Showing posts with label குமரிக் கண்டம். Show all posts
Showing posts with label குமரிக் கண்டம். Show all posts

Wednesday, 4 October 2017

குமரிக்கண்டக் கருத்தியல்

குமரிக்கண்டக் கருத்தியல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குமரி என்பது மலையா? கடலா? கண்டமா? தென்முனையா?

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும்  உரையாசிரியர்கள் குமரியை ஆறு என்றவாறே உரையெழுதியுள்ளனர்.

ஆனால் குமரி ஒரு ஆறு என்று எங்கும் வரவில்லை.

"வடவேங்கடம் தென்குமரி"
(தொல்காப்பியம் பாயிரம்)

"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை"
(புறநானூறு: 67)
போன்ற இடங்களில் குமரி என்று மட்டுமே வந்துள்ளது.

ஆனால்,
சிலப்பதிகாரத்தில் குமரியை கடல் என்றவாறு
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
குறித்திருப்பதைக் காணமுடிகிறது.

ஆனால் அதே சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்தில் குமரி எனும் மலையை கடல் கொண்ட செய்தி வருகிறது.

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று பஃறுளி ஆற்றோடு குமரி மலை கடலில் மூழ்கிய செய்தி வருகிறது.

இளங்கோவடிகள் கடலில் மூழ்கிய மலையை குமரி என்று கூறுவது அவரது வரலாற்று அறிவினால் ஆகும்.
அவரது காலத்தில் குமரி கடலில் மூழ்கி கடலுக்கு பெயராக இருந்திருக்கவேண்டும்.

பஃறுளியாற்றுடன் குமரி மலையும் கடல்கொண்டபிறகு
அந்த இழப்பினை ஈடுசெய்வதற்காக பாண்டிய மன்னன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் உடைமையாக்கிக் கொண்டவரலாற்றையே இளங்கோவடிகள்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.

பஃறுளியாறு நெடியோன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பகுதி என
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூறு மூலம் அறியலாம்.

[இதற்கு அடுத்தும் ஒரு கடற்கோள் ஏற்பட்டு தமிழ்ச் சங்கம் (இடை) இருந்த கபாடபுரம் வரை கடலில் மூழ்கியுள்ளது.
இது இளங்கோவடிகள் காலத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் அவர் அதை ஏனோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனால் "மலி திரையூர்ந்து தன் மண் கடல் வௌவலின்" என்று ஒரு கடற்கோளையும் (அந்த நில இழப்பை ஈடுகட்ட) பாண்டியன் சேர சோழரை வென்று தனதாக்கியதை "புலியோடு வில் நீங்கி" என்றும் முல்லைக் கலியில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்]

  இந்திய துணைக்கண்டம் பெரிய தீவாக கடலில் தனித்து இருந்தது.
பிறகு அத்தீவு ஆசியாவுடன் மோதி இணைந்தது.
அந்த மோதலால் உருவானதே இமயமலை.
அப்படி இணையும் முன்பு (அதோடு குமரிக்கண்டமும் சேர்ந்திருந்தது) நாம் அதில் வாழ்ந்திருந்தோம்.
அதற்கு நாவலன் தீவு என்று பெயரிட்டு அழைத்துவந்தோம்.
(மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடனத்தில் இந்தியாவை ஜம்புத்தீவு என்று குறிப்பிட்டுள்ளனர்)
அப்படிப் பார்த்தால் மூழ்கியுள்ள கண்டம் நாவலந்தீவு என்றுதான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாவலந்தீவின் தென்பாதியில் பெரும்பகுதியை குமரி மலை கொண்டிருக்கவேண்டும்.
மூழ்கிய பிறகும் பல காலம் அந்த மாமலையின் உச்சி வெளியே தெரிந்தபடி இருந்திருக்கவேண்டும்.
அதனால் நிலப்பரப்பின் பெயரை விட மலையின் பெயரே அக்கடல் பகுதிக்கு அமைந்திருக்கவேண்டும்.

மூழ்கிய அந்நிலத்தைப் பற்றி மேலைநாட்டார் விலங்கின ஆராய்ச்சியின் போது கண்டறிந்தனர்.
லெமுர் எனும் உயிரினம் இந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நிலப்பரப்பிலும் கடலை ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்வதை வைத்து முன்பு இம்மூன்றையும் தொட்டவாறு பெரிய கண்டம் இருந்திருக்கவேண்டும் என்று கணித்து அதற்கு லெமூரியா என்று பெயரிட்டனர்.

இதை அறிந்த தமிழறிஞர்கள் மேற்கொண்டு இலக்கியங்களை ஆராய்ந்து லெமுரியா என்பது 49 நாடுகள் இருந்த தமிழர் நிலமே என்று அறிவித்தனர்.

  இது பற்றி 20ம் நூற்றாண்டில் முதன்முதலாக ( அதாவது பல நூற்றாண்டுகளுக்கு பிறகு) 1903ல் எழுதியவர் பரிதிமாற் கலைஞர் (பார்ப்பனத் தமிழர்).
தமது 'தமிழ்மொழியின் வரலாறு ' எனும் நூலில் குமரிநாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு அது 1930களில் குமரிக் கண்டம் என்று பெயர்பெற்றது.
(இப்பெயர் 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுவர்)

இதை பரப்புரை செய்து தமிழர் அனைவருக்கும் கொண்டுசென்று குமரிக்கண்டம் தமிழர் பிறப்பிடம் என்றும் இந்தியாவில் மூத்தகுடி தமிழரே என்றும் 'குமரிக்கண்ட கருத்தியலை' உருவாக்கியவர் ஈழத்தமிழரான கனகசபை ஆவார்.

அதன்பிறகு பாவாணர் மேலும் ஆராய்ந்து குமரிக்கண்ட மாந்தன் இந்தியா மட்டுமல்லாது உலகிலேயே தோன்றிய முதல் மாந்தன் என்று அக்கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

அதற்காக 20 நூற்றாண்டுவரை தமிழர்கள் மூழ்கிய குமரியை மறந்துவிட்டதாகக் கூறமுடியாது.
ஈழத்தின் தென் பகுதி தமிழர் வசம் இல்லை.
ஆனால் அந்த கடல் பார்த்த தென்முனை தமிழகத்திடம் உள்ளது.
அந்த பகுதிக்கு தமிழ்மக்கள் குமரி என்றே பெயரிட்டு அழைத்தனர்.
ஆங்கிலேயர் அம்முனையை cape komarin என்றே குறித்துள்ளனர்.
மூழ்கிய குமரிநிலத்தின் நினைவாக குமரி அம்மன் கோவிலும் கட்டி வழிபட்டு வந்தனர்.
(மூழ்கிய முன்னோர் வழிபாடு தென்புலத்தார் வழிபாடு என்று பல காலம் பின்பற்றப்பட்டு தமிழர்களால் வந்தது)

1956ல் தமிழ் மாநிலம் அமைந்தபோது மலையாளிகள் கையில் இருந்த தென்முனையை பெரும்போராட்டம் நடத்தி  தமிழகத்துடன் சேர்த்த நேசமணி (கிறித்துவ நாடார்) அவர்கள்,
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (வெள்ளாளர்) அவர்களின் கடைசி ஆசைப்படி அம்மாவட்டத்திற்கே 'கன்னியாகுமரி' என்று பெயர் வைத்தார்.

ஆக, குமரி என்ற பெயர்
முதலில் மலைக்கும்
பிறகு கடலுக்கும்
பிறகு மூழ்கிய கண்டத்திற்கும்
பிறகு தென்முனைக்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இமயமலை முதல் குமரிமலை வரை பரந்திருந்த ஒரு கண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர் இன்று ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரைப்போல வாழ்கிறோம்.

'இந்தியா முழுவதும் நமதே' என்பதற்கான சான்றுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் பிறரறியா வண்ணம் ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால்,
மூழ்கிய குமரிக்கண்டம் நமது பழமையான நாகரீக சான்றுகளுடன் பாதுகாப்பாக கடலுக்குள் இருக்கிறது.

நம் வரவை, தனது மக்களின் வரவை எதிர்பார்த்து அது கடலுக்குள் காத்திருக்கிறது.

எனவே இந்தியாவில் உள்ள மூடர்களிடம் எஞ்சியுள்ள சான்றுகளை காட்டி
'தமிழ் மொழியை வெறும் 5000 ஆண்டுகள் பழமையானது என்றாவது ஏற்றுக்கொள்ளைங்கள்" என்று பேரம் பேசுவதில் குறியாக இருக்கும் நாம்,
இனியும் அந்த 'பாறையில் உழும்' முட்டாள்த்தனத்தைச் செய்யாமல்
கையில் இருக்கும் நிலத்தையாவது அரணமைத்து தனிநாடாக்கி
இனத்தை அழிவிலிருந்து காத்து
பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.

அதன்பிறகு கடலில் இறங்கி (இன்று பாகிஸ்தானில் உள்ளதும் இந்திய கண்டத்திலேயே பழமையான நாகரீகமும் ஆன ) சிந்துசமவெளி நாகரீகத்தை விட பழமையான நமது குமரிக்கண்ட நாகரீகத்தை ஆராய்ந்து நமது பழமையை நாட்டுவதில் சிந்தையைச் செலுத்துவோம்.

தனிநாடு அமைத்து அதன்மூலம் அமையும் நமது பொருளாதாரம் மூலம்தான் கடலில் இறங்கி நமது பழமையை வெளிக்கொணரும் ஆற்றல் நமக்கு வரும்.
உலகத்தில் வாழும் எந்த இனத்தானும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.
நாம் தான் செய்யவேண்டும்.
அதன்பிறகுதான் தமிழரே மூத்தகுடி என்று உலகம் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்.

நாம் அதைச் செய்யாததால் பாருங்கள் முழுக்க முழுக்க தமிழருக்கு மட்டுமே உரிமையான அந்த கடலை அதனடியில் இருக்கும் நிலத்தை எவனெவனெல்லாமோ சொந்தம் கொண்டாடுகிறான்.

(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தியாவின் பெயரில்) குமரிக்கடல் இன்று 'இந்தியப் பெருங்கடல்' என்று அழைக்கப்படுகிறது.

நேற்று பிறந்த இந்துத்துவவாதிகள் அதை 'இந்து மகா சமுத்திரம்' என்கின்றனர்.

நாம் தனிநாடு அமைத்ததும் அக்கடலுக்கு குமரிக்கடல் என்றே பெயரிட வேண்டும்.
பிறரை முந்திக்கொண்டு நாம் முதலில் கடலில் இறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தவேண்டும்.

குமரிக்கண்டத்தை ஆராய்ந்தால் நாமே பூர்வகுடி எனும் சான்று கட்டாயம் கிடைக்கும்.
அதன் பழமையை நிறுவிவிட்டால் இந்தியாவையே நாம் கைப்பற்றி ஆண்டாலும் யாரும் கேள்விகேட்க முடியாது.

  பாவாணர் கூறிய படி
'குமரிக்கண்டமே மாந்தன் தோன்றிய இடம்'
'தமிழரே மூத்தகுடி'
'தமிழே மூத்தமொழி'
என்ற உண்மையை உலகம் அறியும்படி சான்றுகளுடன் அறிவிக்கவேண்டும்.

இதுதான் குமரிக்கண்டக் கருத்தியல்.

இதற்கு ஒரே வழி தமிழ்தேசியம்.

Wednesday, 13 September 2017

குமரிக்கண்டம் இருக்க கவலை ஏன்?

13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கேட்பாரற்று கிடக்கிறது.
அழிக்கப்பட்ட கல்வெட்டுகள் திரும்பக் கிடைத்தன.

செய்தி:
கண்மாய்க்குள் சிதறி கிடக்குது 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் : பாண்டியர் காலத்தவை என ஆய்வில் தகவல்
10.09.2017 தினகரன்

எத்தனை சான்றுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
நம்மிடம் ஒரு கருவூலம் இருக்கிறது.
ஒரு கண்டமே இருக்கிறது.

தமிழர்நாடு தமிழரின் கட்டுப்பாட்டில் வந்ததும் மக்கள் நிலை ஓரளவு மேம்பட்ட பிறகு நாம் கடலில் இறங்கி குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும்.
நாம் உலகின் முன்தோன்றிய மூத்தகுடி, நமது நாகரீகமே முதல் நாகரீகம் என்பதை நிறுவவேண்டும்.

அதுவரை தமிழர் பழமைக்கான சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் இனவிடுதலைக்காகப் போராடவேண்டும்.

Tuesday, 18 July 2017

நான் குமரிக்கண்டத்தின் மகன் _ கணபதி ஸ்தபதி

நான் குமரிக்கண்டத்தின் மகன் _ கணபதி ஸ்தபதி

எவ்வளவு பெரிய கலைஞனின் தன்னடக்கமான பதில்.........

தீராநதி : உங்களைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக எங்களுக்குச் சொல்லுங்கள்.

கணபதி : என்னை யார் என்று கேட்கிறீர்களா? இப்படி ஒரு கேள்வியை யாராவது என்னைப் பார்த்துக் கேட்க மாட்டார்களா என்று மிகுந்த ஆசைப்பட்டவன். இதுவரைக்கும் யாரும் என்னை இப்படிக் கேட்டதில்லை.
தனிப்பட்டமுறையில் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு.
அந்தக்குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம்.
கடல் கொண்ட குமரிக்கண்டத்தைச்
சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான்.
எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்.

தீராநதி : உங்களைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே! ஏன்? பெரிய, பெரிய கோயில்களைக் கட்டியபிறகு சிற்பிகள் தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் விடுவது போல நீங்களும் நடந்து கொள்கிறீர்களா?

கணபதி : உண்மையான கலைஞன், அசல் கலைஞன் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளமாட்டான்.
கோயில்களில் ட்யூப் லைட்டுகளில் கூட உபயம் ராமசாமி என்று எழுதுகிறார்கள். ஆனால் சிற்பிகள் தங்களுடைய பெயரை எப்போதுமே மறைத்துத்தான் வைத்திருக்கிறார்கள். இன்று நேற்றல்ல பதினைந்தாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் செய்து வருகிறோம். ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ளே போய் கடவுளைத் தேடி நமஸ்கரிக்கிற அதேவேளையில் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடிப் பாருங்கள். ஏதாவது ஒரு மூலையில் அந்தக் கோயில் கட்டிய சிற்பி வேண்டுமென்றே தன்னுடைய பெயரை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலக அதிசயமாகச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு கோயிலை இன்றைய தேதியில் கட்டவேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாய் தேவை. தஞ்சாவூரில் உள்ள எல்லா மக்களையும் வெளியேற்றிய பிறகுதான் அப்படிப்பட்ட கட்டடத்தைக் கட்டவே ஆரம்பிக்க முடியும்.
அப்படிப்பட்ட அற்புதமான கோயிலைக் கட்டிய மகாசிற்பி பெருந்தச்சனின் பெயர் மாமன்னன் ராஜராஜனுக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே! இப்படி எல்லாப் பெரிய கோயில்களைக் கட்டிய ஸ்தபதிகளின் பெயரும் எழுதத்தான் செய்திருக்கிறார்கள். //

தகவல் குறிப்பு உதவி : நண்பர் மயன்.

(நன்றி: ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்)

Sunday, 26 March 2017

யார் மூவேந்தர் வாரிசு?

யார் மூவேந்தர் வாரிசு?

தமிழர் அனைவருக்கும் (சேரருக்கும் சோழருக்கும் கூட) முன்னோன் பாண்டியன்.

எனக்கு இன்று பாண்டியன் வாரிசு யார் என்றெல்லாம் தெரியாது.
ஆனால் பாண்டியன் கூடப்பிறந்த குடி எது என்று தெரியும்.

"தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர்" என்று கலித்தொகை கூறுகிறது.

முழுமையாக,

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர்”
(கலித்தொகை 104)

(மூன்றாம் ஊழியில்) குமரிக்கண்டத்தின் கடைசி பகுதி மூழ்கியபோது வடக்கே முன்னேறிய பாண்டியன் சேரர், சோழரைத் தோற்கடித்து (புலியொடு வில் நீக்கி) தன் ஆட்சியை பரப்பினான்.
அந்த தென்னவனின் (பாண்டியனின்) குடி தோன்றியபோதே ஆயரும் தோன்றிவிட்டார்களாம்.

அப்பன் சொத்தை அடுத்தவன் ஆட்டையைப் போட்டு வளமாக வாழ்கிறான்.

அண்ணன்-தம்பிகள் 'அப்பனின் புகழுக்கு யார் வாரிசு' என்று அடித்துக்கொள்கிறார்கள்.

சித்தப்பன் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

எவன் அப்பன் சொத்தை மீட்கிறானோ அவனே உண்மையான மகன்.

எவன் சேர, சோழ, பாண்டியர் ஆண்ட 'தமிழர்நாட்டை' மீட்டு எவன் தனியரசு செலுத்துகிறானோ அவனே மூவேந்தர் வாரிசு.

Sunday, 10 July 2016

ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே

ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே

££££££££££££££££££££££££££££

உலகில் முதல் மொழி தமிழ் என்று ஏற்காவிட்டாலும்
உலகின் முதல் மாந்தன் தமிழன் என்று ஏற்காவிட்டாலும்

60,000 ஆண்டுகளுக்கு முன் உலகம் அழிவைச் சந்தித்தபோது தப்பிப் பிழைத்த ஒரு மாந்தர் குடும்பம் மீண்டும் இனப்பெருக்கம் செய்து உலகம் முழுவதும் பரவியது என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர். ஸ்பென்ஸர் வெல்ஸ் கூறியுள்ளார்.

அந்த குடும்பமும் ஒரு தமிழ்க் குடும்பம்தான்.
இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆம். மேலும் இதுபற்றி அறிவோம்.

மனித வரலாறு காலம் பின் செல்லச் செல்ல மங்கி தெளிவில்லாமல் ஆகிவிடுகிறது.

ஆனால் எழுதும் வழக்கம் வரும் முன்னே நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் செவிவழிப் பழங்கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாக, தொன்மங்களாக, நாடகமாக, இலக்கியமாக இன்றும் பல்வேறு மாய மந்திரங்களுடன் விரவப்பட்டு இன்றும் உள்ளன.

உலகில் தொன்மையான இனங்களின் புராணங்களில் ஒரு நிகழ்வு மட்டும் தவறாமல் இடம்பெருகிறது.

அது உலகம் நீரில் மூழ்குவதும் அதிலிருந்து குறிப்பிட்ட மக்கள் பிழைப்பதும் ஆகும்.

இது பைபிளில் நோவா கதையாக உள்ளது.
குரானில் நூ கதையாக உள்ளது.
தமிழ் இலக்கியத்தில் குமரிக்கண்டம் மூழ்கியபோது மக்களை காப்பாற்றிய நெடியோன் கதையாக உள்ளது.

இது தவிர பைபிள் கூறும் முதல் மனிதன் ஆதாம். இவன் தமிழனே.
“ தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2-8)
கிறித்தவ மதம் தோன்றியது மத்திய ஆசியா.
அதற்கு கிழக்கே பழமையான குடியாக தமிழர்கள்தான் இருக்கிறோம்.

ஆதாம் என்ற பெயர் ஆதிமனிதன் என்று பொருள்படும் வகையில் உள்ளது.
ஆதி என்றால் தொடக்கம்.

ஆதாம் வாழ்ந்த இடம் இலங்கைத் தீவில் இன்றும் உள்ளது.
அதனை 'ஆதாம் சிகரம்' (Adams peak) என்று அழைக்கின்றனர்.
தமிழர்கள் இதனை 'சிவனொளிபாத மலை' என்று அழைக்கின்றனர்.
மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.

மார்க்கபோலோ (சுமார் கி.பி. 1293) 'ஆதம் மலையில் நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.

(இந்த மலையின் அடிப் பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ‘மனித குலத்தின் தந்தை’என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறதாம்.
இது உறுதியாகத் தெரியவில்லை.
இதை பிற்காலத்தில் யாராவது வைத்திருக்கலாம்)

‘ஆதன்’என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று.
ஆதன் அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆதன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’என்ற சொற்கள் 'ஆதன்’என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.
கந்த புராணத்தில் "ஈன்ற ஔவையும் அத்தனும்" என்று வருகிறது.

"ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான்.
ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

ஏவாள் என்றால் தாய் என்று பொருளாம்.
ஈவே (Eve) என்பது பைபிளை மொழிபெயர்க்கும்போது ஏவாள் என்று ஆக்கப்பட்டது.
பைபிள் எபிரேய மொழியில் (ஹீப்ரு) இருந்துதான் மற்ற மொழிகளுக்கு சென்றது.
ஈவே என்பதும் மொழிபெயர்ப்பு திரிபு.
முதல் பைபிள் ஏவாளை ஆயா என்று கூறிப்பிடுகிறது.
ஆயா, ஆய் என்பன தாயையோ அல்லது தாயின் தாயையோ குறிக்கும் தமிழ்ச்சொல்.
குரான் ஹவ்வா என்று குறிப்பிடுகிறது.
இது ஔவை என்பதன் திரிபு.

மூழ்கிய குமரிக்கண்டத்தின் எஞ்சிய ஒரு பகுதி குமரி மாவட்டம்.
இம்மாவட்டத்தில் ஔவைச் கோயில்கள் இருக்கின்றன.
தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
முப்பந்தலில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.
குமரி மாவட்டத்து தமிழ் இசுலாமியர்கள் ‘ஆதம் பாவா’ என்ற பெயரை சூடிக்கொள்கின்றனர்.
(‘பாவா’என்றால் தந்தை என்று பொருள்)

ஆதமின் புதல்வர்கள் ஆபில் மற்றும் காபில் இவர்களின் கல்லறைகள் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் உள்ளன.
அதுதான் ஆபில்காபில் தர்கா.
  இதுபற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்யவேயில்லை என்பது பெரிய வேதனை.
ஆபில் காபில் தர்காவில் அடக்கமாகி உள்ள உடலை தோண்டி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

ஆதாம் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த சுவடுகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை அறிக.

  பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவரு டைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.

' பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலகக் கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.’

‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது,
கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப் பட்டு,
மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’
என்பது இதன் பொருள்.

நோவா கதையில் அவர்தான் உலகிலேயே கப்பல் கட்டிய முதல் மனிதர்.
அதேபோல உலகிலேயே முதன்முதலாகக் கப்பல் கட்டிய இனம் தமிழினம்.
நோவா என்ற பெயர் நாவாய் என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்துப்போகிறது.
நாவாய் என்றால் நா+வாய்.
அதாவது நாக்கின் முன்புறம்.
கப்பலின் அமைப்பை இது கூறுகிறது.
  இதுதான் ஆங்கிலத்தில் Navy ஆனது.
ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் கப்பலைக் குறிக்க இச்சொல் சிறுசிறு மாற்றத்துடன் வழங்கப்படுகிறது.

உலகின் பழைய துறைமுகங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரையே கொண்டுள்ளன.
உலகின் அனைத்து மொழிகளிலும் கப்பல் தொடர்பான சொற்கள் தமிழ்வடிவத்திலேயே உள்ளன.

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.”
-ஆதியாகமம் 1

நோவா கோபர் மரத்தில் கப்பல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
கோபர் என்ற சொல் மத்திய ஆசிய மொழிகளில் குறிப்பிட்ட பொருளைத் தரவில்லை.
தமிழில் காப்பெரு மரமாக இருக்கலாம்.
காப்பெரு என்றால் பெரிய காட்டுமரம் என்ற பொருள்.

நோவாவின் புதல்வர்கள் ‘ஷெம்’, ‘ஹாம்’
நோவா ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டாராம்
ஆனால் ஹாம் அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான்.
அதனால் கோபம் கொண்ட நோவா,
காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய ஷெம் சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.
  இதில் நோவாவின் ஒரு மகன் கறுப்பாகவும் மற்றொருவர் வெண்மையாகவும் இருந்ததாக அறிகிறோம்.
திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும்போது அவை ‘காமனும் சாமனும்’ (ஹாம், ஷெம்) போல இருந்ததாகக் கூறுகிறார்.

மனு எனும் அரசன் ஒரு பேசும் மீனை கண்டறிந்து வளர்ந்தானாம்.
அது பெரிதாக வளர்ந்துகொண்டே போனதால் கடலில் கொண்டுவிட்டானாம்.
பிரளயம் வந்ததும் மனுவின் கப்பலை இழுத்துக்கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம்
கூறுகிறது.

மகாபாரதத்தில் வைவசுத
மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.
பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப்படுகிறது.
அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.
சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்கள் நெடியோன் என்ற பாண்டிய மன்னன் குமரிக்கண்டம் மூழ்கியதும் கப்பலில் தப்பித்து வடக்கே பண்டைய தமிழகத்திற்கு வந்து தமிழ்மன்னர்களுடன் போரிட்டு தன் ஆட்சியைப் பரப்பி, மக்களைக் குடிவைத்து, பிறகு கப்பலில் சென்று தற்போதைய இந்தோனேசியாவின் சாலியூரைத் தாக்கி கைப்பற்றி விதைநெல் கொண்டுவந்தது வேளாண்மையை பெருக்கினான் என்று கூறுகின்றன.

மச்சபுராணத்திலும், பாகவத புராணத்திலும் இதே போன்ற மீன் கதை உள்ளது.

குரானிலும் நூ கதை நோவா கதையையே ஒத்துள்ளது.
(மலைமேல் நோவா விட்டுச் சென்ற கப்பல் துருக்கியில் அராரத் மலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினர்.
ஆனால் அது கப்பல் இல்லை எரிமலைப் படிவம் என்று பிறகு தெரியவந்தது)

உலகத்தின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.
‘கில்கமெஷ்’ என்ற புராதனப் பாபிலோனியக் காவியத்தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.

சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது.
இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.

ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது.

கண்டம் மூழ்கிய கதைகளும் உலக தொன்மங்களில் காணக்கிடைக்கின்றன.
கிரேக்கரான ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

நோவா கப்பலில் இருந்து இறங்கிய மக்கள் செங்கலை அறுத்து கட்டிடம் செய்ததாகக் கூறுகிறது பைபிள்.

உலகில் முதன்முதலாகச் செங்கல் கட்டிடம் காணப்படுவதும் தமிழர் நாகரீக தளமான சிந்துசமவெளியில்தான்.

ஆக உலகில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம்.
அதிலேயே மாந்த இனம் வாழ்ந்து வந்தது.
அங்கே பேசப்பட்ட மொழி தமிழ்.
அக்கண்டம் மூழ்கிய பிறகு சொற்ப எண்ணிக்கையில் தப்பித்த மக்கள் உலகம் முழுவதும் பரவி குடியேறி உள்ளனர்.

வரலாறு அறிந்த முதல் மனிதன் ஆதன்.
அவன் பேசியமொழி தமிழ்.
மூழ்கிய கண்டம் குமரிக்கண்டம்.
அதிலிருந்து மக்களைக் காப்பாற்றியவன் நெடியோன்.

நன்றி:
1) முத்துக்குளிக்க வாரீகளா?! (தொடர்)
_கவிக்கோ அப்துர் ரகுமான்
2) ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி! (தொடர்)
_யாழறிவன்
3) மற்றும் பல்வேறு வலைத்தளங்கள்