Tuesday 22 December 2015

குருதியில் நனைந்த குமரி -2

குருதியில் நனைந்த குமரி -2

1950களில்...
திருநெல்வேலியில் மக்கள் பேசிக்கொண்டார்கள்

"மலையாளிக்கு வசதியா வீடு வேணும்னா என்ன செய்யணும்?"

"..."

"தெரியாதா? எதாவது பெருசா செஞ்சிட்டு ஜெயிலுக்கு போணும்.
வெளிய வந்ததும் தேவிகொளத்துளத்துலயோ பீருமேட்டுலயோ அரசாங்கமே வீடு குடுக்கும்?"

"ஏ அப்டி?"

"அரசாங்கத்துக்கு பத்தணா வருமானம்னா அதுல ஓரணா அங்கருந்துதான வருது.
நேரு ஒரு குழு அனுப்பிருக்காராம்.
அது வந்து பாத்து எந்த இனம் அதிகமா வாழுதோ அந்த மாநிலத்தோட சேத்துருமாம்.
அதான் பட்டம்பய அங்க மோசமானவங்கள குடி வச்சு நம்ம மக்கள விரட்டுறானாம்"

"இதலாம் பாத்துட்டு நம்ம தலைவர்கள் சும்மாவா இருக்காங்க?"

"அவங்களும் ஊர்வலம் கடையடைப்புனு நடத்திட்டுதான் இருக்காங்க. போராட்டத்துக்கு போனாலே போலீச விட்டு அடிக்கிறாங்களாம். அல்லது புடிச்சிட்டு போய் பொய்கேஸ் போடுறாங்களாம்.
நம்ம நேசமணி காங்கிரசுகாரங்க அங்க மக்கள வெசாரிக்க போயிருக்காங்களாம்"

"நேசமணி ஐயா எறங்கிட்டாகனா பட்டாசுதான்.
இங்க வடகரைக்கு பேச வந்தப்ப கால தரைல வச்சா வெட்டிருவோம்னானுவோ.
ராசாவாட்டம் யான மேலலா உக்காந்து வந்தாரு"

"திருவனந்தரம் ராசாவெல்லாம் சும்மாவாம்.
இப்ப ராசானா அது நம்ம நேசமணி ஐயாதானாம்".
---------------------------------
மூணாறு, 1954 மே.

"ஐயா இந்த மலையாள வரத்துக்காரனுக அழிச்சாட்டியம் தாங்கமுடியல.
பொண்டு புள்ளைங்க நடமாட முடியல. போலீஸ்காரன்ட சொன்னா, நாம சொன்னத நம்ம மேலயே கேஸ் போடுறாங்க".

"ஆமாங்கய்யா மோசமானவனுகள தேடி பிடிச்சு கூட்டிவந்துருக்கானுக.
நாங்க நாலு பேரு தட்டிக்கேக்கப்போய் அடிதடி ஆயிருச்சு.
போலீஸ்காரன் எங்க மேலதான் கேஸ் போட்டான்.
அடிச்சாலும் நாமதா குத்தவாளி அடிவாங்குனாலும் நாமதா குத்தவாளி"

"வள்ளியக்கா நடந்து போகும்போது வம்பிழுத்துருக்கான் ஒருத்தன்.
அக்கா தைரியமானது நாலு கன்னத்துல விட்ருக்கு.
அவன் போலீசோட வீட்டுக்கு வந்து கூட்டுப்போய்ட்டான்.
அவன அருவாவாள வெட்ட வந்ததா பொய்கேசு எழுதி பாலாய் கோர்ட்டுல போட்ருக்கானுக.
பொட்டபயலுக.
வாரவாரம் அவ்ளோ தூரம் அலையுது"

"ஆமாங்கய்யா பொய்கேஸ் போடுததுமில்லாம அதவச்சு தொலவா இருக்குற கோர்ட்டுக்கு அலையவும் வைக்கிறானுக"

"நம்ம தென்னிந்திய தோட்ட சங்கத்துல போய் சொன்னமுங்க.
அவனுக என்னமோ புதுசா கேரளா ஐரேஞ்ச் சங்கம் ஆரம்பிச்சி வச்சிருக்கானுகளாமே அங்க போய் கேட்டதுக்கு அடிதடி ஆயிருச்சு.
அத கேக்கறம்னு வந்த போலீசு நம்ம சங்கத்துகாரங்கள அடிஅடினு அடிச்சிருக்கானுக.
மொதலாளிலா அவனுக பக்கம்.
நம்ம சங்கத்துக்காரங்களா கூப்டு அடிதடி பண்ணா வேலயவிட்டு தூக்கிருவோம்கறானுக"

"ஐயா எங்களுக்கு இருக்க ஒரே நம்பிக்க நேசமணி கட்சிக்காரவுங்க நீங்கதான். இதுக்கு எதாவது பண்ணுங்கையா.
எப்படியாவது தமிழ்நாட்டோட சேந்துடணும். அப்பதாய்யா எங்களால நிம்மதியா வாழமுடியும்.
இல்லனா எத்தன வருசம் ஆனாலும் இந்த அடிம வாழ்க்கதா வாழணும்".

மக்கள் குறைகளை கேட்டுவிட்டு மூணாறு கடைவீதிக்கு வந்த தி.த.நா.க (திருவாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ்) தலைவர்கள் துரைபாண்டி (நாடார்) மற்றும் அவருடன் வந்த தொழிற்சங்க செயலர் ஆர்.குப்புசாமி(நாடார்) கேரள போலீசால் வழிமறிக்கப்பட்டனர்.
கையில் விலங்கை மாட்டி வண்டியில் ஏற்றப்போகும்போது மேகம் இருண்டு தூறல் விழத் தொடங்கியது.
போலீஸ் அதிகாரியின் இனவெறி மூளை வேலை செய்தது.
வண்டியில் விலங்கை மாட்டிவிட்டு அவர் மட்டும் உள்ளே ஏறிக்கொண்டு இருவரையும் கொட்டும் மழையில் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர்.

(தொடரும்)
___________________________
பகுதி -1
https://m.facebook.com/photo.php?fbid=640511856052471&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment