Friday 27 November 2015

திருந்தாத பிறவிகளுடன் ஏன் மோதவேண்டும்?

""திருந்தாத பிறவிகளுடன்
ஏன் மோதவேண்டும்?""

டடடடடடடடடடடடடடடடடடடட டடடடடடடடடடடடடடட

நான் கண்ட கழிசடைப் புத்தகங்களை படிப்பது கிடையாது.
இருந்தாலும், என் கெட்டநேரம் இன்று ஒரு பழைய குக்குமம் புத்தகம்(?!) படிக்க நேர்ந்தது.

முகப்புப் பக்கத்திலேயே 'சூப்பரா மாறுது ரஜினி ஸ்கூல்' என்று போட்டிருந்தது.
தமிழ்ப்புத்தகமே கிடைக்காத பாலைவனத்தில் குப்பைகொட்டவைத்த என் விதியை நொந்தபடி அதைப் படித்துத் தொலைத்தேன்.

அதற்குமுன் ஓர் எச்சரிக்கை!
இது ஏதோ ரசினிகாந்து பற்றிய பதிவு என்று நினைப்பவர்கள் என்னை மன்னித்துவிட்டு ஒழிந்துபோய்விடுங்கள்.
இது ஒரு அரசியல் பதிவு.

கதைக்கு வருவோம். அந்தக் குங்குமத்தில் பெங்களூர் (நம்ம தமிழ்நாட்டிடமிருந்து கன்னடவர் பிடுங்கிக் கொண்ட வெங்கலூர்தான்) அருகே கவிபுரம் (கர்நாடகாவில் தமிழ்ப்பெயர்??) என்ற இடத்தில் ரசினி ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளி இருக்கிறது.
அதை "கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி(!!!!!!!)" தலைவர் 'ரசினி'முருகன் பலரிடம் மனு கொடுத்து, பலரைத் திரட்டிப் போராடி, மனிதவுரிமை ஆணையம் வரை சென்று அப்பள்ளியைப் புதுப்பிக்க வழிஏற்படுத்தியுள்ளார்
(தமிழன் என்பதை நிறுவு நிறுவு என்று நிறுவிவிட்டார்).

கர்நாடக அரசாங்கமும் ரசினி படித்த பள்ளி என்றதும் வாயைப்பிளந்து சென்னை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சமமான தரமான கட்டிடம் (படத்தில் மாதிரி வடிவம் பார்க்க) கட்டித்தரவுள்ளது.

இதில் ரசினி உட்கார்ந்து படித்த வகுப்பறை 'ரசினி நினைவரங்கமாக' மாற்றப்படவுள்ளதாம்.
இதற்கும் ரசினிக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது,
இதை ஆதரிக்கும் வகையில் வாழ்த்து கூட தெரிவித்ததாக செய்தியில்லை.
நன்கொடை வழங்கவேண்டிவருமே என்று விட்டிருக்கலாம்.

சரி இந்தக் கோமாளித்தனத்தை இப்போதெதற்கு கூறினேன் என்றால்,
'எவ்வளவு முட்டாள்தனமான கொள்கைகளைக் கொண்டவர்களும் அதை தக்கவைக்க உருப்படியான சில நல்லதுகள் செய்வார்கள்'
என்று எடுத்துக்காட்டத்தான்.

இந்தப் பள்ளியைப் புதுப்பிப்பதன் மூலம் ரசினி ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடலாம்,
ஆனால் அவர்கள் கொள்கை சரியென்றாகுமா என்றால் ஆகாதுதானே?!.

  இவர்களைப் போல ஒரு குறிப்பிட்ட கொள்கையில் ஊறிப்போனவர்களை என்னதான் வாதம் செய்தாலும் திருத்தவே முடியாது.

அவர்களுக்கே அது தவறென்று பட்டாலும் எப்படியாவது தமது கொள்கை  சரியென்றே தன்மனதை நம்பவைத்துவிடுவார்கள்.
ஏனென்றால் அது அவர்கள் குருதியில் ஊறிவிட்டது.
அவர்களுக்கு அக்கொள்கை மூலம் நன்மை கிடைத்திருக்கலாம்,
அவர்கள் குடும்பத்தவர்கள் அக்கொள்கையால் பயனடைந்திருக்கலாம்,
அவர்கள் மதிக்கும் நபர்கள் அந்தக் கொள்கையாளராக இருக்கலாம்,
அவர்கள் பலவருடங்களாக அதையே சரி என்று நம்பிவந்திருக்கலாம்.

திடீரென்று அந்தக் கொள்கையை ஒருவர் தவறு என்று ஆதாரத்தோடு நிறுவிக்காட்டியதும் அவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்றால் மாட்டார்கள்.
ஏன்? அதை ஒப்புக்கொண்டால் தனது கொள்கை தவறு என்றாகி அதை இத்தனை நாள் நம்பிய தானும் முட்டாள் என்று ஒத்துக்கொள்ளவேண்டிவரும்.

அத்தனை மனத்துணிச்சல் யாருக்கும் கிடையாது.

தான் கொண்ட கொள்கை தவறென்று தெரிந்ததும் அதை ஆராய்ந்து தூக்கியெறிய அசாத்தியத் துணிச்சல் வேண்டும்.

தலித்தியம், சாதியம், இந்துத்துவம், இசுலாமியம், கிறித்துவம், இந்தியம், திராவிடம், ஆரியம் என்ற ஆயிரத்தெட்டு கொள்கைகளும் அதை வெறியாக ஏற்றுக்கொண்டு தவறாகப் பயன்படுத்துபவர்களுடன் ஒரு தமிழ்த்தேசியவாதியாக கருத்துரீதியாக மோதியிருக்கிறேன்.

என்னதான் ஆதாரங்கள், மேற்கோள்களுடன் தோற்கடித்தாலும் அவர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
ஏன் என்றால் அவர்கள் குருதியில் ஊறி வெறியாக மாறிவிட்ட கருத்துக்கள் அவர்கள் சாகும்வரை கூடவே இருக்கும்.

'அவனுகளத் திருத்தமுடியாது, ஏன் வீணா சண்டபோடுற' என்று என் நண்பர்கள் கேட்கிறார்கள்.

அதற்கு பதில் இதுதான்,
அவர்களைத் திருத்துவது நோக்கமில்லை,
ஆனால் இந்த வாதத்தைப் பார்க்கிறவனுக்கு தமிழ்த்தேசியத்தின் முன் மற்ற கொள்கைகள் எப்படி நிற்கமுடியாமல் தடுமாறுகின்றன என்று புரியவேண்டும்.
புதிதாக ஒரு கொள்கையைத் தேடுபவர்கள் நம்பக்கம் வரவேண்டும்.

அந்த அந்தக் கொள்கையில் ஊறிப்போனவர்கள் தம்மை பின்தொடர யாருமில்லாதபோது தானே மடிந்துபோவார்கள்.
அத்தோடு அந்தக் கொள்கைகளும் மடிந்துவிடும்.

இந்த ஒரு காரணத்துக்காகத்தான் அவர்களோடு மோதுகிறேன்.

திருத்தமுடியாதவர்களோடு நாம் தொடர்ந்து மோதினால்தான் அவரைப் பின்தொடர நினைப்போரை நாம் இழுத்துக்கொள்ள முடியும்.
அதுதான் அவர்களின் தோல்விக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment