குருதியில் நனைந்த குமரி -17
---------------------------------------------
நாள்: 28.08.1954
நேரம்: நண்பகல்
இடம்: தேரூர்
காங்கிரஸ் குழு நேரில் பார்வையிட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு பலரும் வலியுறுத்தியபடி வரலாற்று தகவல்களைக் கேட்டறிய நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் தேரூருக்குச் சென்றனர்.
அங்கே தமிழ்க்கவிஞர் மற்றும் ஆராய்ச்சியாளரான கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர்.
வாசலில் அவரது வளர்ப்புப்பிள்ளையும் மருமகனுமான சிவதாணுப்பிள்ளை நின்றிருந்தார்.
காங்கிரஸ் குழுவினர் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார்.
78 வயதான கவிமணியார் அப்போது மரணப்படுக்கையில் இருந்தார்.
"மாமா தற்போது பேசும் நிலையில் இல்லை.
இந்த இறுக்கமான சூழலில் மாமாவுக்கு தேவையான மருந்துகளும் உணவும் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எழுப்புகிறேன், கண்விழிக்கிறாரா பார்க்கலாம்"
அனைவரும் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.
"மாமா! மாமா! உங்களைப்பார்க்க தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வந்திருக்கிறார்கள்."
கவிமணி கண்விழித்தார்.
"யார்?! தமிழ்நாட்டிலிருந்தா?!
என்றால் குமரிநாடு இன்னமும் தமிழ்நாட்டுடன் இணையவில்லையா?"
கரையாளர் "அதற்காகத்தான் ஐயா வந்திருக்கிறோம்.
கவலை வேண்டாம்.
காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் உதவி தேவை.
உங்களுக்குத் தெரிந்த சரித்திர தகவல்களைக் கூறுங்கள்"
கவிமணி "இங்கே சரித்திரம் என்றாலே அது நமது சரித்திரம்தானே ஐயா,
இந்த நாடு முழுவதுமே தமிழருக்குச் சொந்தம்.
மூழ்கிய குமரிநாடு முதல் இமயமலை வரை நமது மண்.
இந்த திருவிதாங்கூர் உட்பட மலையாள நாடு முழுவதுமே சேரநாடு.
சேரர் தமிழர்தான்.
மூவேந்தரில் ஒரு வேந்தன் அழிந்து போனானே?!
திருவிதாங்கூர் என்ற பெயர் அதங்கோடு என்ற தமிழ்ப்பெயர்தான்.
அதங்கோடு, திருவதங்கோடு ஆகி திருவிதாங்கூர் ஆகிவிட்டது.
தமிழ்ச்சங்கத்துக்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசான் பிறந்த இடமிது.
போனது போகட்டும் இன்று தமிழ்பேசும் பகுதியையாவது ஒன்றிணைத்து தமிழ்ராஜ்ஜியம் அமையுங்கள்."
கரையாளர் "ஐயா, சேரநாடு மலையாள நாடாக ஆனது எப்படி?"
கவிமணி "நில அமைப்பு முதல் காரணம்.
இன்றைய தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.
இங்கே பேசப்படும் தமிழ் சிறிது வேறுமாதிரியாக ஆனது.
அதுவே மலைகளை ஆளும் மலையாளத் தமிழ்.
ஆனாலும் மலைகளுக்கு நடுவே இரு நாட்டையும் இணைக்கும் வழிகள் உள்ளன.
தெற்கே ஆரல்வாய் மொழி கணவாய்,
அதற்கு கொஞ்சம் வடக்கே சிறிய கணவாயான செங்கோட்டை கணவாய்,
வடக்கே பெரியதாக பாலக்காடு கணவாய்.
இன்று இந்த கணவாய்களுக்கு அருகே இருக்கும் நாங்கள்தான் தமிழ்த் தொடர்புடன் இருக்கிறோம்.
தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம் பீருமேடு தொழிலாளர்கள் 100 ஆண்டுகள் முன்பு வந்தவர்கள்.
அவர்களும் தமிழ் அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் மலையாளிகள் ஆகிவிட்டனர்.
இரண்டாவது காரணம் நம்பூதிரிகள்.
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாது.
அவர்கள் கடல் வழி வந்ததாகவும் கங்கைக் கரையிலிருந்து வந்ததாகவும் கூறுவர்.
இவர்கள் வேதங்களை வைதீக முறையில் செய்யும் புதியதொரு இந்துமதப் பிரிவைக் கொண்டுவந்தனர்.
யாகம் வளர்ப்பது, சோதிடம் பார்ப்பது, தீட்டுக்கழிப்பது, செய்வினை வைப்பது, என மூடநம்பிக்கையை வளர்த்து ஏதோ தங்களிடம் அதிசய சக்தி இருப்பதாக மக்களை நம்பவைத்தனர்.
நாளடைவில் செல்வாக்கு அதிகரித்தது.
அவர்கள் மணிப்பளவம் அல்லது மணிப்பிரவாகம் என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.
அதாவது 'தாயை வணங்கி' என்பதை 'மாதாவை நமஸ்கரித்து' என்று 'சமஸ்கிருதத்தைத் தமிழ்நடையில் எழுதும்' ஒரு செயற்கையான மொழியை உருவாக்கினர்.
மன்னர்களையும் பூசை செய்துதரவாதகச் சொல்லி அவர்களுடன் நெருக்கமாகி மணிபிரவாகத்தை ஆட்சிமொழி ஆக்கினர்.
மன்னனுக்கு அடுத்த நிலையில் இடம்பிடித்தனர்.
மன்னர்கள் மூலம் உழைக்கும் சாதியினரை கீழ்சாதியாகவும் தீண்டத்தகாதோராகவும் ஆக்கினர்.
மன்னனின் படைத்தளபதிகளாக இருந்த தமிழரல்லாத வடுக வம்சாவழிகளான நாயர் வீட்டுப் பெண்களை தனக்கு உரிய பொருள் என்று கட்டுப்பாடு விதித்து அவர்களுடன் கலந்து கலந்து அவர்களைக் கலப்பினம் ஆக்கிவிட்டனர்.
இப்படியாக மேல்தட்டு வர்க்கம் மணிப்பிரவாக மயமானது.
நாளடைவில் அது நடுத்தட்டுக்கும் பரவியது.
ஆனால் அடித்தட்டில் இருந்த தமிழர்களுடன் இனக்கலப்பு நடக்கவில்லை.
மொழி மட்டும் கலந்தது
மணிப்பிரவாகமும் மலையாளத் தமிழும் கலந்து இன்றைய மலையாள மொழி உருவானது.
பழைய தமிழ் வட்டெழுத்துக்களை நகலெடுத்து தனியான புதிய எழுத்துமுறையை நம்பூதிரிகள் உருவாக்கினர்.
தமிழ் வார்த்தையின் கொச்சையான உச்சரிப்பையே மலையாள வார்த்தை என சேர்த்துக்கொண்டனர்.
அதாவது ஆமை என்பதை ஆம என்று உச்சரிப்போம் இதை மலையாளத்தில் ஆம என்ற வார்த்தையாக ஆக்கிக்கொண்டனர்.
இன்றும் இது பாதி தமிழ்.
தமிழர்களுக்கு மலையாளமும் மலையாளிகளுக்குத் தமிழும் அப்படியே புரியும்.
ஐக்கிய கேரளம் அமைந்ததும் முதல் வேலையாக மலையாளத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை நீக்கி அதற்கு இணையான சமஸ்கிருத சொற்களை புகுத்தி புதிய பாடத்திட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்"
கரையாளர் "என்றால் பிராமணரெல்லாம் சுத்த மலையாளிகளா?"
கவிமணி " இல்லை.
சோழர் காலத்தில் இங்கே வந்த தமிழ்நாட்டு பிராமணரான தமிழ் ஐயர்கள் இன்றும் தமிழையே பேசுகிறார்கள்.
தமிழராகவே இருக்கிறார்கள்.
தமிழ் ஐயர்கள் பாலக்காடு, கொடுங்காளூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அக்ரகாரம் அமைத்து வாழ்கிறார்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு வைத்துள்ளனர்.
இவர்கள் நம்பூதிரிகளைப் போல தாந்திரீக முறையை பின்பற்றாமல் தமிழ் ஆகம முறையைப் பின்பற்றுகிறார்கள்.
கோவில்களும் தனித்தனிதான்.
பிராமணர்கள் செய்துவரும் கொடுமைகளில் இவர்களுக்கு 1% கூட பங்கு கிடையாது.
மன்னர்களின் திவான்களாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டோர் பெரும்பாலும் தமிழ்ப் பார்ப்பனர்கள்.
அந்த வகையில் அரசுக்கு உடந்தையாக இருந்ததாகக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் வேளாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் எனலாம்.
தமிழ் ஐயர்களை இன்றும் தமிழர்களாகவே மலையாளிகள் பார்க்கிறார்கள்.
தமிழ்ப்பட்டர் என்றே அழைக்கிறார்கள்.
தமிழையர்கள் அமைத்துள்ள 'சமூகங்கள்' அவ்வப்பகுதி தமிழர்களை ஒன்றிணைத்து ஆகம அடிப்படையில் கோவில் ஒன்று கட்டி அந்தப் பகுதி நிலங்களை ஒன்றாக்கி கோயில் மூலம் நிர்வகிக்கும் குத்தகை உரிமையை வைத்துள்ளன.
மலையாளிகள் தனக்கான அரசு அமைந்ததும் முதலில் அதில்தான் கைவைப்பார்கள்.
தமிழையர்கள் கையில் இருக்கும் நிலம் பறிபோனால் தமிழர்கள் ஒருங்கிணைப்பும் பொருளாதாரமும் பறிபோகும்"
கரையாளர் "என்றால் நிலத்தின் விளைச்சலை சுரண்டும் நம்பூதிரிகளுக்கும் ஐயர்களுக்கும் என்ன வேறுபாடு?"
கவிமணி " நம்பூதிரிகளைப் போல நிலத்தில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் முறை கிடையாது இது.
குத்தகை உரிமை மட்டும்தான்.
இது நமது மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திய முறை ஆகும்.
ஆரம்ப காலத்தில் நம்பூதிரிகள் இங்கே வந்து சிறிது வலுப்பெற்றதும் சேர மன்னர் ஆதரவுடன் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சாலை எனுமிடத்தில் ஒரு கல்விக்கூடம் கட்டி அதில் தமிழ்ப்பாணர்களை அழைத்து வந்து போர்ப்பயிற்சி சொல்லிக்கொடுத்தனர்.
சேரர்களுக்கு உதவிப்படையாக இருக்கும் என்று மன்னனிடம் கூறினாலும் உண்மையில் சேரர்களை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கத்தான் அந்தப்படை.
ஆனால் அதற்குள் ராசராசன் சேரநாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்தும், விழிஞ்சம் துறைமுகம் வழியே கப்பல்களை உள்ளே நுழைத்தும் இருமுனைத் தாக்குதல் நடந்தது.
வென்றதும் காந்தளூர் சாலையை இடித்து தரைமட்டமாக்கி அது இருந்த அடையாளமே இல்லாமல் செய்துவிட்டான்.
போர்ப்பயிற்சி பெற்ற மாணவர்களை தனது படையில் சேர்த்துக்கொண்டான்.
நம்பூதிரிகள் கொண்டுவந்த தாந்திரீக முறையை ஒழித்து மீண்டும் ஆகம முறையை நடைமுறைப்படுத்தினான்.
தனது கல்வெட்டுகளில் 'காந்தளூர்சாலை கலமறுத்தருளி' என்றே அவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.
இது பற்றி நான் 32 ஆண்டுகள் முன்பே ஆராய்ந்து எழுதியுள்ளேன்."
கரையாளர் "பிராமணரில் தமிழர் உள்ளது போல தாழ்த்தப்பட்டோரிலும் மலையாளிகள் உண்டா?"
கவிமணி "இல்லை. ஆனால் ஈழவர், புலையர், தீயர் என தாழ்த்தப்பட்டோர் இந்த உண்மையை மறந்துவிட்டனர், தங்களை மலையாளிகளாகவே கருதுகின்றனர்.
இன்று மலையாளிகளில் மூன்று பெரும்பான்மைக் குழுக்கள் சிரியன் கிறித்தவர், நாயர்.
அவர்களுக்குள் எத்தனையோ பிரச்சனை இருக்கும் ஆனால் தமிழருக்கு எதிராக ஒன்றாகிவிடுவார்கள்.
உடனே நம்பூதிரியிடம் போய் ஆலோசனை கேட்டு அதுபடி நடப்பார்கள்"
கரையாளர் "உயர்சாதியானரில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் சிலர் மலையாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்"
கவிமணி "சிலர் இருக்கிறார்கள்.
பூணூல் போட்ட நாடார்களும் கூட அந்த வகையில் உண்டு.
நான் வெள்ளாளன்தான்.
குமரி மீட்புக்காக முதலில் விடுதலை அமைப்பு நிறுவிய அப்பாவுப்பிள்ளை வேளாளர்தான்.
நேசமணியின் கட்சியை நிறுவிய பி.எஸ்.மணி வெள்ளாளர்தான்.
இவ்வளவு ஏன்?!
நாஞ்சில் நாட்டுக்காக சேரநாடும் பாண்டியநாடும் மோதிக்கொள்ளும் என்று முன்பே கணித்து அதை மனோன்மணீயம் என்ற காவியமாகத் தீட்டிய சுந்தரம்பிள்ளை வெள்ளாளர்தான்.
அவர் கண்டெடுத்த கல்வெட்டு இன்றும் ஒரு முக்கிய சான்று.
அதுவே பாண்டிய நாட்டின் பகுதியான நாஞ்சில்நாட்டின் மீது சேரநாடு படையெடுத்தபோது காத்துநின்று வீரமரணம் அடைந்த வீரனின் கதையைக் கூறுகிறது.
அதாவது மலையாளிகள் சேரர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் நாஞ்சில் நாடு அவர்களுக்குச் சொந்தமில்லை என்பதை அவர் ஆணித்தரமாகக் கூறிச்சென்றுள்ளார்.
இது போல தொடக்ககால திருவனந்தபுரம் அரசர்கள் பாண்டிய வம்சமான வேணாட்டு அரசர்கள் என்பதையும் அவர்கள் காலத்தையும் சான்றுடன் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் மன்னருக்கு நெருக்கமானவர்.
நானும் அவரைப்போல திருவனந்தபுரத்தில் ஆசிரியராக இருந்தவன்தான்.
அவரைப்பற்றி ஆய்வும் செய்துள்ளேன்"
கரையாளர் " என்றால் திருவனந்தபுரம் வரைதான் மலையாளநாடு என்றால் இப்போது திருவனந்தபுரத்தில் தமிழர்கள் எத்தனை சதவீதம்"
கவிமணி " திருவனந்தபுரம் நகரில் 70% வரை இன்று தமிழர்கள்.
மலையாளிகள் தொடர்ந்து அந்நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியேறி வருகின்றனர்.
அந்நகரின் உணவுப் பொருட்கள் வணிகம் வேளாளர்கள் கையிலும்
மளிகை மற்றும் துறைமுகப் பொருட்கள் வணிகம் நாடார்கள் கையிலும் உள்ளது.
திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகள் கடைவீதிகள் என எல்லாமே தமிழர்கையில்தான் உள்ளது.
அந்நகர் மலையாளிகள் கைக்குப் போனாலும் முழுதும் மலையாள மயமாக குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.
செங்கோட்டையிலிருத்து கடலுக்கு நேராக ஒரு கோடு கிழித்து அதற்கு தெற்கே உள்ளதை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்.
அதற்கு மூழ்கிய குமரிக்கண்டம் நினைவாக பெயர்வைக்கவேண்டும்.
நமது குமரிநாடு மூழ்கிவிட்டது.
அதன் எஞ்சிய அடையாளம் cape comarin என்று ஆங்கிலேயர் அழைக்கும் குமரி முனையும் அங்கே இருக்கும் குமரியம்மன் கோவிலும்தான்"
கரையாளர் "இங்கே நம்பூதிரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மார்பை மூடமுடியாத அளவுக்கு சாதிக்கொடுமை நடந்ததாக அறிகிறோம்.
அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?"
கவிமணி "நம்பூதிரி சொன்னால் தமிழன் மானங்கெட்டுப்போய் அப்படியே செய்வானா?
இன்றும் பழங்குடிகளிடம் மாரை மூடும் வழக்கம் கிடையாது.
தமிழர்களிடமும் மார்பை மூடும் வழக்கம் முன்பு கிடையாது.
இதை கோவில் சிலைகளில் நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பழக்கம் இங்கே மற்ற பகுதிகளை விட அதிககாலம் தொடர்ந்தது.
அதைத்தான் நம்பூதிரி சட்டமாக்கினான்"
கரையாளர் "தங்களது பிரச்சனைகள் தமிழகத்துடன் இணைந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?"
கவிமணி "கட்டாயம் சரியாகிவிடும்.
நாங்கள் தாய்நிலத்துடன் இணைவது எங்களின் பிரச்சனைகளால் அல்ல.
தமிழ்ப் பற்றினால்தான்.
இந்த பற்றுக்கு மதிப்பிருந்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும்"
கரையாளர் "சரி ஐயா, நேருவிடம் இது பற்றி எடுத்துச்சொல்கிறேன்"
கவிமணி "காந்தி இருந்த வரை நேரு மருமகள் போல இருந்தார்.
இப்போது பதவிக்கு வந்தவுடன் மாமியார் போல நடந்துகொள்கிறார்.
அவர் தயவை எதிர்பார்க்காமல் தமிழர்கள் போராடவேண்டும்.
தெலுங்கர்களை இந்த விசயத்தில் நாம் பின்பற்றவேண்டும்.
தென்குமரியும் வடவேங்கடமும் போய்விட்டாலும்
குறைந்தபட்சம் குமரி முனையிலிருந்து வேங்கடமலையான திருப்பதி வரையாவது நம் நாடு ஒரு சிற்றரசாகவேணும் இந்தியாவில் இருக்கவேண்டும்.
நான் உயிருடன் இருக்கப்போகும் காலம் குறைவு.
என் காலத்தில் இது நடக்கவேண்டும்.
என் கடைசி ஆசை இது"
என்று கூறிவிட்டு கண்ணை மூடினார் கவிமணி.
மூடிய கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
திடீரென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்.
"தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்மிட்டு போற்றுகின்றேன் மன்னுபுகழ்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நாடு ஒத்து உலகில்
சந்தமும் வாழ வரம் தா"
பாடி முடித்ததும் அப்படியே அயர்ந்துவிட்டார்.
---------------------
தொடரும்
Tuesday, 11 April 2017
குருதியில் நனைந்த குமரி -17
Wednesday, 5 April 2017
குருதியில் நனைந்த குமரி -16
குருதியில் நனைந்த குமரி -16
------------------
நாள்: 26.08.1954
நேரம்: அதிகாலை 5 மணி
இடம்: நாகர்கோவில்
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நேசமணியாரின் மனைவி கரோலின் அம்மையார் கதவைத் திறந்தார்.
வெளியே தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
"வணக்கம் அம்மா!
நாங்கள் காங்கிரஸ் குழு மதராசிலிருந்து வருகிறோம்.
நேசமணி இருக்கிறாரா?"
"வாருங்கள்! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"
உள்ளே நுழைந்தனர்.
நேசமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணயர்ந்து இருந்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்தார்.
கைகூப்பியபடி எழுந்தார்
"வணக்கம்! வாருங்கள்! வாருங்கள்!
உங்களுக்கு தந்து உபசரிக்க பாலோ மோரோ இல்லை!
கொஞ்சநேரம் பொறுங்கள்!
புட்டு தயாராகிவிடும்.
நீத்தண்ணீர் அருந்துகிறீர்களா?"
"பரவாயில்லை ஐயா!
இங்கே உள்ள இறுக்கமான சூழலை அறிவோம்.
உங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏதும் இல்லையே?!"
" இல்லை.
தமிழ்மண்ணில் தஞ்சாவூருக்கு அடுத்து பெரிய நெற்களஞ்சியம் இந்த நாஞ்சில் நாடு.
80 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது கூட இங்கே உணவுக்கு தட்டுப்பாடு வரவில்லை.
என்ன! எல்லா விளைச்சலையும் குறைந்த விலை கொடுத்து திருவிதாங்கூர் அரசாங்கம் அள்ளிக்கொண்டு போய்விடும்"
"இப்போதுமா அது நடக்கிறது?"
"ஆமாம். வெளியே 40 ரூபாய் கிடைக்கும்.
ஆனால் வீட்டுக்குத் தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு 9 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்.
அள்ளவரும் நம்பூதிரிகளைக் கேட்டால் பத்மநாபசாமி கோவிலுக்கு என்பார்கள்"
"பத்மநாபசாமி கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவில்தானே?"
"ஆம். ஆனால் பத்மநாபபுரம் இங்கேதான் இருக்கிறது.
அதுதான் திருவிதாங்கூர் தலைநகராக இருந்தது.
அரண்மனை கூட உண்டு.
பிறகுதான் தமிழர் மத்தியில் தலைநகர் வேண்டாமென திருவனந்தபுரத்தை தலைநகராக ஆக்கினர்.
திருவனந்தபுரத்திற்கு அந்தப்பக்கம் வரை மலையாளிகள் தாய்நிலம்.
அந்த பத்மநாபசாமி கோயிலை போய்ப்பாருங்கள் அப்படியே ஸ்ரீரங்கம் கோவிலைப் போல இருக்கும்.
நம்பூதிரிகள் சதிசெய்து கொன்ற கடைசி தமிழ்மன்னன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பெரும் செல்வத்தை அக்கோயிலின் நிலவறைகளில் மறைத்துவைத்துள்ளான்.
கோயிலைச் சுற்றித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
கோயில் பக்தர்களும் தமிழர்களே!
என்று அந்த அறைகளைத் திறக்கிறார்களோ அப்போது பிரச்சனை வெடிக்கும்.
அந்த கோவில் உட்பட திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர் சொத்துதான்.
இன்றைக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியையாவது மீட்கவேண்டும். குமரி முனையில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் வரையும்
அப்படியே வடக்கே தமிழ்நாட்டை ஒட்டியவாறு வால்பாறை வரையும் பரந்திருக்கும் நமது தமிழர் மண்ணை மீட்கவேண்டும்"
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் அளவு வரும் போலிருக்கிறதே?!"
"இல்லை அதில் முக்கால்வாசி வரும்.
ஆனாலும் இதை சாதிப்பது அத்தனை எளிய காரியமில்லை.
இந்த நாஞ்சில் பகுதி மலையாளிகளின் கையைவிட்டு போய்விட்டால் அவர்களுக்கு சோற்றுக்கே வழி கிடையாது.
தேவிகுளமும் பீருமேடும் தமிழ் மாநிலத்துடன் இணைந்து ஏலக்காய், தேயிலை, ரப்பர் மூலம் வரும் வருமானம் தமிழர் கைக்குப் போய்விட்டால் மலையாளிகள் பாதி ஏழைகள் ஆகிவிடுவார்கள்.
நமது மண்ணின் வளத்தை நம்மை உழைக்கவைத்து கொழுத்துக் கிடக்கின்றனர் நம்பூதிரிகள்.
வருமானம் தரும் பகுதிகள் போனாலும் சரி நம்மை அடக்கியாள நினைக்கும் இவர்கள் நோகாமல் உண்ண சோறு கிடைக்க ஒரு போதும் விடமாட்டேன்.
இந்த நாஞ்சில் நாட்டை தமிழ்மாநிலத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணை சரியாக பயன்படுத்தினால் பாதி தமிழினத்திற்கு சோறிடமுடியும்"
"கவலை வேண்டாம்.
எங்களுக்கு இங்கே தற்போது நடக்கும் அடக்குமுறை பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் நேரில் சென்று பார்வையிடவும் செய்வோம்"
"1948லேயே தமிழகத்துடன் இணைய போராடினோம்.
இரண்டு தமிழர்களை இதே பட்டம் தாணுப்பிள்ளை சுட்டுக் கொன்றான்.
பிறகு இவனை அகற்றிவிட்டு வேறு ஒரு மலையாளி முதலமைச்சரானான்.
அவனும் சளைத்தவனில்லை.
ஆனால் ஒரு மலையாள இனவெறியன்தான் தமிழர்களைச் சமாளிக்கமுடியும் என்று மறுபடி பட்டத்தையே கொண்டுவந்தனர்.
'தமிழன்மார அடிச்சமர்த்தனம்' என்று கொக்கரித்தபடி ஆட்சிக்கு வந்தான் பட்டம்"
"பிள்ளை என்றால் தமிழரா?"
"இல்லை எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர்.
இவன் மலையாள கைதிகளை விடுதலை செய்து பீருமேட்டில் வீடும் பணமும் கொடுத்து குடியேற்றினான்.
பிறகு அங்கே அவர்கள் ஒரு தொழிற்சங்கம் தொடங்கி தமிழர்களுக்கான அமைப்பாக இருந்த தொழிற்சங்கத்துடன் பிரச்சனை செய்தனர்.
பட்டம் அரசும் ஒருதலைபட்சமாக நடந்தது.
பிறகு தமிழர்கள் மீது வழக்கு, கைது, சோதனையிடல், தடியடி என்று காவல்துறை அடக்குமுறைகள்.
குமரித் தமிழர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம்.
200 கி.மீ அந்தப்பக்கம் இருந்தாலும் நாங்கள் போய் தடை உத்தரவை போராடினோம்.
400 பேர் கைதானோம்.
நான் விடுதலை ஆனதும் ஒரு பேரணி நடத்த திட்டம் இட்டவேளையில் நேரு அமைதியாக இருக்கும்படி கடிதம் எழுதினார்.
ஆனாலும் மாநில எல்லை வரைவுக் குழு வரவுள்ள இந்த நேரத்தில் நாங்கள் போராடவேண்டிய கட்டாயம்.
எனவே பெரியதொரு போராட்டத்தை முன்னெடுத்தோம்.
எங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியும்.
தெரிந்தேதான் போராடினோம்"
"என்னவொரு துணிச்சல் ஐயா உங்களுக்கு!
மற்ற அடக்குமுறைகளை நேரில் சென்று பார்வையிடுகிறோம்.
உள்ளது உள்ளபடி அப்படியே அறிக்கையாக அளிக்கிறோம்.
எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.
நீங்கள் தமிழகத்துடன் இணைவது உறுதி"
"நம் மக்கள் இங்கே துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்த படுவது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
நீங்கள் வருவதாக அறிவித்த பிறகு தற்போது நிலை ஓரளவு பரவாயில்லை.
உங்களுக்கு நன்றி"
"நன்றி எல்லாம் எதற்கு?
இது எங்கள் கடமை.
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்போம்.
ஆறுதல் கூறுவோம்.
தேவையானவர்களுக்கு திருவிதாங்கூர் அரசிடமிருந்து இழப்பீடும் பெற்றுத்தருவோம்"
"இழப்பீடெல்லாம் வேண்டாம் ஐயா!
ஆறுதலும் ஆதரவுமே தற்போது தேவை.
எப்படியேனும் தமிழகத்துடன் இணைந்தால் போதும்"
"நன்றி! நாங்கள் கிளம்புகிறோம்"
"உணவு தயாராவிட்டது.
உணவருந்தியபின் செல்லலாம்"
---------------------
நாள்: 26.08.1954
இடம்: நேரு அலுவலகம்
மாலை: 4 மணி
மேசைத் தொலைபேசி அழைத்தது.
நேரு எடுத்தார்.
"வணக்கம் ஜவஹர் அவர்களே!"
" வணக்கம் கரையாளரே! உங்கள் அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
அப்துல் ரசாக் முன்பே வந்துவிட்டார்.
வெளியே காத்திருக்கிறார்.
அங்கே என்ன நிலவரம்?"
"இங்கே நிலை சற்று கவலைக்கிடம்தான்.
தமிழ்மாநில எல்லையிலிருந்து நுழையும் முன்னே பார்த்தேன்.
நிறைய அகதிகள் திருநெல்வேலி எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
500 குடும்பங்களாவது இருக்கும்.
இங்கே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எதுவுமே இயங்கவில்லை.
மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
இவர்களது தலைவர் நேசமணியையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
எங்கே பார்த்தாலும் காவல்துறையினர்.
தமிழ் எம்.பிக்கள் பலரைக் காணவில்லை.
சிறையில் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியைப் பார்த்தேன்.
தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளன.
கொல்லப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தேன்.
இப்பகுதியை ஐக்கிய கேரளாவிலிருந்தே பிரிப்பதே முறை.
இவர்களுக்கும் மலையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"
"ஒரு சந்தேகம். அதென்ன அவரது கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்று உள்ளது.
தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி என்கின்றனர் கேரளத்தவர்"
"ஆம். தமிழர்கள் அவர்களது தாய்நிலத்தை தமிழ்நாடு என்றுதான் சொல்வார்கள்.
நான் சந்தித்தவரை அவர் பிரிவினை பற்றி பேசவில்லை.
ஒருவேளை அவர்களது உரிமைகள் கிடைக்காது போனால் பிரிவினையை கையில் எடுக்கலாம்.
ஏனென்றால் தமிழர்கள் மற்ற எந்த இந்தியர்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
நேசமணி கட்சியில் சாதி கடந்து மதம் கடந்து தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை கொடுத்துவிடுவதே நல்லது"
"ஒரே நாளில் இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் காமராசரிடம் கேட்டபோதெல்லாம் சென்ற தேர்தலில் நேசமணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது நேரில் கண்டதாகவும், அப்பகுதி மலையாள கலப்புள்ள பகுதி என்றுமல்லவா கூறினார்?!"
"காமராசரே பிரச்சாரம் செய்தும் அவர் நிறுத்திய 'திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரஸ்' வேட்பாளர்கள் 14 பேரும் இப்பகுதியில் டெபாசிட் இழந்தததை மறந்துவிட முடியுமா?
நேசமணி நிறுத்திய 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' ஆமோக வெற்றி பெற்றதைத்தான் மறுக்க முடியுமா?
நான் தமிழன் என்ற முறையில் இதைச் சொல்லவில்லை.
நடுநிலையாக ஆராய்ந்தே சொல்கிறேன்.
இன்று யார்வந்தாலும் ஒருநாளிலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியான நிலை இங்கு உள்ளது.
முழுமையாக ஆராய்ந்து நான்கு நாட்களில் எழுத்தில் தருகிறேன்"
"சரி ஐயா! நல்லது"
அப்துல் ரசாக் வரவேற்பறையில் ஒரு மணிநேரமாக காத்திருந்தார்.
சுற்றிலும் ஒரே மலையாளிகள்.
நேருவின் உதவியாளர்(மலையாளி) வந்து அழைத்து உள்ளே போகும்படி கூறினார்.
(தொடரும்)
---------------------------
படம்: இணைக்கக் கோரிய பகுதி மற்றும் மக்கட்தொகை
( Liberation of the Oppressed a Continuous Struggle
எனும் கன்னியாகுமரி வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டன)