Friday, 22 December 2023
ஆற்காடு நவாபு விநாயகர் கோவிலுக்கு அளித்த தானம்
Saturday, 28 July 2018
சோழர்களின் சதுர்வேதி மங்கலம் பற்றிய பொய்யும் உண்மையும்
சோழர்களின் சதுர்வேதி மங்கலம் பற்றிய பொய்யும் உண்மையும்
பார்ப்பனர்களுக்கு இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்ததாக சிலர் என் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
மேலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சோழர்கள் இறையிலி நிலங்களை வழங்கியதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
அவர்களுக்கான பதில்….
இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாயின் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக ஆக்கி தானமாக வழங்கினான்.
அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர், கணி, காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்களும் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில்' இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில் உள்ளது.
எடுத்துக்காட்டாக….
“வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று”
“நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை”
“ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று”
“அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை”
“அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி”
“தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி”
என்றவாறு கூறப்பட்டுள்ளது….
மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும்.
யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை.
பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு.
அவற்றின் உரிமையாளர் அரசு தான்.
மேற்கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.
முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும்,
இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும்,
மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்.
நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது.
அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும்.
“....யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்”
என்று கூறுகிறது.
ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் :--
”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி”
சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம்.
- பதிப்புத்துறை: துரை காமராசர் பல்கலைக்கழகம்.
நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
படம்: கரந்தை செப்பேடுகள் தொகுதியில் மூவேந்தர் சின்னங்களுடன் கூடிய அரசேந்திர சோழனின் முத்திரை
Friday, 27 July 2018
சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா?
இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை 'திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது…..
இது உண்மைதானா என்று அறியவேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…
அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் 'திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ளன.
அதில் 1080 பார்ப்பனர்கள் (எட்டு பேர் தவிர அனைவரும் வைணவர்கள்) எவரும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை.
ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன.
அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது.
அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன), அதிலுள்ள ஊர், பிறகு கிராமம், பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன்( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது), இயற்கைப் பெயர், பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள்தான்.
அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்.
இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை.
அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)....
1.”ராஜேந்திரசிம்ம வளநாட்டு தனியூர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து பரத்வாஜ கோத்திரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து இறையானரை சூர் மதிசூதன் யக்ஞப் பிரிய பட்டனுக்குப் பங்கொன்று”
என்று ஒரு அந்தனனுக்கு வழங்கப்பட்ட விபரங்களுடன் தொடங்குகிறது.
அதாவது,
'ராஜேந்திரசிம்ம' என்ற வளநாட்டின்
'தனியூரில்' உள்ள
'வீரநாராயண சதுர்வேதி மங்கலம்' என்னும் ஊரைச் சேர்ந்த
'இறையானரை சூர் மதிசூதன்' என்ற இயற்பெயரையும்
'யக்ஞப் பிரியப் பட்டன்' எனும் பட்டப்பெயரைக் கொண்டவனுக்கு ஒரு பங்கு நிலமும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த 7 முதல் 10 நபர்களின் பெயர்கள் என 1080 பார்ப்பனர்களின் பெயர்கள் உள்ளன.
அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில….
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…
இது போல 1080 பேர்கள் வாழ்ந்த ஊர்களும் தமிழக ஊர்களே!
இவ்வாறிருக்க இவர்கள் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமணர்கள் என திராவிட இயக்க தத்துவவாதிகள் கூறுவது ஏன்?
இங்குள்ள பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல வடவர் என்று பொய் பரப்புரை செய்வதற்காகத் தானே?!
திராவிடப் பொய்களைத் தோலுரிப்போம்
நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
Thursday, 26 July 2018
ஊருடன் சேர்ந்ததே சேரி
ஊருடன் சேர்ந்ததே சேரி
இன்று 'சேரி' என்ற சொல்லின் பொருள் மாறுபட்டிருக்கலாம்.
ஆனால் அச்சொல்லின் உண்மையான பொருள் புதிதாக உருவாகி நகரத்துடன் சேர்ந்த புறநகர் என்பதே!
அதாவது இன்று extention என்று கூறுகிறோமே அதுபோல.
நகரங்கள் காலப்போக்கில் விரிவடைந்து அருகில் உள்ள எல்லைப் பகுதிகளை தனக்குள் இழுத்துக் கொள்வது வழக்கம்.
அப்படி நகரமயமாக்கல் (urbanization) நடந்த பகுதிதான் சேரி.
இது நகருக்கு வெளியே இருந்ததால் வயல்வெளி, புறவழிச் சாலை, காவல் கூடம், சுங்கச்சாவடி, சரக்கு கிட்டங்கி, உணவகம் ஆகியன இங்கே இருந்திருக்கும்.
அதனால் இது தொடர்பான பணி செய்யும் மக்கள் அதாவது விவசாயிகள், வணிகர்கள், கூலித் தொழிலாளிகள், காவல் காப்போர் ஆகியோர் இங்கே குடியிருப்பர்.
ஏதோ உழைக்கும் மக்களை நகரத்துக்கு வெளியே ஒதுக்கிவைத்தது போல இதனைத் திரித்து எழுதி தமிழ்ச் சமூகமே சாதிய ஏற்றத்தாழ்வு கொண்டது என்று பழி சுமத்துகின்றனர் வந்தேறிகள்.
சிலர் "ஊரும் சேரியும் ஒன்றாகவில்லை" என்று கத்துகின்றனர்.
இப்போது உண்மை என்னவென்று பார்ப்போம்.
ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றவாளிகளின் தம்பி பரமேஷ்வரன்.
இவன் வாழ்ந்த இடம் "பார்ப்பன சேரி" ஆகும்.
இவனது நிலத்தை அரசு கையகப்படுத்தி ஒருவரிடம் கொடுத்து அவர் வேறொருவருக்கு விற்றபோது பொறித்த கல்வெட்டில் இந்த செய்தி உள்ளது.
[உடையார்குடி கல்வெட்டு]
அதாவது பூசை செய்யும் உயர்நிலை மக்களும் சேரியில் வாழ்ந்துள்ளனர்.
இது போலவே கம்மாளச்சேரி, பறைச்சேரி, இடைச்சேரி ஆகியனவும் இருந்துள்ளன.
(பார்ப்பனருக்கு தானம் தரப்பட்ட சதுர்வேதி மங்கலங்கள் பகுதியளவு வரிச்சலுகையும்
பறைச்சேரியும் கம்மாளச்சேரியும் முழு வரிவிலக்கு பெற்றிருந்தன என்பதை இராசேந்திர சோழனின்
கரந்தை செப்பேடுகள் மூலம் அறிகிறோம்)
[கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி - சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம்]
சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சான்று உள்ளது.
அதில் "புறஞ்சேரி" எனுமிடத்தை 'புரிநூல் மார்பர் உறைபதி' என்று குறிப்பிடுகிறது.
அதாவது பூணூல் போட்டவர்கள் வாழ்ந்த இடம்.
யார் அந்த பூணூல் போட்டவர்கள்?
பார்ப்பனர் மற்றும் பாணர்
[சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை]
போகப்போக சேரி என்பது குடியிருப்பு என்ற பொருளும் பெற்றது.
பாப்பனச்சேரி, பாப்பச்சேரி போன்ற பல ஊர்கள் இன்றும்கூட உண்டு.
பாண்டிச்சேரி / புதுச்சேரி கூட சேரிதான்.
இன்றும் நாகைப்பட்டிணம் அருகே "பார்ப்பனச் சேரி" என்ற ஊர் உண்டு.
தஞ்சை பெருவுடையார் கோவில் சுவரை ஒட்டியவாறு வடமேற்கில் இருந்த பகுதி "தளிச்சேரி" ஆகும்.
கோவிலை ஒட்டியேகூட சேரி இருந்துள்ளது.
தஞ்சை நகரில் முக்கியமான தெருவான சூரசிகாமணிப் பெருந்தெருவில்
கணித நூலோர் (ஆசிரியர்கள்),
வள்ளுவர்கள் (சோதிடர்),
குயவர்கள் (பானை செய்வோர்),
வண்ணத்தார் (ஓவியர் அல்லது துணிக்கு சாயம் போடுவோர்),
ஈரங்கொல்லிகள் (துணி துவைப்போர்),
நாவிதர்கள் (முடி திருத்துவோர்)
என அனைத்து தரப்பினரும் வாழ்ந்த ஆதாரம் உள்ளது.
[தஞ்சாவூர் - முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன்]
சோழர் காலத்தில் தீண்டாமை இருந்தது என்று கூறுவோர் 'தீண்டார் இந்த குளத்தைப் பயன்படுத்தக்கூடாது' என்று கூறும் கல்வெட்டை ஆதாரமாகக் காட்டுவார்.
இந்த தீண்டார் யாரென்றால் நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை செய்யும் மருத்துவர்.
அக்காலத்தில் அரசாங்கமே நடத்திய மருத்துவமனைகள் இருந்தன.
இதனை சோழ அரசகுடும்ப பெண்கள் நிர்வகித்து வந்தனர்.
அதில் மருத்துவராக இருந்தோர் இன்றைய நாவிதர் அல்லது அம்பட்டர் குடியினர்.
இன்றும் சாதிச்சான்றிதழில் மருத்துவர் என்று போடுவது நாவிதர்கள் வழக்கம்.
இந்த மருத்துவ சமுதாயமே 50 ஆண்டுகள் முன்புவரை மருத்துவம் பார்த்து வந்தனர்.
பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி இந்த சமுதாயப் பெண்களே.
இவர்களில் தீண்டுவான், தீண்டான் என இரு பிரிவுகள் உள்ளன.
அதாவது நோயாளிகளைத் தொட்டு மருத்துவம் செய்வோர் தீண்டுவார்.
தொற்றுநோய்கள் உள்ளிட்ட மோசமான நோய்களை (நோயாளியைத்) தொடாமலே சிகிச்சை அளிப்போர் தீண்டார்.
(தீண்டார் வேறு தீண்டப்படாதோர் வேறு.
தீண்டப்படாதோர் நோயாளிகள் மட்டுமே)
தீண்டா மருத்துவர் கோவில் குளத்தைப் பயன்படுத்த (கோயிலை அல்ல) தடை கூறும் கல்வெட்டே அது.
தீண்டாச்சேரி என்பது மருத்துவமனைப் பகுதியாக இருக்கவேண்டும்.
[தீண்டாச்சேரி அரசியல் - தென்காசி பாலசுப்பிரமணியன்]
இலக்கியங்களில் இழிசினர் பற்றி ஏற்கனவே விரிவான ஒரு பதிவு இட்டுள்ளேன்.
[இழிநல், இழிசினர், இழிபிறப்பினர் - வேட்டொலி]
வரலாற்றை வார்த்தைகளை திரித்து கதைபுனைந்து நம்மை நாமே தாழ்வாக நினைக்கவைத்து ஏமாற்றி வரும் வந்தேறிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
Thursday, 6 July 2017
மோடி இஸ்ரேலுக்கு அளித்த தமிழ் செப்பேடு
பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேல் பிரதமருக்கு அளித்த 9 -10நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வட்டெழுத்து செப்பேடு, சேர அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் வணிகம் செய்ய வந்த யூதர்களுக்கு அளித்தது.
(மோடி அவரை இந்திய அரசர் என்று மழுப்பினார்)
தகவல்: Karthikeyan Rathinavelu .