Showing posts with label நேசமணி. Show all posts
Showing posts with label நேசமணி. Show all posts

Monday, 4 December 2017

கன்னியாகுமரி மீட்பில் தினமலர் (வரைபடம்)

கன்னியாகுமரி மீட்பில் தினமலர் (வரைபடம்)

மார்சல் நேசமணி தலைமையில் நடந்த மண்மீட்பு போராட்டத்தில் அன்று டி.வி.ஆர் தலைமையில் இயங்கிய தினமலர் நாளிதழ் தமிழர்களுக்கு பல்வேறு தடைகளையும் மீறி முழு ஆதரவை வழங்கியது.

1954 இல் தினமலர் வெளியிட்ட வரைபடம் மற்றும் கட்டுரைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
---------------

ஐக்கிய கேரளமும் ஐக்கிய தமிழகமும் - 1

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் வரை திருவிதாங்கூரில் மலையாளிகளும், தமிழர்களும் அண்ணன், தம்பி முறையில் சகோதரர் களாக வாழ்ந்து வந்தார்கள். எந்தவித இன வேறுபாடுகளும் கிளம்பியதே இல்லை. தென்திருவிதாங்கூரிலுள்ள தமிழர்களில் சிலர் ஒரு காலத்தில், தங்கள் பள்ளிக்கூடங்களில் மலையாளம்தான் போதிக்கப்பட வேண்டும், அப்படியானால்தான் ராஜ்ஜிய நிர்வாகப் பதவிகளில் கூடுதல் பங்கு கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு உயர்தரப் பாடசாலைகளில் ஒரு தமிழ்ப் பண்டிதர் இருந்தால், நான்கு மலையாளப் பண்டிதர்கள் இருப்பார்கள்.
விளவங்கோடு, நெய்யாற்றங்கரை மக்களில் இன்று கூட அநேகருக்கு மலையாளம்தான் தெரியும்.
அவர்களில் சிலர் மலையாள நடையுடை பாவனைகளையே அனுஷ்டித்தும் வந்தார்கள்.
பெண்கள்கூட தங்கள் தமிழ் மரபுச் சேலைகளைக் கைவிட்டுவிட்டு, வெள்ளை ‘முண்டு’ அணிந்து பெருமை கொண்டாடினர்கள்.
இன்னும் ஒருபடி போனால் மாவேலிக்கரை, மூணாறு, தொடுபுழை, வைக்கம் முதலான இடங்களில் வசிக்கும் பெருவாரியான தமிழர்கள், நடையுடை பாவனைகளில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் மலையாளிகளாகவே காட்சியளித்து வந்தார்கள்.
ஆனால், கல்யாணம் போன்ற சடங்குகளில் மட்டும் தமிழ் மரபைக் கடைப்பிடித்து வந்தார்கள்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
இரும்பு உள்ளம் படைத்த நமது ஒப்பற்ற தலைவர் வல்லபாய் படேல், திருவிதாங்கூரையும், கொச்சியையும் ஒன்றாக இணைத்தார்.
இந்த இரு சுதேச ராஜ்ஜியங்களும் அப்படியே இருந்தால், பிற்காலத்தில் அவை மூலம் நாட்டிற்கு ஏதாவது கேடுகள் சம்பவிக்கலாம் என்பதும் இணைப்பிற்கு ஒரு காரணமாகும்.
அது மட்டுமல்ல, கிரமமாக சுதேச ராஜ்ஜியங்களை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நெடுநாளைய கனவு.
அக்கனவுதான் வல்லபாயை அவ்வாறு செய்யத் துண்டியது.
இந்த இரண்டு இராஜ்ஜியங்களும் சேர்ந்த பிறகும் தமிழர் - மலையாளி உறவு பாதிக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

இன்று திரு - கொச்சியில் இருக்கும் 90 லட்சம் ஜனத்தொகையில் தமிழர் 20 லட்சத்திற்கு மேல் இருக்கிறார்கள்.
இந்தக் கணக்கிற்கு, ‘சென்சஸ் ’ ஆதாரம் கிடையாது.
ஏனெனில் மலையாளம் பேசும் தமிழர்களை எல்லாம் மலையாளிகளாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.
தோவாளை, அகஸ் தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஏழு தாலுகாக்களிலும் முழுக்க முழுக்கத் தமிழர்களே இருக்கிறார்கள்.
நெய்யாற்றங்கரையில் நூற்றுக்கு அறுபது தமிழர்கள்.
சித்தூரிலும் அப்படியே.
இதுதவிர நெடுமங்காடு, பத்மனாபபுரம் தொடங்கி மலையிலுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் முக்காலே மூணு வீசம் பேர் தமிழர்கள். திருவனந்தபுரத்தில் பாதிப்பேர் தமிழர்கள்.
மற்றும் கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், கொச்சி முதலான நகரங்களிலும், நிறையத் தமிழர்கள் குடியிருந்து வருகிறார்கள்.
சிறு சிறு ஊர்களிலும் தமிழர்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் சரியாகக் கணக்கு எடுத்துப் பார்ப்பதாக இருந்தால், இந்நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் தமிழர்கள் என்பது புலனாகும்.
15 இலட்சம் தமிழர்கள் என்று சொல்வது நமக்கே நம்முடைய கணக்கு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழர் கணக்கு இவ்வாறு இருக்கிறது என்பதை மனத்தில் கொள்வோம்.

மக்களாட்சி ஏற்பட்டதிலிருந்து ஒவ்வொரு சம்பவத்தையும் கவனிப் போம்.
முதலாவதாகப் பட்டம் தாணுப்பிள்ளை மந்திரி சபை அமைத்தார்.
அதில் ஒரு நாயர், ஈழவர் (சி.கேசவன்), ஒரு கிறிஸ் துவர் (டி.எம்.வர்கீஸ் ) ஆகிய மூவரும் மந்திரிசபையில் அங்கம் வகித்தார்கள்.
தமிழருக்குப் பிரதிநிதியாகப் பி.எஸ் . நடராஜபிள்ளையை எடுத்தார்கள்.
ஆனால், அவருக்கு அன்று ஒரு தினம் மட்டுமே மந்திரியாக இருக்க முடிந்தது.
பின் வெவ்வேறு பதவிகளைக் கொடுத்தார்களே தவிர, மந்திரி பதவி கொடுக்கவில்லை.
இந்த இடத்தை நேயர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
பட்டத்தின் சகாக்களுக்குப் பி.எஸ் .நடராஜபிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு தமிழனை எடுத்தால் என்ன?
அப்படியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் ஜாதி வாரியில்தான் மந்திரிகள் வந்தார்களே ஒழிய, காங்கிரசின் அடிப்படை இலட்சியங் களுக்கு ஒப்ப மந்திரிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ஒரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
அல்லது இரு நாயரும், ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாதா . . .
இல்லை, திரு - கொச்சி அரசியலில் அப்படிப்பட்ட ஒரு ஜாதி, மத பேதமற்ற ஆட்சியை ஸ்தாபிக்க முடியவில்லை.
ஜாதி வாரியாகத்தான் எடுக்க முடிந்தது.
அப்படியானால், நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை உள்ள தமிழனுக்கு இடம் ஏன் கொடுக்கவில்லை?
மலையாளிகளை விட, பழைய காங்கிரசில் தமிழனே கணக்கரிய தியாகங்களைத் திருவிதாங்கூரில் புரிந்திருக்கிறான் என்பது வெள்ளிடைமலை.
அப்படிப்பட்ட தமிழர்களை அலட்சியம் செய்வது, மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்தில் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் அடியாகும்.
அந்த முதல் அடி விவேகமுள்ள தமிழர்களை எவ்வளவு தூரத்திற்குப் புண்படுத்தி இருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை.
அதற்குப் பின் உள்ள அரசியல் சூழ்நிலைகளையும், சம்பவங்களையும் நாளைய தலையங்கத்தில் தொடர்ந்து ஆராய்வோமாக.
(ஜூலை 23, 1954 ‘தினமலர்’ தலையங்கம்).
--------------------------
ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 2

மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்திலேயே பட்டம் மந்திரி சபையினர் தமிழர்களுக்குத் தந்த, ‘முதல் அடியை’ நேற்று விளக்கியிருந்தோம்.
அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களைப் பார்ப்போம்.
பட்டம் மந்திரி சபை குடைசாய்ந்ததும், டி.கே.நாராயணப்பிள்ளை அதிகாரத்திற்கு வந்தார்.
அவரது மந்திரி சபையிலும் தமிழனைக் கவனிக்கவில்லை.
அடுத்தபடியாக, சி.கேசவன் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
அவரது பதவிக் காலத்திலும் பழைய சொக்கன் சொக்கனே. இந்த மூன்று மந்திரி சபைகளிலும் தமிழர்களது நியாயமான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன.
சட்டசபைத் தலைமைப் பதவி என்ற இரண்டாம் வகுப்பு மார்க்கம் கூட தமிழருக்குக் கொடுக்கப்படவில்லை.
அதற்கெல்லாம் கூடத் தமிழர்கள் தங்கள் பிறப்புரிமையை வற்புறுத்தாமல் வாய்பேசாப் பிராணிகளாகவே இருந்தார்கள்.

இரண்டாவது பொதுத் தேர்தல் வந்தது.
திருவிதாங்கூர் தமிழ் நாட்டுக் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானங்கள் கிடைத்தன.
அப்பொழுதும் அவர்கள் கவனிக்கப்படவில்லை.
இதற்கிடையில் காங்கிரசாருக்குள்ளே சண்டை வந்தது.
காங்கிரஸ் மந்திரி சபையே திவாலாகி விடும் என்று பயப்படும்படியான நிலை ஏற்பட்டது.
அதைத் தவிர்க்க, வேண்டாவெறுப்புடன் தமிழர்களின் பிரதிநிதியாக, ஏ.சிதம்பரநாத நாடாரை மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டார்கள்.

பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது. அத்தேர்தலில் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ்தானம் கிடைத்தது.
கம்யூனிஸ்டுகள் கை வெகுவாகத் தாழ்ந்தது.
உடனே காங்கிரசில் உள்ள மலையாளிகளின் மனம் மாற ஆரம்பித்து விட்டது.
சிதம்பரநாதன் அவசியம் இல்லாமலேயே காங்கிரசின் சொந்த பலத்தால், ‘அடியந்திரம்’ நடத்தி விடலாம் என்று மலையாளிகள் நம்பினர்.
எனவே, மற்றொரு தேர்தல் நடத்தவேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டிக்கவேண்டும் என்பதற்காகக் காங்கிரசார் தங்களுக்குள்ளேயே ஒரு சண்டையைக் கிளப்பிக்கொண்டனர்.
தி.த.கா., தங்களுடன் நிபந்தனையின்றி இணையவேண்டும்; இல்லையேல் வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தி.த.கா., விற்கு ஒரு தனி பி.சி.சி., அந்தஸ்து கேட்டார்கள்.
கடைசியில் ஒரு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி அந்தஸ்தாவது கிடைக்குமா என்று கூடப் பார்த்தார்கள்.
ஒன்றும் பயனில்லை.
தங்களை வெளியேற்ற திரைமறைவில் பல சூழ்ச்சிகள் நடந்துவந்தன என்பது அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது.
உடனே அவர்கள் மானமாகப் பதவியை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்தார்கள்; சட்டசபையும் கலைக்கப்பட்டது.
அடுத்த தேர்தலும் நடந்தது.

ஆனால், ஒரு ஆச்சரியம். . .
காங்கிரஸ் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்தது.
117 பேர் கொண்ட சட்டசபையில் 45 பேர்தான் வந்தார்கள்.
தி.த.கா.,விற்குப் பெரும் வெற்றி கிடைத்தது.
எட்டாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
மக்களின் ஆட்சியில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அரசியல் குரோதங்களை எடுத்துக்காட்டவே இங்ஙனம் பழைய சம்பவங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
இவை இத்தோடு நிற்கட்டும் .

மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சி, தூங்கியவன் கதை போல சப்பென்று இருந்தபோது, பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணமும், அதைத் தொடர்ந்து ஆந்திர ராஜ்ஜியம் அமைந்ததும் இந்தியாவுக்கே புது உத்வேகத்தை ஊட்டியது.
நேருஜியைக் கூடப் பலமாக உறுத்த ஆரம்பித்துவிட்டது.
அந்த உத்வேகத்தை எப்படியாவது தணிக்க வேண்டும் என்பதற்காக, மூவர் கொண்ட ஒரு ராஜ்ஜிய புனர் அமைப்புக் கமிஷனை நேருஜி நிறுவினார்.

கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டுவதையும், அவர்கள் குறிப்பிடும் எல்லைகளையும் நினைக்கும் போது நமக்கு வருத்தம் ஏற்படுவதோடு சிரிப்பே அதிகம் ஏற்படுகிறது.
கேரளத்தில் இருந்து ஒருவர் சொல்கிறார்,
‘இது மேற்குக் கரை ராஜ்ஜியமாக இருக்க வேண்டும்’
அதாவது, குமரி முனை முதல் பம்பாய் வரை அவருக்குத்தானாம்.
இன்னொருவர் சொல்கிறார்,
‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையிலும் கேரளம்’.
ஆனால், நீலகரி, கோயம்புத்தூர், குடகு இந்த மூன்றும் இந்த ராஜ்ஜியத்தில் சேர்ந்தால்தான் கேரள ராஜ்ஜியம் சிறப்பாக அமைய முடியுமாம்.
அவர்களில் யோக்கியமானர்கள், இரண்டு மாவட்டங் களைக் கொண்ட மலபாரையும், திரு - கொச்சியையும் சேர்ந்த ஒரு கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஏனைய்யா . . . தெற்கு கிழக்கு பாகங்களிலும், மலைகளிலும் தமிழர்கள் இருக்கிறார்களே அவர்கள் கதி என்ன என்று கேட்டால்,
‘பரசுராமன் கோடரி எறிந்து உண்டாக்கிய எல்லையில் யாருக்குமே தலை போட உரிமை இல்லை’ என்று சொல்கிறார்கள்.
கன்னியா குமரியில் சென்னை கவர்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.
கன்னியாகுமரியில் ரோட்டரி கிளப்பினர் கொடுத்த விருந்து ஒன்றில் கவர்னர் பேசுகையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்,
அசாம் மக்களும் உங்கள் திரு - கொச்சியைப் போல் பரசுராமன்தான் அவர்களது நாட்டைச் சிருஷ்டித்ததாகக் கூறுகிறார்களாம்.
நல்லவேளை, இந்தத் தாமோதர மேனன் ஒருவரும் அங்கு இல்லையே என்று மகிழ்ந்தேன்.
அவர் இதைக் கேட்டால் அசாமையும், கேரளத்தோடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி ஆரம்பித்து விடுவார்களே! அப்பொழுது நம்மைப் பிடித்து இருக்கும் தலைவலி அவர்களையும் பிடிக்குமே என்று நினைத்தேன்.

பரசுராமர் கதையை இழுத்து அர்த்தமற்ற விவாதத்தைக் கேரளியர்கள் கிளப்புகிறார்கள் என்பதை நாம் சொல்லவில்லை.
சென்னை கவர்னர் சொல்கிறார் என்பதற்காகவே மேற்கண்ட பிரசங்கத்தை எடுத்துக்காட்டினோம்.
திரு - தமிழ்பிரதேசம் பிரியக்கூடாது என்பதற்குக் கேரளியர்கள் கூறும் பல விதண்டாவாதங்களை நாளை சொல்வோம்.
(ஜூலை 24, 1954 ‘தினமலர்’ தலையங்கம்.)
------------------------

ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 3

திரு - கொச்சி தமிழ்ப் பிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று கேரளியர்கள் கூறுவதற்குரிய காரணங்களைப் பார்ப்போம்.
1) பரசு ராமன் சிருஷ்டித்தது.
2) இயற்கையான சகியமலைத் தொடருக்குள் இந்தப் பகுதி இருப்பது.
3) தமிழ்ப் பிரதேசங்களைப் பிரித்துவிட்டால் நெல், ரப்பர், தேயிலை, ஏலம், மின்சார நிலையங்கள் உற்பத்திகளை இழக்கவேண்டி வருவதால் பட்ஜெட்டைச் சரிக்கட்ட முடியாது.
4) அப்படியே தமிழர்கள் தங்களுடன் இருக்க இஷ்டப்படாவிட்டால் இந்தப் பகுதியை விட்டுப் போய் விடட்டும். அவர்கள் இங்குப்பிழைக்க வந்தவர்கள்தான்.
5) இனி ஒரு விசித்திரமான காரணத்தையும் கேளுங்கள்.
"நீங்கள் அங்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?
தமிழ்நாட்டில் இதுபோல பள்ளிக்கூடம் உண்டா?
ஆஸ் பத்திரி கள் உண்டா?
போலீஸ் பாதுகாப்பு உண்டா?
அடிப்படைத் தீர்வை உண்டா?
இவ்வளவு சாலைகள் உண்டா?
இவையெல்லாம் இதுபோல் உங்களுக்கு அங்கு ஏற்பட வேண்டுமானால் இன்னும் நூறு வருடம் ஆகுமே?!"

இதையெல்லாம் நாம் ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1) பரசுராமர் காலத்தைப் பார்ப்போம்:
இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தானம், பாரதத்திலுள்ள காந்தார ராஜ்ஜியம்.
காந்தார ராஜனின் மகள்தான் காந்தாரி.
ஆகையினால், எந்த வகையிலும் ஆப்கானிஸ்தானத்தை நாம் விடக்கூடாது.
அதேபோல் இப்பொழுது இருக்கும் மேற்குப் பாகிஸ்தான் புராதன பாரதத்தின் ஹிருதயஸ்தானம்.
ஆதலால், அதையும் நாம் திரும்ப அடைய வேண்டும்.
அசாமும், பரசுராமனுடைய சிருஷ்டி ராஜ்ஜியமானதால் அதையும் கேரளத் துடன் சேர்க்கவேண்டும்.
இதெல்லாம் சரிதான் என்றும் நடக்கக்கூடியதென்றும் கருதுவதாயிருந்தால் கேரளமும் சரிதான்.

2) மேற்கு மலைத்தொடருக்கு மேற்கே அமைந்திருக்கும் இடம் என்றால், மலைத் தொடருக்குக் கிழக்கே அமைந்திருக்கும் இடம் அத்தனையும் ஒருங்கே சேர்க்கவேண்டாமா?
அப்படியானால் ஆந்திரம் எப்படி சாத்தியம்?
இன்னும் மேற்கு மலைத் தொடருக்குள் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றனவே அவற்றையும் சேர்க்கவேண்டாமா
இது என்ன அபத்த வாதம்.

3) ஒரு மக்களைக் கூட்டாகக் கொண்ட ஒரு பகுதிக்குச் சவுகரியங்கள் வேண்டுமென்றால் அதற்கு இன்னொரு பகுதி என்ன பழி செய்தது.
ஒருவருக்கு வீடில்லை என்பதற்காக இன்னொருவருடைய வீட்டை பறித்துக் கொடுப்பார்களா?
பயிருக்காகத் தந்த தண்ணீரிலே கொஞ்சம் மின்சாரம் எடுக்கிறேன் என்றால் விடுகிறார்களா பாருங்கள்.
‘கிருஷ்ணா நதியில் தண்ணீர் பாழாய்ப் போகிறது.
எங்கள் ஆற்காட்டிற்குக் கொஞ்சம் கொடு ஐயா’ என்று ஆந்திரர்களைக் கேட்டுப்பாருங்கள்; அப்போது தெரியும்.
இன்னொரு பகுதி செழிப்பாய் இருக்கவேண்டும் என்பதற்காக யாராவது தன்னிடத்தை விட்டுக்கொடுப்பார்களா?

4) ‘கூலிகள் . . . பிழைக்க வந்தவர்கள்’ என்று அற்பத்தனமாய், ‘மனோரமா’ போன்ற பத்திரிகைகள் எழுதுவது வெட்கக்கேடானது.
இங்கு வாழும் தமிழர்கள், மலையாளிகளையும் விடப் பூர்வகுடிகள்.
மேலும், உண்மையிலேயே கூலிகளாய் இலங்கைக்குப் போன இந்தியர்களை நாம் திரும்ப அழைக்கத் தயாரா?
‘எந்த நியாயத்தில் கூடாது?’ என்பதை நாம் பல பத்திரிகைகளிலும் சர்ச்சை செய்ததை அறிவோம்.

5) நாங்கள் கேட்கிறோம் . . . ‘நீங்கள் மலபார் மக்களோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா?
அங்குப் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, சாலை, பாலம், போலீஸ் , அடிப்படைத் தீர்வை எல்லாம் உண்டா?’
அது மலேரியா நிறைந்த காடாச்சே!
திரு - கொச்சித் தமிழர்களும் இதுநாள்வரை சும்மாதான் இருந்தார்கள்.
எவ்வளவோ அவமதித்தும் கூட, உங்களுக்கு மலபார் பைத்தியம் பிடித்தவுடன்தான் எங்களுக்கும் தமிழ்நாடு பித்துப் பிடித்தது!
ஒன்றுமே இல்லாத மலபாரை நீங்கள் விருத்தி செய்யலாம் என்று நினைக்கிறீர்களல்லவா?
அதுபோல் தரிசாய்க் கிடக்கும் தமிழ்நாட்டையும் பொன் விளையும் பூமி ஆக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை...
‘மற்ற ஏழு தாலுகாக்களையும் கூட விடலாம்;
தேவிகுளம், பீர்மேடு என்ற இடத்தை எப்படி விடுவது?’ என்கிறது ஒரு குரல்.
ஒரு விஷயத்தை மக்கள் நன்றாகப் பதிய வைக்கவேண்டும்.
அதவாது, பள்ளிவாசல் என்ற இடத்தைத் தமிழர்கள் கேட்கவில்லை.
அதைத் தவிர உள்ள இடத்தைத்தான் கேட்கிறார்கள்.
எனவே, மின்சாரத் திட்டம் போய்விடும் என்று மக்கள் மனத்தைக் குழப்பவேண்டாம்.
மேலும், திவான் வாட்ஸ் காலத்திற்கு முன் திருவிதாங்கூர்காரருக்கு இப்படி ஓர் இடம் இருப்பதாகவே தெரியாது.
நேரியமங்கலம் பாலம் வந்தபிறகுதான் திருவிதாங்கூர் மக்கள் அந்த இடத்தைப் பற்றி அறியத் தொடங்கினார்கள்.
அங்கு இன்னும் பெரும்பான்மைத் தோட்ட முதலாளிகள் தமிழர்களும், வெள்ளையர்களும்தான்.
கண்ணன்தேவன் மலைத் தோட்டத்தில் ஆரம்ப காலந்தொட்டு,
அதாவது கடந்த நூறு வருடமாய் நூற்றுக்கு நூறு தமிழர்கள்தான் தொழிலாளர்கள்.
ஆதலால், தமிழர்கள் அதைக் கேட்பதில் ஒரு தவறும் இல்லை.
எந்தக் குருடனும் அதற்குச் சம்மதிப்பான்.
ஆகையால், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று என்ன முறையில் கேட்கிறார்களோ, அதே நியாயம் ஐக்கிய தமிழகத்துக்கும் பொருந்தும்.

‘நீங்கள் ஐக்கிய கேரளம் என்ற பூதத்தைக் கிளப்பி விட்டீர்கள்;
அதற்குரிய பலியைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது உங்களை விடாது.
(ஜூலை 25, 1954 ‘தினமலர்’ தலையங்கம்)

Wednesday, 29 November 2017

பறிபோன செங்கோட்டை காடு

பறிபோன செங்கோட்டை காடு


 மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

 அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்கவேண்டும்


 ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

 

 தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

 

 ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.


 அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக்கொண்டனர்.


 இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக்கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க,

தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை)

 

 பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.


 1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.


 அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.


 இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.


 மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும்போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.


 இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.


இதை நாம் இழந்தோம்.

(வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது)

Saturday, 15 July 2017

காமராசர் - ஒரு முடிந்துபோன கதை

காமராசர் - ஒரு முடிந்துபோன கதை

சில வன்னியர்கள்,
காமராசரால் அரசியலில் வன்னியர் ஓரம் கட்டப்பட்டதையும்

அதை எதிர்த்து வெளிய வந்த வன்னிய தலைவர்கள் (எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மற்றும் மாணிக்கவேல் நாயகர்)
தனி கட்சி ஆரம்பித்து பெருவாரி வெற்றி பெற்றதையும் எழுதி

ஏதோ காமராசரை வன்னியர்களுக்கு எதிரானவர் என்றும்
நாடார் சாதிவெறியர் என்றும் அடையாளப்படுத்த முயல்கின்றனர்.

அடேய் தம்பிகளா !

அதே காமராசர்,
நேசமணி நாடார் தமிழ்நாடு காங்கிரசில் இணைய வந்தபோது முடியாது என்று மறுத்தார் என்பதையும்

அதன் பிறகு அவர் தனிக்கட்சி தொடங்கி நிறுத்திய 14 வேட்பாளர்களை எதிர்த்து
தாமே எதிர் வேட்பாளர்களை நிறுத்தி தாமே நேசமணி நாடாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்  என்பதையும் அறிக.

அதோடு காமராசர் நிறுத்திய 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பதையும்
நேசமணி நாடாரின் வேட்பாளர்கள் பெருவாரி வெற்றிபெற்றனர் என்பதையும் அறிக.

காமராசரை முதலமைச்சர் பதவியிருந்து தூக்கி எறிந்தது சிவகாசி நாடார்கள் என்பதையும் அதனால் தெலுங்கரான சீனிவாசன் வெற்றிபெற்றார் என்பதையும் அறிக.

காமராசர் விசுவாசமாக இருந்தது நேரு குடும்பத்துக்கு மட்டும்தான்.

தன் சொந்த சாதிக்கோ இனத்திற்கோ எந்த நன்மையும் செய்ததில்லை.

தமிழர்களின் நலன்களையெல்லாம் காவு கொடுத்துதான் அவர் ஹிந்திய தலைவராக உருவெடுத்தார்.
அதாவது அவர் அந்த காலத்து அப்துல் கலாம்.

என்ன பயன்?

இன்று ஹிந்தியாவில் எவனுக்கும் அவர் பெயர்கூடத் தெரியாது

வன்னியர் - நாடார் மோதல் திராவிட தெலுங்கர்களை உள்ளே விட்டதால் 60 ஆண்டு தமிழினம் பட்டதெல்லாம் போதாதா?

முடிந்துபோன கதைகளை ஏன் இழுக்கிறீர்கள்?

உங்களுக்கு ஆளும் தெலுங்கனை எதிர்க்கத் துப்பில்லையா?

அல்லது வட மாவட்டங்களை உள்ளங்கையில் வைத்திருக்கும் மார்வாடிகளை கண்டு குலைநடுக்கமா?

Wednesday, 5 April 2017

குருதியில் நனைந்த குமரி -16

குருதியில் நனைந்த குமரி -16
------------------
நாள்: 26.08.1954
நேரம்: அதிகாலை 5 மணி
இடம்: நாகர்கோவில்

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நேசமணியாரின் மனைவி கரோலின் அம்மையார் கதவைத் திறந்தார்.

வெளியே தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

"வணக்கம் அம்மா!
நாங்கள் காங்கிரஸ் குழு மதராசிலிருந்து வருகிறோம்.
நேசமணி இருக்கிறாரா?"

"வாருங்கள்! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"

உள்ளே நுழைந்தனர்.
நேசமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணயர்ந்து இருந்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்தார்.
கைகூப்பியபடி எழுந்தார்

"வணக்கம்! வாருங்கள்! வாருங்கள்!
உங்களுக்கு தந்து உபசரிக்க பாலோ மோரோ இல்லை!
கொஞ்சநேரம் பொறுங்கள்!
புட்டு தயாராகிவிடும்.
நீத்தண்ணீர் அருந்துகிறீர்களா?"

"பரவாயில்லை ஐயா!
இங்கே உள்ள இறுக்கமான சூழலை அறிவோம்.
உங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏதும் இல்லையே?!"

" இல்லை.
தமிழ்மண்ணில் தஞ்சாவூருக்கு அடுத்து பெரிய நெற்களஞ்சியம் இந்த நாஞ்சில் நாடு.
80 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது கூட இங்கே உணவுக்கு தட்டுப்பாடு வரவில்லை.
என்ன! எல்லா விளைச்சலையும் குறைந்த விலை கொடுத்து திருவிதாங்கூர் அரசாங்கம் அள்ளிக்கொண்டு போய்விடும்"

"இப்போதுமா அது நடக்கிறது?"

"ஆமாம். வெளியே 40 ரூபாய் கிடைக்கும்.
ஆனால் வீட்டுக்குத் தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு 9 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்.

அள்ளவரும் நம்பூதிரிகளைக் கேட்டால் பத்மநாபசாமி கோவிலுக்கு என்பார்கள்"

"பத்மநாபசாமி கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவில்தானே?"

"ஆம். ஆனால் பத்மநாபபுரம் இங்கேதான் இருக்கிறது.
அதுதான் திருவிதாங்கூர் தலைநகராக இருந்தது.
அரண்மனை கூட உண்டு.
பிறகுதான் தமிழர் மத்தியில் தலைநகர் வேண்டாமென திருவனந்தபுரத்தை தலைநகராக ஆக்கினர்.
திருவனந்தபுரத்திற்கு அந்தப்பக்கம் வரை மலையாளிகள் தாய்நிலம்.
அந்த பத்மநாபசாமி கோயிலை போய்ப்பாருங்கள் அப்படியே ஸ்ரீரங்கம் கோவிலைப் போல இருக்கும்.
நம்பூதிரிகள் சதிசெய்து கொன்ற கடைசி தமிழ்மன்னன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பெரும் செல்வத்தை அக்கோயிலின் நிலவறைகளில் மறைத்துவைத்துள்ளான்.
கோயிலைச் சுற்றித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
கோயில் பக்தர்களும் தமிழர்களே!
என்று அந்த அறைகளைத் திறக்கிறார்களோ அப்போது பிரச்சனை வெடிக்கும்.
அந்த கோவில் உட்பட திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர் சொத்துதான்.
இன்றைக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியையாவது மீட்கவேண்டும். குமரி முனையில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் வரையும்
அப்படியே வடக்கே தமிழ்நாட்டை ஒட்டியவாறு வால்பாறை வரையும் பரந்திருக்கும் நமது தமிழர் மண்ணை மீட்கவேண்டும்"

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் அளவு வரும் போலிருக்கிறதே?!"

"இல்லை அதில் முக்கால்வாசி வரும்.
ஆனாலும் இதை சாதிப்பது அத்தனை எளிய காரியமில்லை.

இந்த நாஞ்சில் பகுதி மலையாளிகளின் கையைவிட்டு போய்விட்டால் அவர்களுக்கு சோற்றுக்கே வழி கிடையாது.

தேவிகுளமும் பீருமேடும் தமிழ் மாநிலத்துடன் இணைந்து ஏலக்காய், தேயிலை, ரப்பர் மூலம் வரும் வருமானம் தமிழர் கைக்குப் போய்விட்டால் மலையாளிகள் பாதி ஏழைகள் ஆகிவிடுவார்கள்.

நமது மண்ணின் வளத்தை நம்மை உழைக்கவைத்து கொழுத்துக் கிடக்கின்றனர் நம்பூதிரிகள்.
வருமானம் தரும் பகுதிகள் போனாலும் சரி நம்மை அடக்கியாள நினைக்கும் இவர்கள் நோகாமல் உண்ண சோறு கிடைக்க ஒரு போதும் விடமாட்டேன்.

இந்த நாஞ்சில் நாட்டை தமிழ்மாநிலத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணை சரியாக பயன்படுத்தினால் பாதி தமிழினத்திற்கு சோறிடமுடியும்"

"கவலை வேண்டாம்.
எங்களுக்கு இங்கே தற்போது நடக்கும் அடக்குமுறை பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் நேரில் சென்று பார்வையிடவும் செய்வோம்"

"1948லேயே தமிழகத்துடன் இணைய போராடினோம்.
இரண்டு தமிழர்களை இதே பட்டம் தாணுப்பிள்ளை சுட்டுக் கொன்றான்.
பிறகு இவனை அகற்றிவிட்டு வேறு ஒரு மலையாளி முதலமைச்சரானான்.
அவனும் சளைத்தவனில்லை.
ஆனால் ஒரு மலையாள இனவெறியன்தான் தமிழர்களைச் சமாளிக்கமுடியும் என்று மறுபடி பட்டத்தையே கொண்டுவந்தனர்.
'தமிழன்மார அடிச்சமர்த்தனம்' என்று கொக்கரித்தபடி ஆட்சிக்கு வந்தான் பட்டம்"

"பிள்ளை என்றால் தமிழரா?"

"இல்லை எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர்.
இவன் மலையாள கைதிகளை விடுதலை செய்து பீருமேட்டில் வீடும் பணமும் கொடுத்து குடியேற்றினான்.
பிறகு அங்கே அவர்கள் ஒரு தொழிற்சங்கம் தொடங்கி தமிழர்களுக்கான அமைப்பாக இருந்த தொழிற்சங்கத்துடன் பிரச்சனை செய்தனர்.
பட்டம் அரசும் ஒருதலைபட்சமாக நடந்தது.
பிறகு தமிழர்கள் மீது வழக்கு, கைது, சோதனையிடல், தடியடி என்று காவல்துறை அடக்குமுறைகள்.
குமரித் தமிழர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம்.
200 கி.மீ அந்தப்பக்கம் இருந்தாலும் நாங்கள் போய் தடை உத்தரவை போராடினோம்.
400 பேர் கைதானோம்.
நான் விடுதலை ஆனதும் ஒரு பேரணி நடத்த திட்டம் இட்டவேளையில் நேரு அமைதியாக இருக்கும்படி கடிதம் எழுதினார்.
ஆனாலும் மாநில எல்லை வரைவுக் குழு வரவுள்ள இந்த நேரத்தில் நாங்கள் போராடவேண்டிய கட்டாயம்.
எனவே பெரியதொரு போராட்டத்தை முன்னெடுத்தோம்.
எங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியும்.
தெரிந்தேதான் போராடினோம்"

"என்னவொரு துணிச்சல் ஐயா உங்களுக்கு!
மற்ற அடக்குமுறைகளை நேரில் சென்று பார்வையிடுகிறோம்.
உள்ளது உள்ளபடி அப்படியே அறிக்கையாக அளிக்கிறோம்.
எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.
நீங்கள் தமிழகத்துடன் இணைவது உறுதி"

"நம் மக்கள் இங்கே துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்த படுவது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
நீங்கள் வருவதாக அறிவித்த பிறகு தற்போது நிலை ஓரளவு பரவாயில்லை.
உங்களுக்கு நன்றி"

"நன்றி எல்லாம் எதற்கு?
இது எங்கள் கடமை.
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்போம்.
ஆறுதல் கூறுவோம்.
தேவையானவர்களுக்கு திருவிதாங்கூர் அரசிடமிருந்து இழப்பீடும் பெற்றுத்தருவோம்"

"இழப்பீடெல்லாம் வேண்டாம் ஐயா!
ஆறுதலும் ஆதரவுமே தற்போது தேவை.
எப்படியேனும் தமிழகத்துடன் இணைந்தால் போதும்"

"நன்றி! நாங்கள் கிளம்புகிறோம்"

"உணவு தயாராவிட்டது.
உணவருந்தியபின் செல்லலாம்"
---------------------
நாள்: 26.08.1954
இடம்: நேரு அலுவலகம்
மாலை: 4 மணி

மேசைத் தொலைபேசி அழைத்தது.
நேரு எடுத்தார்.

"வணக்கம் ஜவஹர் அவர்களே!"

" வணக்கம் கரையாளரே! உங்கள் அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
அப்துல் ரசாக் முன்பே வந்துவிட்டார்.
வெளியே காத்திருக்கிறார்.
அங்கே என்ன நிலவரம்?"

"இங்கே நிலை சற்று கவலைக்கிடம்தான்.
தமிழ்மாநில எல்லையிலிருந்து நுழையும் முன்னே பார்த்தேன்.
நிறைய அகதிகள் திருநெல்வேலி எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
500 குடும்பங்களாவது இருக்கும்.
இங்கே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எதுவுமே இயங்கவில்லை.
மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
இவர்களது தலைவர் நேசமணியையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
எங்கே பார்த்தாலும் காவல்துறையினர்.
தமிழ் எம்.பிக்கள் பலரைக் காணவில்லை.
சிறையில் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியைப் பார்த்தேன்.
தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளன.
கொல்லப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தேன்.
இப்பகுதியை ஐக்கிய கேரளாவிலிருந்தே பிரிப்பதே முறை.
இவர்களுக்கும் மலையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"

"ஒரு சந்தேகம். அதென்ன அவரது கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்று உள்ளது.
தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி என்கின்றனர் கேரளத்தவர்"

"ஆம். தமிழர்கள் அவர்களது தாய்நிலத்தை தமிழ்நாடு என்றுதான் சொல்வார்கள்.
நான் சந்தித்தவரை அவர் பிரிவினை பற்றி பேசவில்லை.
ஒருவேளை அவர்களது உரிமைகள் கிடைக்காது போனால் பிரிவினையை கையில் எடுக்கலாம்.
ஏனென்றால் தமிழர்கள் மற்ற எந்த இந்தியர்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
நேசமணி கட்சியில் சாதி கடந்து மதம் கடந்து தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை கொடுத்துவிடுவதே நல்லது"

"ஒரே நாளில் இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் காமராசரிடம் கேட்டபோதெல்லாம் சென்ற தேர்தலில் நேசமணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது நேரில் கண்டதாகவும், அப்பகுதி மலையாள கலப்புள்ள பகுதி  என்றுமல்லவா கூறினார்?!"

"காமராசரே பிரச்சாரம் செய்தும் அவர் நிறுத்திய 'திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரஸ்' வேட்பாளர்கள் 14 பேரும் இப்பகுதியில் டெபாசிட் இழந்தததை மறந்துவிட முடியுமா?

நேசமணி நிறுத்திய 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' ஆமோக வெற்றி பெற்றதைத்தான் மறுக்க முடியுமா?

நான் தமிழன் என்ற முறையில் இதைச் சொல்லவில்லை.
நடுநிலையாக ஆராய்ந்தே சொல்கிறேன்.
இன்று யார்வந்தாலும் ஒருநாளிலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியான நிலை இங்கு உள்ளது.
முழுமையாக ஆராய்ந்து நான்கு நாட்களில் எழுத்தில் தருகிறேன்"

"சரி ஐயா! நல்லது"

அப்துல் ரசாக் வரவேற்பறையில் ஒரு மணிநேரமாக காத்திருந்தார்.
சுற்றிலும் ஒரே மலையாளிகள்.
  நேருவின் உதவியாளர்(மலையாளி) வந்து அழைத்து உள்ளே போகும்படி கூறினார்.

(தொடரும்)
---------------------------
படம்: இணைக்கக் கோரிய பகுதி மற்றும் மக்கட்தொகை
( Liberation of the Oppressed a Continuous Struggle
எனும் கன்னியாகுமரி வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டன)