Friday 25 December 2015

குருதியில் நனைந்த குமரி -3

குருதியில் நனைந்த குமரி -3

"தேவிகுளம், பீருமேடு பகுதியை கலவரபூமியாக்குங்கள்"

"வரப்போகும் 'மாநில புனரமைப்புக் குழுவை' குழப்பி அந்த பகுதியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும்"

"அதெப்படி மூணாறை நாம் விடமுடியும்?
பணிக்கரை அக்குழுவில் போட்டாயிற்று.
தமிழர் யாரும் அக்குழுவில் இடம்பெறாமல் செய்தாயிற்று.
எல்லாம் நேருவைச் சுற்றியிருக்கும் மேனன்கள் கிருபை"

1954ல் 'ஐக்கிய கேரளம்' கனவு கண்ட மலையாளிகளின் கூச்சல்கள் இவை.
இவைகள் நிறைவேறியும் விட்டன.

ஐக்கிய கேரளத்தில் நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டமும் கூட சேர்க்கப்பட்டிருக்கும்,
நேசமணி என்றொரு தமிழன் பிறக்காமல் இருந்திருந்தால்.

குழப்பமான அந்த காலத்தில் 60 வயதில் நேசமணி தனது தளபதி அப்துல் ரசாக்குடன் மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கால்கடுக்க நடந்து ஆங்காங்கே காணப்படும் தமிழர்களின் குடிசைகள் ஒன்றுவிடாமல்  சென்று சந்தித்து பேசி படிப்பறிவில்லாத அம்மக்களுக்கு எடுத்துக்கூறி தெம்பூட்டி போராட்டத்திற்கு ஆயத்தமாக்கினார்.

அவர் இருக்கும் தெம்பில் மூணாறு தமிழர்கள் துணிச்சலுடன் மலையாளிகளை எதிர்த்தனர்.

அதனால்தான் மலையாளிகளின் கொடுங்கரங்கள் நீலகிரி கோவை வரை நீளமுடியவில்லை.

தி.த.நா.க தலைவர்கள் கைது செய்யப்பட்டு தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்ததும் தென் தமிழ் முனை கொந்தளித்தது.

"உங்களுக்கு 30 நாட்கள் கெடு, அதற்கு மேலும் தேவிகுளம் பீர்மேட்டில் குழப்பம் விளைவித்தால் மக்கள் அரசுக்கு எதிராக செயல்படுவார்கள்"  நேரடியாக அறிவித்தார் நேசமணி.
அடங்க மறுத்தார் பட்டம் தாணுப்பிள்ளை.

ஜூன் 30ஆம் நாளை 'தேவிகுளம் தினமாக' முன்னெடுக்க தமிழகத்தைக் கோரினார்.
தமிழகம் அதைச் செய்தது.

போராட்டக்குழு அமைக்கப்பட்டது.
பி.இராமசாமி(பிள்ளை)
ஏ.குஞ்சன்(நாடார்)
ஆர்.பொன்னப்பன்(நாடார்)
ப.தாணுலிங்கம்(நாடார்)
எ.அப்துல் ரசாக்

கெடு முடிந்ததும். நேசமணி ரசாக்கையும் சிதம்பரநாதனையும் அழைத்துக்கொண்டு ஜூலை 2 (1954) அன்று புறப்பட்டு மூணாறு வந்து சேர்ந்தார்.
அதற்குள் பட்டம் அரசு அங்கே 144 தடை உத்தரவு ஒரு மாதகாலத்துக்குப் பிறப்பித்துவிட்டது.

ஜூலை 4 தடையை மீறி கூட்டம் கூடியது.
நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் மூவரும் கைதானார்கள்.
அடிப்படை வசதிகூட இல்லாத கோட்டையம் சிறையில் வைக்கப்பட்டனர்.

நேசமணியையே கைது செய்துவிட்டார்களா?!
தென்முனை குமுறியது.

தடை உத்தரவு இருந்த அந்த ஒரு மாத காலத்தில் தினம்தினம் தடையை மீறி பல தலைவர்கள் கைதானார்கள்.

அண்ணா ஆதரவளித்தார், ஜீவானந்தம் ஆதரவளித்தார்.

144 உத்தரவு முடியும்போது (9 எம்.எல்.ஏ உட்பட) மூணாறு தமிழருக்காகத் தடையை மீறி கைதானோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

410 !!!!!

(தொடரும்)
____________________
குருதியில் நனைந்த குமரி -2
https://m.facebook.com/photo.php?fbid=641222135981443&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment