Monday 28 December 2015

குருதியில் நனைந்த குமரி -6

குருதியில் நனைந்த குமரி -6

மார்சல் நேசமணி தலைமையிலான  ஊர்வலம் அமைதியாகத்தான் முடிந்தது.

அதே 11-08-1954 அன்று மார்த்தாண்டம்(தொடுவெட்டி) பகுதியில் புதுக்கடை எனுமிடத்தில் பி.தாணுலிங்கம்(நாடார்) தலைமையில் 5000 மக்களுடன் மற்றொரு ஊர்வலம் தொடங்கியது.

"பட்டம் ஆட்சி ஒழிக"
"போலீஸ் அராஜகம் ஒழிக"
"ஐக்கிய தமிழகம் அமைத்தே தீருவோம்"
என முழங்கியபடி குமரித் தமிழர்கள் சென்றனர்.

ஊர்வலம் நகர நகர கூட்டம் 10,000ஐத் தாண்டிவிட்டது.

இதே நேரத்தில் மார்த்தாண்டம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறி (விடுமுறை மறுக்கப்பட்டிருந்தது) ஓரணியில் திரண்டு ஊர்வலத்தோடு கலக்க வந்துகொண்டிருந்தனர்.

மலையாள காவல்துறை வழிமறித்து திரும்பி போகச் சொன்னது.
அந்த பள்ளி மாணவர்கள் மறுத்தனர்.
காவல்துறை அவர்களை கம்பால் அடித்து அவர்களுக்கு தலைமை தாங்கிய மாணவர் என்.செல்வராஜை கைதுசெய்தது.
மாணவர்கள் அவர்களை எதிர்த்து முழக்கமிட,
இதுதான் சமயம் என்று தயாராக இருந்த காவலர்கள் 9 வண்டிகளில் வந்திறங்கினர்.
திட்டமிட்டபடி ஐந்து குழுவாகப் பிரிந்து ஐந்து  இடங்களில் நின்று கொண்டு எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர்.

மக்கள் சிதறியோடினர்.
பிறகு பிணமாக வீழ்ந்தவர்களை அவசர அவசரமாக வண்டியில் தூக்கிப்போட்டனர்.
குற்றுயிராய்க் கீழே கிடந்தவர்களையும் தூக்கிப்போட்டனர்.
பல காயம்பட்டவர்களைப் பிடித்து வண்டியில் ஏற்றினர்.

அந்த குருதிபடித்த நெடுஞ்சாலையில் வண்டிகள் சென்று மறைந்தன.

பிற்காலத்தில் அக்காயம்பட்டவர்கள் குழித்துறை காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிகிறது.

அதன்பிறகு வீடு அவர்கள் திரும்பவேயில்லை.

(தொடரும்)
______________________________
குருதியில் நனைந்த குமரி -5
https://m.facebook.com/photo.php?fbid=642988709138119&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment