Showing posts with label திரிபு. Show all posts
Showing posts with label திரிபு. Show all posts

Thursday, 26 June 2025

அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதாக நமக்கு சொல்லப்படுவது 
"கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!"
 ஆனால் இது திரிக்கப்பட்டது!
அதாவது "educate! organise! agitate!" என்று அவர் கூறவில்லை!
 "educate! agitate and organise" என்பதே அவர் கூறியது.
அதாவது "கற்பி! (சிந்தனையைத்) தூண்டிவிடு! ஒன்றிணை!" என்பதே இதன் பொருள்! 
 அவரது நோக்கம் ஒன்றிணைவது தான் தூண்டிவிடுவது (agitate) அல்ல! 

 [ “Dr Babasaheb Ambedkar Writings and Speeches” Vol-17, Part-3, Pages – 273 & 276

The All India Depressed Classes Conference was held at Nagpur from 18th to 20th July 1942. Dr Ambedkar addressing the Conference on 20th July 1942 as under:-
 “My final words of advice to you is Educate, Agitate and Organise; have faith in yourselves and never lose hope. 
I shall always be with you as I know you will be with me.
 For ours is a battle, not for Wealth or for Power.
 It is a battle for Freedom!
It is a battle for the Reclamation of Human Personality which has been suppressed and mutilated by the Hindu social system”.]

மார்க்ஸ் கூறியதும் திரிக்கப்படுகிறது "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்று அவர் கூறவில்லை "உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்றுதான் அவர் கூறினார்.

 தேவர் கூறியதும் திரிக்கப்படுகிறது 
"தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்" என்று அவர் கூறவில்லை!
"தேசியம் உடல் தெய்வீகம் உயிர்" என்றுதான் கூறினார்.

Thursday, 26 July 2018

ஊருடன் சேர்ந்ததே சேரி

ஊருடன் சேர்ந்ததே சேரி

இன்று 'சேரி' என்ற சொல்லின் பொருள் மாறுபட்டிருக்கலாம்.
ஆனால் அச்சொல்லின் உண்மையான பொருள் புதிதாக உருவாகி நகரத்துடன் சேர்ந்த புறநகர் என்பதே!

அதாவது இன்று extention என்று கூறுகிறோமே அதுபோல.

நகரங்கள் காலப்போக்கில் விரிவடைந்து அருகில் உள்ள எல்லைப் பகுதிகளை தனக்குள் இழுத்துக் கொள்வது வழக்கம்.

அப்படி நகரமயமாக்கல் (urbanization) நடந்த பகுதிதான் சேரி.

இது நகருக்கு வெளியே இருந்ததால் வயல்வெளி, புறவழிச் சாலை, காவல் கூடம், சுங்கச்சாவடி, சரக்கு கிட்டங்கி, உணவகம் ஆகியன இங்கே இருந்திருக்கும்.

அதனால் இது தொடர்பான பணி செய்யும் மக்கள் அதாவது விவசாயிகள், வணிகர்கள், கூலித் தொழிலாளிகள், காவல் காப்போர் ஆகியோர் இங்கே குடியிருப்பர்.

ஏதோ உழைக்கும் மக்களை நகரத்துக்கு வெளியே ஒதுக்கிவைத்தது போல இதனைத் திரித்து எழுதி தமிழ்ச் சமூகமே சாதிய ஏற்றத்தாழ்வு கொண்டது என்று பழி சுமத்துகின்றனர் வந்தேறிகள்.

சிலர் "ஊரும் சேரியும் ஒன்றாகவில்லை" என்று கத்துகின்றனர்.

இப்போது உண்மை என்னவென்று பார்ப்போம்.

ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றவாளிகளின் தம்பி பரமேஷ்வரன்.
இவன் வாழ்ந்த இடம் "பார்ப்பன சேரி" ஆகும்.
இவனது நிலத்தை அரசு கையகப்படுத்தி ஒருவரிடம் கொடுத்து அவர் வேறொருவருக்கு விற்றபோது பொறித்த கல்வெட்டில் இந்த செய்தி உள்ளது.
[உடையார்குடி கல்வெட்டு]

அதாவது பூசை செய்யும் உயர்நிலை மக்களும் சேரியில் வாழ்ந்துள்ளனர்.
இது போலவே கம்மாளச்சேரி, பறைச்சேரி, இடைச்சேரி ஆகியனவும் இருந்துள்ளன.

(பார்ப்பனருக்கு தானம் தரப்பட்ட சதுர்வேதி மங்கலங்கள் பகுதியளவு வரிச்சலுகையும்
பறைச்சேரியும் கம்மாளச்சேரியும் முழு வரிவிலக்கு பெற்றிருந்தன என்பதை இராசேந்திர சோழனின்
கரந்தை செப்பேடுகள் மூலம் அறிகிறோம்)
[கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி -  சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம்]

சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சான்று உள்ளது.
அதில் "புறஞ்சேரி" எனுமிடத்தை 'புரிநூல் மார்பர் உறைபதி' என்று குறிப்பிடுகிறது.
அதாவது பூணூல் போட்டவர்கள் வாழ்ந்த இடம்.
யார் அந்த பூணூல் போட்டவர்கள்?
பார்ப்பனர் மற்றும் பாணர்
[சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை]

போகப்போக சேரி என்பது குடியிருப்பு என்ற பொருளும் பெற்றது.

பாப்பனச்சேரி, பாப்பச்சேரி போன்ற பல ஊர்கள் இன்றும்கூட உண்டு.
பாண்டிச்சேரி / புதுச்சேரி கூட சேரிதான்.
இன்றும் நாகைப்பட்டிணம் அருகே "பார்ப்பனச் சேரி" என்ற ஊர் உண்டு.

தஞ்சை பெருவுடையார் கோவில் சுவரை ஒட்டியவாறு வடமேற்கில் இருந்த பகுதி  "தளிச்சேரி" ஆகும்.
கோவிலை ஒட்டியேகூட சேரி இருந்துள்ளது.

தஞ்சை நகரில் முக்கியமான தெருவான சூரசிகாமணிப் பெருந்தெருவில்
கணித நூலோர் (ஆசிரியர்கள்),
வள்ளுவர்கள் (சோதிடர்),
குயவர்கள் (பானை செய்வோர்),
வண்ணத்தார் (ஓவியர் அல்லது துணிக்கு சாயம் போடுவோர்),
ஈரங்கொல்லிகள் (துணி துவைப்போர்),
நாவிதர்கள் (முடி திருத்துவோர்)
என அனைத்து தரப்பினரும் வாழ்ந்த ஆதாரம் உள்ளது.
[தஞ்சாவூர் - முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன்]

சோழர் காலத்தில் தீண்டாமை இருந்தது என்று கூறுவோர் 'தீண்டார் இந்த குளத்தைப் பயன்படுத்தக்கூடாது' என்று கூறும் கல்வெட்டை ஆதாரமாகக் காட்டுவார்.

இந்த தீண்டார் யாரென்றால் நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை செய்யும் மருத்துவர்.
அக்காலத்தில் அரசாங்கமே நடத்திய மருத்துவமனைகள் இருந்தன.
இதனை சோழ அரசகுடும்ப பெண்கள் நிர்வகித்து வந்தனர்.
அதில் மருத்துவராக இருந்தோர் இன்றைய நாவிதர் அல்லது அம்பட்டர் குடியினர்.

இன்றும் சாதிச்சான்றிதழில் மருத்துவர் என்று போடுவது நாவிதர்கள் வழக்கம்.
இந்த மருத்துவ சமுதாயமே 50 ஆண்டுகள் முன்புவரை மருத்துவம் பார்த்து வந்தனர்.
பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி இந்த சமுதாயப் பெண்களே.

இவர்களில் தீண்டுவான், தீண்டான் என இரு பிரிவுகள் உள்ளன.
அதாவது நோயாளிகளைத் தொட்டு மருத்துவம் செய்வோர் தீண்டுவார்.
தொற்றுநோய்கள் உள்ளிட்ட மோசமான நோய்களை (நோயாளியைத்) தொடாமலே சிகிச்சை அளிப்போர் தீண்டார்.
(தீண்டார் வேறு தீண்டப்படாதோர் வேறு.
தீண்டப்படாதோர் நோயாளிகள் மட்டுமே)
தீண்டா மருத்துவர் கோவில் குளத்தைப் பயன்படுத்த (கோயிலை அல்ல) தடை கூறும் கல்வெட்டே அது.

தீண்டாச்சேரி என்பது மருத்துவமனைப் பகுதியாக இருக்கவேண்டும்.

[தீண்டாச்சேரி அரசியல் - தென்காசி பாலசுப்பிரமணியன்]

இலக்கியங்களில் இழிசினர் பற்றி ஏற்கனவே விரிவான ஒரு பதிவு இட்டுள்ளேன்.
[இழிநல், இழிசினர், இழிபிறப்பினர் - வேட்டொலி]

வரலாற்றை வார்த்தைகளை திரித்து கதைபுனைந்து நம்மை நாமே தாழ்வாக நினைக்கவைத்து ஏமாற்றி வரும் வந்தேறிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

Monday, 19 June 2017

வாஞ்சிநாதன் கடிதம் - உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் கடிதம்
- உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் பையில் கிடைத்த அந்த கடிதத்தின் வரிகளை சற்று நிதானமாகப் படியுங்கள்

" ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள்.

ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்,
கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta "

இதிலே "அழியாத ஸனாதன தர்மத்தை" என்ற இடமும் "கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்ற இடமும் தவறாகப் பொருள்கொள்ளப் படுகின்றன.

'சனாதன' என்றால் 'நிலைத்த' என்று பொருள்.
சனாதன தர்மம் என்பதே இந்து மதத்தின் பழைய பெயர்.
அதாவது உண்மையான பெயர்.
இதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் 'அழியாத சனாதன' என்று வாஞ்சி எழுதியுள்ளார்.
ஒருவேளை இரண்டிற்கும் ஒரே பொருள் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதாவது பலர் 'நடுசென்டர்' என்று கூறுவது போல.
தவிர சனாதான தர்மத்தை ஆங்கிலேயர் மிதிப்பதாகக் கூறுகிறார்.
இது 'சாதி அமைப்பு' என்றால் ஆங்கிலேயர் சாதியமைப்பை ஒழிக்க எதாவது செய்திருக்கிறார்களா என்றால் ஆங்கிலேயர் சாதியொழிப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை.

இன்னொன்று 'கோமாமிசம் அதாவது மாட்டிறைச்சி தின்பது' பற்றிய திரிபு.
அதாவது மாட்டிறைச்சி தலித்துகளின் உணவாம் அதனால் பிராமணர்கள் வெறுக்கிறார்களாம்.
அதனால் அது சாதிவெறியின் வெளிப்பாடாம்.
உண்மை என்னவென்றால் தாய்க்கு அடுத்து நமக்கு பால் தருவது பசு.
அதனால் அதைக் கோமாதா என்று அழைத்து அதைக் கொல்வதை பிற்கால இந்துத்துவம் தடைசெய்தது.
(இந்துமத வேதங்களில் மாட்டிறைச்சி உண்பது ஊக்குவிக்கப் படுகிறது).
வெள்ளைக்காரர்கள் காலத்தில் 'மாட்டைக் கொல்லும் கூடங்கள்'  பல ஏற்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆங்கில கல்லூரிகளில் மாட்டிறைச்சியும் விஸ்கியும் உண்பது புகுத்தப்பட்டது.
பசுக்களைக் காப்பது ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கையாக அப்போது எண்ணப்பட்டது.
இதற்கு பல இயக்கங்களும் நடத்தப்பட்டன.

மூன்றாவது 'மிலேச்சன்' என்பது.
இது கீழ்சாதியைக் குறிக்குமாம்.
ஆனால் மிலேச்சன் அந்நியன், வெளிநாட்டவன் என்றே பொருள்படும்.
மிலேச்சன் என்று ஆங்கிலேயரை வாஞ்சி குறிப்பிட்டுள்ளது அந்நியன் என்ற பொருளில்தான்.
(சீவக சிந்தாமணி 2216)

நான்காவது 'பஞ்சமன்' எனும் சொல்.
நால்வர்ணத்திற்கும் கீழானோர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டு அது கீழ்சாதி பெயர் ஆனது என்கின்றனர்.
ஆனால் 'பஞ்சம்' எனும் சொல் 'ஐந்தாவது' என்றே பொருள்படும்.
வாஞ்சிநாதன் 'ஐந்தாம் ஜார்ஜ்' என்பதை 'ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதியுள்ளார்.
அதாவது 1911ல் இந்தியாவிற்கு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வருவதாக இருந்தபோது அவரைக் கொல்லப்போவதாக வாஞ்சிநாதன் கூறுகிறார்.

ஆக இந்துமத பற்றாளராக இந்துதேசப் பற்றாளராகவே அவர் அக்கொலையைச் செய்துள்ளார்.
தனது இந்து மதத்தைப் புகழும் அதே நேரத்தில் ஆங்கிலேயரின் மதத்தை அவர் திட்டவில்லை.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தையும் பழக்கவழக்கத்தையும் மட்டுமே திட்டியுள்ளார்.
ஆக அவரை பிற மதத்தை வெறுக்கும் மதவெறியர் என்றுகூட கூறமுடியாது.

அவரை சாதிவெறியர் என்று எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் பாருங்கள்.

வாஞ்சி வாழ்ந்த பகுதியான செங்கோட்டை மற்றும் குற்றாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956 வரை இருந்தது.
ஆஷ் திருநெல்வேலிக்கு சப்-கலெக்டர் மட்டுமே.
அவரது அதிகாரம் தென்காசி தாண்டி செல்லாது.
இருவரும் சந்தித்திருக்கவோ தனிப்பட்ட பகை இருந்திருக்கவோ வாய்ப்பில்லை.

ஆஷ் வாஞ்சிநாதன் பகுதியில் செய்த சில தலித் ஆதரவு செயல்பாடுகளாக கூறப்படுபவை கட்டுக்கதைகள் என்பதற்கு இதுவே சான்று.

சரி வாஞ்சிநாதனின் கடிதத்தில் கொலைமிரட்டல் விடுத்த பிறகும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தாரா?

ஆம் வந்தார்.
27.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் (George V) இந்தியா வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்தான் 'ஜன கன மன' எனும் இன்றைய ஹிந்திய தேசிய கீதம்.
(search எழுந்து நில் வெள்ளையனை வாழ்த்து வேட்டொலி)

வாஞ்சிநாதன் காணாப்பிணமாகி சாதிவெறியனாக வரலாற்றில் பதிவானதும்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்து தேசியகவி ஆனதும் எப்படி என்று புரிகிறதுதானே?!

சரி, தமிழ்தேசியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

அதாவது பார்ப்பனரை சாதிவெறியராக்குவது திராவிடம் தமிழருக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.

என்றால் இந்துமதப்பற்று ஹிந்தியர் ஊடுருவ வழிவகுக்காதா?

வாஞ்சிநாதன் காலகட்டத்தில் இந்திய விடுதலை உணர்வு இந்து மதப்பற்றுடன் கலந்திருந்தது.
அப்போதும் வெறிபிடித்த இந்துவாக அல்லாமல் ஒரு பற்றுள்ள இந்துவாக இருந்தது அத்தனை பெரிய குற்றமில்லை.

இன்று தமிழ்தேசியத்தின் காலம்.
இப்போது தமிழ் இனவுணர்வே  தேவை.
அவ்வுணர்வை சாதிவெறியாகத் திரிப்பது திராவிடத்தின் தலையாய வேலையாக உள்ளது.

இன்று தமிழ்தேசிய உணர்வாளனுக்கு முதலில் கிடைப்பது சாதிவெறியன் பட்டமே!

திரிப்புவேலைகளை புரிந்துகொள்ளத்தான் இந்த பதிவு.