Sunday, 22 June 2025

அன்றைய காதல்

அன்றைய காதல்  

 அந்த பெரிய வீட்டில் அந்த பகுதியில் அதிகம் வாழும் ஒரு சமூகத்தின் பெரியவர்கள் கூடியிருந்தார்கள்.
 வீட்டின் பின்புறம் இருந்த வெற்றிடத்தில் அசைவ உணவு ஆக்கிக் கொண்டிருந்தது அங்கு வீசிய நறுமணத்திலிருந்து தெரிந்தது.
 நாலு பேர் நாலு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 வீட்டின் பின்பக்கம் பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
 அந்த வீட்டின் பெரியவர் கூடத்தில் நடுவே அமர்ந்திருந்தார் அவரை சுற்றி பெரியவர்கள் அமர்ந்து அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
  அவர் அவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கியது போல மௌனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
 அப்போது பின் கட்டில் இருந்து அவரின் மனைவி கூடத்தின் வாசலுக்கு வந்து "என்னங்க..!" என்று அழைத்தார்.
  இவரும் போனார்.
 "என்னங்க அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்! இவ தான் வார்த்தையை விட்டிருக்கா! அதனாலதான் மாப்பிள்ளை கையை நீட்டிட்டார்!
 அவர் ஏடாகூடமான ஆள்!
 நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க!" என்று கூறினார்.
  பெரியவர் கோபத்துடன் "அதுக்குன்னு இப்படி போட்டு அடிக்கலாமா?" என்று கேட்கவும் அங்கே வந்த இவர்களது இளைய மகன் "அவன் இன்னைக்கு வரட்டும்! ஒழுங்கா மன்னிப்பு கேட்கலைனா இங்கேயே அவனை வகுந்திடுவேன்" என்று கூறினான்!
 அந்த அம்மாளோ "கூறுகெட்டவனே! உனக்கு ஒன்னும் தெரியாது! நீ பேசாம இரு! அவர ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது! மீறி வாயத் தொறந்தே இனி வீட்டுக்குள்ள வரக்கூடாது" என்று சொன்னாள்.
 இதையெல்லாம் அங்கே ஓரமாக அமர்ந்திருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 அந்த இளைஞன் அவளருகே போனான் "அக்கா அவன் உனக்கு சரிப்பட மாட்டான்! அவன் வந்ததும் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு தாலிய கழட்டி எறிஞ்சிடு! எதாவது பண்ணுனான்னா நா பாத்துக்கிடுறேன்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வெளியே போனான்.
 அவள் எதுவும் பேசாமல் வாயை இருக்க மூடியபடி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
 அவளது தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 அவளுடைய அம்மா அருகே போனாள்.
 "ஏம்மா அத்துவிடுறதுன்னே முடிவு பண்ணிட்டியா கடைசிய ஒரு தடவ யோசிச்சு பாரேன்!" என்று கூறினாள்.
 அந்த பெண் எதுவும் பேசவில்லை!
"சரிம்மா! கோவம் மட்டும் படாத! மீதிய அப்பா பாத்துக்குவாரு!"
 இப்போது கூடத்துக்கு வந்த பெரியவர் அங்கிருந்த பெரியோர்களைப் பார்த்து "அவங்க வீட்டிலிருந்து யார்லாம் வாராங்கன்னு தெரியல! அவங்க கொஞ்சம் ஏறுமாறா பேசினாலும் நீங்க பொறுமையா பேசுங்க! பொண்ணு பிள்ள விசயம்! அத்துவிடுறதுனாலும் முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்க பாருங்க!" என்று சொன்னார்.
"சரிப்பா! அன்னைக்கு அவங்க வீட்டுக்கு சமாதானம்  பேசப் போனப்ப என்ன பேச்சு பேசுனாங்க! பரவால்லப்பா! எங்களுக்கு என்ன?! முடிவு உன்னோடது தான்! நாங்க ஒரு ஆதரவுக்காக தான் வந்தோம்! நீ பேசு! நாங்க இடைல எதுவும் பேசலை!" என்று சொன்னார்கள்.
 தூரத்தில் மோட்டார் பைக் வரும் சத்தம் கேட்டது.
 அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண் பரபரத்தாள்!
 எழுந்து வாசலைப் பார்த்தாள்.
 ஆம் அது அவன்தான்!
 அந்த பெண் பின்வாங்கி ஓரமாக நின்றுகொண்டாள்.
 அவன் ஒற்றை ஆளாக வந்திருந்தான்!
நிதானமாக குடித்து இருந்தான்!
 அதனால் அதிகம் தள்ளாடாமல் நடந்தான்!
 சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டே அவர்களையெல்லாம் கடந்து நடுக்கூடத்திற்கு போனான்.
 நட்ட நடு கூடத்தில் நின்று கொண்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தான்.
"சாந்தி! ஏ.. சாந்தி!" 
அந்தப் பெண் மெதுவாக மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.
 அவளைப் பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு குறுநகை தென்பட்டது.
 "வா! நம்ம வீட்டுக்கு போலாம்" என்று சொன்னான்.
 அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
 "என் சந்தனமில்ல! வா வீட்டுக்கு போலாம்! வா! வா! வா!" என்று அவன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.
 அந்தப் பெண் மெதுவாக நடந்து வந்து அவனுடைய கையில் தன்னுடைய கையை வைத்தாள்.
 அவன் திரும்பி புறப்பட எத்தனித்தான்.
 அவள் நகரவில்லை!
 அவன் திரும்பி அவளைப் பார்த்தான்!
அவள் அவளுடைய தந்தையை ஏறிட்டு பார்த்தாள்!
 அவருடைய தந்தையோ சரி போ என்பது போல் தலையை ஆட்டி விட்டு தலையை குனிந்து கொண்டார்.
 அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாசல் வரை கொண்டு போய் நிறுத்தி வண்டியில் ஏறி அதை உதைத்து உறுமவிட்டான்.
 அவள் அதை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள்!
"ஏறுடி!" என்றான்!
 அவள் அவனுடைய தோளில் கைவைத்து ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
எதிரே நான்கு நண்பர்களோடு நின்றுகொண்டிருந்த அவளது தம்பி முகத்தில் ஈயாடவில்லை!
 பைக் சத்தம் தூரமாகச் சென்று மறைந்தது.
 அங்கே இருந்த எல்லோரும் எதிர்பார்த்தது நடக்காதது போல கோபமாக அந்த பெரியவரை பார்த்தார்கள்.
 அந்த பெரியவர் கால்களை லேசாக ஆட்டிக்கொண்டே "சரி! வந்தது வந்துட்டீங்க! எல்லாரும் சாப்பிட்டு போங்க! ஏம்மா எலைய போடு" என்றபடி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று பின்பக்கம் போய்விட்டார்.

No comments:

Post a Comment