Showing posts with label புலம்பெயர் தமிழர். Show all posts
Showing posts with label புலம்பெயர் தமிழர். Show all posts

Saturday, 17 August 2024

புளித்துப்போன தலித் படங்கள்

புளித்துப்போன தலித் படங்கள்

 படம் எடுங்க பிதுக்கப்பட்ட இயக்குநர்களே!
 ஆனா உண்மைக்கு நெருக்கமா இருக்கணும்!
புலம்பெயர் தமிழர் பற்றி எடுக்கிறீர்கள்!
 அவர்களில் பெரும்பாலும் பட்டியல் சாதித் தமிழர்கள்தான்! 
 ஆனால் அவர்களுக்காக போராடியவர்கள் பெரும்பாலும் பட்டியல்சாதி கிடையாது!

 'காலா' புலம்பெயர் மும்பைத் தமிழர் பற்றிய படம் அதில் மராத்திய வெறியர்களை எதிர்கொண்டது உண்மையில் வரதராஜ "முதலியார்" தான்.

'கபாலி' மலேசியத் தமிழர் பற்றியது அங்கே ஆங்கிலேயர் காலத்தில் கூலி உயர்வு கேட்டு தமிழ்த் தொழிலாளர்களுக்காக போராடி மரண தண்டனை அடைந்தவர் மலேயா கணபதி "அகமுடையார்" தான்.

 தற்போது கோலார் தங்க வயல் பற்றிய 'தங்கலான்' படத்தில் நாயக்க, ஆங்கிலேய ஆட்சியில் பறையர்கள் நிலம் இழந்த வரலாறு பற்றி எடுக்கப்பட்டுள்ளது.
 இந்த பழி தமிழர்கள் மீதும் சோழர்கள் மீதும் போடப்படும். 
கோலார் தங்கவயல் அதாவது kgf இருட்டடிப்பு செய்யப்பட்ட பகுதி இல்லை. இந்தியாவில் முதன்முதலில் மின்சார வசதி வந்த பகுதியே கோலார்தான்.
 ஆங்கிலேயர் காலத்தில் தங்கம் எடுக்கப்பட்டு தொழிலாளர்கள் நல்லமுறையிலேயே நடத்தப்பட்டனர். கன்னடர் கைக்கு அதிகாரம் போகவும் அங்கே தங்கம் தீர்ந்துபோனது.
 அன்று நிர்கதியாக நின்ற 10,000 சுரங்கத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வெளியேற்ற நடந்த முயற்சிகளைத் தடுத்து அவர்களுக்கு மாற்று தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தவர் சுரங்கத் தொழில்நுட்ப இயக்குநராக சென்று அங்கேயே இருந்த நடராஜன் ஐயர் எனும் "பார்ப்பனர்" தான். இதை கோலார்த் தமிழர் (கிறிஸ்துவ பறையர்) அறிஞர் குணா தமது புத்தகத்தில் கூறியுள்ளார். 

 புலம்பெயர் தமிழரில் இலங்கை மலையகத் தமிழர் பற்றி அடுத்த படம் வரும் என்று நினைக்கிறேன்.
 ஆனால் அங்கேயும் அம்மக்களை காத்து நின்றவர் கோதண்டராம நடேசையர் எனும் "பார்ப்பனர்" தான்.
அவருக்கடுத்து "தொண்டைமான்" தான்.

 தென்னாப்பிரிக்கத் தமிழர் பற்றி படம் எடுத்தால் காந்தி பற்றியும் அவரது வலக்கரமாக இருந்த வி.ர.செட்டியார் மற்றும் இடக்கரமாக இருந்த தம்பி நாயுடு பற்றித்தான் எடுக்கவேண்டும்.

 அவ்வளவு ஏன் கேரளாவிற்கு புலம்பெயர்ந்துள்ள மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டுடன் இணைய போராடியபோது ஆதரவாக நின்று கைது, வழக்கு, சிறை என்று பாடுபட்டவர்கள் மார்சல் நேசமணி உட்பட குமரி "நாடார்" சாதியினர்தான்.

 மேற்கண்ட யாருமே சாதி பார்த்து அரசியல் செய்யவில்லை! தமிழராகவும் தொழிலாளராகவும் நின்றே போராடினர்.

 இது போக நீலம் பூசப்பட்ட சில படங்களும் உண்டு.
முதலில் வந்த 'மெட்ராஸ்' படம் ஆம்ஸ்ட்ராங் பற்றியது போலத் தெரியவில்லை. அதில் சாதி வெளிப்படையாகச் சொல்லப்படவும் இல்லை!

டெல்டா ஜமீன்தார் ஆதிக்கத்தை பற்றிய படம் 'அசுரன்' உண்மையில் பண்ணையாரை பலியெடுத்தவர் அமல்ராஜ் "தேவேந்திரர்" தான் ஆனால் அவருக்கு முன்பே பண்ணையார்களை அழித்தொழிப்பு செய்த கம்யூனிஸ்டுகளான சாம்பவனோடை சிவராமன் உட்பட மூன்று "அகமுடையார்கள்" சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 
 அவர்களை அடியொற்றித்தான் கோபாலகிருஷ்ண நாயுடு வெட்டி வீழ்த்தப்பட்டார்.

 'கர்ணன்' படம் கொடியன்குளம் தாக்குதலை மையப்படுத்தியது ஆனால் அப்போது போலீஸ் கன்னத்தில் கூட ஒரு அடி விழவில்லை ஆனால் போலிஸ் அதிகாரி தலையை வெட்டியதாக வருகிறது. அன்று கொடியன்குளம் கிராமத்தில் 100 பேருக்கு மேல் வெளிநாட்டில் இருந்தனர் ஆனால் ஊரையே தாண்டமுடியாத படி ஆதிக்க சாதியினர் செய்வதாக காட்டப்பட்டது.

'கேப்டன் மில்லர்' ஒரு ஈழப் போராளி பெயரில் என்னத்தையோ எடுத்து ஆங்கிலேயர் கால சாதி பாகுபாடு காட்டப்பட்டு தலித் மற்றும் இந்தியம் பிசைந்து வெளிவந்தது.

 'மாமன்னன்' பற்றி தனியே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அரசியல் பதவி கிடைத்தாலும் அவமானப்படும் ஒரு தலைவர் சபாநாயகர் ஆவது பற்றிய கதை. உண்மையில் அது  "தெலுங்கு அருந்ததியர்" தனபால் சபாநாயகர் ஆனது பற்றியது.
 அவரை அவமானப் படுத்தியது திமுக தெலுங்கு அமைச்சர்கள் சபாநாயகர் ஆக்கியது "பிராமணர்" ஜெயலலிதா!

 "நெஞ்சுக்கு நீதி" பற்றியும் தனிப் பதிவு போட்டிருக்கிறேன். எப்படி தமிழகத்தில் நடக்காத அல்லது தமிழகத்தில் தமிழர்கள் செய்யாத கொடுமைகள் தமிழகத்தில் நடப்பதாக காட்டப்பட்டு தமிழர் மீது பழிபோட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக எழுதியுள்ளேன்.

 'அயலி' இணையத் தொடர் பெண் கல்வியை மறுக்கும் சமூகமாக நம்மைக் காட்டியது. இத்தனைக்கும் தமிழகத்தின் முதல் பெண் டாக்டர் அதில் வரும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்.

 'ப்ளூ ஸ்டார்' முழுக்க கற்பனை கதை. ஹிந்திய கிரிக்கெட் அணியில் பிராமணர் ஆதிக்கம் பற்றி காட்ட முற்பட்டது. தமிழர்களுக்கும் அதில் இடம் இருந்ததில்லை. 100 ஆண்டு கிரிக்கெட் அணி வரலாற்றில் 3 (தமிழின) பார்ப்பனர் களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

 'சார்பட்டா பரம்பரை' என்பது அன்று சாதி மத பேதமில்லாமல் அமைப்பு ரீதியாக மோதிக்கொண்ட பாக்சிங் கிளப்புகள் பற்றியது ஆனால் சாதியை புகுத்தி எடுக்கப்பட்டது.
 
  இன்று "மெட்ராஸ் மொத்தமே தலித் மக்களான எங்களுக்கு தான் சொந்தம்" என ரஞ்சித் பேசுகிறார்.
 சென்னையை தெலுங்கரிடம் இருந்து மீட்டவர் ம.பொ.சி எனும் "கிராமணி நாடார்" அவரது தளபதி விநாயகம் "வன்னியர்". 

 இன்று 'சென்னையிசம்' பேசும் ரஞ்சித்தும் அவர் குறிப்பிடும் தலித் சமூகமும் அப்போது என்ன செய்துகொண்டு இருந்தனர்?!
 இவர்களது தலைவரான அம்பேத்கர் மொழிவழி மாநிலங்கள் கூடவே கூடாது என்று எதிர்த்துக் கொண்டிருந்தார்.
 
 அவ்வளவு ஏன்?! மாரி செல்வராஜ் நெல்லை வெள்ளத்தின் போது களத்திற்காவது சென்றாரே அதுபோல சென்னை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் இதே தலித் வரையறையில் வருபவர்கள்தான் அப்போது ரஞ்சித் எங்கே போனார்?!
 அதே சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு ஒரு சிறிய அரசியல் வெற்றிடம் உருவானதும் அதைப் பிடிக்க தலித் தலித் என்று கூவும் ரஞ்சித் உண்மையில் தலித்தா?!

 கிறிஸ்தவப் பறையர்கள் சட்டப்படி  பட்டியல் சாதி வரையறையில் வரமாட்டார்களே?!

 இதில் பௌத்த அரசியல் வேறு! அம்பேத்கர்  பௌத்தம் திரும்ப அழைத்தபோது அவர் சமூகம் மட்டுமே பௌத்தம் தழுவியது! 
 அம்பேத்கர் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் என்பதையும் தன் சாதிக்கென இராணுவத்தில் தனி படையணி உருவாக்கியவர் என்பதையும் அவரது பௌத்த அரசியலும் அவர் சாதி தாண்டி எடுபடவில்லை என்பதையும் தனித் தனி பதிவுகளாக விரிவாக எழுதியுள்ளேன்.

 இப்படி எந்த விதத்திலும் லாஜிக் இல்லாத குழப்பவாதிகள் தான் இந்த நீலப்பட தலித் கும்பல்! 

Friday, 14 September 2018

இனக்காப்பு

இனக்காப்பு

அந்த குளிர்மண்டல நாட்டின் ஒரு பெருநகரத்தில் 5 விண்மீன் விடுதியில் வெதுப்பூட்டப்பட்ட பெரிய அறையில் அந்த நாட்டுக்கு தொடர்பில்லாத ஒரு இனத்து மக்கள் கூடியிருந்தனர்.

அந்த நாட்டு இனத்தைச் சேர்ந்த சிலரும் அங்கே இருந்தனர்.

அது ஒரு திருமண விழாவின் மாலைநேர வரவேற்பு நிகழ்ச்சி.

பெண்கள் பலரும் தமது பண்பாட்டு உடையில் இருந்தனர்.
பல வண்ணங்கள் மின்னும் அவர்களது உடையும் அவர்கள் அணிந்திருந்த பெரிய பெரிய நகைகளும் கண்களைப் பறிக்கும் வண்ணம் இருந்தன.

சில பெண்மணிகள் மணப்பெண்ணை விஞ்சும் அளவுக்கு தங்கம் அணிந்திருந்தனர்.
பல பெண்மணிகள் குறைவாக அணிந்திருந்தனர்.
தங்கம் அணியாத பெண்மணி யாரும் காணப்படவில்லை.

ஆண்கள் பலரும் இந்நாட்டு உயர்தர உடையில் இருந்தனர்.
சிலர் பண்பாட்டு உடையிலும் இருந்தனர்.
ஆண்கள் அனைவரும் பெயருக்கு நகை அணிந்திருந்தனர்.
சிலர் அணியவில்லை.

மணமக்கள் அதிகம் பேசிக்கொள்ளாததில் இருந்து அவர்கள் முன்பே ஒருவருக்கொருவர் அதிக அறிமுகமில்லாதவர் என்பது தெரிந்தது.
ஆனாலும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர்.
மணமகன் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்.
மணமகளோ தாய்நிலத்தவர்.
அறிமுகமில்லாதவரை பெற்றோர் ஏற்பாட்டில் இத்தனை வேறுபாடுகளை மீறி எப்படித்தான் திருமணம் செய்துகொள்கின்றரோ தெரியவில்லை.

மணப்பெண் வீட்டார் அனைவரையும் விழுந்து விழுந்து வரவேற்றனர்.
மணமகன் வீட்டார் அனைவரையும் அதிகாரம் செலுத்தியபடி இருந்தனர்.
மணமகள் வீட்டாருக்கு இந்நாட்டு மொழியும் புரியவில்லை.
அதிக ஆட்களும் இல்லை.
அதனால் அவர்கள் அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தனர்.

பாட்டுக் கச்சேரி குழுவும் அவ்வினத்து மொழியில் அவ்வினத்து இசையில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.

என்னைப் பற்றி கூற மறந்துவிட்டேன்.
நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன்.
கல்லூரியில் பட்டம் பெறுவதற்காக இந்த இனத்து மக்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை அர்ப்பணிக்கவுள்ளேன்.

இந்த இனத்தில் எனக்கொரு நண்பர் உள்ளார்.
அவர் நெடுநாள் பழக்கம்.
அவரை நம்பியே இந்த ஆய்வில் இறங்கியுள்ளேன்.
அவர்தான் இங்கே அழைத்துவந்தார்.

நான் இவ்வினத்து இளம்பெண்களை நோட்டமிட்டபடி இருந்தேன்.
அதோ அங்கே ஒருத்தி இருக்கிறாள்.
அந்த கூடத்தில் ஏறத்தாழ அனைவரது கவனமும் அவள்மீது இருந்தது.

அவள் அந்த இனத்தவள்தான்.
பதினாறு அகவை இருக்கலாம்.
பொதுவாக கதைகளில் வரும் பெண்கள் அழகாக இருப்பார்கள்.
இந்த கதையிலும் அப்படித்தான்.
ஏனென்றால் அழகான பெண்களைப் பற்றித்தான் பெரும்பாலான கதை, கவிதை, காவியமெல்லாம் எழுதப்படுகிறது.

அவள் இயல்பினாலும் பருவத்தினாலும் அதியழகாய் இருந்தாள்.
ஆனால் அந்த இனத்தாரைப் போலில்லாமல் இந்த நாட்டு கவர்ச்சியான உடையில் இருந்தாள்.
ஒப்பனையும் சற்று தூக்கலாகவே இருந்தது ஆனாலும் அது அவளது அழகைப் பாதிக்கவில்லை.
நிறைய இளைஞர்கள் அவளைச் சுற்றிவந்தனர்.
அவளும் அவர்களைப் புறக்கணிப்பதாய் இல்லை.

அவள் தன்னினத்தாருடன் பேசும் மொழியில் இந்நாட்டு மொழியில் வார்த்தைகள் அதிகம் கலந்திருந்தன.
இளந்தலைமுறைப் பதுமையான அவள் மணமகனின் தங்கையாம்.
இவர்கள் இங்கே குடியேறி நான்கு தலைமுறைகள் ஆகிவிட்டதாகக் கூறினர்.
அப்படிப் பார்த்தால் இந்த தாக்கம் சற்று குறைவாகவே பட்டது.

திடீரென்று அனைவரும் விழுந்தடித்து வாசலுக்கு ஓடினர்.
ஒரு விலையுயர்ந்த மகிழுந்து வந்து நின்றது.
அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள்.
அவள் எளிமையான உடையிலும் நகைகள் எதுவும் அணியாமலும் இருந்தாள்.
அவரைப் பின்தொடர்ந்து மெய்க்காவலுக்கு இரண்டு ஆண்கள் நடந்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் உட்பட அனைவரும் அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று பணிவுடன் விருந்தோம்பல் செய்தனர்.

ஆனால் அந்த மூவரும் ஒருவித இறுக்கத்துடனே நடந்துகொண்டனர்.

என் நண்பரிடம் அவர்கள் யாரென்று கேட்டேன்.
அவர்கள்தான் அந்த இனத்திற்காக நாடுகேட்டுப் போராடிய தீவிரவாதக் குழு. இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியாட்சி நடக்கிறது.
ஆனால் இவர்கள் இன்னும் இயங்குகிறார்கள்.
இவர்கள் தமது நாட்டின் மக்கள்வாழாப் பகுதிகளிலும் புலம்பெயர் மக்கள் மத்தியிலும் தனியே ஒரு நிழல் அரசாங்கமே நடத்துகிறார்கள்.
பிற நாடுகளில் இம்மக்களுக்கு எந்த இடர்ப்பாடு என்றாலும் இவர்கள் சரிசெய்து கொடுப்பார்கள்.
இந்த நாட்டில் குடியேறிய மக்களுக்கு இந்த பெண்தான் பொறுப்பு.
இவர் தீவிரவாதப்படையின் முக்கிய தளபதியும் ஆவார்.

இப்போது பாட்டு நின்றது.
அனைவரும் இந்த கதையின் நாயகியைப் பார்த்தனர்.
அவள் மேடைக்கு சென்று ஒலிவாங்கியப் பிடித்து தொண்டையைச் செருமிக்கொண்டாள்.

மாறுபட்ட இசை ஒலிக்கத் தொடங்கியது.
அவள் தனது இனிமையான காந்தக் குரலில் பாடத் தொடங்கினாள்.
அனைவரது முகத்திலும் வியப்புடன் கலந்த மகிழ்ச்சியை என்னால் பார்க்கமுடிந்தது.

அதிலும் குறிப்பாக அந்த மூன்றுபேர் முகத்திலும் ஒரு இன்ப அதிர்ச்சி தெரிந்தது.

அங்க அசைவுகளுடன் சுதி ஏற்றியிறக்கி மெல்ல நடனமாடியபடி அவள் பாடி முடித்ததும் அனைவரும் சத்தமாக நெடுநேரம் கைகளைத் தட்டினார்கள்.

அப்படியென்ன பாடிவிட்டாள் என்று என் நண்பனிடம் கேட்டேன்.

அவள் முப்பது ஆண்டுகள் பழமையான ஒரு பாடலைப் பாடியுள்ளாள்.
அது ஒரு திரைப்படப் பாடல்.
அதில் ஒரு கன்னிப்பெண் இரவில் தனிமையில் தன் காதலனை நினைத்து ஏக்கத்துடன் பாடும் பாடல்.
நாட்டுப்புற நடையில் இருந்த அந்த பாடலை இந்த புலம்பெயர்ப் பதுமை மிக நேர்த்தியாகப் பாடியுள்ளாள் என்பதே இந்த கைதட்டலுக்குக் காரணம்.

ஆம். அவள் என் கண்களுக்கு முன்னே உண்மையிலேயே அந்த 'ஏங்கும் பெண்ணாகவே' மாறிவிட்டிருந்தாள்.

இப்போது அந்த தீவிரவாதப் பெண் எழுந்துசென்று அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாராட்டி தோளில் தட்டிக்கொடுத்தார்.

பிறகு விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார்.
போகும்போது ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டுப் போயினர்.

இப்போது ஒவ்வொருவராக அனைவரும் மேடை நோக்கி விரைந்தனர்.
அவள் வாழ்த்துமழையில் நனைந்தபடி மேடையை விட்டு இறங்கினாள்.

நானும் அவளைப் பாராட்டும் சாக்கில் அவளை நோக்கி சென்றேன்.
அருகில் நின்று அவளது முகத்தைப் பார்த்தேன்.

அந்த தீவிரவாதத் தலைவியின் முகச்சாயலே அதில் தெரிந்தது.

Monday, 2 April 2018

தென்கொரியத் தமிழர்களின் ஆதரவு

உலகின் மறுமூலையில்...

தென்கொரியா தலைநகர் சியோல் (seoul) நகரில் வாழும் தமிழர்கள்,
தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1192340730869578&id=100002809860739

Tuesday, 3 October 2017

தமிழகம் - பொருளாதாரமும் இடப்பெயர்வும்

தமிழகம் - பொருளாதாரமும் இடப்பெயர்வும்

[ ] இவ்வகை அடைப்புக் குறியில் இருப்பது எனது சொந்த கருத்து.

[இந்த பதிவில் தமிழகத்தில் பிறந்த குடிமக்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன,
  அதாவது தமிழகத்தில் பிறந்தோர் எந்த இனமானாலும் தமிழகத்தார் என்று குறிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 85% வரை தமிழினத்தார் இருக்கலாம்.
இதில் பிற மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் பிறந்த தமிழர்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை]

இப்பதிவில் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் 2016 ஆம் ஆண்டு "Tamil nadu Migration Survey (TMS)" சார்பாக பேரா.எஸ்.இருதய ராஜன் தலைமையேற்ற குழுவினரால் வெளியிடப்பட்ட "Non-Resident Tamils and Remittances" எனும் ஆவணத்தின் அடிப்படையில் இருக்கும்.
மேலும் இதில் தரப்பட்டுள்ள விபரங்கள் மிகவும் துல்லியமானவை கிடையாது.
------------------------------------------
தமிழகம் (சுருக்கமாக) :--

இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களில் தமிழ்நாடு 1,30,058 ச.கி.மீ பரப்பளவு கொண்ட 11வது பெரிய மாநிலம் ஆகும்.

மக்கட்தொகையில் 6வது மாநிலம் ஆகும்.
(இந்திய மக்கட்தொகையில் 6%).

ஆனால்,

தமிழகம் தனது உள்ளக உற்பத்தி (domestic product) மூலம் இந்தியாவில் இரண்டாவது பணக்கார மாநிலம் என்ற இடத்தை பிடிக்கிறது.
(Economy= 4789 billion or 71 billion dollars)

அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தில் (152510 billion) 31% தமிழகத்திடம் உள்ளது.

பிற எந்த மாநிலத்தையும் விட அதிகமான வணிக நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன
(இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் 11%).

வேலைவாய்ப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது
(இந்திய வேலைவாய்ப்பில் 10%).

[இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்கவும் வேலைசெய்யவும் பிற மாநிலத்தார் பெருமளவில் குடியேறக் காரணம்]
----------------------------------------------
பிறமாநிலங்களில் தமிழகத்தார் (சுருக்கமாக) :-

இந்திய ஒன்றியத்திற்கு  உள்ளேயே பிற மாநிலங்களில் வாழும் தமிழகத்தார் ஏறத்தாழ 19 லட்சம்.

[இதிலே 85% மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் வாழும் தமிழினத்தாரை சேர்த்தால் பிற மாநிலத் தமிழினத்தார் எண்ணிக்கை 50 லட்சம் வரை வரும்]

இது வெளிநாடுவாழ் தமிழகத்தாரை விடவும் சற்று குறைவு ஆகும்.
தோராயமாக 10 ல் 1 வீட்டில் ஒருவர் வெளிமாநிலத்தில் உள்ளார்.

தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவிற்குள் வாழும் தமிழ்நாட்டினர் 100% என்றால்
அவர்கள் மாநிலங்கள் வாரியாக
கர்நாடகா 43.1%
கேரளா 18.5%
மகாராஷ்ட்ரா 12.8%
ஆந்திரா 8.1%
என்றவாறு இருக்கின்றனர்.

[வடயிந்தியாவில் மிகவும் குறைவு.
இதனால்தான் 'இந்தியாவில் வேலை கிடைக்க இந்தி படிக்கவேண்டும்' என்று கூறுவோருக்கு அதை விட அரபி படிப்பது மேல் என்று பதிலடியாகக் கூறுவர்.]

அதாவது தமிழ்நாட்டில் பிறந்து உள்நாட்டில் வேலைக்குச் செல்வோரில் மிக அதிகமானோர் கர்நாடகாவிற்கு சென்றுள்ளனர்.
(இதேபோல வெளிமாநிலம் போய் சம்பாதித்துவிட்டு வந்தோரில் 39% கர்நாடகா போய்விட்டு வந்தோர் ஆவர்)
இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள்.
கர்நாடகாவில் உள்ள வெளிமாநிலத்தாரில் பாதிக்கும் மேல் தமிழகத்தாரே உள்ளனர்.

[இதுவே கர்நாடக அரசியல் தமிழர் எதிர்ப்பையே மையமாகக் கொண்டுள்ளமைக்கு முக்கிய காரணம்.
கர்நாடகாவில் அதிலும் தென் கர்நாடக மாவட்டங்களில் மட்டும் 7 லட்சம் தமிழகத் தமிழ்-இனத்தார் உள்ளனர்.
தென் கர்நாடகமே தமிழர்களுக்குச் சொந்தமானதுதான்.
அதில் இருக்கும் பூர்வீகத் தமிழினத்தாரை இதில் சேர்க்கவில்லை.]
------------------------
வெளிநாடுவாழ் தமிழகத்தார் (சுருக்கமாக) :-

தமிழகத்தின் மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஏழரை கோடி.

இதில் தற்போது வெளிநாடுகளில் இருப்போர் (emigrants) தோராயமாக 35 லட்சம் பேர்.

புலம்பெயர் தமிழகத்தார் அதிகம் உள்ள நாடுகள்
சிங்கப்பூர் = 4 லட்சம் பேர்
ஐ.அ.எமிரேட்ஸ்(துபாய்) = 4 லட்சம்
சவுதி அரேபியா = 3.5 லட்சம்
அமெரிக்கா = 3 லட்சம்
மலேசியா = 1.9 லட்சம்
என்றவாறு உள்ளன.

(வளைகுடா நாடுகளான ஐ.அ.எ, சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் மட்டும் 11.5 லட்சம் தமிழகத்தார் உள்ளனர்)

வெளிநாட்டிற்கு சென்றுள்ளோரில் 73% பேர் வேலை நிமித்தமாக சென்றுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு செல்வோர் மிக அதிகமாக
சென்னை (3.2 லட்சம்)
கோயம்புத்தூர் (1.9 லட்சம்)
ராமநாதபுரம் (1.4 லட்சம்)
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர்.

தாலுகா படி பார்த்தால்
ராமநாதபுரம் தாலுகா (92,915 பேர்)
திருச்செந்தூர் (63,892 பேர்)
அகஸ்தீஸ்வரம் (63,100 பேர்)
ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தோர் அதிகம் வெளிநாடு சென்றுள்ளனர்.

தேனி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவானோரே வெளிநாடு செல்கின்றனர்.

தாலுகா படி உடுமலை, சங்கரி, கோபிச்செட்டி பாளையம், திருச்செங்கோடு தாலுகாக்களில் மிகவும் குறைவானோரே வெளிநாடு சென்றுள்ளனர்.
------------------------------------
தமிழகம் - குடியேற்றமும் வெளியேற்றமும் (விரிவாக) :-

கீழ்க்கண்டவை 2001 ல் இருந்த நிலை ஆகும்

  தமிழகத்தில் குடியேறியுள்ளோர் பற்றி பார்த்தால்
மார்வாடிகள் ராஜஸ்தானிலிருந்து குடியேறி பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்பதால் பலரும் குடும்பத்துடன் குடிவருகிறார்கள்.

  இதற்கடுத்து தஞ்சாவூரில் குடியேறியுள்ள மராத்தியர்கள் குறிப்பிடத்தகுந்தோர்.

மேற்கண்டோர் இப்பதிவில்  கணக்கில் எடுக்கப்படவில்லை.

1991ல் தமிழகத்திற்கு பிறமாநிலத்தார் 9 லட்சம் பேர் குடிவந்துள்ளனர்.
இதனால் மக்கட்தொகையில் 1.6% அதிகரித்தது.
(அதேநேரத்தில் 2.7% தமிழகத்தார் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்)

2001 ல் தமிழகத்திற்கு பிறமாநிலத்தார் 8 லட்சம் பேர் குடிவந்துள்ளனர்.
இதனால் மக்கட்தொகையில் 1.3% அதிகரித்தது.
(அதேநேரத்தில் 2.8% தமிழகத்தார் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்)

2001 ல் வந்த 8 லட்சம் பிறமாநிலத்தாரில் 2 லட்சம் பேர் கிராமப்புறங்களுக்கும் 6 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கும் குடியேறியுள்ளனர்.

மிக அதிகமாக 2.4 லட்சம் பேர் சென்னைக்கு குடி வந்துள்ளனர்.
இதற்கடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1.1லட்சம் பேர் குடி வந்துள்ளனர்.
இதற்கு கோயம்புத்தூர் (62,000 பேர்).

மாவட்ட மக்கட்தொகை சதவீதப்படி நீலகிரியில் மிக அதிகமாக பிறமாநிலத்தார் இருக்கின்றனர் (6.8%).
இதற்கடுத்தவை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் (5.5% பிறமாநிலத்தார்).
மிகக்குறைவு விருதுநகர் ஆகும் (0.2%).

குடியேறியுள்ள பிறமாநிலத்தாரில் மூன்றில் ஒரு பங்கினர் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக தங்கி உள்ளனர்.
பிறமாநிலத்தார் சராசரியாக 17 ஆண்டுகள் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கூறலாம்.

மிக முக்கியமான விடயம் குடியேறியோரில் ஆண்களை விட பெண்கள் 2% அதிகம்.
பெண்கள் தங்கும் சராசரி காலமும் 2 ஆண்டுகள் அதிகம்.

தமிழகத்திற்கு 2001ல் குடிவந்தோர் 100% எனில்,
கேரளத்தார் 33%,
ஆந்திர பிரதேசத்தார் 21%
கர்நாடகா15% 
ராஜஸ்தானியர் 5%
மகாராஷ்டிரர் 5%
என்ற அளவிலும் பிறமாநிலத்தார் குடிவந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் கர்நாடகா போன தமிழகத்தார், வந்த கர்நாடகத்தாரை விட இருமடங்கு ஆவர்.
மகாராஷ்ட்ராவும் அவ்வாறே.

ஆனால் ஆந்திரா, கேரளா மாநிலத்தார் அப்படியே தலைகீழ்,
குடிபோனவரை விட வந்தவரே அதிகம்.
  (தமிழகத்திற்கு 1991ல் குடிவந்தோரில் 40% கேரளத்தார் ஆவர்)

(1991, 2001 கணக்கெடுப்பு இரண்டையும் சேர்த்து)
இந்திய அளவில் மிக அதிகமாக குடிவந்தார் திரும்பச் சென்றது
கேரளா (91,500 பேர் வெளியேற்றம்)
ஆந்திரா (18,500 பேர் வெளியேற்றம்)
ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது.

[இவ்விரு மாநிலத்தாரும் பிற மாநிலத்தவரை விரும்புவதில்லை.
விரட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்]

1991 நிலவரப்படி
இந்திய அளவில் அதிக அளவில் பிறமாநிலத்தார் வாழ்வது
கேரளா (40%)
ஆந்திரா (21%)
கர்நாடகா (14%)
பாண்டிச்சேரி (9%)

அதிக அளவில் பிறமாநிலங்களுக்கு சென்றது
கர்நாடகா (31%)
கேரளா (17%)
ஆந்திரா (15%)
பாண்டிச்சேரி (11%)
ஆகிய மாநிலத்தார்
அதாவது தென்னிந்தியாவில்தான் அதிகம் குடிபோகலும் குடிவரலும் நடந்துள்ளது.

[இதற்கு காரணம் அண்டை மாநிலங்கள் தமிழர் எல்லை பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதே,
ஒரே மொழி பேசுவோருக்குள்ளேதான் அதிக போக்குவரத்து இருக்கும்.
அண்டை மாநிலத் தமிழினத்தார் இங்கு வருவதும் இங்கு உள்ள தமிழினத்தார் அந்த எல்லைப் பகுதிகளுக்கு போவதும் இவ்வாறு பதிவாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில்
புதுச்சேரிக்கும் தமிழகத்திற்குமான குடியேறல் போக்குவரத்து உள்ளது.
புதுச்சேரியின் பிறமாநிலத்தார் பெரும்பாலும் தமிழகத்தார் ஆவர் ]

2001 நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பிறமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் வாழ்வோர் மிக அதிகமாக
கேரளத்தார் 2,24,000 பேர்
ஆந்திரர் 1,22,119 பேர்
கர்நாடகா 74,000 பேர்
ராஜஸ்தானியர் 36,000 பேர்
மகாராஷ்டிரர் 32,000 பேர்
என்றவாறு உள்ளனர்.
(மொத்த பிறமாநிலத்தார் 6,00,000).
[ஏற்கனவே கூறியபடி இங்கேயே பிறந்த பிறமொழியினர் இந்த கணக்கில் இல்லை]

இதே போல வெளிமாநிலங்களில் தமிழகத்தார் மிக அதிகமாக
கர்நாடகாவில் 4,30,000 பேர்
மகாராஷ்ட்ராவில் 2,60,000 பேர்
ஆந்திராவில் 1,00,000 பேர்
வாழ்பவர்களாக இருந்துள்ளனர்.
(மொத்தம் 12,13,000 தமிழகத்தார்)

வெளிமாநிலம் செல்லும் தமிழகத்தாரில் 18% படிக்காதவர் ஆவர்.
---------------------------------------------
தமிழகம் (விரிவாக) :-

மக்கட்தொகை ஏற்ற-இறக்கம் :

1991 வரை பிறப்பு விகிதம் (மிகச் சரியான அளவில்) 2.1 என்றிருந்தது.
பிறகு படிப்படியாகக் குறைந்து மக்கட்தொகைக் குறைப்பில் கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
அதாவது இரண்டு தாய்-தந்தை இருந்தால் அவர்களுக்கு மூன்று குழந்தை (அதாவது 4 பேர் இருந்த இடத்தில் 3 பேர்) என்ற அளவில் பிறப்பு விகிதம் 1.5 என்று ஆகிவிட்டது.
(குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு அதனால் இந்த 1.5 அளவாவது இருக்கிறது)
மாவட்ட அடிப்படையில் நீலகிரி மக்கட்தொகை மிக வேகமாகக் குறைந்து வருகிறது (fertility= -0.4)

[இது இந்திய அரசால் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
தமிழர்கள் எண்ணிக்கை குறையும் அதேநேரத்தில் இந்திக்காரர்கள் அதிக குழந்தைகள் பெற்று நாடு முழுவதையும் நிறைத்துவருகின்றனர்]

தமிழகம் ஒரு வயதான மாநிலமாக (ageing state) ஏற்கனவே உள்ளது.
அதாவது 60 வயதைத் தாண்டியோர் 7% க்கு மேல் இருந்தால் முதிய மாநிலம் ஆகும்.
இந்நிலையில் குழந்தை பிறப்பும் நான்கில் ஒரு பங்கு குறைந்துவிட்டதால் விரைவில் உழைக்கும் இளைய சமுதாயம் இன்றி தமிழகம் தடுமாறும்.
2031 க்கு பிறகு மக்கட்தொகை வேகமாக சரியத் தொடங்கும்.
இது வெளியாட்கள் குடியேற வசதியாக இருக்கும்.

[எனவே இனியேனும் தமிழர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிக மிக அவசியம் ஆகும்]
- - - - - - - - - - - - - -
எழுத்தறிவு :-

எழுத்தறிவில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது (80%).

எழுத்தறிவில் கன்னியாகுமரி (94%), சென்னை(93%), நீலகிரி (92%), தூத்துக்குடி(91%) ஆகிய மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன.
தர்மபுரி(77%), கிருஷ்ணகிரி(79%), சேலம்(80%) ஆகியன கடைசியாக வருகின்றன.
(இந்தியா முழுக்க எழுத்தறிவு 74%).

பெண்கள் ஆண்களை விட எழுத்தறிவில் பின் தங்கியுள்ளனர் (75%).
(இந்த பின்தங்கல் 1981 க்கு பிறகு வேகமாகக் குறைந்து வருகிறது).

ஆண்கள் சராசரியாக பத்தாம் வகுப்பும் பெண்கள் சராசரியாக ஏழாம் வகுப்பும் படித்துள்ளனர்.
- - - - - - - - - -
வேலைவாய்ப்பு :-

15 வயதுக்கு மேற்பட்டோரில் 52% தமிழகத்தார் நல்ல வருமானம் தரும் வேலையில் உள்ளனர்.
15 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
இவர்களில் பாதியளவு உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிலும் பெண்களே அதிகம் வேலையின்றி இருக்கின்றனர்.

வேலைசெய்வோரில் அதிக சதவீதம் பெண்கள் உள்ள மாவட்டங்கள்
ராமநாதபுரம்(45%), திருநெல்வேலி(42%), ஈரோடு(39%), மதுரை(37%), பெரம்பலூர்(33%) என்றவாறு செல்கின்றன.
 
வேலைவாய்ப்பு பெற்றோரில்
32% விவாசாயத் துறையிலும்
8% உடலுழைப்பு தொழிலும்
7% சொந்த தொழிலிலும்
இருக்கிறார்கள்.

தமிழகம் வேலையில்லாத் திண்டாட்டத்தில் எட்டாவது மாநிலம் ஆகும்

வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக வேலூர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சாவூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிலவுகிறது.
- - - - - - - - - - -
வீட்டுவசதி :-

தமிழகத்தில் ஆடம்பர வீடுகள் சென்னை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
(பெரும்பாலும் வெளிநாட்டு பணம் வரும் மாவட்டங்கள் ஆகும்)

ஆடம்பர வீடுகளோடு வசதியான வீடுகளையும் சேர்த்து பார்த்தால்
சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம்
என்றவாறு செல்கிறது.

சொந்தவீடு வைத்திருப்போரில்
7% பேர் கார் வைத்துள்ளனர்.
8% பேர் ஏ.சி வைத்துள்ளனர்.
14% பேர் கணினி வைத்துள்ளனர்.
41% குளிர்சாதனப்பெட்டி வைத்துள்ளனர்.
62% பேர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர்.
--------------------------------------
வெளிநாடுவாழ் தமிழகத்தார் (விரிவாக) :-

புலம்பெயர் வரலாறு :

தமிழகத்திலிருந்து வெளிநாடு போவது 1830களில் அதிகம் நடந்தது.
அக்காலகட்டத்தில் 1லட்சம் பேர் பஞ்சம் காரணமாக மதராஸ் மாகாணத்தை விட்டு சென்றுள்ளனர்.
இதில் 46,500 இலங்கைத் தீவுக்கு சென்றுள்ளனர்.
தரங்கம்பாடியில் (Tranquebar) இருந்த டானிஷ்காரர்கள் அதவாது டென்மார்க் நாட்டினர் தமிழர்களை அடிமைகளாக வாங்கி விற்ற குறிப்புகள் உள்ளன.

1833 வாக்கில் பல ஆயிரம் பேர் மலாயா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.

1843-1867 க்குள் 5,37,000 பேர் இலங்கை சென்றனர்.
அதில் ஒரு லட்சம் பேர் திரும்பிவரவில்லை.
அதன்பிறகு 1877-1878 ல் மேலும் 1,50,000 பேர் இலங்கை சென்றுள்ளனர்.

1876 வாக்கில் பர்மாவுக்கும் பல ஆயிரம் பேர் சென்றுள்ளனர்.

இதுபோக பிரெஞ்சு காலணியான பாண்டிச்சேரியில் இருந்து 5,33,600 பேர் பல்வேறு பிரெஞ்சு காலணிகளுக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் 1842 மற்றும் 1870 ஆகிய ஆண்டுகளில் 1,12,000 மட்டுமே திரும்பியுள்ளனர்.

1970களில் மீண்டும் வளைகுடா நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர்.

சமீபத்தில் 2006 வாக்கில் அதிகமாக இருந்தது.
2009 க்குப் பிறகு மிகவும் குறைந்துவிட்டது.
- - - - - - - - -
வெளிநாட்டு வருமானம் :

இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் மற்றும் கேரளா ஆகியன தமது உழைக்கும் இளைய சமுதாயத்தை இழந்து வருவதில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

வெளிநாட்டு தமிழகத்தாரால் 2015ல் மட்டும் ஏறத்தாழ 62000கோடி ரூபாய் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது (remittance).

கேரளாவுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு பணம் வருவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் ஆந்திராவும்
நான்காவது இடத்தில் உத்திர பிரதேசமும் உள்ளன.

வெளிநாட்டு பணம் அதிகம் வரும் மாவட்டங்கள்
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி என்றவாறு செல்கிறது.

இந்த பணத்தை தமிழக மக்களுக்கு பங்கிட்டால் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் மாதம் ரூ.708 கிடைக்கும்.
ஆண்டுக்கு ரூ.8500 கிடைக்கும்.
இதைச் சேர்த்து தமிழகத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000.

வெளிநாட்டு வருவாயைச் சேர்க்காத தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ 66,500 ஆகும்.
இதன்படி தமிழகம் எட்டாவது இடம்தான் என்றாலும்
இந்தியாவின் மொத்த தனிநபர் வருமானத்தைப் போல இது ஒன்றரை மடங்கு ஆகும்.

தமிழகத்தில் 10 ல் 1 வீட்டில் வெளிநாடு செல்பவர் உள்ளார்.

தமிழகத்தின் உள்ளக உற்பத்தியைப்போல வெளிநாட்டு வருமானம் 1/7 மடங்கு ஆகும்.
அதாவது வெளிநாடு மூலம் வரும் பணம் ஒரு ஆண்டு வருமானத்தை ஏழு ஆண்டுகளில் நிறைவு செய்யும்.

(ஒப்பீட்டுக்காக கேரளாவை நோக்கினால் வெளிநாட்டு கேரளத்தினர் தமிழர்களை விட சற்று அதிகம்,
2015ல் மட்டும் 68000கோடி அனுப்பியுள்ளனர்!)

வெளிநாடு போயிருப்போர் மற்றும் வெளிநாடு போகாதோரை ஒப்பிட்டால்
வெளிநாடு போயிருப்போர் சராசரியாக தலைக்கு
மாதத்திற்கு 17,500 ரூ சம்பாதிக்கிறார்.
வெளிநாடு போகாதோர் சராசரியாகத் தலைக்கு
மாதம் 12,000 ரூ சம்பாதிக்கிறார்.

அதாவது ஒரு வெளிநாடுபோனவர் மாத வருமானமானது, வெளிநாடு போகாத ஒருவரை விட சராசரியாக ரூ.5,500 அதிகம்.
- - - - - - - - -
வெளிநாடு பற்றிய கூடுதல் தகவல்கள் :-

வெளிநாடு போவோரில்
17% பொறியாளரும்
13% கணினி பொறியாளரும்
அடங்குவர்.

3ல் ஒரு பங்கினர் 20-34 வயதில் வெளிநாடு சென்றுள்ளனர்.

வெளிநாடு போக ஆகும் செலவு சராசரியாக தலைக்கு ரூ.1,08,000 ஆகிறது.

வெளிநாடு செல்வோரில் 5% ஆண்களும் 20% பெண்களும் படிப்பறிவில்லாதோர்.

வெளிநாடு போய் சம்பாதித்து திரும்பிவிட்டோர் அதிகமாக சவுதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் (துபாய்) போய்வந்துள்ளனர்.
இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா நாடுகள் வருகின்றன.

முதல்முறையாக வெளிநாடு போகும்போது பாதிக்கும் அதிகமானோர் திருமணம் ஆகியவராக இருந்தனர்.

கணவர் வெளிநாட்டில் இருக்கும் மனைவியர் எண்ணிக்கை தோராயமாக 10 லட்சம்

தமிழக இசுலாமியர் தமது சதவீதத்திற்கு ஏற்ப இந்துக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக வெளிநாடு செல்கின்றனர்.

கீழே இருப்பது குறிப்பிட்டோரை தேர்ந்தெடுத்து வினா-விடை முறையில் எடுத்த கணக்கெடுப்பு ஆகும்

வெளிநாடு போய்வருவோரில்
63% சரியான சாப்பாடு கிடைக்காமலும்
50% வரை இருப்பிடம் கிடைக்காமலும்
90% வரை மருத்துவ வசதி வழங்கப்படாமலும் உள்ளனர்.

91% தமிழகத்தார் தமக்கு வெளிநாடுகளில் பிரச்சனை வந்தபோது இந்திய தூதரகத்திற்கு செல்லவில்லை
[காரணம் அவர்கள் தமிழர்களுக்கு உதவமாட்டார்கள்].

வெளிநாடு போவோரில் முக்கால்வாசிப்பேர் மறுமுறை போவதில்லை.

திரும்பி வந்தோரில்
37% பேர் ஒப்பந்தம் முடிந்ததாலும்
19% பேர் மோசமாக நடத்தப்பட்டதாலும்
9% உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும்
8% பேர் சம்பளம் போதாமையாலும்  திரும்பிவிட்டனர்.

வெளிநாட்டு பணம்
31% வீடு கட்டுவதிலும்
15% (வரதட்சணை உட்பட) திருமணத்திற்கும் செலவு செய்யப்படுகிறது.

புலம்பெயர் தமிழகத்தாரில் 15% பெண்கள் ஆவர்.
பெண்கள் அதிகம் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
தற்போது செல்வோர் அதிகம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

பெண்களில் அதிகம் திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், தேனி மாவட்டத்தினர் ஆவர்.

வெளிநாட்டில் துணையை பிரிந்து இருப்போரில்
30% பேர் உறவு நல்லநிலையில் இருப்பதாகவும்
63% பேர் சரியாக இருப்பதாகவும்
7% பேர் உறவு முறிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

திருமணமானோரில் 54% பேர் இரண்டாம் முறை வெளிநாடு செல்வதில்லை.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தமது மகளுக்காக பெரும்பாலும் (80%) வெளிநாட்டு மாப்பிள்ளையை விரும்புவதில்லை.
---------------------------------------------------
தமிழகத்தின் உள்ளேயே இடப்பெயர்வு :-

தமிழகத்திற்கு உள்ளேயே (பெரும்பாலும் வேலைக்காக) இடம்பெயர்ந்தோர் 25% ஆவர்.
இதில் பாதியளவு பெண்கள் (திருமணம் காரணமான இடம்பெயர்வு).
இது இந்தியாவின் 'மாநிலத்திற்கு உள்ளேயான இடப்பெயர்வு சதவீதமான' 31% ஐ விட குறைவு.
கிராமப்புற மற்றும் நகரப்புற இடப்பெயர்வும் கூட 0.5% வேறுபாடே உள்ளது.

(ஆலைகளில் வேலைவாய்ப்பு பெற்றதால்) இடம்பெயர்ந்துள்ள பெண்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் திருப்பூர்(44%), நாமக்கல்(41%), கோவை(36%) ஆகியன.
அதாவது தமிழகத்தார் மாநிலம் முழுவதும் சீரான அளவில் உள்ளனர்.
கிராமங்கள் வளர்ச்சி இன்றி மக்கள் நகரங்களில் குவிவது மிகவும் குறைவாக உள்ளது.
--------------------------------------
தமிழகத்தில் வெளிநாட்டார் :-

2001 நிலவரப்படி தமிழகத்தில் குடியேறியுள்ள பிற நாட்டினர் மிக அதிகமாக
இலங்கை 80,000
[ஈழம் நமது தமிழர் நாட்டின் ஒரு பகுதி என்பதை மறக்கவேண்டாம்]
மியான்மர் 20,000
நேபாளம் 2600
மலேசியா 2400
------------------------------------
[முடிவாக,
பல இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் நல்லநிலையில் உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதுதான்.
தமிழக உரிமைகள் ஒன்றொன்றாகப் பறிக்கப்பட்டு நமது உடைமைகள் ஒவ்வொன்றாக இந்திய தேசியத்தின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய மத்திய அரசு தனது முழு பலத்தையும் தமிழகத்தின் மீது பயன்படுத்துகிறது.
உழைப்பும் திறமையும் தமிழருடையது, ஆனால் பங்கு மட்டும் எல்லாருக்கும் கொடுக்கவேண்டும்.
விளங்கும்படி சொன்னால் நாம் ஒரு ரூபாய் வரி கட்டி 34பைசா திரும்பப்பெறுகிறோம்.
இந்தி மாநிலங்கள் ஒரு ரூபாய் கட்டி 3,4 ரூபாய் வரை பெறுகிறார்கள்.
இதுதான் அப்பட்டமான உண்மை.
இதற்குப் பெயர்தான் இங்கே ஒற்றுமை.

தனிநாடாகும் அத்தனை தகுதிகளும் தேவைகளும் நமக்கு உள்ளன.
நாம் ஓரளவு வலிமையாக இருக்கும்போதே விழித்துக்கொள்வது நல்லது.
நமக்கு தண்ணீரோ பாதுகாப்போ கூட கொடுக்கமுடியாத இந்த இந்திய ஒன்றியத்தில் உழைத்துக்கொட்டியபடி நாம் ஒரு மூலையில் கிடக்கவேண்டுமா?]

Wednesday, 14 June 2017

பர்மா தமிழர்களின் பரிதாப நிலை

பர்மா தமிழர்களின் பரிதாப நிலை

2008 ல் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.
1,00,000 தமிழர்கள் வீடிழந்தனர்.
நர்கீஸ் புயலில்.
மியான்மர் (பர்மா) அரசாங்கம் மருந்துக்கு கூட  தமிழர்களுக்கு உதவவில்லை.

இந்த கொடுமை தாய்நிலத் தமிழர்களுக்கு கூட தெரியாது.

தமிழருக்கான அரசு இல்லாது போனாலும்
தமிழர்மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகம் கூட இல்லாததே இதற்குக் காரணம்.

2012 க்குப் பிறகு இணையப் புரட்சியால் முகநூல் ஓரளவு தமிழின ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது.
இது எத்தனை காலத்திற்கோ தெரியவில்லை.

நாடில்லாத இனம் நாதியற்று சாகும்.

தகவல்:
து.ரவிக்குமார்,
சட்டமன்ற உறுப்பினர்,
காட்டுமன்னார்கோயில்,
பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
(27-05-08 அன்று முதலமைச்சருக்கு எழுதிய மடல்)

Friday, 26 May 2017

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.

ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.

அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.

ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.

இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.

அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.

அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.

ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.

காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.

ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.

ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.

வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.

மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.

1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)

1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.

அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.

1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.

1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.

பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.

இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.

அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.

மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.

கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.

1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.

1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!

லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர்  கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.

ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.

சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.

தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.

அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.

1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.

மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.

ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.

படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்