Monday 23 November 2015

நவீன தீண்டாமை

நவீன தீண்டாமை

குளிரூட்டப்பட்ட தூய்மையான கண்ணாடிக் கூண்டு போன்ற அறையில் அலுவல் புரிகிறேன்.

என் கண்காணிப்பில் இயந்திர பாகங்களைக் கழற்றிமாட்டும் பொருத்துனர் ஒரு கையொப்பம் பெற அறையினுள் நுழைகிறார்.

வியர்வை நாற்றமும் எண்ணெய் நாற்றமும் அங்கே பரவுகிறது.
உயவு களிம்பால் கறைபடிந்த அவர் கைகள் எதையும் தொட முடியாது.
வயதில் குறைந்த மேலதிகாரியான என் முன் அவர் அமரமுடியாது.

மேலதிகாரிகளின் இருக்கையையோ, தண்ணீர் பாத்திரத்தையோ அவர் தொடமுடியாது.
உயர் அதிகாரிகள் வருகையின் போது அவர் ஓடி ஒளியப்பார்ப்பார்.
நல்ல உடைகள் அணிந்து வந்தாலும் அவர் முகமே உழைப்பாளி என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்.
உயர்மட்ட அதிகாரிகள் அமரும் அலுவல் கூடங்களில் நுழைய அவர் கால்கள் கூசும்.

உயரதிகாரிகள் பேசும் ஆங்கிலம் கலந்த மொழி அவருக்குப் புரியாது.
பதவியைக் குறிக்கும் அடையாளங்களை அவர் அணியமுடியாது.
அவர் அமர்ந்து உண்ணும் மேசையில் உயரதிகாரிகள் அமரமாட்டார்கள் தனியாகத்தான் அமர்வார்கள்.

உயரதிகாரி கூறுவது தவறே ஆனாலும் கேட்கத்தான் வேண்டும்.
உயரதிகாரியின் முன்னே புகைக்கமுடியாது
அவர் வரும்போது வணக்கமும் செலுத்தவேண்டும்.

உயரதிகாரிகளுக்கு நிறுவனம் வழங்கும் பரிசுகள், பயண ஏற்பாடுகள், விருந்துகள் போன்ற வசதிகள் அவருக்குக் கிடைக்காது.

அவரது மகன் பெரிய படிப்பு கிடைத்து உயரதிகாரியாவது மிகவும் கடினம்.
அவரது அடுத்த தலைமுறையும் இவரைப்போல ஒரு தொழிலாளியாகவே பெரும்பாலும் ஆகும்.

அவரால் மேலதிகாரிகளின் பிள்ளைகள் படிக்கும் கல்விக்கூடத்தில் தன் பிள்ளைகளைப் படிக்கவைக்க இயலாது.
உயரதிகாரிகளின் பிள்ளைகளைப் போல தரமான உணவு கொடுத்து நல்ல ஆடைகள் அணிவித்து தோற்றப்பொலிவுடன் தன் பிள்ளைகளை அவரால் வளர்க்க இயலாது.

அவரால் உயரதிகாரிகளின் குடும்பத்துடன் திருமணத் தொடர்பு வைத்துக்கொள்ளமுடியாது.

அந்த பொருத்துனர் எந்த ஜாதியில் பிறந்தவரானாலும் நிறுவனத்திற்குள் தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர்தான்.

ஆக தொழிலினால், அது சார்ந்த பொருளாதாரத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை களைவது என்பது
சமூகசீர்திருத்தத்தையும் அரசியலையும் பல மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் செய்யமுடியும்.
அதற்கு பரந்து விரிந்த தொலைநோக்குப் பார்வையும் வேண்டும்.

4000 ஆண்டுகள் முன்பு எங்கோ கைபர் கணவாய் வழியாக ஒரு கூட்டம் வந்ததாம்.
அவர்கள் ஒரு நூல் எழுதினார்களாம் உடனே சாதி ஏற்றத்தாழ்வு தோன்றி அனைவரும் அக்கூட்டத்திற்கு அடிமையாகிவிட்டனராம்.

முட்டாள்த்தனமான இந்த 'ஆரியக் கருத்தியல்'தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று கூறுவோரிடம் நான் விவாதிக்க ஏதுமில்லை.

1 comment:

  1. நீங்கள் சொல்வது உண்மை. என் அலுவலகத்தில்(IBM India) இதற்கு எதிராக போராடி வேலை விட்டும் வெளியே வந்தேன்.

    ReplyDelete