Friday 17 June 2016

வீரப்பனார் ஆரம்ப நாட்கள்

வீரப்பன்டா...எங்க வீரப்பன்டா....


கர்நாடகா ஆக்கிரமித்துள்ள தமிழ்நாட்டில் உள்ள வீரப்பன் அவர்கள் பிறந்த கோபிநத்தம் சுற்றூரை நோக்கி வனத்துறையினர் ஜீப் ஒன்று போய்க்கொண்டிருந்தது.

கன்னடத்தில் தமக்குள் பேசிக்கொண்டிருந்த அந்த வனத்துறை அதிகாரிகள்  இன்று எப்படியும் வீரப்பனை பிடித்துவிடவேண்டும் அல்லது எப்படியும் தானாக காட்டைவிட்டு வெளிவரச் செய்யவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

வண்டி அந்தத் தமிழ்ப் பேசும் சிற்றூரில் வீரப்பனின் வீட்டின் முன்னாள் போய் நின்றது.
உள்ளே புகுந்த வனத்துறையினர்.
வீரப்பனின் அண்ணன் மாதையன் மற்றும் தம்பி அர்ச்சுனனையும் சூழ்ந்துகொண்டு கன்னடத்தில் மிரட்டத் தொடங்கினர்.

மாதையன் ஏற்கனவே அறுவைசிகிச்சை நடந்து ஓய்வில் இருப்பவர்.
துப்பாக்கிகளால் மிரட்டியும் அவர்கள் வாய்திறக்கவில்லை.
இருவரும் வண்டியில் ஏறுமாறு கட்டளை பிறப்பித்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அர்ச்சுணன் அங்கிருந்துத் தப்பித்து ஓட ஆரம்பித்தார்.
வந்திருந்தவர்களில் சிலர் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினர்.

மாதையனை கைது செய்து வண்டியில் ஏற்றவும் அங்கே இருந்த அக்கம்பக்கத்தினர் அவர் மீது இரக்கப்பட்டு வனத்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கன்னடத்தில் கெட்டவார்த்தையில் திட்டியபடி வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த மேலும் ஐந்துபேரையும் துப்பாக்கி முனையில் வண்டியில் ஏற்றிக் கொண்டு காட்டின் நடுவில் இருக்கும் வனத்துறை பங்களாவில் சித்திரவதைக்கென்று ஒதுக்கப்பட்ட அறைகளில் தள்ளிக் கட்டிப் போட்டனர்.

ஏற்கனவே குடலில் அறுவைசிகிச்சை நடந்திருந்த மாதையனையும் வேறு ஐந்து தமிழரையும் சோறு தண்ணியில்லாமல் பட்டினிபோட்டு நாள்கணக்கில் அடித்து உதைத்தனர்.

இதைக் கேள்விப்பட்ட சிற்றூர் மக்கள் சில மனித உரிமை அமைப்பினர் மூலம் வழக்குபோட்டு அவர்களை வெளிக்கொண்டு வந்தனர்.

ஆனாலும் பொய்வழக்கு சுமத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப்பட்டனர்.

அர்ச்சுனன் என்ன ஆனார்?!

வீரப்பனார் காட்டுக்குள்ளே ஒரு உயரமான பாறை மீது தமது ஆசான் குழந்தை என்பவருடன் நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.

தூரத்தில் தமது தம்பி அர்ச்சுணன் வெறிபிடித்த யானையால் துரத்தப்பட உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிவருவதைக் கண்டார்.

தமது துப்பாக்கியைத் தோளில் வைத்துக் குறிபார்த்தார்.
குறிதவறாமல் சுடுவதில் ஒப்பற்றவரான வீரப்பன் அவர்கள் ஒரே சூட்டில் யானையை வீழ்த்தினார்.

யானை வீழ்வதைப் பார்த்த அர்ச்சுணன் தூரத்தில் தோளில் புகை கக்கும் துப்பாக்கியுடன் பாறைமீது கம்பீரமாக நிற்கும் அண்ணனைக் கண்டு ஓடிப்போய் அணைத்துக் கொண்டார்.

பிறகு வீரப்பனாரிடம் "ஏண்ணே அந்த யானய சுட்ட? வனத்துற ஆளுக துரத்திட்டு  வந்தானுக இந்த யானதான் என்ன அவங்ககிட்ட இருந்து காப்பாத்துச்சு அதப்போய் கொன்னுட்டியே?" என்று கேட்கிறார்.

இதன் மூலம் காட்டில் காலங்காலமாக வேட்டையாடும் மக்கள் அந்த விலங்குகள் மீது வைத்திருக்கும் நேயத்தையும் வனத்துறையினர் மீது வைத்திருக்கும் வெறுப்பையும் தெரிந்துகொள்ளலாம்.  

(26 மே 2013 அன்று முகநூலிலிட்டது)

No comments:

Post a Comment