Wednesday 25 November 2015

நாயக்கர் காலத்தில் தமிழ்

நாயக்கர் காலத்தில் தமிழ்

'சந்தியிலே மாமியிட்ட சண்டையிலே வந்ததொரு
தொந்தி வடுகன் சுகிப்பானோ'

என்று (சுப்பிரதீபக்)கவிராயர் கிண்டல் செய்யும் வடுகன் யாரென்று தெரியுமா?

அவ்வடுகன் திருமலை நாயக்கனே (1572-1596) ஆவான்.

தமிழில் புலமை மிகுந்த ஒரு புலவரான கவிராயர் 'திருமலை நாயக்கன் காதல்' என்ற நூல் இயற்றி அரசவையில் அரங்கேற்றும்போது,

திருமலை நாயக்கன் "அரவன் அத்துவானம்" என்று தெலுங்கில் பொங்கிவிட்டானாம்.
அரவம்=தமிழ்
அத்துவானம்=மோசம்

அதாவது தமிழ் கேட்கசகியாத மொழியாம்.

கடுப்பான கவிராயர் அவையைவிட்டு வெளியேறி,
அதே நூலை 'கூளப்ப நாயக்கன் காதல்' என்று ஆக்கி கூளப்ப நாயக்கன் என்ற பாளையகக்காரன் மீது பாடி அரங்கேற்றினார்.

அதிலேதான் திருமலை நாயக்கனையும் அவனது பெரிய தொப்பையையும் கிண்டலடித்து எழுதியுள்ளார்.

'அந்தகனே நாயகனானால் செந்திருவைப் போலங்கைச்
சிங்காரித்தென்ன பயன்'
(த.தி.காசு; மி: ப.197)

'மன்னனே (தமிழ் அறியாத) நாயக்கனாக இருக்கும்போது அழகு நடையில் கவிபாடி என்ன பயன்' என்று இதற்கு பொருள்.

'செஞ்சிதஞ்சை மதுரை மைசூர் மாறுபாஷை
செந்தமிழன் திறமறிந்து செய்யமாட்டார்'
(மான்விடுதூது இணைப்பு)

அதாவது செஞ்சி நாயக்க மன்னனாலும் சரி
தஞ்சாவூர் நாயக்க மன்னனாலும் சரி
மதுரை நாயக்க மன்னனாலும் சரி
மைசூர் நாயக்க மன்னனாலும் சரி
தமிழின் அருமை தெரிந்து சிறப்பு செய்யமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வேற்றினத்தவர் என்பது பொருள்.

'கனத்த சிராப்பள்ளிதனிலே வடுகர் கூத்துக் கட்டி யாளுவதாச்சு'
(த.தி.காசு.பதி.மி:ப.12)
என்று திருச்சிராப்பள்ளியில் அரச ஆதரவுடன் கொலாகலமாக நடக்கும் வடுகர் கூத்துநாடகங்களை நொந்துகொள்கிறார் படிக்காசுப்புலவர்.

அவரே வள்ளல் சீதக்காதி இறந்தபோது,
'தமிழ்நாவலரை ஓட்டாண்டி ஆக்கிவிட்டு இறந்துபோனான்'
(முற்குறிப்புப் பாடல்கள் 8)
என்று வருந்துகிறார்.

திருக்காளத்தி நாதருலா, திருக்கழுக்குன்ற உலா, திருமலையாண்டவர் குறவஞ்சி, கமலாலய அம்மன் பள்ளு ஆகிய நாயக்கர் கால சிற்றிலக்கியங்கள் சோழனையும் பாண்டியனையும் ஒருசேரப் புகழ்கின்றன.
திருவிளையாடற் புராணமோ மதுரையை ஆளும் தகுதி பாண்டியருக்கே உண்டு என வெளிப்படையாக கூறுகிறது.

நாயக்கர்கால தமிழ் படைப்புகள் அனைத்துமே நாயக்கர்களைப் புகழாது பாண்டிய சோழ மன்னர்களைப் புகழ்வதோடு நாயக்கர்கள் தீவிரமாக ஆதரித்த வைணவத்துக்கு எதிராக சைவத்தை வலியுறுத்துகின்றன.

நாயக்கராட்சியில் தமிழுக்கு மதிப்பில்லாமல் போனது,
தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பெருங்காப்பியங்கள் எழுந்தன.
தமிழைக் கேட்பார் யாருமில்லை.
ஆனாலும் தமிழ் புலவர்கள் சோர்ந்துவிடவில்லை.
சிற்றிலக்கியங்களை இயற்றி சிற்றறரசர்கள், பாளையக்காரர்கள், சைவ பற்றாளர்கள் ஆதரவுடன் பொருள் தட்டுப்பாட்டையும் மீறி தமிழை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

இன்றும் கூட அதே நிலைதான்.
தமிழுக்கு ஆட்சியதிகாரம் இன்றுவரை கிடைக்கவில்லை.
தமிழுணர்வாளர்களின் தனிமனித முயற்சியால் மட்டுமே அது பிழைத்துவருகிறது.

4 comments:

  1. தொடர்ந்து தமிழுக்காக, தமிழர்க்காக போராடுவோம்!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. த தி காசு என்றால் என்ன ஐயா/அம்மா?

    ReplyDelete