்த குமரி -17

குருதியில் நனைந்த குமரி -17
---------------------------------------------
நாள்: 28.08.1954
நேரம்: நண்பகல்
இடம்: தேரூர்

காங்கிரஸ் குழு நேரில் பார்வையிட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு பலரும் வலியுறுத்தியபடி வரலாற்று தகவல்களைக் கேட்டறிய நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் தேரூருக்குச் சென்றனர்.

அங்கே தமிழ்க்கவிஞர் மற்றும் ஆராய்ச்சியாளரான கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர்.

வாசலில் அவரது வளர்ப்புப்பிள்ளையும் மருமகனுமான சிவதாணுப்பிள்ளை நின்றிருந்தார்.
காங்கிரஸ் குழுவினர் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். 

78 வயதான கவிமணியார் அப்போது மரணப்படுக்கையில் இருந்தார்.

"மாமா தற்போது பேசும் நிலையில் இல்லை.
இந்த இறுக்கமான சூழலில் மாமாவுக்கு தேவையான மருந்துகளும் உணவும் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எழுப்புகிறேன், கண்விழிக்கிறாரா பார்க்கலாம்"

அனைவரும் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.

"மாமா! மாமா! உங்களைப்பார்க்க தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வந்திருக்கிறார்கள்."

கவிமணி கண்விழித்தார்.

"யார்?! தமிழ்நாட்டிலிருந்தா?!
என்றால் குமரிநாடு இன்னமும் தமிழ்நாட்டுடன் இணையவில்லையா?"

கரையாளர் "அதற்காகத்தான் ஐயா வந்திருக்கிறோம்.
கவலை வேண்டாம்.
காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் உதவி தேவை.
உங்களுக்குத் தெரிந்த சரித்திர தகவல்களைக் கூறுங்கள்"

கவிமணி "இங்கே சரித்திரம் என்றாலே அது நமது சரித்திரம்தானே ஐயா,
இந்த நாடு முழுவதுமே தமிழருக்குச் சொந்தம்.
மூழ்கிய குமரிநாடு முதல் இமயமலை வரை நமது மண்.
இந்த திருவிதாங்கூர் உட்பட மலையாள நாடு முழுவதுமே சேரநாடு.
சேரர் தமிழர்தான்.
மூவேந்தரில் ஒரு வேந்தன் அழிந்து போனானே?!
திருவிதாங்கூர் என்ற பெயர் அதங்கோடு என்ற தமிழ்ப்பெயர்தான்.
அதங்கோடு, திருவதங்கோடு ஆகி திருவிதாங்கூர் ஆகிவிட்டது.
தமிழ்ச்சங்கத்துக்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசான் பிறந்த இடமிது.
போனது போகட்டும் இன்று தமிழ்பேசும் பகுதியையாவது ஒன்றிணைத்து தமிழ்ராஜ்ஜியம் அமையுங்கள்."

கரையாளர் "ஐயா, சேரநாடு மலையாள நாடாக ஆனது எப்படி?"

கவிமணி "நில அமைப்பு முதல் காரணம்.
இன்றைய தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.
இங்கே பேசப்படும் தமிழ் சிறிது வேறுமாதிரியாக ஆனது.
அதுவே மலைகளை ஆளும் மலையாளத் தமிழ்.
ஆனாலும் மலைகளுக்கு நடுவே இரு நாட்டையும் இணைக்கும் வழிகள் உள்ளன.
தெற்கே ஆரல்வாய் மொழி கணவாய்,
அதற்கு கொஞ்சம் வடக்கே சிறிய கணவாயான செங்கோட்டை கணவாய்,
வடக்கே பெரியதாக பாலக்காடு கணவாய்.
இன்று இந்த கணவாய்களுக்கு அருகே இருக்கும் நாங்கள்தான் தமிழ்த் தொடர்புடன் இருக்கிறோம்.
தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம் பீருமேடு தொழிலாளர்கள் 100 ஆண்டுகள் முன்பு வந்தவர்கள்.
அவர்களும் தமிழ் அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் மலையாளிகள் ஆகிவிட்டனர்.

இரண்டாவது காரணம் நம்பூதிரிகள்.
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாது.
அவர்கள் கடல் வழி வந்ததாகவும் கங்கைக் கரையிலிருந்து வந்ததாகவும் கூறுவர்.
இவர்கள் வேதங்களை வைதீக முறையில் செய்யும் புதியதொரு இந்துமதப் பிரிவைக் கொண்டுவந்தனர்.
யாகம் வளர்ப்பது, சோதிடம் பார்ப்பது, தீட்டுக்கழிப்பது, செய்வினை வைப்பது, என மூடநம்பிக்கையை வளர்த்து ஏதோ தங்களிடம் அதிசய சக்தி இருப்பதாக மக்களை நம்பவைத்தனர்.
நாளடைவில் செல்வாக்கு அதிகரித்தது.
அவர்கள் மணிப்பளவம் அல்லது மணிப்பிரவாகம் என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.
அதாவது 'தாயை வணங்கி' என்பதை 'மாதாவை நமஸ்கரித்து' என்று 'சமஸ்கிருதத்தைத் தமிழ்நடையில் எழுதும்' ஒரு செயற்கையான மொழியை உருவாக்கினர்.
  மன்னர்களையும் பூசை செய்துதரவாதகச் சொல்லி அவர்களுடன் நெருக்கமாகி மணிபிரவாகத்தை ஆட்சிமொழி ஆக்கினர்.
மன்னனுக்கு அடுத்த நிலையில் இடம்பிடித்தனர்.
மன்னர்கள் மூலம் உழைக்கும் சாதியினரை கீழ்சாதியாகவும் தீண்டத்தகாதோராகவும் ஆக்கினர்.
மன்னனின் படைத்தளபதிகளாக இருந்த தமிழரல்லாத வடுக வம்சாவழிகளான நாயர் வீட்டுப் பெண்களை தனக்கு உரிய பொருள் என்று கட்டுப்பாடு விதித்து அவர்களுடன் கலந்து கலந்து அவர்களைக் கலப்பினம் ஆக்கிவிட்டனர்.
இப்படியாக மேல்தட்டு வர்க்கம் மணிப்பிரவாக மயமானது.
நாளடைவில் அது நடுத்தட்டுக்கும் பரவியது.
ஆனால் அடித்தட்டில் இருந்த தமிழர்களுடன் இனக்கலப்பு நடக்கவில்லை.
மொழி மட்டும் கலந்தது
மணிப்பிரவாகமும் மலையாளத் தமிழும் கலந்து இன்றைய மலையாள மொழி உருவானது.
பழைய தமிழ் வட்டெழுத்துக்களை நகலெடுத்து தனியான புதிய எழுத்துமுறையை நம்பூதிரிகள் உருவாக்கினர்.
தமிழ் வார்த்தையின் கொச்சையான உச்சரிப்பையே மலையாள வார்த்தை என சேர்த்துக்கொண்டனர்.
அதாவது ஆமை என்பதை ஆம என்று உச்சரிப்போம் இதை மலையாளத்தில் ஆம என்ற வார்த்தையாக ஆக்கிக்கொண்டனர்.
இன்றும் இது பாதி தமிழ்.
தமிழர்களுக்கு மலையாளமும் மலையாளிகளுக்குத் தமிழும் அப்படியே புரியும்.
ஐக்கிய கேரளம் அமைந்ததும் முதல் வேலையாக மலையாளத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை நீக்கி அதற்கு இணையான சமஸ்கிருத சொற்களை புகுத்தி புதிய பாடத்திட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்"

கரையாளர் "என்றால் பிராமணரெல்லாம் சுத்த மலையாளிகளா?"

கவிமணி " இல்லை.
சோழர் காலத்தில் இங்கே வந்த தமிழ்நாட்டு பிராமணரான தமிழ் ஐயர்கள் இன்றும் தமிழையே பேசுகிறார்கள்.
தமிழராகவே இருக்கிறார்கள்.
தமிழ் ஐயர்கள் பாலக்காடு, கொடுங்காளூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அக்ரகாரம் அமைத்து வாழ்கிறார்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு வைத்துள்ளனர்.
இவர்கள் நம்பூதிரிகளைப் போல தாந்திரீக முறையை பின்பற்றாமல் தமிழ் ஆகம முறையைப் பின்பற்றுகிறார்கள்.
கோவில்களும் தனித்தனிதான்.
பிராமணர்கள் செய்துவரும் கொடுமைகளில் இவர்களுக்கு 1% கூட பங்கு கிடையாது.
மன்னர்களின் திவான்களாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டோர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனர்கள்.
அந்த வகையில் அரசுக்கு உடந்தையாக இருந்ததாகக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் வேளாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் எனலாம்.

தமிழ் ஐயர்களை இன்றும் தமிழர்களாகவே மலையாளிகள் பார்க்கிறார்கள்.
தமிழ்ப்பட்டர் என்றே அழைக்கிறார்கள்.
தமிழையர்கள் அமைத்துள்ள 'சமூகங்கள்' அவ்வப்பகுதி தமிழர்களை ஒன்றிணைத்து ஆகம அடிப்படையில் கோவில் ஒன்று கட்டி அந்தப் பகுதி நிலங்களை ஒன்றாக்கி கோயில் மூலம் நிர்வகிக்கும் குத்தகை உரிமையை வைத்துள்ளன.
மலையாளிகள் தனக்கான அரசு அமைந்ததும் முதலில் அதில்தான் கைவைப்பார்கள்.
தமிழையர்கள் கையில் இருக்கும் நிலம் பறிபோனால் தமிழர்கள் ஒருங்கிணைப்பும் பொருளாதாரமும் பறிபோகும்"

கரையாளர் "என்றால் நிலத்தின் விளைச்சலை சுரண்டும் நம்பூதிரிகளுக்கும் ஐயர்களுக்கும் என்ன வேறுபாடு?"

கவிமணி " நம்பூதிரிகளைப் போல நிலத்தில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் முறை கிடையாது இது.
குத்தகை உரிமை மட்டும்தான்.
இது நமது மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திய முறை ஆகும்.
ஆரம்ப காலத்தில் நம்பூதிரிகள் இங்கே வந்து சிறிது வலுப்பெற்றதும் சேர மன்னர் ஆதரவுடன் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சாலை எனுமிடத்தில் ஒரு கல்விக்கூடம் கட்டி அதில் தமிழ்ப்பாணர்களை அழைத்து வந்து போர்ப்பயிற்சி சொல்லிக்கொடுத்தனர்.
சேரர்களுக்கு உதவிப்படையாக இருக்கும் என்று மன்னனிடம் கூறினாலும் உண்மையில் சேரர்களை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கத்தான் அந்தப்படை.
ஆனால் அதற்குள் ராசராசன் சேரநாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்தும், விழிஞ்சம் துறைமுகம் வழியே கப்பல்களை உள்ளே நுழைத்தும் இருமுனைத் தாக்குதல் நடந்தது.
வென்றதும் காந்தளூர் சாலையை இடித்து தரைமட்டமாக்கி அது இருந்த அடையாளமே இல்லாமல் செய்துவிட்டான்.
போர்ப்பயிற்சி பெற்ற மாணவர்களை தனது படையில் சேர்த்துக்கொண்டான்.
நம்பூதிரிகள் கொண்டுவந்த தாந்திரீக முறையை ஒழித்து மீண்டும் ஆகம முறையை நடைமுறைப்படுத்தினான்.
தனது கல்வெட்டுகளில் 'காந்தளூர்சாலை கலமறுத்தருளி' என்றே அவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.
இது பற்றி நான் 32 ஆண்டுகள் முன்பே ஆராய்ந்து எழுதியுள்ளேன்."

கரையாளர் "பிராமணரில் தமிழர் உள்ளது போல தாழ்த்தப்பட்டோரிலும் மலையாளிகள் உண்டா?"

கவிமணி "இல்லை. ஆனால் ஈழவர், புலையர், தீயர் என தாழ்த்தப்பட்டோர் இந்த உண்மையை மறந்துவிட்டனர், தங்களை மலையாளிகளாகவே கருதுகின்றனர்.
இன்று மலையாளிகளில் மூன்று பெரும்பான்மைக் குழுக்கள் சிரியன் கிறித்தவர், நாயர்.
அவர்களுக்குள் எத்தனையோ பிரச்சனை இருக்கும் ஆனால் தமிழருக்கு எதிராக ஒன்றாகிவிடுவார்கள்.
உடனே நம்பூதிரியிடம் போய் ஆலோசனை கேட்டு அதுபடி நடப்பார்கள்"

கரையாளர் "உயர்சாதியானரில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் சிலர் மலையாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்"

கவிமணி "சிலர் இருக்கிறார்கள்.
பூணூல் போட்ட நாடார்களும் கூட அந்த வகையில் உண்டு.
நான் வெள்ளாளன்தான்.
குமரி மீட்புக்காக முதலில் விடுதலை அமைப்பு நிறுவிய அப்பாவுப்பிள்ளை வேளாளர்தான்.
நேசமணியின் கட்சியை நிறுவிய பி.எஸ்.மணி வெள்ளாளர்தான்.
இவ்வளவு ஏன்?!
நாஞ்சில் நாட்டுக்காக சேரநாடும் பாண்டியநாடும் மோதிக்கொள்ளும் என்று முன்பே கணித்து அதை மனோன்மணீயம் என்ற காவியமாகத் தீட்டிய சுந்தரம்பிள்ளை வெள்ளாளர்தான்.
அவர் கண்டெடுத்த கல்வெட்டு இன்றும் ஒரு முக்கிய சான்று.
அதுவே பாண்டிய நாட்டின் பகுதியான நாஞ்சில்நாட்டின் மீது சேரநாடு படையெடுத்தபோது காத்துநின்று வீரமரணம் அடைந்த வீரனின் கதையைக் கூறுகிறது.
அதாவது மலையாளிகள் சேரர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் நாஞ்சில் நாடு அவர்களுக்குச் சொந்தமில்லை என்பதை அவர் ஆணித்தரமாகக் கூறிச்சென்றுள்ளார்.
இது போல தொடக்ககால திருவனந்தபுரம் அரசர்கள் பாண்டிய வம்சமான வேணாட்டு அரசர்கள் என்பதையும் அவர்கள் காலத்தையும் சான்றுடன் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் மன்னருக்கு நெருக்கமானவர்.
நானும் அவரைப்போல திருவனந்தபுரத்தில் ஆசிரியராக இருந்தவன்தான்.
அவரைப்பற்றி ஆய்வும் செய்துள்ளேன்"

கரையாளர் " என்றால் திருவனந்தபுரம் வரைதான் மலையாளநாடு என்றால் இப்போது திருவனந்தபுரத்தில் தமிழர்கள் எத்தனை சதவீதம்"

கவிமணி " திருவனந்தபுரம் நகரில் 70% வரை இன்று தமிழர்கள்.
மலையாளிகள் தொடர்ந்து அந்நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியேறி வருகின்றனர்.
அந்நகரின் உணவுப் பொருட்கள் வணிகம் வேளாளர்கள் கையிலும்
மளிகை மற்றும் துறைமுகப் பொருட்கள் வணிகம் நாடார்கள் கையிலும் உள்ளது.
திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகள் கடைவீதிகள் என எல்லாமே தமிழர்கையில்தான் உள்ளது.
அந்நகர் மலையாளிகள் கைக்குப் போனாலும் முழுதும் மலையாள மயமாக குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.

செங்கோட்டையிலிருத்து கடலுக்கு நேராக ஒரு கோடு கிழித்து அதற்கு தெற்கே உள்ளதை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்.
அதற்கு மூழ்கிய குமரிக்கண்டம் நினைவாக பெயர்வைக்கவேண்டும்.
நமது குமரிநாடு மூழ்கிவிட்டது.
அதன் எஞ்சிய அடையாளம் cape comarin என்று ஆங்கிலேயர் அழைக்கும் குமரி முனையும் அங்கே இருக்கும் குமரியம்மன் கோவிலும்தான்"

கரையாளர் "இங்கே நம்பூதிரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மார்பை மூடமுடியாத அளவுக்கு சாதிக்கொடுமை நடந்ததாக அறிகிறோம்.
அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?"

கவிமணி "நம்பூதிரி சொன்னால் தமிழன் மானங்கெட்டுப்போய் அப்படியே செய்வானா?
இன்றும் பழங்குடிகளிடம் மாரை மூடும் வழக்கம் கிடையாது.
தமிழர்களிடமும் மார்பை மூடும் வழக்கம் முன்பு கிடையாது.
இதை கோவில் சிலைகளில் நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பழக்கம் இங்கே மற்ற பகுதிகளை விட அதிககாலம் தொடர்ந்தது.
அதைத்தான் நம்பூதிரி சட்டமாக்கினான்"

கரையாளர் "தங்களது பிரச்சனைகள் தமிழகத்துடன் இணைந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?"

கவிமணி "கட்டாயம் சரியாகிவிடும்.
நாங்கள் தாய்நிலத்துடன் இணைவது எங்களின் பிரச்சனைகளால் அல்ல.
தமிழ்ப் பற்றினால்தான்.
இந்த பற்றுக்கு மதிப்பிருந்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும்"

கரையாளர் "சரி ஐயா, நேருவிடம் இது பற்றி எடுத்துச்சொல்கிறேன்"

கவிமணி "காந்தி இருந்த வரை நேரு மருமகள் போல இருந்தார்.
இப்போது பதவிக்கு வந்தவுடன் மாமியார் போல நடந்துகொள்கிறார்.
அவர் தயவை எதிர்பார்க்காமல் தமிழர்கள் போராடவேண்டும்.
தெலுங்கர்களை இந்த விசயத்தில் நாம் பின்பற்றவேண்டும்.
தென்குமரியும் வடவேங்கடமும் போய்விட்டாலும்
குறைந்தபட்சம் குமரி முனையிலிருந்து வேங்கடமலையான திருப்பதி வரையாவது நம் நாடு ஒரு சிற்றரசாகவேணும் இந்தியாவில் இருக்கவேண்டும்.
நான் உயிருடன் இருக்கப்போகும் காலம் குறைவு.
என் காலத்தில் இது நடக்கவேண்டும்.
என் கடைசி ஆசை இது"
என்று கூறிவிட்டு கண்ணை மூடினார் கவிமணி.
மூடிய கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

திடீரென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்.
"தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்மிட்டு போற்றுகின்றேன் மன்னுபுகழ்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நாடு ஒத்து உலகில்
சந்தமும் வாழ வரம் தா"
பாடி முடித்ததும் அப்படியே அயர்ந்துவிட்டார்.
---------------------
தொடரும்

Friday, 17 March 2017

திருவனந்தபுரம் தமிழர் நகரம்

திருவனந்தபுரம் தமிழர் நகரம்

1750 வரை திருவனந்தபுரம் மலையாளிகள் கைக்குப் போகவில்லை

இதைக் கைப்பற்றிய மார்த்தாண்ட வர்மா தமிழ் அரச பரம்பரையான வேணாடு அரசர் குலத்தவன்.
அதாவது முழுத் தமிழன் இல்லையென்றாலும் அவனை மலையாளி என்று கூறமுடியாது.

இந்த வேணாட்டு அரசர்கள் காலங்காலமாக பாண்டிய நாட்டின் கீழ் ஆண்டு வந்தனர்.
சேரநாட்டின் பகுதியாகக் கூட என்றுமே இருந்ததில்லை.

  1950 களில் மார்சல் நேசமணி திருவனந்தபுரம் இருக்கும் நெய்யாற்றின்கரை தாலுகாவில் தமிழர் பெரும்பான்மையை சான்றுகளோடு நிறுவி அப்பகுதியை தமிழகத்துடன் இணைக்க எவ்வளவோ போராடினார்.

30 தமிழர்கள் சுடப்பட்டு இறந்தனர்.
400 பேர் வரை கைதானார்கள்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

  நேசமணி திருவனந்தபுரம் கிடைக்க தமிழர்கள் 60% வரை வாழ்ந்த நெடுமங்காடு தாலுகாவை விட்டுக்கொடுக்கவும் செய்தார்.

ஆனால் அவரால் கன்னியாகுமரியை மட்டுமே மீட்கமுடிந்தது.
(கேட்டதில் பாதிக்கும் குறைவு)

மலையாள மொழியானது 500 ஆண்டுகளுக்கு முன்னே உருவாகிய மொழி ஆகும்.

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல்
அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு)

1650 எழுத்தச்சன் பச்சமலையாளம் என்ற மொழி உருவாக்கினார். இது செந்தமிழே.
1860 முதல் மலையாள இலக்கண நூல் எழுதப்பட்டது.
1900 வரை மலையாளிகள் தமிழும் படித்தனர்.
(பாவாணர், திராவிடத்தாய் நூலில்)

எடக்கல் எனுமிடத்தில் பழைய தமிழ் (பிராமி) எழுத்தில் 'ஓ பழமி' என்று எழுதியிருந்ததை மலையாளிகள் 'இ பழம' என்று மலையாளத்தில் எழுதியிருப்பதாக எவ்வளவோ திரிக்க முயன்றனர்.
இதற்கு ஐராவதம் மகாதேவன் உடந்தையாக இருந்தார்.

நல்லவேளையாக நடன காசிநாதன் அது தமிழே என்றும் அது தமிழ் தெய்வம் பழையோள் என்றும் நிறுவினார்.

ஆக மலையாளிகள் எந்த வகையிலும் தமிழரிடமுள்ள சான்றுகளுடன் போட்டி போட முடியாது.

Thursday, 2 March 2017

தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)

தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)

 ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்டபகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுத்தார். 

இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.

முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.

திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.

 30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன்  விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்கவேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது.

Sunday, 3 January 2016

குருதியில் நனைந்த குமரி -8

குருதியில் நனைந்த குமரி -8

நேசமணி இரவெல்லாம் தூங்கவில்லை.

அவரது மனைவியான கரோலின் அருகே இருந்தார்

"என்னவாயிற்று? குஞ்சனையாவை காவல்துறை  தூக்கிச்சென்றதை நினைத்து வருத்தமா?"

"ஆமாம், ஏற்கனவே தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக பட்டம் ஆட்களிடம் கத்திக்குத்து வாங்கியவர்.
இப்போது கால்களையும் உடைத்துவிட்டனர்.
முக்கியமான மற்றவர்களை தலைமறைவாகச் சொல்லிவிட்டேன்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?"

"நீங்கள் கவலைப்படுவதால் என்ன நடக்கப்போகிறது?
விடிந்ததும் ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.
இப்போது உறங்குங்கள்"

"நான் கவலைப்படாமல் வேறுயார் கவலைப்படுவார்கள்?
ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றவன் நான்,
அந்த ஒரு லட்சம் பேருக்கும் நான் என்ன பதில் சொல்வேன்?
நாட்டைக் காக்க வீட்டுக்கு ஒருவரை அனுப்புங்கள் என்று சொன்னவன் நான்தானே?!
தமிழகத்துடன் இணையவேண்டி சிறை சென்ற இளைஞனுக்குதான் பெண்கொடுக்கவேண்டும் என்று கூறியவன் நான்தானே?!
அதை அப்படியே செய்த மக்கள் அல்லவா இவர்கள்?!
சிறைவாசலில் நிச்சயமான திருமணங்கள்தான் எத்தனை?!
நிச்சயமான மாப்பிள்ளைகள் வேண்டுமென்றே சிறை சென்றுவந்து திருமணம் செய்த நிகழ்வுகள்கூட உண்டே?!"

"எல்லாம் சரியாகிவிடும்"

"தேர்தலில் வென்றால் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை.
எத்தனை வன்முறைகளைச் சமாளித்து இந்த தேர்தலில் வென்றோம்?!
எந்த பலனும் இல்லை.
போன தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை.
ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது அதைவிட அதிகமான உயிர்ச்சேதம்"

கதவு தட்டப்பட்டது.
கரோலின் கதவைத் திறந்தார்.
இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந்தனர்.

"என்னம்மா?!"

"அப்பச்சியை பார்க்கவேண்டும்"

நேசமணி வாசலுக்கு வந்தார்.

அவரைப் பார்த்ததும் அப்பெண்கள் பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினர்.

"ஐயா என் மகன் அழைத்துச் சென்ற காவல்துறை மண்டையில் பலமாக அடித்து போட்டுவிட்டது.
நினைவில்லாமல் கிடக்கிறான் ஐயா"

"ஐயா என் அண்ணனை செல்லப்பனை அழைத்துக்கொண்டுபோய் வலதுகாலை உடைத்து ஊனமாக்கி
தவழ்ந்தபடி வீட்டுக்கு போகச் சொல்லி விரட்டியுள்ளனர்.
குருதி ஒழுக தவழ்ந்தபடி வந்துகிடக்கிறார் ஐயா"

"எப்போது? எங்கே?"

"குழித்துறையில் ஐயா, நேற்று"

"அங்கேயிருந்து கால்நடையாகவா வந்தீர்கள்?"

"ஆமாம் ஐயா எங்களுக்கு உங்களை விட்டால் வேறு யார்?"

விடிய விடிய இன்னும் பல பெண்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு முழுவதும் கால்நடையாக நடந்து நேசமணி வீடுதேடி வந்து கொடுமைகளைச் சொல்லி கண்ணீர் விட்டனர்.

மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் நேசமணியின் மன உறுதியைக் குலைப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் திட்டம்.

"இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்ளுங்கள் அம்மா
கூடிய விரைவில் நமக்கு விடிவுகாலம் பிறந்துவிடும்"
நேசமணி அனைவருக்கும் இதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் சொல்லி அனுப்பினார்.
______________________

மறுநாள் துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைப் பார்வையிட 600 ஆயுதக்காவலர்கள் புடைசூழ பட்டம் தாணுப்பிள்ளை பார்வையிட வந்தார்.

அவரும் காவல்துறை உயரதிகாரியும் மலையாளத்தில் பேசிக்கொண்டனர்

"என்ன இது வெறிச்சோடிக் கிடக்கிறதே?!"

"இவர்கள் வெளியே வந்தால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடாதா?
அதனால் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறேன்.
வெளியே வருபவர்களை நன்கு கவனித்து அனுப்பிவிடுகிறோம்"

"ம். இனி இவர்கள் கூட்டம் கூடுவதை நினைத்தும் பார்க்கக்கூடாது.
ஆமாம், நேசமணி கட்சித் தலைவர்களை என்ன செய்தீர்கள்?"

"அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லைக் காவலை பலப்படுத்தியிருக்கிறேன்.
அதற்கு இரவோடு இரவாக  பலர் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டனர்"

"பேடிகள், எத்தனை பேர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பார்கள்?"

"தோராயமாக 3000 பேர்"

"இவ்வளவுதானா?"

"நேசமணி இருக்கும் தைரியம்.
இல்லையென்றால் திருநெல்வேலி முழுக்க அகதிகளால் நிறைந்திருக்கும்"
_____________________

காவல்துறையினரும் ஆயுதக் காவலரும் ஒரு திடலில் கூட்டப்பட்டனர்.

நடுவில் நின்று பட்டம் தாணுப்பிள்ளை பேசினார்.

"எனதருமை காவல்துறை நண்பர்களே!
உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்துள்ளீர்கள்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நம் பெருமையை நிலைநிறுத்திவிட்டீர்கள்.
உங்களுக்கு எனது பாராட்டு.
சூழ்நிலையை சமாளிக்க என்னோடு வந்த 1600 ஆயுத காவலர்களும் இங்கே விட்டுச் செல்கிறேன்.
கேரள அரசிற்காக உங்களது பணியை சிறப்பாக தொடருங்கள்"

பிறகு அந்த 1600 ஆயுதம் தாங்கிய காவலர்களை 200, 300 ஆக தமிழர் பகுதி முழுக்க ஆங்காங்கே நிறுத்திவிட்டு திரும்பினார்.

அதன்பிறகு அந்த ஏவல் கூட்டத்தின் வெறியாட்டம் தொடங்கியது.
அவர்களைத் தட்டிக்கேட்க யாருமேயில்லை.
-----------------------------------------------
படம்: சுவரில் குண்டு பாய்ந்த அடையாளத்தைக் காண்கிறார் நேசமணி ஐயா (இடமிருந்து இரண்டாவது)
----------------------------------------------
குருதியில் நனைந்த குமரி -7
https://m.facebook.com/photo.php?fbid=644283149008675&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56