Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, 22 June 2025

அன்றைய காதல்

அன்றைய காதல்  

 அந்த பெரிய வீட்டில் அந்த பகுதியில் அதிகம் வாழும் ஒரு சமூகத்தின் பெரியவர்கள் கூடியிருந்தார்கள்.
 வீட்டின் பின்புறம் இருந்த வெற்றிடத்தில் அசைவ உணவு ஆக்கிக் கொண்டிருந்தது அங்கு வீசிய நறுமணத்திலிருந்து தெரிந்தது.
 நாலு பேர் நாலு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 வீட்டின் பின்பக்கம் பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
 அந்த வீட்டின் பெரியவர் கூடத்தில் நடுவே அமர்ந்திருந்தார் அவரை சுற்றி பெரியவர்கள் அமர்ந்து அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
  அவர் அவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கியது போல மௌனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
 அப்போது பின் கட்டில் இருந்து அவரின் மனைவி கூடத்தின் வாசலுக்கு வந்து "என்னங்க..!" என்று அழைத்தார்.
  இவரும் போனார்.
 "என்னங்க அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்! இவ தான் வார்த்தையை விட்டிருக்கா! அதனாலதான் மாப்பிள்ளை கையை நீட்டிட்டார்!
 அவர் ஏடாகூடமான ஆள்!
 நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க!" என்று கூறினார்.
  பெரியவர் கோபத்துடன் "அதுக்குன்னு இப்படி போட்டு அடிக்கலாமா?" என்று கேட்கவும் அங்கே வந்த இவர்களது இளைய மகன் "அவன் இன்னைக்கு வரட்டும்! ஒழுங்கா மன்னிப்பு கேட்கலைனா இங்கேயே அவனை வகுந்திடுவேன்" என்று கூறினான்!
 அந்த அம்மாளோ "கூறுகெட்டவனே! உனக்கு ஒன்னும் தெரியாது! நீ பேசாம இரு! அவர ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது! மீறி வாயத் தொறந்தே இனி வீட்டுக்குள்ள வரக்கூடாது" என்று சொன்னாள்.
 இதையெல்லாம் அங்கே ஓரமாக அமர்ந்திருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 அந்த இளைஞன் அவளருகே போனான் "அக்கா அவன் உனக்கு சரிப்பட மாட்டான்! அவன் வந்ததும் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு தாலிய கழட்டி எறிஞ்சிடு! எதாவது பண்ணுனான்னா நா பாத்துக்கிடுறேன்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வெளியே போனான்.
 அவள் எதுவும் பேசாமல் வாயை இருக்க மூடியபடி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
 அவளது தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 அவளுடைய அம்மா அருகே போனாள்.
 "ஏம்மா அத்துவிடுறதுன்னே முடிவு பண்ணிட்டியா கடைசிய ஒரு தடவ யோசிச்சு பாரேன்!" என்று கூறினாள்.
 அந்த பெண் எதுவும் பேசவில்லை!
"சரிம்மா! கோவம் மட்டும் படாத! மீதிய அப்பா பாத்துக்குவாரு!"
 இப்போது கூடத்துக்கு வந்த பெரியவர் அங்கிருந்த பெரியோர்களைப் பார்த்து "அவங்க வீட்டிலிருந்து யார்லாம் வாராங்கன்னு தெரியல! அவங்க கொஞ்சம் ஏறுமாறா பேசினாலும் நீங்க பொறுமையா பேசுங்க! பொண்ணு பிள்ள விசயம்! அத்துவிடுறதுனாலும் முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்க பாருங்க!" என்று சொன்னார்.
"சரிப்பா! அன்னைக்கு அவங்க வீட்டுக்கு சமாதானம்  பேசப் போனப்ப என்ன பேச்சு பேசுனாங்க! பரவால்லப்பா! எங்களுக்கு என்ன?! முடிவு உன்னோடது தான்! நாங்க ஒரு ஆதரவுக்காக தான் வந்தோம்! நீ பேசு! நாங்க இடைல எதுவும் பேசலை!" என்று சொன்னார்கள்.
 தூரத்தில் மோட்டார் பைக் வரும் சத்தம் கேட்டது.
 அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண் பரபரத்தாள்!
 எழுந்து வாசலைப் பார்த்தாள்.
 ஆம் அது அவன்தான்!
 அந்த பெண் பின்வாங்கி ஓரமாக நின்றுகொண்டாள்.
 அவன் ஒற்றை ஆளாக வந்திருந்தான்!
நிதானமாக குடித்து இருந்தான்!
 அதனால் அதிகம் தள்ளாடாமல் நடந்தான்!
 சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டே அவர்களையெல்லாம் கடந்து நடுக்கூடத்திற்கு போனான்.
 நட்ட நடு கூடத்தில் நின்று கொண்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தான்.
"சாந்தி! ஏ.. சாந்தி!" 
அந்தப் பெண் மெதுவாக மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.
 அவளைப் பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு குறுநகை தென்பட்டது.
 "வா! நம்ம வீட்டுக்கு போலாம்" என்று சொன்னான்.
 அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
 "என் சந்தனமில்ல! வா வீட்டுக்கு போலாம்! வா! வா! வா!" என்று அவன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.
 அந்தப் பெண் மெதுவாக நடந்து வந்து அவனுடைய கையில் தன்னுடைய கையை வைத்தாள்.
 அவன் திரும்பி புறப்பட எத்தனித்தான்.
 அவள் நகரவில்லை!
 அவன் திரும்பி அவளைப் பார்த்தான்!
அவள் அவளுடைய தந்தையை ஏறிட்டு பார்த்தாள்!
 அவருடைய தந்தையோ சரி போ என்பது போல் தலையை ஆட்டி விட்டு தலையை குனிந்து கொண்டார்.
 அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாசல் வரை கொண்டு போய் நிறுத்தி வண்டியில் ஏறி அதை உதைத்து உறுமவிட்டான்.
 அவள் அதை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள்!
"ஏறுடி!" என்றான்!
 அவள் அவனுடைய தோளில் கைவைத்து ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
எதிரே நான்கு நண்பர்களோடு நின்றுகொண்டிருந்த அவளது தம்பி முகத்தில் ஈயாடவில்லை!
 பைக் சத்தம் தூரமாகச் சென்று மறைந்தது.
 அங்கே இருந்த எல்லோரும் எதிர்பார்த்தது நடக்காதது போல கோபமாக அந்த பெரியவரை பார்த்தார்கள்.
 அந்த பெரியவர் கால்களை லேசாக ஆட்டிக்கொண்டே "சரி! வந்தது வந்துட்டீங்க! எல்லாரும் சாப்பிட்டு போங்க! ஏம்மா எலைய போடு" என்றபடி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று பின்பக்கம் போய்விட்டார்.

Friday, 23 May 2025

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

 கண்ணாடியைப் பார்த்து என் கூந்தலில் இருந்த சில நரைமுடிகளை நகவெட்டியை வைத்து வெட்டிப் போட்டேன்.
 அகவை நாற்பதைத் தொடவுள்ளது. இன்னும் சில காலம் தான். நாகரீகத்தின் ஆதித்தொழிலில் 40 வயதுக்கு மேல் வருமானம் குறைந்துவிடும்.
 அதன்பிறகு என்ன செய்வது என்று நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் அதற்கான நேரமும் இல்லை துணிச்சலும் இல்லை.
 கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.  "அத்தை" தான்.
"ஏன்டி இவ்வளவு நேரம்?!"
"சீவி சிங்காரிக்க வேண்டாமா அத்தை?!"
"அத கேக்கல வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எவனோடடி ஊர்சுத்திட்டு வர்ற?"
"கடைவீதிக்கு போய் மேக்கப் சாமான்கள் வாங்கப்போனேன்"
"ம்..! வாசனை பத்தலையே?! பூவும் வைக்கலையா?"
"அத்தர் பூசினேனே! போதும் போதும்!"
"ஆமா... வர்றவன் உன் வீட்டுக்காரன் பாரு மல்லிப்பூவோட வர்றதுக்கு?! இந்தா பூ"
"அத்தை பசிக்குது"
"சனியனே! மதியம் நல்லா சாப்டலயா நம்ம தொழில்ல மதியத்துக்கு பிறகு சாப்பிட முடியாதுனு உனக்கு தெரியாது! இரு சர்பத் அனுப்புறேன்"
 அத்தை போய்விட்டாள்.
இவளும் ஆண்களைப் போலத்தான். இளமை இருந்தபோது செல்லம், பட்டு என்று எவ்வளவு கொஞ்சுவாள் இப்போது நான் சனியன் ஆகிவிட்டேன்.
 சர்பத்தை குடித்துவிட்டு படுக்கையில் காத்திருந்தேன்.
 இந்த விலைமாதர் விடுதியில் பத்து ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். அனாதை! ஏமாற்றிய காதலன்! கற்பழிப்பு! பிச்சை! போலீஸ்! விபச்சாரம்! அடுத்து என்ன...?! சாவுதான்!
 என் தொழில்முறை தோழி ஒரு யோசனை கூறியிருந்தாள்!
 "இளமை இருக்கும்போது கொஞ்சம் வயதான பணக்காரனை வளைத்துப் போட்டு சின்னவீடு ஆகிவிடு! அப்படியே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டால் இரண்டாம் தர வாழ்க்கையாவது கிடைக்கும்".
 இளமை இருந்த திமிரில் அந்த அறிவுரை காதுகளில் ஏறவில்லை! 
 இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!  
 என் உருவம் சிறியது! உள்ளாடை போடாமலே நேராக குத்திட்டு நிற்கும் என் மார்பகம்! எவனையும் அளவுக்கு மீறி கசக்க விட்டதில்லை! அளவான உணவு மற்றும் நல்ல பகலுறக்கம்! அதனால் வாய்த்த கட்டான உடல்! கொஞ்சம் நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர்! தீய பழக்கங்கள் பக்கம் போகவில்லை! எனவே இப்போதும் பார்க்க 25 வயது போல இருக்கிறேன் (என்று நினைக்கிறேன்).
தோழி சொன்ன திட்டத்தை இன்றே நிறைவேற்ற வேண்டியதுதான்.
 வருபவன் கொஞ்சம் பணக்காரனாக இருந்தால் சரி!
 இந்த ஆண்களைக் கவிழ்ப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!
 ஆண் ஒரு பெண்ணின் உடல் மீது வைத்திருக்கும் ஆசைதானே இந்த உலகமே இயங்க அடிப்படை!
 ஆறுதலாக நான்கு வார்த்தைகள்!
பிறகு கொஞ்சம் வலியைத் தாங்கிக்கொண்டால் போதும்! காலில் விழுந்து கிடப்பார்கள்!
 கதவு தட்டப்பட்டது! திறந்தேன்!
 ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் நின்றுகொண்டு இருந்தார்!
 இருவரும் ஒருவருக்கொருவரை பார்வையால் அளந்தோம்!
 அவரை கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டேன்!
 சிலர் தாழிடும்போது பின்புறத்தில் இருந்து கட்டிப்பிடிப்பார்கள்! இவர் அப்படி இல்லை! தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டு இருந்தார்.
 நல்ல உடைகள் உடுத்தி இருந்தார்! நடுத்தர வர்க்கம் என்று தெரிந்தது! அரசாங்க ஊழியராக இருக்கலாம்!
 "என்னங்க முதல் தடவையா?!" 
"ம்"
"உக்காருங்க! இந்தாங்க தண்ணி குடிங்க!"
"இல்ல வேண்டாம்.."
"சரக்கு எதும்..."
"இல்ல பழக்கமில்ல"
"டீ கொண்டு வர சொல்லவா"
"இல்ல அதுவும் பழக்கமில்லை" 
"சரி உக்காருங்க"
அவர் உட்கார்ந்தார். அருகில் அமர்ந்தேன்.
"சொல்லுங்க என்ன பண்ணனும்?!"
"நா அதுக்காக வரலை! ஏதோ வேகத்துல வந்துட்டேன்"
"முதல் தடவை எல்லாரும் இப்டித்தான் சொல்வாங்க! கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா நானே போதும்னு கையெடுத்து கும்புடுற மாதிரி பண்ணுவீங்க!"
 அவர் என் முகத்தைப் பார்த்து சிரித்தார்.
"நா என்ன சொன்னாலும் செய்வீங்களா?!"
"செய்வேன். என்ன நீங்க என்னவேணாலும் செய்யலாம்!"
 ஏன்தான் இந்த வார்த்தைகள் ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமோ தெரியாது!
  அவர் தயாரானார்! தன் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தார்.
 "அங்கே போய் நில்லு"
அடடா! என்ன அதிகாரம்! 
கொஞ்சம் தூரம் போய் நின்றேன்! 
அவர் தன் சட்டையைக் கழற்றினார்.
நானும் என் உடைகளைக் கழற்றினேன்!
அவர் கண்களை சுருக்கி விரித்து பார்த்தார்.
கண் கண்ணாடி இல்லாமல் அவருக்கு மங்கலாகத் தெரிகிறேன் என்று புரிந்தது.
 சட்டைப்பையில் சிறிய பொட்டலம் வைத்திருத்தார் அதில் பாரம்பரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் வாசனைப் பவுடர் இருந்தது. அதை என்னை நோக்கி விட்டெறிந்து "இதைப் போட்டுக்க" என்றார்.
 நான் அதைக் கைகளில் கொட்டி கழுத்து அக்குள் மார்பு என பூசிக்கொண்டேன்! 
 கட்டிலில் அமர்ந்தபடி அவர் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் நீட்டி குழந்தை போல அழைத்தார்! 
 நான் அருகே வந்ததும் கட்டி அணைத்துக் கொண்டார்.
 அவர் வலது காதை என் இடது மார்பில் வைத்து அழுத்தியபடி இறுகக் கட்டியணைத்தார்.
 நான் ஏதோ சொல்லவர "ஷ்..." என்று அமைதிப் படுத்தினார்.
 அவர் என் இதயத் துடிப்பைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
 மார்புக்கு அடியில் என் விலா எலும்புகளில் கைவைத்து நான் மூச்சுவிடுவதை உணர்ந்தார்.
ஐயோ பாவம்! காதல் தோல்வி அடைந்தவர்! இவருடைய காதலி இறந்துவிட்டாள் போலிருக்கிறது! அவளை உயிரோடு இருப்பதாக உணர்வதற்காக இப்படி செய்கிறார்!
 அவர் தலையை என் மார்போடு அணைத்தேன்.
என் மூச்சுக்காற்று அவர் மீது படும்படி செய்தேன்!
என் மார்பைச் சுட்டது அவரது கண்ணீர்.
கொஞ்ச நேரம் அழவிட்டேன். பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டேன். தலைமுடியைக் கோதிவிட்டேன்!
முதுகைத் தடவிக் கொடுத்தேன்!
 "தங்கம்... எந்...தங்கம்! எந்ந்ந்... தங்க்...கம்!" என்று அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்ததார். 
சில காதல் தோல்வி அடைந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்! ஒரு பெண்ணின் உடலில் இன்னொரு பெண்ணின் ஆன்மாவைத் தேடுவார்கள்! பிறகு அது கிடைக்காமல் மேலும் நொறுங்கிப் போவார்கள்! 
 பார்க்கவே பாவமாக இருக்கும்!
 நான் அணைத்தபடி அவரைத் தூங்கவைப்பது போல  தட்டிக் கொடுத்தேன்! அவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார்! விசும்பியபடி கைக்குட்டையால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டார்!
 நான் அவர் அருகில் அமர்ந்தேன்!
 அவரது ஒரு கையை என் மார்பில் பதியுமாறு அணைத்துக்கொண்டு ஒட்டி உட்கார்ந்தேன்!
"என்ன ஆச்சுங்க?! ஏன் அழறீங்க?"
"என் காதலி நினைவு வந்துருச்சு" 
"அவங்க பேரு தங்கமா?!"
"இல்ல! நா அவள அப்பிடித்தான் கூப்பிடுவேன்!"
"ம்..."
"இன்னைக்கு கடைவீதில உன்னைப் பார்த்தேன்! அவள மாதிரியே இருந்தே! அதான் பின்னாடியே வந்தேன்"
 "கவலைப் படாதீங்க எல்லாம் சரியாயிடும்! ஆமா உங்களுக்கு ஏன் அவங்க கிடைக்காம போனாங்க?! உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்கிட்ட சொல்லலாம்!"
 "அவ எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு! சொக்கத் தங்கத்துல செஞ்ச சிலை மாதிரி இருப்பா! அவ பேரு தெரியாதப்பவே அவளுக்கு நா எனக்குள்ள வச்ச பேருதான் தங்கம்! தங்கத்தை ரொம்ப நாளா ஒரு தலையாக் காதலிச்சேன்! ஆனா என் தங்கத்துக்கு என்ன புடிக்கல! அப்பறம் சாக மனசில்லாம எங்கேயோ போய்ட்டேன்! ஆனா ரொம்ப நாள் கழிச்சு விதி எங்களை சேத்துவச்சது!"
 "அப்போ அவங்க இப்ப..."
"என் மனைவி!"
"அவங்க கிடைச்சிட்டாங்களே அப்பறம் ஏன் இவ்வளவு சோகம்?!"
"அவ மனசுல யாரோ இருக்காங்க! அவளால என்னோட ஒட்ட முடியல! காதலி கிடைச்சிட்டா ஆனா காதல் கிடைக்கல!"
 அடக் கடவுளே! இதென்ன கொடுமை! 
காதலி இறந்துவிட்டால் தானும் இறந்துவிடலாம்! காதலி நிராகரித்துவிட்டால் மனதைத் தேற்றிக்கொண்டு வேறு பெண்ணை ஏற்றுக் கொண்டு வாழலாம்!
 ஆனால் இது வாழவும் முடியாத சாகவும் முடியாத நிலை ஆயிற்றே!
 காதலே இல்லாத கண்களை தினமும் பார்க்கும் இவர் எத்தனை கொடுப்பினையற்ற பிறவி?!
 இருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றத் தோன்றியது! 
"இவ்வளவு காதல் வச்சிருக்கீங்க!? இதுவே வாழ்க்கைக்கு போதுமே! பெரும்பாலும் காதலர்கள் னு சொன்னாலே அதுல ஒருத்தர்தான் காதலிப்பாங்க! இன்னொருத்தர் அத ஏத்துக்குவாங்க! ஒருத்தரோட காதலை வச்சுதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்க! இதுதான் யதார்த்தம்"
 "ஆமா! ஆனா.... எப்ப அவ என்னை வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே என் உலகம் நின்னு போச்சு! 
 நா காதலிச்ச தங்கமும் என் மனைவியும் ஒருத்திதான் னு என்னால ஏத்துக்க முடியல!"
 நான் என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்!
"எனக்கு பெண்குழந்தை பிறக்கும்னு நெனச்சேன்! அத என் தங்கமா நெனச்சு வாழலாம்னு நெனச்சேன்! அதுவும் நடக்கல!"
 "அவங்க மனசுல இருக்குறது யாரு?!"
"தெரியாது! இருக்காங்களா இல்லையானு கூட தெரியாது!"
அவர் அமைதியாக எதையோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார். பிறகு மூச்சை இழுத்த படி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
 "என் தங்கம் இவ இல்ல! அவ இன்னும் எங்க வீட்டு பக்கத்துல தெருவுல இருக்கா! அவ என்னையே நினச்சுக்கிட்டு இருக்கா! எனக்கு நல்லா தெரியும்! அவ என்னோட தங்கம்! எனக்கு மட்டும்தான் அவ சொந்தம்!"
 அப்படியே இருந்தோம்! 
கதவு தட்டப்பட்டது! 
நேரம் முடிந்துவிட்டது!
அவர் கிளம்பினார். அவரது பர்சை எடுத்துக் கொடுத்தபோது பார்த்தேன் ஒரு பழைய புகைப்படத்தில் மாணவி ஒருவர் சிரித்தபடி இருந்தார். 
 
 

 

 

Thursday, 19 April 2018

காதலும் திராவிடமும்

காதலும் திராவிடமும்

இன்று காதலுக்கு துணை நிற்கிறோம் என்ற பெயரில் ஈ.வே.ரா பக்தர்கள் செய்யும் அரசியல் சதிகளை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

முதலில் இவர்களது வழிகாட்டி ஈ.வே.ரா காதல் பற்றி என்ன கூறியுள்ளார் என்று அறிவோம்.

அவர் எழுதியது வருமாறு,

** உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி,
அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து,
மக்களுக்குள் புகுத்தி,
அநாவசியமாய் ஆண் - பெண் கூட்டுவாழ்க்கையின் பயனை மயங்கச்செய்து,
காதலுக்காக என்று இன்பமில்லாமல் திருப்தி இல்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்.

ஆனால் காதல் என்றால் என்ன?
அதற்குள்ள சக்தி என்ன?
அது எப்படி உண்டாகின்றது?
அது எதுவரையில் இருக்கின்றது?
அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது?
அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?
அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன?
என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்,
காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்
பொருளற்ற தன்மையும்
உண்மையற்ற தன்மையும்
நித்தியமற்ற தன்மையும்
அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும்
ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால், அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது?
உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது?
இவற்றிற்கு என்ன ஆதாரம் என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள்,

"காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல.
அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,
காதல் வேறு"
என்றும்,

"ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக்காரியத்திற்காக ஏற்படுவதாகும்"
என்றும்,

"அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்"
என்றும்,

"அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை" என்றும்,

‘‘அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்"
என்றும்,

"அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால்,
பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது''
என்றும்,

‘‘அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது.
அதை விபச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, அது ஒருக்காலும் காதலாகாது'' என்றும்

‘‘ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது''
என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே
ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது. **

குடி அரசு (18.1.1931) இதழில் மேற்படி ஈ.வெ.ரா எழுதியுள்ளார்.

அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தொல்லையென்றும்
அதற்கு அடிப்படையான காதல் என்பது உருவகப்படுத்தபட்ட போலி என்றும் ஈ.வே.ரா கூறுகிறார்.

சமீபத்தில் நடந்த உடுமலை சங்கர் கொலை உட்பட பல கொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் ஏழையாக வேலைவெட்டி இல்லாதவர்களாகவும் வசதியான பெண்களைக் காதலித்திருப்பதும் தெரிகிறது.

திருமாவளவன் போன்றவர்கள் திராவிடக் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் சதி திட்டம் தீட்டி வேலைவெட்டியில்லாத இளைஞர்களைத் தூண்டிவிட்டு வசதியான வேற்றுசாதி மாணவிகளைத் துரத்தச்சொல்லி அனுப்புகின்றனர்.

ஒருவேளை அந்த பெண் ஒத்துக்கொண்டால் (தமது சாதி காவல்துறையினர் வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய) கட்டப் பஞ்சாயத்து குழுவின் உதவியுடன் திருமணம் செய்துவைப்பதும்

அந்த பெண் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆசிட் வீசுவது, கொலைமிரட்டல் விடுவது, வன்கொடுமை செய்ததாக போலிப்புகார் அளிப்பது அல்லது பணம் பெற்றுக்கொண்டு விடயத்தை அமுக்குவது என பல அட்டூழியங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கும் வசதிமிக்க பெற்றோருக்கும் இடையேயான மோதல் இருசாதிகளுக்கு இடையான பிரச்சனையாக வெளியே காட்டப்படுகின்றன.

மேற்படியான மோதல்கள் பெரும்பாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படுபவை.
இதே தன் பெண்ணை விரும்புபவன் நல்ல படித்த பையனாக வசதியான பையனாக இருந்திருந்தால் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு சம்பவங்கள் இளவரசன் மற்றும் உடுமலை சங்கர் கொலைகள்.

இதில் இளவரசன் தமக்கு அதிகம் உதவியது வன்னியர் சாதி நண்பர்கள்தான் என்று கூறியுள்ளார்.

சங்கரின் கிராமமான (உடுமலை வட்டம்) கொமரலிங்கம் சாதி தாண்டி திருமணம் செய்த பல தம்பதிகளைக் கொண்டது.

ஆக இன்று கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சாதிதாண்டி காதல் செய்வதை ஊக்குவிக்கும் கூட்டத்தின் நோக்கம் காதலை வாழவைப்பதோ சாதியை ஒழிப்பதோ கிடையாது.

இவர்களின் நோக்கம் எதாவது ஒரு பிரச்சனையில் இருவேறு சாதியினர் சம்பந்தப்பட்டிருந்தால் அந்த தனிப்பட்ட பிரச்சனையை சாதி பிரச்சனை ஆக்கி இரு தமிழ்ச்சாதிகள் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதான்.

எந்த கொலை நடந்தாலும் அதை சாதிய வன்முறை என்று உருவாக்க முயல்வதும்
அது ஒரே சாதிக்குள் நடந்தது என்று தெரியவந்தால் அப்படியே போட்டுவிட்டு நகர்வதும் திராவிடவாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது  .

நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு, வேலாம்புதூர் கொலைச் சம்பவம் போன்றவற்றை சாதிக்கொடுமை என்று வதந்தி பரப்பியதும் அதற்காகத்தான்.

ஸ்வாதி படுகொலையை கண்டுகொள்ளாமல் நகர்வதும் அதற்காகத்தான்.

  'உயர்சாதிகளை எதிர்க்கிறோம்' என்ற பெயரில் அனைவரும் இந்த 'மானத்தில் கைவைக்கும் கூட்டத்துடன்' சேர்ந்துகொள்கின்றனர்.

விபரமே தெரியாத 15, 16 வயது மாணவிகள் பின்னால் 25,30 வயதுள்ள படிக்காத, வேலைவெட்டி இல்லாத, தறுதலை ஒருவனை பயிற்சி கொடுத்து விரட்ட அனுப்புவது உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத 'சாதி ஒழிப்பு திட்டம்' ஆகும்.

நாடக்ககாதல் பிரச்சனைகளை பொதுப்புத்தியுடன் அணுகாமல் பின்னால் இருக்கும் வந்தேறிகளின் சூழ்ச்சியை அறிந்து நடப்போம்.

Tuesday, 13 February 2018

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்.

<3<3<3<3<3<3<3<3<3<3<3

காதல் என்றாலே மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் நினைவுக்கு வருகிறது.
ஆனால், இது பெண்கள் காதலுக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறவும் வழி செய்கிறது.
இதற்கான பதிலடியானது தாஜ்மகாலுக்கு அருகிலேயே ஷாஜகானின் குடும்பத்திலேயே இருக்கிறது .
அதுதான் ஹுமாயூனுக்காக அவரது மனைவி கட்டிய தோட்டக்கல்லறை.

ஷாஜகானுக்கு 9மனைவிகள். அதில் அவருக்கு விருப்பமானவர் மும்தாஜ்.
இவர் 13வது குழந்தையைப் பெறும்போது உதிரப்போக்கு காரணமாக இறந்துவிடுகிறார்.
இது ஷாஜகானை வேதனைகக்குள்ளாக்குகிறது.
உடனே 20,000 தொழிலாளர்களைக்கொண்டு 22ஆண்டுகள் பல்வேறு நாடுகளின் அறிஞர்களையும் பொருட்களையும் கலைகளையும் கொணர்ந்து பெரிய பொருட்செலவில் 1000 யானைகளை வைத்து நினைவிடம் கட்டிமுடிக்கப்பட்டது.

இதே போல் வேறொன்று உருவாகக்கூடாது என்று கட்டியவர்கள் கைகளை வெட்டினார் என்றும், மக்கள் மீது வரி மேல் வரி விதித்து படாதபாடு படுத்தினார் என்றும், மும்தாஜின் தங்கையின் கணவரைக் கொன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
அத்தனையையும் விஞ்சி நிற்கிறது மும்தாஜ் மீதான அவரது காதல்.

ஆனால், 1571ல் அதாவது தாஜ்மகால் கட்டத் தொடங்குவதற்கு 61ஆண்டுகளுக்கு முன்பே ஹுமாயுன் நினைவிடம் கட்டப்பட்டுவிட்டது.

ஹுமாயூன் இறந்து 9ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதைக் கட்டத்தொடங்குகிறார்கள்.
அது ஏன்?

இதற்குப்பின்னால் ஒரு மாவீரனின் பெயர் ஒளிந்திருக்கிறது.
அவன் தான் வடஹிந்தியாவின் நெப்போலியன் என்றழைக்கப்படும் ஹேமு.
(தென்னிந்திய நெப்போலியன், மாமல்லனால் தோற்கடிக்கப்பட்ட புலிகேசி ஆவான்).

ஹேமு ஒரு நடுத்தர ஹிந்து குடும்பத்தில் பிறந்து ஆப்கானிய இசுலாமியரான ஷேர்கான் அரசில்(சுர் பேரரசு) அடிமட்டத்திலிருந்து பல்வேறு பதவிகள் வகித்து பிறகு படையமைச்சராக உயர்கிறான்.
அரசனுக்காக பல்வேறு போர்களில் பலரை தோற்கடித்து மாவீரன் என்று பெயர்பெறுகிறான்.
அரசனை விட செல்வாக்கு பெருகுகிறது.
அரசனின் இறப்புக்குப் பிறகு அரசனாக அரியணை ஏறுகிறான்.
இசுலாமிய ஹிந்து மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் வலிமை பொருந்திய மொகலாயர்களை எதிர்க்கிறான்.

இந்த நேரத்தில் முகலாயப் பேரரசனான ஹுமாயூன் இறந்துவிட வங்காளத்தில் இருந்த ஹேமு தன் படைகளோடு டெல்லிநோக்கி வருகிறான்.

ஹேமு பெயரைக் கேட்டதுமே எல்லாரும் ஓடிவிடுகிறார்கள்.
ஆக்ராவரை முன்னேறிய ஹேமு முகலாயர் தலைநகரான டெல்லியைத் தாக்கி கைப்பற்றுகிறான்.
அங்கே பேரரசனாக முடிசூட்டிக்கொள்கிறான்.

350 ஆண்டுகள் இசுலாமிய ஆட்சிக்குப் பிறகு ஒரு ஹிந்து அரசனாக வந்ததால் ஹிந்து புராணங்களின் வரும் அரசனான விக்ரமாதித்ய என்கிற பெயர் அவனுக்கு அளிக்கப்படுகிறது.

மொகலாயர்கள் மிகவும் சுருங்கி இறுதிப்போருக்கு ஆயத்தமாகிறார்கள்.
இரண்டாம் பானிபட் போர் துவங்குகிறது.

மொகலாயர்களிடம் இருந்தது வெறும் 20,000 வீரர்கள்.
எதிரே நிற்பதோ தொடர்ச்சியாக 22வெற்றிகளைக் கண்டவனும் தன் வாழ்நாளில் ஒரு தோல்வியையும் காணாதவனும் ஹிந்து இசுலாமிய கூட்டாதரவு பெற்ற நாயகனுமான ஹேமு.
ஹேமுவின் படையானது 30,000 வீரர்களையும், 1000யானைகளையும், 51 பீரங்கிகளையும் கொண்டது.

முகல் அரசு இத்தோடு முடிந்தது என்று எல்லாரும் முடிவே கட்டிவிட்டனர்.
இந்த இடத்தில்தான் வரலாறு எதிர்த்திசையில் திரும்புகிறது.

5, நவம்பர்,1556 இல் போர் தொடங்குகிறது.
முகலாயர்கள் தமது திறமையான வில்வீரர்களை பாதுகாப்பாக முன்னேற்றி அழைத்துச் சென்று யானை மேலிருந்து போரை வழிநடத்திவரும் ஹேமுவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், ஹேமுவின் உடல் முழுவதும் கவசம் மூடியிருக்க அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை.
ஆனால், ஒரு மொகலாய வீரன் குறிபார்த்து ஹேமுவின் கண்ணில் அம்பு எய்துவிடுகிறான்.

அவன் விட்ட ஒரு அம்பு போரைத் தலைகீழாக மாற்றிவிடுகிறது.
ஹேமு நினைவிழந்துவிட படைகள் ஒருங்கிணைப்பு இழந்து சிதறுண்டன.
அதன்பிறகு மொகலாயர்கள் கை ஓங்கியது.
முகலாயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர்.
ஹேமுவின் தலையை வெட்டி காபூலிலும் உடலை அவன் முடிசூடிய கோட்டையிலும் தொங்கவிடுகின்றனர்.

அவனுக்கு உதவிய அனைவரையும் துரத்தி துரத்தி படுகொலை செய்து தலையை வெட்டி மண்டையோடுகளால் கோபுரங்கள் அமைத்தனர்.
அதன் பிறகு மொகலாய ஆட்சியானது இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி பங்களாதேஷ் வரை ஜம்மு தொடங்கி மதுரை வரை பரவுகிறது.

குறுக்கு வழியில் முன்னேறிய, இசுலாமியரை வெறுத்த சிவாஜியைக் கொண்டாடும் வடஹிந்திய ஹிந்து தலைவர்கள் தூயவீரனான ஹேமுவை கண்டுகொள்வதில்லை.
ஹேமுவை இன்று யாருக்குமே தெரியாது.
அவன் தோற்றுவிட்டானல்லவா? அவனது பெயர் வரலாற்றுப் பக்கங்களை மட்டுமே ஆள்கின்றது.

முகலாயர்கள் மீண்டும் தனது அரசை கைப்பற்றியபிறகு முகலாய அரசி பேகா பேகம் தனது காதல் கணவரான ஹுமாயுனுக்கான நினைவிடத்தை  பாரசீகத்திலிருந்து (பெர்சியா) நிபுணர்களை வரவழைத்து  பெரும்பொருட்செலவில் அமைத்து கணவரின் உடலை தோண்டியெடுத்து அதனுள் அடக்கம் செய்கிறார்.

இதுதான் தாஜ்மகாலை அமைக்கும் எண்ணத்தை ஷாஜகானுக்கு ஏற்படுத்தியது.
மகனால் சிறையில் தள்ளப்பட்ட ஷாஜகான் இறந்தபிறகு தாஜ்மகாலில் உள்ள மும்தாஜ் கல்லறைக்கு அருகிலேயே 1666ல் புதைக்கப்பட்டார்.

ஆனால், 1582லேயே தன் கணவருடன் தான் கட்டிய தோட்டக்கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தார் பேகா பேகம்.

பெண்களின் காதல் ஒன்றும் சளைத்தது அல்லவே!

(2 டிசம்பர் 2014 அன்று முகநூலில் இட்டது)

Monday, 17 April 2017

கரண் தப்பினால் மரணம்

'கரணம் தப்பினால் மரணம்'

இதில் கரணம் என்பது திருமணத்தைக் குறிக்கும்.

உலகில் திருமணம் என்ற சடங்கு தோன்றியிராத காலத்தில் (ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இருந்தது)
பெண்ணும் ஆணும் களவு நெறியில் ஈடுபடுவர். (தற்போதைய மேலைநாட்டு வழக்கமான டேட்டிங் போல) இதன் விளைவாக பெண் கருவுறுவாள்.
ஒருவேளை அந்த ஆண் அவளோடு வாழமாட்டேன் என்று கைவிட்டுவிட்டால் அந்தப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருந்தது.
இதுதான் கரணம் தப்பினால் மரணம் (கரண் = திருமணம்).
இத்தகைய தற்கொலைகள் அதிகமானதால் ஊரறிய திருமணம் செய்துகொள்வது விதியாக்கப்பட்டது.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண் என்ப"
_தொல்காப்பியம்

Saturday, 13 February 2016

பழந்தமிழர் கொண்டாடாத காதலா?

பழந்தமிழர் கொண்டாடாத காதலா?

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

மல்கிய துருத்தியுள் மகிழ்
துணைப் புணர்ந்து அவர்
வில்லவன் விழவினுள்
விளையாடும் பொழுது அன்றோ
(கலித்தொகை 35:13-14)

"யாரும் வந்துபோகாத ஆற்றுத்தீவில் (ஆற்று நடுவில் இருக்கும் மணல் திட்டு) காதலனுடன் இன்பமாகத் தழுவிக்கொண்டு விளையாடவேண்டிய விழா நாள்  அல்லவா இன்று?!" என காதலனைப் பிரிந்த காதலி ஏக்கத்துடன் தன் தோழியிடம் கூறுகிறாள்.

நாம் இல்லாப் புலம்பாயின்
நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின்
கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே
(கலித்தொகை 27:24-26)

காதலன் இல்லாத அவள் தனியளாய் நடுக்கத்துடன் இந்த (காமன்)விழா நாளில் கலங்கிப்போய் குழம்பிக்கொண்டு இருப்பாள் என்று
காதலன் தன் தேரை விரைவாகச் செலுத்தி அவளுடன் உடனிருக்க வந்துவிட்டானாம்.

நன்றி: சங்ககாலத்தில் காதலர் தினம் _sishri org

Wednesday, 15 July 2015

சங்ககாலத்தில் காதல்திருமணம்

சங்ககாலத்தில் காதல்திருமணம்.

<B<B<B<B<B<B<B<B<B

உடன்போக்கு என்பது காதலனும் காதலியும் தத்தமது பெற்றோர் தம்மை சேர்த்துவைக்க விரும்பாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுவது,

பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில்,
ஒருவரை ஒருவர் காதலிக்கும் தலைவனும் தலைவியும் உடன்சென்ற பின்னர்,
தேடிவரும் செவிலித்தாய்(வளர்ப்புத்தாய், சித்தி) முக்கோற்பகவர் எனப்படும் துறவியர்களைக் காண்கிறாள்.
அவர்களிடம் இவ்வழியே சென்ற தன் மகளையும் அவளது காதலனையும் கண்டீர்களா என வினவுகிறாள்.
அதற்கு அவர்கள்,

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்
ஆங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்
செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்
செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

என்று பதிலுரைக்கிறார்கள்.
இதன் பொருள்,

சந்தனம் பூசிக்கொண்டவர்க்கு மணம் சேர்க்குமேயன்றி அது விளைந்த மலைக்கு அதனால் சிறப்புசெய்ய முடியுமா?
முத்து அணிந்து கொண்டவர்க்கு சிறப்பு செய்யுமேயன்றி அது தோன்றிய கடலுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
யாழிசை கேட்பவர்களுக்கு சிறப்பு செய்யுமேயன்றி யாழுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
அதுபோலத்தான் உன் மகள் தன் தலைவனுக்கு சிறப்பு செய்வாளேயன்றி உனக்கு சிறப்பு செய்யமாட்டாள்.

காதலர்களின் வாழ்க்கையை முடிவுசெய்வதில் பெற்றோர் தலையிடக்கூடாது என்று துறவிகளே கூறுகின்றனர்.

http://m.youtube.com/watch?v=_fiR_CPBYZY

Thursday, 20 November 2014

பரத்தையும் பரத்தனும்

பரத்தையும் பரத்தனும்.

சங்ககாலத்தில்... என்றாலே

ஓடிவிடுகிறான் இன்றைய தமிழன்

வரலாறு படிப்பது ஏன் என்று கொஞ்சம் பார்ப்போமா?

நேரடியாக மோதமுடியாத வல்லரசான ரோமன் பேரரசை சுற்றுப்பாதையில் சென்று ஆல்ப்ஸ்  பனிமலையை ஏறி இறங்கி  ஹனிபல்  நிர்மூலமாக்கினான்.
இது நடந்து 2000 ஆண்டுகள் கழித்து மாவீரன்  நெப்போலியன் அதேபோல ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சுற்றுப்பாதையில் சென்று ஆஸ்திரியாவை வென்றான்.
ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான்.
பிறகு நெப்போலியன் ரஷ்யநாட்டின் மீது குளிர்காலத்தில் படையெடுத்துச்சென்றதால் தோற்றான்.
இதுநடந்து 150ஆண்டுகள் கழித்து ஹிட்லர் ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான். நெப்போலியனின் வரலாறை ஹிட்லர் கவனத்தில் கொண்டிருந்தால் வெற்றி மேல் வென்றி குவித்த நாஜிப்படைகள் வலிமைகுறைந்த ரஷ்ய படையிடம் குளிர்காலத்தில் தோற்று மண்ணைக்கவ்வியிருக்காது.

பழங்காலத்தில் நடந்ததை அறிவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தவே ஐரோப்பாவரை செல்லவேண்டிவந்தது.
மற்றபடி இந்தப் பதிவு போர்பற்றியது அன்று. நாகரீகம் பற்றியது. இல்லறம் பற்றியது.
-----------------

சங்ககாலத்தில் குடும்பம் என்கிற அமைப்பு தோன்றாதபோது கூட்டமாக வாழ்ந்த இனங்களில் எவரும் எவருடனும் சேர்ந்து பிள்ளைபெறலாம் என்ற நிலை இருந்தது.
பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற முறை, திருமணம், நிலையான இடத்தில் வாழ்க்கை, குடும்ப அமைப்பு ஆகியன தோன்றின.
ஆனாலும், பழைய முறைப்படி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தவர்களும் இருந்தனர். இப்படிப்பட்டோர் பரத்தை என்றும் இவர் ஊரில் வாழ்ந்த பகுதி 'பரத்தைச் சேரி' (சேரி=சேர்ந்துவாழும் இடம்) அழைக்கப்பட்டது.
இவர்கள் குடும்பமாக வாழ்வோரைப் போலவே மதிக்கப்பட்டனர்.
--------------
பரத்தை ஒருத்தி தன் தோழியிடம் தன்னை நாடிவரும் தலைவனைப் பற்றிக் கேலியாகப் பின்வருமாறு கூறுகிறான்.

எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
(குறுந்தொகை:8)

என் வீட்டிற்கு வந்தால், "தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான். ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்.

பரத்தைக்குத் தலைவன் வீட்டுக்குச் சென்றுவரும் உரிமைகூட இருந்ததோ என்னவோ?
----------------------
தலைவன் பரத்தையை நாடிச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறான். அவனை வீட்டுவாசலிலேயே நிறுத்தி தலைவி கேள்வி கேட்கிறாள். தலைவன் உடனே தலைவியின் காலில் விழுந்து தான் பரத்தை வீட்டுக்குச் சென்றது தவறுதான் என்றும் அதற்காக பொறுத்தருளுமாறும் மன்றாடுகிறான். உள்ளம் உருகிப்போன தலைவி அவனை தூக்கி "நீ இப்படிக் காலில் விழுவதை நீ காதல் கொண்ட என் தங்கைகளான பரத்தைகள் கண்டால் சிரிப்பார்களே?!" என்று கேலியாகக் கூறுகிறாள்.

அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என...

தொல்காப்பியம் (கற்பியல்:6)

பரத்தைகளை தங்கைகள் என்று அக்காலப்பெண்கள் குறிப்பிடும் அளவுக்கு அப்பெண்களுக்கு மதிப்பு இருந்துள்ளது.
---------------
மேற்கண்ட இருபாடல்களிலிருந்தும் ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு அடங்கிநடந்தது தெரிகிறது. அதுபோல, அக்காலத்தில் வேட்டையாடுதலிலும்  போர்புரிவதலிலும் ஆண்கள் ஈடுபட்டதால் ஆண்களின் உயிரிழப்பு பெண்களின் உயிரிழப்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்திருக்கும். அப்போது தலைவன்(கிழவன் அதாவது ஆண்) தலைவி(கிழத்தி)யை மணமுடித்தோடு  காமக் கிழத்தி (வைப்பாட்டி)கூட வைத்துக்கொண்டனர்.
அப்போதைய சூழலுக்கு அது சரியாக இருந்தது.
இதனால் பெண்கள் அடிமைநிலையில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
திருமணச்சீர் (வரதட்சணை) வாங்கும் பழக்கமானது அப்போது இல்லை. மாறாக பரிசம் (பணம்) கொடுத்து மணப்பெண்ணை அழைத்துவரும் முறை இருந்துள்ளது.
-------------------
பரத்தைப் பெண்கள் மட்டுமன்றி ஆண் பரத்தர்களும் இருந்துள்ளனர்.

பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
திருக்குறள்:1311

'புலவி நுணுக்கம்' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் பெண்கள் எப்படியெல்லாம் சின்னச் சின்ன காரணங்களைக்கொண்டு தலைவனிடம் ஊடல் செய்வார்கள் என்று விவரிக்கிறார். அதில் மேற்காணும் குறள் வருகிறது.
தலைவனை பெண்கள் பலரும் விரும்புவதைக் கண்டு பொறாமை கொண்டு தலைவி தலைவனிடம்,
பெண் இயல்பு உள்ள அனைவரும் பொதுப்பொருள் போல உன்னை தன் கண்களால் விழுங்குகிறார்கள் (பார்த்து ரசிக்கிறார்கள்) பரத்தனுக்கு ஈடான உன்னை (உன் மார்பை) நான் இனித் தழுவமாட்டேன்" என்று சினந்துகூறுகிறாள்.

சிலப்பதிகாரத்தில் . "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்ற சொற்றொடர் வருகிறது.
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது, கவுந்தியடிகளும் சேர்ந்துகொண்டார். அப்போது வழியில் இரு பரத்தர்கள் அவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, சங்ககாலத்தில் தமிழர் வாழ்வியலில் பெண்ணடிமை நிலவியதாகக் கூறவியலாது.

கற்பு என்பது காலத்திற்கு காலம் மாறுவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.

போரும் அரசியலும் கற்பியலும் மிகப் பழமையானவையும் நெருங்கிய தொடர்புடையவையும் ஆகும்.

Politics is war without blood,war is politics with blood.

Politics is the second oldest profession,and the first is prostitution.