Tuesday 10 May 2016

திராவிடலு பகுதி-6

திராவிடலு
பகுதி-6
*************

ஆங்கிலேயர் 'திராவிடத்தை' உருவாக்கியது என்பது முன்பே ஊகித்து செய்தது அது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப்  பயன்பட்டது.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் 'உங்கள் சிறப்பை ஆராய்கிறேன் பேர்வழி' என்று கூறிக்கொள்ளும் சில ஆராய்ச்சியாளர்களையும் மதபோதகர்களை அப்பகுதி மக்களோடு கலந்துவிடுவர்.

இதைப் பொதுவாக அன்றைய அனைத்து காலணியாதிக்க நாடுகளும் செய்தன என்றாலும் ஆங்கிலேயலர் இதை மிகவும் சிரத்தையுடன் செய்தனர்.

இன்றும் 'ஆங்கில மொழி' உலகை ஆட்டிப்படைக்கக் காரணம் அன்றைய ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் சென்று அப்பகுதி மக்களின் இனவரலாறு, மதம், உணவுப்பழக்கம், பண்பாடு,மருத்துவம், கலாச்சா நம்பிக்கைகள் என அத்தனைத் தகவல்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து வைத்ததேயாகும்.
(அப்போதுதானே பிரித்தாள முடியும்!)

மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் தமிழரை ஆராய வந்த வெளிநாட்டவர் தமிழ்மேல் காதல்கொண்டு தமிழுக்குத் தொண்டு செய்து  தமிழரோடு தமிழராக
ஒன்றிவிட்டனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்தான் வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்றவர்கள்.

அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் 'திரு.ராபர்ட் கால்டுவெல்'.

'திராவிடம்' என்கிறக் கருத்தியலை உருவாக்கியவர்.

இவர் 1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.

ஸ்காட்லாந்தில் கல்வி கற்ற இவர் மொழியாராய்ச்சியிலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

கிறித்துவ மதத்தை பரப்ப 1838ல் தமிழகத்துக்கு வந்தார்.
தமிழருடன் நெருங்கிப்பழக தமிழ் கற்க ஆரம்பித்து தமிழின்மீது ஈடுபாடு அதிகமாக, தமிழர் வரலாற்றை ஆராயத்தொடங்கினார்.

தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையையும் வடமொழிகளிலிருந்து அவை முற்றிலும் வேறுபட்டவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம்' இன்றும் திராவிடவாதிகளின் வேதநூலாக உள்ளது.

இவரைப்பற்றிய விமர்சனங்களும் உள்ளன.
'சாணார்' மக்களைப் பற்றி இவர் எழுதிய நூலின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்க ஆங்கில அரசே அந்நூலைத் தடைசெய்யும் நிலையும் வந்தது
(அப்போது இவர் இரண்டு வருடங்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது).
இவர் கிறித்துவ மதத்தில் தீவிரமாக இருந்தவர் என்றும் தெரியவருகிறது.
ஆனால் இவர் தமிழுக்கு செய்த தொண்டைக் கருத்தில்கொண்டால் இவர் உண்மையில் தமிழ்ப்பற்றுள்ளவர் என்றே தெரிகிறது.

எது எப்படியோ, இவர் பிராமணரே ஆரியர் என்றோ தென்னிந்தியர் அனைவரும் ஒரே இனத்தவர் என்றோ கூறவில்லை.

இவர் எடுத்துரைத்த 'திராவிடம்' தென்னிந்திய மக்கள் பேசும் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததென்ற கருத்தியலை முன்வைக்கிறது அவ்வளவே.

திராவிடம் அல்லது திராமிடம் எனும் சொல் 'தெற்கு' எனும் பொருள்தருவதாக வடமொழியில் வழங்கிவந்ததாகக் கூறுவர்.

திராவிடப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட,
ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை பற்றிப் பாடிய பாடலில் 'திரமிட' எனும் சொல் தெற்கு என்ற பொருள்படும்படி கையாளப்பட்டுள்ளது.

"த்வ சத்ன்யாம்
மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
தஹயவாத்யா தாட்தம் திரமிட
சிசு ராசவத்யா தாவா யாத்
காவீனம்
ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா"

இப்பாடலில் ஆதிசங்கரர் திரிஞானசம்பந்தரை 'திராவிடசிசு' என்று இழிந்து கூறுவதாக திராவிடவாதிகள் மேடைதொறும் பொய்ப்பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

முட்டி மோதி உருண்டு புரண்ட பின்பு அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் இதுதான்.
இதுவும் உண்மையா என்றால் அதுவும் இல்லை.
முழுப்பாடலையும் ஆராய்கையில், இது திருஞானசம்பந்தரை புகழ்வதாகவே அமைந்துள்ளது.

"தெற்கில் ஒரு குழந்தை உன் மார்பில் பால் குடித்ததால் சிறந்த அறிவுடன் விளங்குகிறது" என்று பார்வதியை புகழ்வதாக இப்பாடல் பொருள் தருகிறது.

தவிர இதில் 'திரமிட' என்ற வார்த்தைதான் வந்துள்ளது 'திராவிட' என்று வரவில்லை.
(திராவிட- எதிலிருந்து வந்தது என்பதைப் பின்னர் விளக்குகிறேன்)
இவற்றைக் கூறியது ஏனென்றால், திராவிடம் என்ற சொல் தமிழுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதது என்பதையும்,
திராவிடம் என்ற கருத்தியலே தற்போதைய 'திராவிடக் கோட்பாட்டுக்கு' முரணானது என்பதையும் விளக்கவே.

நூறுவருடம் எடுபடாத ஒருகோட்பாடு எப்படி நடைமுறையில் திடீரென்று குதித்தது?
தமிழ்ப் பிராமணர்களே ஆரியர் என்று எப்படி நம்பவைக்கப்பட்டது?
மற்ற மொழியினரும் தம்மொழிப் பிராமணரை அந்நியராகக் கருதினரா?

தொடரும். . .

No comments:

Post a Comment