Friday 18 July 2014

என் கைதொட்ட வாள்

என் கைதொட்ட வாள்
******************
என் பெயரே வெல்லும்
என் முகமோ கொல்லும்
எனக்காக விதிகள் மாற்றப்படும்
எனக்காக வரலாறு திருத்தப்படும்
என்னை நினைத்த நெஞ்சு நிமிரும்
என்னை அடித்த கை முறியும்
எனக்கு இடப்பட்ட விலங்குகள் தூளாகும்
எனக்கு எதிர்நிற்கும் தலைகள் துண்டாகும்
என் கால்பட்ட மண் அனல்தகிக்கும்
என் கைதொட்ட வாள் பிறவிப்பயனடையும்
என் மூச்சுக்காற்று குருதிவாடை கொட்டும்
என் பேச்சுக்குரல் அதிர்வேட்டு முழங்கும்
என் எதிரியின் கால்கள் ஓயாது ஓடும்
என் படையின் கால்கள் நில்லாது முன்னேறும்
என் கதை சொல்லும் பக்கங்கள் கனல் கக்கும்
என் கல்லறை பார்க்கும் கண்கள் மூடி வணங்கும்
என்னை அறிந்தவனை நெருப்புவளையம் சூழும்
என்னைப் பழித்தவனை சாவு நெருங்கும்
என்னை உச்சரிப்பவன் நாக்கு அழுத்தி உச்சரிக்கும்
என்னைத் தூற்றியவன் குலை பதறி நடுநடுங்கும்
என் வீரத்தை மட்டுமே பேசும் வருங்காலம்
என் வன்மையை மட்டுமே பேசும் வையகம்
என் உருவம் எங்கும் பேயாய் நிழலாடும்
என் பெருமை எண்திசையும் தீயாய் பரவும்
என் உயிர் பல கூடுகள் பாய்ந்திருக்கும்
என் தோட்டாக்கள் பல பிணங்களில் புதைந்திருக்கும்
நான் குடித்த உயிர்கள் எண்ணப்படும்
நான் பிறந்த மண் நெற்றியில் பூசப்படும்
என் சிந்தனைக்கானத் தடைகள் தகர்க்கப்படும்
எனக்கான புராணங்கள் எழுதப்படும்
நான் உதிர்த்த சொற்கள் உலகை நெறிப்படுத்தும்
நான் படைத்த கவிதை மனதை வெறிப்படுத்தும்
என் காலடிச்சத்தத்தில் நிலம் என்றென்றும்
அதிர்ந்துகொண்டேயிருக்கும்
என் விரல்சொடுக்கு என்றென்றும் வானத்தில்
இடியிடித்துக்கொண்டேயிருக்கும்.
https://m.facebook.com/photo.php?fbid=427537070683285&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment