Wednesday 29 June 2016

இறந்தபிறகும் ஆளும் தலைவன்

இறந்தபிறகும் ஆளும் தலைவன்

நாள்: 05-06-2216

உலகம் எதற்கு அஞ்சியதோ அது நடந்தேறிவிட்டது.
இதுவரை தன்னாட்சியுடன் இயங்கிவந்த xyz தீவுகள் ஆயுதவலிமையால் ttt நாட்டினரால் வலுக்கட்டாயமாக விழுங்கப்பட்டுவிட்டது.

நாளை ஒரு பொம்மை முதலமைச்சர் அங்கே பதவியேற்பார்.
எண்ணி இரண்டாண்டுகளில் தன் நாடு வளர்ச்சியின் உச்சத்தை அடைந்ததாக அறிக்கைவிடுவார்.

ஆக ஒரு நாட்டிற்குள் தீவிரவாதிகள் அடைக்கலமாகி பதுங்கிய காலம் போய்,
இன்று ஒரே நாடே தீவிரவாதிகளின் அடைக்கலத்திற்குள் சென்றுவிட்ட காலம் வந்துவிட்டது.

அவர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றால் அனைத்துலக சபை தாமே அழைத்து ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாகக் கூறியபோதும் மக்களாட்சிமுறைக்கு ஏன் திரும்பவில்லை?

அப்படி திரும்பினால் ஆயுதங்களை கீழே போடவேண்டும்.
அடக்கியாளும் தம் நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டு கையேந்த வேண்டும்.
அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க முடியாது.
இனவிடுதலை வழங்குவதாகக் கூறி தாம் உருவாக்கிய உலகளாவிய சந்தையில் தாம் தயாரித்த ஆயுதங்களை வணிகம் செய்யமுடியாது.
உலகின் மூலைமுடுக்கெல்லாம் நாடுகளைத் துண்டாடி தமது நிழலில் குட்டிகுட்டி தீவிரவாத நாடுகளை உருவாக்கிட முடியாது.
உலகம் முழுவதும் கடலில் வழிப்பறி, கடத்தல், கொலை, கொள்ளைகளில் ஈடுபட முடியாது.
அணு ஆயுத ஆய்வுகள் நடத்தமுடியாது.

அவர்கள் தீவிரவாதிகள் என்றால் ttt நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருக்கிறார்களே!
எந்த ஊடகமும் அங்கு சென்று சுற்றிபார்த்து செய்தி வெளியிடத் தடையில்லையே!
இராணுவ ஆட்சி மக்களாட்சியை விட சிறப்பாக அனைத்து துறைகளிலும் செயல்படுகிறதே!

ஆமாம். இதுதான் இந்த நூற்றாண்டின் நகைமுரண்.
ஆயுதத்தால் நடக்கும் ஆட்சிதான்.
ஆனால் கொடுங்கோலாட்சி இல்லை.
மக்களின் அடிப்படைத் தேவைகள் முதல் ஆடம்பரத் தேவைகள் வரை நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்குக் கிடைக்காதது சுதந்திரம் மட்டும்.
அங்கே தேர்தல் கூட நடக்கும்.
ஆனால் இரண்டு கட்சிகள்தான் நிற்கும்.
ஒன்று தீவிரவாதிகளின் கட்சி.
இதுதான் வெற்றி பெற்று அரசாளும்.
மற்றொன்று தீவிரத் தீவிரவாதிகளின் கட்சி.
இதுதான் எப்போதும் எதிர்கட்சி.
ஊடகம் முழுவதும் இவர்கள் கையில்தான்.
பிறகெப்படி மூன்றாவது ஒருவர் ஆட்சிக்கு வரமுடியும்.

அந்நாட்டு மக்களுக்கு எதுவுமே சொந்தமில்லை.
அரசுக்குதான் எல்லாமே சொந்தம்.
அரசு சொல்லும் வேலைக்குதான் போகவேண்டும்.
அரசு தரும் கல்வியைத் தான் பெறவேண்டும்.
தகவல்தொடர்பும் அரசின் கையிலேதான்.
ttt நாடு ஒரு திறந்தவெளிச் சிறை.
சிறையில் கைதிகளுக்கு இடமும் உணவும் கொடுத்து அதற்கான செலவுக்காக அவர்களை சிறைக்குள்ளேயே வேலை செய்யவைத்து வரும் வருமானத்தை அவர் விடுதலை அடையும்போது அவருக்கு கொடுக்கிற நடைமுறை.
இந்த திறந்தவெளிச் சிறையும் அதே போன்றதுதான்.
என்ன ஒரு வேறுபாடு, இங்கே கைதிகளுக்கு விடுதலை கிடையாது.
எனவே வருமானம் அவர்கள் கைக்கு வரவேவராது

ஆனாலும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் அங்கு செல்கின்றனரே!
ஒப்பந்தம் போடுகின்றரே! பேச்சுவார்த்தை நடத்துகின்றனரே!
ஒரு நாடு போல அவர்களை நடத்துகின்றனரே!

ஆம். அதற்குக் காரணம் தீவிரவாதிகள் ஆளும் அந்த ttt நாட்டில் இவர்களை விட மோசமான பலம்வாய்ந்த தீவிரத் தீவிரவாதிகள் இருப்பதுதான் காரணம்.
தற்போது நடக்கும் ஆட்சியை வேறுவழியின்றி அனைவரும் ஆதரிக்கின்றனர்.
இல்லையென்றால் தீவிரத் தீவிரவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள்.
அவர்கள் வந்தால் உலகையே வாரிச் சுருட்டி தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிடுவார்கள்.

உண்மையா?
15 கோடி மக்களை அடக்கியாளும் t-இராணுவத்தை விடவா பலம் வாய்ந்தவர்கள் அந்த tt- தீவிரவாதிகள்.

ஆம். உண்மையில் ஆளும் t- ராணுவத்தின் முதுகில் கத்தியை வைத்தபடி அவர்களை வழித்துவோர் இந்த tt படையினர்.

அதற்காக இவர்கள் பெரிய குழு என்று நினைக்கவேண்டாம்.
இவர்கள் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான்.

ஆனால் இவர்கள் பரவாத இடமே இல்லை.
ttt நாட்டு உளவுத்துறை இவர்கள்தான்.
இராணுவத்தில் கீழிருந்து மேல் வரை சரி பாதி இவர்களின் ஆட்கள்தான்.
இவர்களை மீறி ttt நாட்டினராலோ அல்லது அந்நாட்டின் t-இன மக்களாலோ எதுவுமே செய்யமுடியாது.
இவர்களுக்கு தனி கட்டுப்பாட்டுப் பகுதி உண்டு.
இவர்கள் எல்லைப் பகுதியையும் கடற்கரையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இங்கே t- இனமல்லாதோர் நுழையமுடியாது.
இனத்தூய்மையை கடைபிடிக்கும் மிக தீவிரமான இனவாதிகள்.
இவர்களிடம் தனி ராணுவம் உண்டு.
இவர்கள் இனவெறியை அறிய ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.
இவர்கள் தனி விமானத்தை எடுத்துக்கொண்டு தாய்லாந்து விபச்சார விடுதிகளுக்குச் செல்வார்கள்
அங்கேயும் மரபணு பரிசோதனை செய்து t-இனத்தவருடன்தான் உறவு வைத்துக்கொள்வார்கள்.
இவர்களின் வேலை t-இனத்தவரைப் பாதுகாப்பது.
அதாவது உலகின் ஒவ்வொரு t-யும் இவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
அவர்களது வீடு சொத்துக்கள் உடைமைகள் அனைத்தையும் நிர்வகிப்போர் இவர்களே.
இவர்களுக்கு உலகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் சொத்துக்களும் தொழிலும் உண்டு.
உலகின் ஏதோவொரு மூலையில் ஒரு கடையை வாங்குவார்கள்.
அங்கே ஒரு t-ஐ அனுப்பி அதை நடத்தச் சொல்வார்கள்.
அந்த t- மிகக் குறுகிய காலத்தில் அந்த வட்டாரத்திலேயே பெரிய ஆளாகிவிடுவார்.
அவருக்கு போட்டியாக இருக்கும் அனைவரும் ஒழிக்கப்படுவர்.
தடையாக இருக்கும் அனைவரும் கொல்லப்படுவர்.
பிறிகு அவரது நிழலில் உள்நாட்டு ஆட்கள் இனவாத அரசியல் கட்சி ஒன்று தொடங்குவார்கள்.
பிறகு சில tt- குழுவினர் வந்து இறங்குவார்கள்.
அவ்வளவுதான் மிக மிக குறுகிய காலத்தில் அவர்கள் தனி இராணுவமாகவும் எதிர்கட்சியாகவும் வளர்ந்து அந்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து இறுதியில் அந்நாட்டின் ஒரு பகுதியை தமது ஆளுமையில் கொண்டுவந்து நாட்டையே இரண்டாகப் பிரிப்பார்கள்.
சிறிதுகாலத்தில் மக்களைக் கசக்கிப் பிழிந்து பொருளாதாரத்தை விண்ணுக்கு உயர்த்துவார்கள்.
இறுதியாக அவர்கள் ttt நாட்டின் தலைமையில் மூன்றாம் உலகநாட்டு கூட்டமைப்பில் இணைந்து தாங்களும் ஒரு குட்டி ttt-நாடாக மாறுவார்கள்.
இப்போது தீவிரத் தீவிரவாதிகள் என்னசொன்னாலும் அவர்கள் கேட்பதில் வந்து முடியும்.
உலகமே இன்று t -இனத்தவரைப் பார்த்து நடுங்குகிறதென்றால் அது காரணமில்லாமல் இல்லை.
இதற்கு காரணம் tt குழு உலகின் 50% ஆயுத சந்தையைத் தன் கைகளில் வைத்துள்ளது.
ttt அரசு தன் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளின் ஒட்டுமொத்த வளத்தையும் தமது கைகளில் வைத்துள்ளது.
  tt குழுவிற்கும் ttt நாட்டு அரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இவர்களின் பிறப்பிடமும் ஒன்றுதான்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றியிருந்த இனங்களால் நாலாபுறமும் மிக மோசமான ஒடுக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் ஆளானது t- இனம்.

இந்த நேரத்தில் தோன்றியவர்தான் இன்றும் இவ்வினத்தின் தலைவராக மதிக்கப்படும் abcd.

இவர் வரலாறு மிக மிக விறுவிறுப்பான ஒன்று.
இவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது இளவயதில் இவருக்குமுன் t-தாய்நிலத்தின் ஒரு பகுதியில் t-மக்களை திரட்டி ஆயுதம் தாங்கி pqrs என்பவர் போராடிய போராட்டம் தோல்வியில் முடிந்து இனப்படுகொலை நடந்தேறியது.
இதைக் கண்டு மனம் கொதித்த t இளைஞர்களில் abcd யும் ஒருவர்.
பிறகு இவர் ஒரு இளைஞர் குழு ஆயுதம் தாங்கி போராட வேண்டி உதவிகள் செய்தார்.
அதற்கு பணம் திரட்ட சட்டத்திற்கு புறம்பான பல செயல்களைச் செய்தார்.
இதன்மூலம் இவரைச் சுற்றி ஒரு கூட்டம் உருவானது.
இவர் உதவி வந்த குழுவும் இறுதியில் இவரையே தலைமையாக ஏற்றது.
இந்த குழுதான் ஆயுதவழியில் விடுதலைப் போராட்டத்தில் இறங்கி t-தாய்நிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதுதான் இன்று t-நாட்டு அரசாங்கம் மற்றும் ராணுவம்.
எந்த கொள்கையும் இல்லாத abcdன் கொள்ளைக்கூட்டமும் ஆயுதத் தாக்குதலில் இறங்கி குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதுதான் இன்றைய tt ஆயுதக்குழு, எதிர்கட்சி மற்றும் t-உளவுத்துறை.
இவ்விருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதாவிட்டாலும் t-இனத்தவர் மீதான ஆதிக்கத்திற்கான போட்டியில் எதிரெதிர் அணியில் உள்ளனர்.
  காலப்போக்கில் t ராணுவம் உள்நாட்டு ஆதிக்கத்தையும்
tt குழு வெளிநாட்டு ஆதிக்கத்தையும் கைப்பற்றின.

ஆனாலும் ஒரு அரசால் வெள்ளப்படையாகத் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை உளவுத்துறை தீர்ப்பது போல tt குழுதான் t-இனத்தையே உலகம் முழுவதும் காப்பாற்றிவருகிறது.

அதற்காக t-படையும் சளைத்ததென்று கூறமுடியாது.
விடுதலைப் போராட்டத்தில் தன் தாய்நிலம் தாண்டி அண்டை இனத்து நிலத்தை ஆக்கிரமித்தது.
தன் கட்டுப்பாட்டுப் பகுதியின் வேற்றினத்தவரை வெளியேற்றியது.
வலிமை குன்றிய அண்டை இனங்களை ஆக்கிரமித்து, தமது மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு மூலமும்,
குடியேற்றம் மூலமும்,
தமக்கான தனி மதத்தை நிறுவி அதற்கு மதம் மாற்றியது மூலமும்,
அவர்களது அடையாளத்தை அழித்து தமது இனமாக மாற்றியது.
தமது நாட்டை ஒட்டிய தீவுகளை ஆக்கிரமித்தது.
தமது அண்டை நாட்டு இனங்களை போருக்கு தூண்டுவது.
tt குழு மூலம் ஆயுதம் அனுப்புவது.
நாடுகளைத் துண்டாடுவது.
தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என இனவெறி கருத்தியலின் அத்தனை அம்சங்களையும் திறம்பட செய்கிறது t-அரசு.

பலரும் இவ்விரு குழுக்களும் வெவ்வேறு சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தோர் இணைந்து உருவானதைப் பெருமையாகக் கூறுவர்.
உண்மையில் பலரும் அறியாத ஒன்று இவ்விரு குழுக்களுமே ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது.

t ராணுவமும் சரி tt குழுவும் சரி 95% தலைவர் abcd பிறந்த பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

t அரசின் அரசியல்பதவிகளில், ராணுவப் பொறுப்புகளில், உளவுத் துறையில், காவல்துறையில் என 90% க்கு மேல் இருப்பவர்கள் அந்த குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

t-மொழியில் மேற்கண்ட வட்டார வழக்கு பெருமையாகக் கருதப்பட்டு இன்று t-நாடு முழுவதும் அந்த வட்டார வழக்கில்தான் t-மொழியே பேசப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதாவது இன்று t-நாடு போகும் வழியை வகுத்தவர் abcd.

t- இனத்தின் தலைமை இரண்டாக பிரிந்து செயல்படுவதும் அவரது யோசனைதான்.

விடுதலைப் போராட்டம் நடந்த போது  t-ராணுவத்திற்கு ஒரு பொம்மைத் தலைவரை நியமித்துவிட்டு அவரேதான் இரண்டு குழு மூலமும் போரிட்டார்.

இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

t-நாடு இன்று செய்யும் அத்தனை நடவடிக்கைகளும் 200 ஆண்டுகளுக்கு முன்பே abcd மூலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டன.

அவரது எழுத்துகளைப் படித்து இதன்பிறகு t-இனம் எதை நோக்கி நகரும் என்று எளிதாகக் கூறிவிடலாம்.
கூறவா?
அவர்கள் தமது கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து செயற்கைக்கோள் ஏவவுள்ளனர்.

இது உலகத் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
தெரிந்தும் அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை.

abcd இறந்த பிறகும் t-நாட்டை தொடர்ந்து ஆள்கிறார்.
விரைவில் அவர் உலகையே ஆளலாம்.

No comments:

Post a Comment