Showing posts with label குமரி முனை. Show all posts
Showing posts with label குமரி முனை. Show all posts

Wednesday, 5 April 2017

குருதியில் நனைந்த குமரி -16

குருதியில் நனைந்த குமரி -16
------------------
நாள்: 26.08.1954
நேரம்: அதிகாலை 5 மணி
இடம்: நாகர்கோவில்

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நேசமணியாரின் மனைவி கரோலின் அம்மையார் கதவைத் திறந்தார்.

வெளியே தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

"வணக்கம் அம்மா!
நாங்கள் காங்கிரஸ் குழு மதராசிலிருந்து வருகிறோம்.
நேசமணி இருக்கிறாரா?"

"வாருங்கள்! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"

உள்ளே நுழைந்தனர்.
நேசமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணயர்ந்து இருந்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்தார்.
கைகூப்பியபடி எழுந்தார்

"வணக்கம்! வாருங்கள்! வாருங்கள்!
உங்களுக்கு தந்து உபசரிக்க பாலோ மோரோ இல்லை!
கொஞ்சநேரம் பொறுங்கள்!
புட்டு தயாராகிவிடும்.
நீத்தண்ணீர் அருந்துகிறீர்களா?"

"பரவாயில்லை ஐயா!
இங்கே உள்ள இறுக்கமான சூழலை அறிவோம்.
உங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏதும் இல்லையே?!"

" இல்லை.
தமிழ்மண்ணில் தஞ்சாவூருக்கு அடுத்து பெரிய நெற்களஞ்சியம் இந்த நாஞ்சில் நாடு.
80 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது கூட இங்கே உணவுக்கு தட்டுப்பாடு வரவில்லை.
என்ன! எல்லா விளைச்சலையும் குறைந்த விலை கொடுத்து திருவிதாங்கூர் அரசாங்கம் அள்ளிக்கொண்டு போய்விடும்"

"இப்போதுமா அது நடக்கிறது?"

"ஆமாம். வெளியே 40 ரூபாய் கிடைக்கும்.
ஆனால் வீட்டுக்குத் தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு 9 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்.

அள்ளவரும் நம்பூதிரிகளைக் கேட்டால் பத்மநாபசாமி கோவிலுக்கு என்பார்கள்"

"பத்மநாபசாமி கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவில்தானே?"

"ஆம். ஆனால் பத்மநாபபுரம் இங்கேதான் இருக்கிறது.
அதுதான் திருவிதாங்கூர் தலைநகராக இருந்தது.
அரண்மனை கூட உண்டு.
பிறகுதான் தமிழர் மத்தியில் தலைநகர் வேண்டாமென திருவனந்தபுரத்தை தலைநகராக ஆக்கினர்.
திருவனந்தபுரத்திற்கு அந்தப்பக்கம் வரை மலையாளிகள் தாய்நிலம்.
அந்த பத்மநாபசாமி கோயிலை போய்ப்பாருங்கள் அப்படியே ஸ்ரீரங்கம் கோவிலைப் போல இருக்கும்.
நம்பூதிரிகள் சதிசெய்து கொன்ற கடைசி தமிழ்மன்னன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பெரும் செல்வத்தை அக்கோயிலின் நிலவறைகளில் மறைத்துவைத்துள்ளான்.
கோயிலைச் சுற்றித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
கோயில் பக்தர்களும் தமிழர்களே!
என்று அந்த அறைகளைத் திறக்கிறார்களோ அப்போது பிரச்சனை வெடிக்கும்.
அந்த கோவில் உட்பட திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர் சொத்துதான்.
இன்றைக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியையாவது மீட்கவேண்டும். குமரி முனையில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் வரையும்
அப்படியே வடக்கே தமிழ்நாட்டை ஒட்டியவாறு வால்பாறை வரையும் பரந்திருக்கும் நமது தமிழர் மண்ணை மீட்கவேண்டும்"

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் அளவு வரும் போலிருக்கிறதே?!"

"இல்லை அதில் முக்கால்வாசி வரும்.
ஆனாலும் இதை சாதிப்பது அத்தனை எளிய காரியமில்லை.

இந்த நாஞ்சில் பகுதி மலையாளிகளின் கையைவிட்டு போய்விட்டால் அவர்களுக்கு சோற்றுக்கே வழி கிடையாது.

தேவிகுளமும் பீருமேடும் தமிழ் மாநிலத்துடன் இணைந்து ஏலக்காய், தேயிலை, ரப்பர் மூலம் வரும் வருமானம் தமிழர் கைக்குப் போய்விட்டால் மலையாளிகள் பாதி ஏழைகள் ஆகிவிடுவார்கள்.

நமது மண்ணின் வளத்தை நம்மை உழைக்கவைத்து கொழுத்துக் கிடக்கின்றனர் நம்பூதிரிகள்.
வருமானம் தரும் பகுதிகள் போனாலும் சரி நம்மை அடக்கியாள நினைக்கும் இவர்கள் நோகாமல் உண்ண சோறு கிடைக்க ஒரு போதும் விடமாட்டேன்.

இந்த நாஞ்சில் நாட்டை தமிழ்மாநிலத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணை சரியாக பயன்படுத்தினால் பாதி தமிழினத்திற்கு சோறிடமுடியும்"

"கவலை வேண்டாம்.
எங்களுக்கு இங்கே தற்போது நடக்கும் அடக்குமுறை பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் நேரில் சென்று பார்வையிடவும் செய்வோம்"

"1948லேயே தமிழகத்துடன் இணைய போராடினோம்.
இரண்டு தமிழர்களை இதே பட்டம் தாணுப்பிள்ளை சுட்டுக் கொன்றான்.
பிறகு இவனை அகற்றிவிட்டு வேறு ஒரு மலையாளி முதலமைச்சரானான்.
அவனும் சளைத்தவனில்லை.
ஆனால் ஒரு மலையாள இனவெறியன்தான் தமிழர்களைச் சமாளிக்கமுடியும் என்று மறுபடி பட்டத்தையே கொண்டுவந்தனர்.
'தமிழன்மார அடிச்சமர்த்தனம்' என்று கொக்கரித்தபடி ஆட்சிக்கு வந்தான் பட்டம்"

"பிள்ளை என்றால் தமிழரா?"

"இல்லை எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர்.
இவன் மலையாள கைதிகளை விடுதலை செய்து பீருமேட்டில் வீடும் பணமும் கொடுத்து குடியேற்றினான்.
பிறகு அங்கே அவர்கள் ஒரு தொழிற்சங்கம் தொடங்கி தமிழர்களுக்கான அமைப்பாக இருந்த தொழிற்சங்கத்துடன் பிரச்சனை செய்தனர்.
பட்டம் அரசும் ஒருதலைபட்சமாக நடந்தது.
பிறகு தமிழர்கள் மீது வழக்கு, கைது, சோதனையிடல், தடியடி என்று காவல்துறை அடக்குமுறைகள்.
குமரித் தமிழர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம்.
200 கி.மீ அந்தப்பக்கம் இருந்தாலும் நாங்கள் போய் தடை உத்தரவை போராடினோம்.
400 பேர் கைதானோம்.
நான் விடுதலை ஆனதும் ஒரு பேரணி நடத்த திட்டம் இட்டவேளையில் நேரு அமைதியாக இருக்கும்படி கடிதம் எழுதினார்.
ஆனாலும் மாநில எல்லை வரைவுக் குழு வரவுள்ள இந்த நேரத்தில் நாங்கள் போராடவேண்டிய கட்டாயம்.
எனவே பெரியதொரு போராட்டத்தை முன்னெடுத்தோம்.
எங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியும்.
தெரிந்தேதான் போராடினோம்"

"என்னவொரு துணிச்சல் ஐயா உங்களுக்கு!
மற்ற அடக்குமுறைகளை நேரில் சென்று பார்வையிடுகிறோம்.
உள்ளது உள்ளபடி அப்படியே அறிக்கையாக அளிக்கிறோம்.
எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.
நீங்கள் தமிழகத்துடன் இணைவது உறுதி"

"நம் மக்கள் இங்கே துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்த படுவது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
நீங்கள் வருவதாக அறிவித்த பிறகு தற்போது நிலை ஓரளவு பரவாயில்லை.
உங்களுக்கு நன்றி"

"நன்றி எல்லாம் எதற்கு?
இது எங்கள் கடமை.
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்போம்.
ஆறுதல் கூறுவோம்.
தேவையானவர்களுக்கு திருவிதாங்கூர் அரசிடமிருந்து இழப்பீடும் பெற்றுத்தருவோம்"

"இழப்பீடெல்லாம் வேண்டாம் ஐயா!
ஆறுதலும் ஆதரவுமே தற்போது தேவை.
எப்படியேனும் தமிழகத்துடன் இணைந்தால் போதும்"

"நன்றி! நாங்கள் கிளம்புகிறோம்"

"உணவு தயாராவிட்டது.
உணவருந்தியபின் செல்லலாம்"
---------------------
நாள்: 26.08.1954
இடம்: நேரு அலுவலகம்
மாலை: 4 மணி

மேசைத் தொலைபேசி அழைத்தது.
நேரு எடுத்தார்.

"வணக்கம் ஜவஹர் அவர்களே!"

" வணக்கம் கரையாளரே! உங்கள் அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
அப்துல் ரசாக் முன்பே வந்துவிட்டார்.
வெளியே காத்திருக்கிறார்.
அங்கே என்ன நிலவரம்?"

"இங்கே நிலை சற்று கவலைக்கிடம்தான்.
தமிழ்மாநில எல்லையிலிருந்து நுழையும் முன்னே பார்த்தேன்.
நிறைய அகதிகள் திருநெல்வேலி எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
500 குடும்பங்களாவது இருக்கும்.
இங்கே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எதுவுமே இயங்கவில்லை.
மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
இவர்களது தலைவர் நேசமணியையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
எங்கே பார்த்தாலும் காவல்துறையினர்.
தமிழ் எம்.பிக்கள் பலரைக் காணவில்லை.
சிறையில் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியைப் பார்த்தேன்.
தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளன.
கொல்லப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தேன்.
இப்பகுதியை ஐக்கிய கேரளாவிலிருந்தே பிரிப்பதே முறை.
இவர்களுக்கும் மலையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"

"ஒரு சந்தேகம். அதென்ன அவரது கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்று உள்ளது.
தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி என்கின்றனர் கேரளத்தவர்"

"ஆம். தமிழர்கள் அவர்களது தாய்நிலத்தை தமிழ்நாடு என்றுதான் சொல்வார்கள்.
நான் சந்தித்தவரை அவர் பிரிவினை பற்றி பேசவில்லை.
ஒருவேளை அவர்களது உரிமைகள் கிடைக்காது போனால் பிரிவினையை கையில் எடுக்கலாம்.
ஏனென்றால் தமிழர்கள் மற்ற எந்த இந்தியர்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
நேசமணி கட்சியில் சாதி கடந்து மதம் கடந்து தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை கொடுத்துவிடுவதே நல்லது"

"ஒரே நாளில் இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் காமராசரிடம் கேட்டபோதெல்லாம் சென்ற தேர்தலில் நேசமணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது நேரில் கண்டதாகவும், அப்பகுதி மலையாள கலப்புள்ள பகுதி  என்றுமல்லவா கூறினார்?!"

"காமராசரே பிரச்சாரம் செய்தும் அவர் நிறுத்திய 'திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரஸ்' வேட்பாளர்கள் 14 பேரும் இப்பகுதியில் டெபாசிட் இழந்தததை மறந்துவிட முடியுமா?

நேசமணி நிறுத்திய 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' ஆமோக வெற்றி பெற்றதைத்தான் மறுக்க முடியுமா?

நான் தமிழன் என்ற முறையில் இதைச் சொல்லவில்லை.
நடுநிலையாக ஆராய்ந்தே சொல்கிறேன்.
இன்று யார்வந்தாலும் ஒருநாளிலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியான நிலை இங்கு உள்ளது.
முழுமையாக ஆராய்ந்து நான்கு நாட்களில் எழுத்தில் தருகிறேன்"

"சரி ஐயா! நல்லது"

அப்துல் ரசாக் வரவேற்பறையில் ஒரு மணிநேரமாக காத்திருந்தார்.
சுற்றிலும் ஒரே மலையாளிகள்.
  நேருவின் உதவியாளர்(மலையாளி) வந்து அழைத்து உள்ளே போகும்படி கூறினார்.

(தொடரும்)
---------------------------
படம்: இணைக்கக் கோரிய பகுதி மற்றும் மக்கட்தொகை
( Liberation of the Oppressed a Continuous Struggle
எனும் கன்னியாகுமரி வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டன)

Sunday, 12 June 2016

குமரிக்கண்டமும் நேசமணியும்

குமரிக்கண்டமும் நேசமணியும்

மூழ்கிப்போன கண்டமொன்று இருந்தாக மேலைநாட்டு அறிஞர்கள் கூறியபோது,
தமிழ் இலக்கியங்களுடன் அதைப் பொருத்திப்பார்த்து
குமரிக்கண்டத்தை மீண்டும் மக்கள் அறியச் செய்தவர்,
ஈழத்தமிழரும்,
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவருமான கனகசபை ஆவார்.

ஆனால் குமரிமுனை மலையாளிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

அதை மீட்டு அங்கிருந்த மக்கள் வணங்கிவந்த (கன்னி) குமரியம்மன் பெயராலும்,
மூழ்கிய குமரிக்கண்டத்தின் நினைவாகவும்,
"கன்னியாகுமரி" என்று பெயர் வைத்தவர் (கிறித்தவரான) நேசமணி ஆவார்.

இதற்கு பின்னணிக் காரணம் 'குமரிக் கண்டத்து வழக்கறிஞர்' என்றழைக்கப்படும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை ஆவார்.

தந்தை செல்வாவுக்கு இருபது ஆண்டுகள் முன்பே அதிரடி அரசியல் செய்து,
காமராசரின் ஆதரவு இல்லாமல் போனாலும்,
ஈ.வே.ரா ஆதரவு தர மறுத்து திருப்பி அனுப்பினாலும்,
திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளாது போனாலும்,

தன் அறுபத்தைந்து வயதிலும் தளராது போராடி,
பாதியளவு மண்ணையாவது தமிழகத்துக்கு மீட்டுத்தந்த தமிழர் தந்தைதான் நேசமணி அவர்கள்.

சாதியாகவும் மதமாகவும் ஏன் மொழியாலும் பிரிந்து கிடந்த தமிழினத்தினை ஒன்றுதிரட்டி மண்மீட்பில் வெற்றிபெற்ற முதல் தமிழ்தேசியவாதியும் அன்னாரே ஆவார்.

தமிழியத் தலைவர் மார்சல்.நேசமணியை தமிழினம் வரமாய் பெற்ற நாள் இன்று (12-06-1895).

Sunday, 3 January 2016

குருதியில் நனைந்த குமரி -8

குருதியில் நனைந்த குமரி -8

நேசமணி இரவெல்லாம் தூங்கவில்லை.

அவரது மனைவியான கரோலின் அருகே இருந்தார்

"என்னவாயிற்று? குஞ்சனையாவை காவல்துறை  தூக்கிச்சென்றதை நினைத்து வருத்தமா?"

"ஆமாம், ஏற்கனவே தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக பட்டம் ஆட்களிடம் கத்திக்குத்து வாங்கியவர்.
இப்போது கால்களையும் உடைத்துவிட்டனர்.
முக்கியமான மற்றவர்களை தலைமறைவாகச் சொல்லிவிட்டேன்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?"

"நீங்கள் கவலைப்படுவதால் என்ன நடக்கப்போகிறது?
விடிந்ததும் ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.
இப்போது உறங்குங்கள்"

"நான் கவலைப்படாமல் வேறுயார் கவலைப்படுவார்கள்?
ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றவன் நான்,
அந்த ஒரு லட்சம் பேருக்கும் நான் என்ன பதில் சொல்வேன்?
நாட்டைக் காக்க வீட்டுக்கு ஒருவரை அனுப்புங்கள் என்று சொன்னவன் நான்தானே?!
தமிழகத்துடன் இணையவேண்டி சிறை சென்ற இளைஞனுக்குதான் பெண்கொடுக்கவேண்டும் என்று கூறியவன் நான்தானே?!
அதை அப்படியே செய்த மக்கள் அல்லவா இவர்கள்?!
சிறைவாசலில் நிச்சயமான திருமணங்கள்தான் எத்தனை?!
நிச்சயமான மாப்பிள்ளைகள் வேண்டுமென்றே சிறை சென்றுவந்து திருமணம் செய்த நிகழ்வுகள்கூட உண்டே?!"

"எல்லாம் சரியாகிவிடும்"

"தேர்தலில் வென்றால் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை.
எத்தனை வன்முறைகளைச் சமாளித்து இந்த தேர்தலில் வென்றோம்?!
எந்த பலனும் இல்லை.
போன தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை.
ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது அதைவிட அதிகமான உயிர்ச்சேதம்"

கதவு தட்டப்பட்டது.
கரோலின் கதவைத் திறந்தார்.
இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந்தனர்.

"என்னம்மா?!"

"அப்பச்சியை பார்க்கவேண்டும்"

நேசமணி வாசலுக்கு வந்தார்.

அவரைப் பார்த்ததும் அப்பெண்கள் பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினர்.

"ஐயா என் மகன் அழைத்துச் சென்ற காவல்துறை மண்டையில் பலமாக அடித்து போட்டுவிட்டது.
நினைவில்லாமல் கிடக்கிறான் ஐயா"

"ஐயா என் அண்ணனை செல்லப்பனை அழைத்துக்கொண்டுபோய் வலதுகாலை உடைத்து ஊனமாக்கி
தவழ்ந்தபடி வீட்டுக்கு போகச் சொல்லி விரட்டியுள்ளனர்.
குருதி ஒழுக தவழ்ந்தபடி வந்துகிடக்கிறார் ஐயா"

"எப்போது? எங்கே?"

"குழித்துறையில் ஐயா, நேற்று"

"அங்கேயிருந்து கால்நடையாகவா வந்தீர்கள்?"

"ஆமாம் ஐயா எங்களுக்கு உங்களை விட்டால் வேறு யார்?"

விடிய விடிய இன்னும் பல பெண்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு முழுவதும் கால்நடையாக நடந்து நேசமணி வீடுதேடி வந்து கொடுமைகளைச் சொல்லி கண்ணீர் விட்டனர்.

மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் நேசமணியின் மன உறுதியைக் குலைப்பது பட்டம் தாணுப்பிள்ளையின் திட்டம்.

"இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்ளுங்கள் அம்மா
கூடிய விரைவில் நமக்கு விடிவுகாலம் பிறந்துவிடும்"
நேசமணி அனைவருக்கும் இதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் சொல்லி அனுப்பினார்.
______________________

மறுநாள் துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைப் பார்வையிட 600 ஆயுதக்காவலர்கள் புடைசூழ பட்டம் தாணுப்பிள்ளை பார்வையிட வந்தார்.

அவரும் காவல்துறை உயரதிகாரியும் மலையாளத்தில் பேசிக்கொண்டனர்

"என்ன இது வெறிச்சோடிக் கிடக்கிறதே?!"

"இவர்கள் வெளியே வந்தால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடாதா?
அதனால் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறேன்.
வெளியே வருபவர்களை நன்கு கவனித்து அனுப்பிவிடுகிறோம்"

"ம். இனி இவர்கள் கூட்டம் கூடுவதை நினைத்தும் பார்க்கக்கூடாது.
ஆமாம், நேசமணி கட்சித் தலைவர்களை என்ன செய்தீர்கள்?"

"அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லைக் காவலை பலப்படுத்தியிருக்கிறேன்.
அதற்கு இரவோடு இரவாக  பலர் தமிழகத்திற்குள் புகுந்துவிட்டனர்"

"பேடிகள், எத்தனை பேர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பார்கள்?"

"தோராயமாக 3000 பேர்"

"இவ்வளவுதானா?"

"நேசமணி இருக்கும் தைரியம்.
இல்லையென்றால் திருநெல்வேலி முழுக்க அகதிகளால் நிறைந்திருக்கும்"
_____________________

காவல்துறையினரும் ஆயுதக் காவலரும் ஒரு திடலில் கூட்டப்பட்டனர்.

நடுவில் நின்று பட்டம் தாணுப்பிள்ளை பேசினார்.

"எனதருமை காவல்துறை நண்பர்களே!
உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்துள்ளீர்கள்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நம் பெருமையை நிலைநிறுத்திவிட்டீர்கள்.
உங்களுக்கு எனது பாராட்டு.
சூழ்நிலையை சமாளிக்க என்னோடு வந்த 1600 ஆயுத காவலர்களும் இங்கே விட்டுச் செல்கிறேன்.
கேரள அரசிற்காக உங்களது பணியை சிறப்பாக தொடருங்கள்"

பிறகு அந்த 1600 ஆயுதம் தாங்கிய காவலர்களை 200, 300 ஆக தமிழர் பகுதி முழுக்க ஆங்காங்கே நிறுத்திவிட்டு திரும்பினார்.

அதன்பிறகு அந்த ஏவல் கூட்டத்தின் வெறியாட்டம் தொடங்கியது.
அவர்களைத் தட்டிக்கேட்க யாருமேயில்லை.
-----------------------------------------------
படம்: சுவரில் குண்டு பாய்ந்த அடையாளத்தைக் காண்கிறார் நேசமணி ஐயா (இடமிருந்து இரண்டாவது)
----------------------------------------------
குருதியில் நனைந்த குமரி -7
https://m.facebook.com/photo.php?fbid=644283149008675&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Wednesday, 30 December 2015

குருதியில் நனைந்த குமரி -7

குருதியில் நனைந்த குமரி -7

ஆகஸ்ட் 11, 1954
இரவு 8:30மணி
நாகர்கோவில்

நேசமணி வீட்டில் தமிழ் தலைவர்களான
இராமசாமி(பிள்ளை),
சைமன்,
அப்துல் ரசாக்,
தாணுலிங்கம்(நாடார்),
பொன்னப்பன்(நாடார்),
ராஜா(பிள்ளை)
ஆகியோர் அமர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

"தலைமைச் செயலகத்தை மலையாள காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டுவிட்டது"

"தொலைபேசி இணைப்பு அனைத்தையும் துண்டித்துவிட்டார்கள்"

"ஊர்வலம் நல்லபடியாக நடந்ததா எதுவும் எதுவும் தெரியவில்லை"

கதவு படாரென திறந்துகொண்டு பதறியபடி உள்ளே நுழைந்தார் குஞ்சன்(நாடார்)

"என்னாச்சு குஞ்சு?"

"ஐயா மார்த்தாண்டத்திலும் புதுக்கடையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தி பல அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டனர்"

"என்ன?!" தன் மார்பில் குண்டு பாய்ந்ததுபோல நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் நேசமணி.
அப்படியே சரிந்து இருக்கையில் அமர்ந்தார்.

மற்ற தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

"எத்தனை பேர் இறந்தார்கள்?"

"தெரியவில்லை, குறைந்தது 30பேர் இறந்திருப்பதாக கேள்விப்படுகிறேன்"

"இந்த பட்டம் தாணுப்பிள்ளை மீண்டும் தமிழர்களை குருதி சிந்தவைத்துவிட்டான்.
போனமுறை 2பேரைத்தான் காவு வாங்கினான் இப்போது 30பேர்.
இந்த நாள் கருப்புநாளாகிவிட்டது"

"பிணங்களைக்கூட அள்ளிக்கொண்டு போய்விட்டனர்.
எத்தனைபேரை கொன்றோம் என்று அவர்களே அறிவிப்பார்கள், அதுதான் கணக்கு"

"போராட்டத்தைக் கைவிட்டுவிடலாமா?"

"கைவிடுவதா? நமக்கு மட்டும் துப்பாக்கி வெடிக்கத் தெரியாதா?
களரி படித்த தமிழ்-இளைஞர்களைத் திரட்டி துப்பாக்கி பயிற்சி அளிக்கவேண்டியதுதான்"

"ஆமாம் அதுதான் சரி, மலையாளிகளா நாமா பார்த்துவிடுவோம்"

"வேண்டாம் தமிழகத்திடம் உதவிகேட்போம். அப்போதும் பணியவில்லை என்றால் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தூக்கிய தென்பாண்டி நாட்டு இளைஞர்களை அழைத்துவந்து காவல்நிலையங்களைக் கைப்பற்றுவோம்"

"மத்திய அரசிடம் கொண்டு செல்வோம்.
அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால் தென்னிந்தியாவின் தமிழ்பகுதிகளைத் தனிநாடாக்கும் நடவடிக்கையில் இறங்குவோம்"

கொதித்துப்போய் பேசிக்கொண்டிருந்த அந்த தலைவர்களை நேசமணி அமைதிப்படுத்தினார்.

"குஞ்சு வேறெதுவும் தகவல் உண்டா?"

"துப்பாக்கிச் சூடு நடந்த இடமே காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கண்ணில் படுவோரையெல்லாம் கைது செய்கிறார்கள்.
பார்வையிட நான் அனுப்பிய தொண்டர்கள் திரும்பி வரவே இல்லை"

"நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
இனிதான் நாம் பதறாமல் இருக்கவேண்டும்.
ஆயுதம் தாங்கி போராட நாம் தனிநாடு கேட்கவில்லை.
இழப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அது எந்த வழியில் போராடினாலும் சரி.
இந்த இழப்பை நான் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் தெரிவிக்கவேண்டும்.
அதன்பிறகும் நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் கூறவே வேண்டாம். நம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தாமாகத் தூக்குவார்கள்"

"எங்கே ஐயா, தமிழகத்திலிருந்து நமக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லையே"

"இருக்கட்டுமே, தமிழகம் நாம் இல்லாமல் இயங்கிவிடும்.
நாம் தமிழகத்தை விடுத்து இயங்கமுடியாது.
அது தாய்நிலம் நாம் அதன் சிறுதுண்டு.
நம் பி.எஸ்.மணியையே எடுத்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் நடக்கும் எல்லா அரசியல் கூட்டத்திலும் அழையா விருந்தாளியாக சென்று குமரி தமிழகத்துடன் இணைவதன் அவசியத்தைப் பற்றி நான்கு வார்த்தையாவது பேசிவிட்டு வருகிறார்.
அவர் என்ன முட்டாளா?
தமிழக மக்கள் அப்பாவிகள்.
தமிழக மக்களுடன் நாம் சற்று வேறுபட்டுவிட்டோம்.
இதோ நிற்கிறாரே குஞ்சன்.
இவருக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது.
இவர் பேசும் தமிழ்கூட மலையாளத்தைப்போலதான் இருக்கும்.
அதற்காக இவர் தமிழன் இல்லையென்று ஆகிவிடுமா?
நூறாண்டுகள் முன்புகூட உயர்சாதி தமிழர்கள் உயர்சாதி மலையாளிகளைத்தான் ஆதரித்தார்கள்.
அவர்களை ஏற்கனவே தெலுங்கரும் கன்னடரும் ஏய்க்கப் பார்க்கின்றனர்.
தமிழக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவோர் தமிழ்பேசும் வேற்றினத்தவர்கள்தான்.
மொழி வேறு இனம் வேறு அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இது தமிழகத்தின் பாமர மக்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
மலையாளிகளும் தமிழக அப்பாவி மக்களைச் ஏய்க்க நாம் அனுமதிக்ககூடாது.
தமிழகம் நமக்கு உதவாவிட்டாலும் நாம் அவர்களோடு இணைவதுதான் முறை. "

"ஐயா இந்த பகுதிகளை காப்பது முழுக்க நமது பொறுப்பு மட்டும்தானா?
ஒருவேளை நாம் காக்கமுடியாவிட்டால் என்ன நடக்கும்?"

"மலையாளிகளிடமிருந்து தமிழகப் பகுதிகளைக் காக்கவேண்டிய தலையாய பொறுப்பு நமக்குதான் உள்ளது.
இது வளமான பகுதி.
திருவனந்தபுரம் நகரத்தையும்
முல்லைப்பெரியாறையும்
குமரி முனையையும்
கோவை நீலகிரி பகுதிகளையும்
மூணாறு தேயிலைத் தோட்டங்களையும்
பாலக்காடு கணவாயையும்
மலையாளிகள் கைக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும்.
இது மலையாளிகள் கைக்குப் போனால் இதன் பலனை அனுபவிப்பதோடு நில்லாமல்
தேர்தலுக்கு தேர்தல் தமிழகத்தை நோண்டி இனவெறியைத் தூண்டி  அதை வாக்குகளாக மாற்றுவார்கள்.
மலையாள அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி வரும்போது இந்த பிரச்சனைகளை கிளப்பி மக்களை திசைதிருப்புவார்கள்.
இவ்வளவு ஏன் இப்பகுதியைத் தக்கவைக்க வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் கொச்சியை விடுத்து தென்கோடியில் இருக்கும் திருவனந்தபுரத்தையே தலைநகராக மாற்றினாலும் மாற்றுவார்கள்"

"இப்போது நாம் என்ன செய்வது ஐயா?"

"தற்போதைக்கு போராட்டத்தை நிறுத்துவதாக அறிவிக்கிறேன்.
நீங்கள் அனைவரும் தலைமறைவாக தயாராக இருங்கள்.
பட்டத்தின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்து அதன்படி முடிவெடுப்போம்"

தலைவர்கள் கலைந்து சென்றனர்.

அன்று இரவே குஞ்சன்(நாடார்) வீட்டுக் கதவை தட்டாமல் நேரடியாக இடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தது காவல்துறை.
அவர் குடும்பத்தினர் முன்பே கால்முட்டி இரண்டையும் உடைத்து அவரை தூக்கிக்கொண்டு சென்றது.

(தொடரும்)
_____________________________
குருதியில் நனைந்த குமரி -6
https://m.facebook.com/photo.php?fbid=643665792403744&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56