Tuesday 3 October 2017

தமிழகம் - பொருளாதாரமும் இடப்பெயர்வும்

தமிழகம் - பொருளாதாரமும் இடப்பெயர்வும்

[ ] இவ்வகை அடைப்புக் குறியில் இருப்பது எனது சொந்த கருத்து.

[இந்த பதிவில் தமிழகத்தில் பிறந்த குடிமக்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன,
  அதாவது தமிழகத்தில் பிறந்தோர் எந்த இனமானாலும் தமிழகத்தார் என்று குறிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 85% வரை தமிழினத்தார் இருக்கலாம்.
இதில் பிற மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் பிறந்த தமிழர்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை]

இப்பதிவில் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் 2016 ஆம் ஆண்டு "Tamil nadu Migration Survey (TMS)" சார்பாக பேரா.எஸ்.இருதய ராஜன் தலைமையேற்ற குழுவினரால் வெளியிடப்பட்ட "Non-Resident Tamils and Remittances" எனும் ஆவணத்தின் அடிப்படையில் இருக்கும்.
மேலும் இதில் தரப்பட்டுள்ள விபரங்கள் மிகவும் துல்லியமானவை கிடையாது.
------------------------------------------
தமிழகம் (சுருக்கமாக) :--

இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களில் தமிழ்நாடு 1,30,058 ச.கி.மீ பரப்பளவு கொண்ட 11வது பெரிய மாநிலம் ஆகும்.

மக்கட்தொகையில் 6வது மாநிலம் ஆகும்.
(இந்திய மக்கட்தொகையில் 6%).

ஆனால்,

தமிழகம் தனது உள்ளக உற்பத்தி (domestic product) மூலம் இந்தியாவில் இரண்டாவது பணக்கார மாநிலம் என்ற இடத்தை பிடிக்கிறது.
(Economy= 4789 billion or 71 billion dollars)

அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தில் (152510 billion) 31% தமிழகத்திடம் உள்ளது.

பிற எந்த மாநிலத்தையும் விட அதிகமான வணிக நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன
(இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் 11%).

வேலைவாய்ப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது
(இந்திய வேலைவாய்ப்பில் 10%).

[இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்கவும் வேலைசெய்யவும் பிற மாநிலத்தார் பெருமளவில் குடியேறக் காரணம்]
----------------------------------------------
பிறமாநிலங்களில் தமிழகத்தார் (சுருக்கமாக) :-

இந்திய ஒன்றியத்திற்கு  உள்ளேயே பிற மாநிலங்களில் வாழும் தமிழகத்தார் ஏறத்தாழ 19 லட்சம்.

[இதிலே 85% மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் வாழும் தமிழினத்தாரை சேர்த்தால் பிற மாநிலத் தமிழினத்தார் எண்ணிக்கை 50 லட்சம் வரை வரும்]

இது வெளிநாடுவாழ் தமிழகத்தாரை விடவும் சற்று குறைவு ஆகும்.
தோராயமாக 10 ல் 1 வீட்டில் ஒருவர் வெளிமாநிலத்தில் உள்ளார்.

தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவிற்குள் வாழும் தமிழ்நாட்டினர் 100% என்றால்
அவர்கள் மாநிலங்கள் வாரியாக
கர்நாடகா 43.1%
கேரளா 18.5%
மகாராஷ்ட்ரா 12.8%
ஆந்திரா 8.1%
என்றவாறு இருக்கின்றனர்.

[வடயிந்தியாவில் மிகவும் குறைவு.
இதனால்தான் 'இந்தியாவில் வேலை கிடைக்க இந்தி படிக்கவேண்டும்' என்று கூறுவோருக்கு அதை விட அரபி படிப்பது மேல் என்று பதிலடியாகக் கூறுவர்.]

அதாவது தமிழ்நாட்டில் பிறந்து உள்நாட்டில் வேலைக்குச் செல்வோரில் மிக அதிகமானோர் கர்நாடகாவிற்கு சென்றுள்ளனர்.
(இதேபோல வெளிமாநிலம் போய் சம்பாதித்துவிட்டு வந்தோரில் 39% கர்நாடகா போய்விட்டு வந்தோர் ஆவர்)
இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள்.
கர்நாடகாவில் உள்ள வெளிமாநிலத்தாரில் பாதிக்கும் மேல் தமிழகத்தாரே உள்ளனர்.

[இதுவே கர்நாடக அரசியல் தமிழர் எதிர்ப்பையே மையமாகக் கொண்டுள்ளமைக்கு முக்கிய காரணம்.
கர்நாடகாவில் அதிலும் தென் கர்நாடக மாவட்டங்களில் மட்டும் 7 லட்சம் தமிழகத் தமிழ்-இனத்தார் உள்ளனர்.
தென் கர்நாடகமே தமிழர்களுக்குச் சொந்தமானதுதான்.
அதில் இருக்கும் பூர்வீகத் தமிழினத்தாரை இதில் சேர்க்கவில்லை.]
------------------------
வெளிநாடுவாழ் தமிழகத்தார் (சுருக்கமாக) :-

தமிழகத்தின் மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஏழரை கோடி.

இதில் தற்போது வெளிநாடுகளில் இருப்போர் (emigrants) தோராயமாக 35 லட்சம் பேர்.

புலம்பெயர் தமிழகத்தார் அதிகம் உள்ள நாடுகள்
சிங்கப்பூர் = 4 லட்சம் பேர்
ஐ.அ.எமிரேட்ஸ்(துபாய்) = 4 லட்சம்
சவுதி அரேபியா = 3.5 லட்சம்
அமெரிக்கா = 3 லட்சம்
மலேசியா = 1.9 லட்சம்
என்றவாறு உள்ளன.

(வளைகுடா நாடுகளான ஐ.அ.எ, சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் மட்டும் 11.5 லட்சம் தமிழகத்தார் உள்ளனர்)

வெளிநாட்டிற்கு சென்றுள்ளோரில் 73% பேர் வேலை நிமித்தமாக சென்றுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு செல்வோர் மிக அதிகமாக
சென்னை (3.2 லட்சம்)
கோயம்புத்தூர் (1.9 லட்சம்)
ராமநாதபுரம் (1.4 லட்சம்)
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர்.

தாலுகா படி பார்த்தால்
ராமநாதபுரம் தாலுகா (92,915 பேர்)
திருச்செந்தூர் (63,892 பேர்)
அகஸ்தீஸ்வரம் (63,100 பேர்)
ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தோர் அதிகம் வெளிநாடு சென்றுள்ளனர்.

தேனி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவானோரே வெளிநாடு செல்கின்றனர்.

தாலுகா படி உடுமலை, சங்கரி, கோபிச்செட்டி பாளையம், திருச்செங்கோடு தாலுகாக்களில் மிகவும் குறைவானோரே வெளிநாடு சென்றுள்ளனர்.
------------------------------------
தமிழகம் - குடியேற்றமும் வெளியேற்றமும் (விரிவாக) :-

கீழ்க்கண்டவை 2001 ல் இருந்த நிலை ஆகும்

  தமிழகத்தில் குடியேறியுள்ளோர் பற்றி பார்த்தால்
மார்வாடிகள் ராஜஸ்தானிலிருந்து குடியேறி பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்பதால் பலரும் குடும்பத்துடன் குடிவருகிறார்கள்.

  இதற்கடுத்து தஞ்சாவூரில் குடியேறியுள்ள மராத்தியர்கள் குறிப்பிடத்தகுந்தோர்.

மேற்கண்டோர் இப்பதிவில்  கணக்கில் எடுக்கப்படவில்லை.

1991ல் தமிழகத்திற்கு பிறமாநிலத்தார் 9 லட்சம் பேர் குடிவந்துள்ளனர்.
இதனால் மக்கட்தொகையில் 1.6% அதிகரித்தது.
(அதேநேரத்தில் 2.7% தமிழகத்தார் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்)

2001 ல் தமிழகத்திற்கு பிறமாநிலத்தார் 8 லட்சம் பேர் குடிவந்துள்ளனர்.
இதனால் மக்கட்தொகையில் 1.3% அதிகரித்தது.
(அதேநேரத்தில் 2.8% தமிழகத்தார் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்)

2001 ல் வந்த 8 லட்சம் பிறமாநிலத்தாரில் 2 லட்சம் பேர் கிராமப்புறங்களுக்கும் 6 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கும் குடியேறியுள்ளனர்.

மிக அதிகமாக 2.4 லட்சம் பேர் சென்னைக்கு குடி வந்துள்ளனர்.
இதற்கடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1.1லட்சம் பேர் குடி வந்துள்ளனர்.
இதற்கு கோயம்புத்தூர் (62,000 பேர்).

மாவட்ட மக்கட்தொகை சதவீதப்படி நீலகிரியில் மிக அதிகமாக பிறமாநிலத்தார் இருக்கின்றனர் (6.8%).
இதற்கடுத்தவை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் (5.5% பிறமாநிலத்தார்).
மிகக்குறைவு விருதுநகர் ஆகும் (0.2%).

குடியேறியுள்ள பிறமாநிலத்தாரில் மூன்றில் ஒரு பங்கினர் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக தங்கி உள்ளனர்.
பிறமாநிலத்தார் சராசரியாக 17 ஆண்டுகள் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கூறலாம்.

மிக முக்கியமான விடயம் குடியேறியோரில் ஆண்களை விட பெண்கள் 2% அதிகம்.
பெண்கள் தங்கும் சராசரி காலமும் 2 ஆண்டுகள் அதிகம்.

தமிழகத்திற்கு 2001ல் குடிவந்தோர் 100% எனில்,
கேரளத்தார் 33%,
ஆந்திர பிரதேசத்தார் 21%
கர்நாடகா15% 
ராஜஸ்தானியர் 5%
மகாராஷ்டிரர் 5%
என்ற அளவிலும் பிறமாநிலத்தார் குடிவந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் கர்நாடகா போன தமிழகத்தார், வந்த கர்நாடகத்தாரை விட இருமடங்கு ஆவர்.
மகாராஷ்ட்ராவும் அவ்வாறே.

ஆனால் ஆந்திரா, கேரளா மாநிலத்தார் அப்படியே தலைகீழ்,
குடிபோனவரை விட வந்தவரே அதிகம்.
  (தமிழகத்திற்கு 1991ல் குடிவந்தோரில் 40% கேரளத்தார் ஆவர்)

(1991, 2001 கணக்கெடுப்பு இரண்டையும் சேர்த்து)
இந்திய அளவில் மிக அதிகமாக குடிவந்தார் திரும்பச் சென்றது
கேரளா (91,500 பேர் வெளியேற்றம்)
ஆந்திரா (18,500 பேர் வெளியேற்றம்)
ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது.

[இவ்விரு மாநிலத்தாரும் பிற மாநிலத்தவரை விரும்புவதில்லை.
விரட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்]

1991 நிலவரப்படி
இந்திய அளவில் அதிக அளவில் பிறமாநிலத்தார் வாழ்வது
கேரளா (40%)
ஆந்திரா (21%)
கர்நாடகா (14%)
பாண்டிச்சேரி (9%)

அதிக அளவில் பிறமாநிலங்களுக்கு சென்றது
கர்நாடகா (31%)
கேரளா (17%)
ஆந்திரா (15%)
பாண்டிச்சேரி (11%)
ஆகிய மாநிலத்தார்
அதாவது தென்னிந்தியாவில்தான் அதிகம் குடிபோகலும் குடிவரலும் நடந்துள்ளது.

[இதற்கு காரணம் அண்டை மாநிலங்கள் தமிழர் எல்லை பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதே,
ஒரே மொழி பேசுவோருக்குள்ளேதான் அதிக போக்குவரத்து இருக்கும்.
அண்டை மாநிலத் தமிழினத்தார் இங்கு வருவதும் இங்கு உள்ள தமிழினத்தார் அந்த எல்லைப் பகுதிகளுக்கு போவதும் இவ்வாறு பதிவாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில்
புதுச்சேரிக்கும் தமிழகத்திற்குமான குடியேறல் போக்குவரத்து உள்ளது.
புதுச்சேரியின் பிறமாநிலத்தார் பெரும்பாலும் தமிழகத்தார் ஆவர் ]

2001 நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பிறமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் வாழ்வோர் மிக அதிகமாக
கேரளத்தார் 2,24,000 பேர்
ஆந்திரர் 1,22,119 பேர்
கர்நாடகா 74,000 பேர்
ராஜஸ்தானியர் 36,000 பேர்
மகாராஷ்டிரர் 32,000 பேர்
என்றவாறு உள்ளனர்.
(மொத்த பிறமாநிலத்தார் 6,00,000).
[ஏற்கனவே கூறியபடி இங்கேயே பிறந்த பிறமொழியினர் இந்த கணக்கில் இல்லை]

இதே போல வெளிமாநிலங்களில் தமிழகத்தார் மிக அதிகமாக
கர்நாடகாவில் 4,30,000 பேர்
மகாராஷ்ட்ராவில் 2,60,000 பேர்
ஆந்திராவில் 1,00,000 பேர்
வாழ்பவர்களாக இருந்துள்ளனர்.
(மொத்தம் 12,13,000 தமிழகத்தார்)

வெளிமாநிலம் செல்லும் தமிழகத்தாரில் 18% படிக்காதவர் ஆவர்.
---------------------------------------------
தமிழகம் (விரிவாக) :-

மக்கட்தொகை ஏற்ற-இறக்கம் :

1991 வரை பிறப்பு விகிதம் (மிகச் சரியான அளவில்) 2.1 என்றிருந்தது.
பிறகு படிப்படியாகக் குறைந்து மக்கட்தொகைக் குறைப்பில் கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
அதாவது இரண்டு தாய்-தந்தை இருந்தால் அவர்களுக்கு மூன்று குழந்தை (அதாவது 4 பேர் இருந்த இடத்தில் 3 பேர்) என்ற அளவில் பிறப்பு விகிதம் 1.5 என்று ஆகிவிட்டது.
(குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு அதனால் இந்த 1.5 அளவாவது இருக்கிறது)
மாவட்ட அடிப்படையில் நீலகிரி மக்கட்தொகை மிக வேகமாகக் குறைந்து வருகிறது (fertility= -0.4)

[இது இந்திய அரசால் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
தமிழர்கள் எண்ணிக்கை குறையும் அதேநேரத்தில் இந்திக்காரர்கள் அதிக குழந்தைகள் பெற்று நாடு முழுவதையும் நிறைத்துவருகின்றனர்]

தமிழகம் ஒரு வயதான மாநிலமாக (ageing state) ஏற்கனவே உள்ளது.
அதாவது 60 வயதைத் தாண்டியோர் 7% க்கு மேல் இருந்தால் முதிய மாநிலம் ஆகும்.
இந்நிலையில் குழந்தை பிறப்பும் நான்கில் ஒரு பங்கு குறைந்துவிட்டதால் விரைவில் உழைக்கும் இளைய சமுதாயம் இன்றி தமிழகம் தடுமாறும்.
2031 க்கு பிறகு மக்கட்தொகை வேகமாக சரியத் தொடங்கும்.
இது வெளியாட்கள் குடியேற வசதியாக இருக்கும்.

[எனவே இனியேனும் தமிழர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிக மிக அவசியம் ஆகும்]
- - - - - - - - - - - - - -
எழுத்தறிவு :-

எழுத்தறிவில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது (80%).

எழுத்தறிவில் கன்னியாகுமரி (94%), சென்னை(93%), நீலகிரி (92%), தூத்துக்குடி(91%) ஆகிய மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன.
தர்மபுரி(77%), கிருஷ்ணகிரி(79%), சேலம்(80%) ஆகியன கடைசியாக வருகின்றன.
(இந்தியா முழுக்க எழுத்தறிவு 74%).

பெண்கள் ஆண்களை விட எழுத்தறிவில் பின் தங்கியுள்ளனர் (75%).
(இந்த பின்தங்கல் 1981 க்கு பிறகு வேகமாகக் குறைந்து வருகிறது).

ஆண்கள் சராசரியாக பத்தாம் வகுப்பும் பெண்கள் சராசரியாக ஏழாம் வகுப்பும் படித்துள்ளனர்.
- - - - - - - - - -
வேலைவாய்ப்பு :-

15 வயதுக்கு மேற்பட்டோரில் 52% தமிழகத்தார் நல்ல வருமானம் தரும் வேலையில் உள்ளனர்.
15 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
இவர்களில் பாதியளவு உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிலும் பெண்களே அதிகம் வேலையின்றி இருக்கின்றனர்.

வேலைசெய்வோரில் அதிக சதவீதம் பெண்கள் உள்ள மாவட்டங்கள்
ராமநாதபுரம்(45%), திருநெல்வேலி(42%), ஈரோடு(39%), மதுரை(37%), பெரம்பலூர்(33%) என்றவாறு செல்கின்றன.
 
வேலைவாய்ப்பு பெற்றோரில்
32% விவாசாயத் துறையிலும்
8% உடலுழைப்பு தொழிலும்
7% சொந்த தொழிலிலும்
இருக்கிறார்கள்.

தமிழகம் வேலையில்லாத் திண்டாட்டத்தில் எட்டாவது மாநிலம் ஆகும்

வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக வேலூர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சாவூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிலவுகிறது.
- - - - - - - - - - -
வீட்டுவசதி :-

தமிழகத்தில் ஆடம்பர வீடுகள் சென்னை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
(பெரும்பாலும் வெளிநாட்டு பணம் வரும் மாவட்டங்கள் ஆகும்)

ஆடம்பர வீடுகளோடு வசதியான வீடுகளையும் சேர்த்து பார்த்தால்
சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம்
என்றவாறு செல்கிறது.

சொந்தவீடு வைத்திருப்போரில்
7% பேர் கார் வைத்துள்ளனர்.
8% பேர் ஏ.சி வைத்துள்ளனர்.
14% பேர் கணினி வைத்துள்ளனர்.
41% குளிர்சாதனப்பெட்டி வைத்துள்ளனர்.
62% பேர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர்.
--------------------------------------
வெளிநாடுவாழ் தமிழகத்தார் (விரிவாக) :-

புலம்பெயர் வரலாறு :

தமிழகத்திலிருந்து வெளிநாடு போவது 1830களில் அதிகம் நடந்தது.
அக்காலகட்டத்தில் 1லட்சம் பேர் பஞ்சம் காரணமாக மதராஸ் மாகாணத்தை விட்டு சென்றுள்ளனர்.
இதில் 46,500 இலங்கைத் தீவுக்கு சென்றுள்ளனர்.
தரங்கம்பாடியில் (Tranquebar) இருந்த டானிஷ்காரர்கள் அதவாது டென்மார்க் நாட்டினர் தமிழர்களை அடிமைகளாக வாங்கி விற்ற குறிப்புகள் உள்ளன.

1833 வாக்கில் பல ஆயிரம் பேர் மலாயா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.

1843-1867 க்குள் 5,37,000 பேர் இலங்கை சென்றனர்.
அதில் ஒரு லட்சம் பேர் திரும்பிவரவில்லை.
அதன்பிறகு 1877-1878 ல் மேலும் 1,50,000 பேர் இலங்கை சென்றுள்ளனர்.

1876 வாக்கில் பர்மாவுக்கும் பல ஆயிரம் பேர் சென்றுள்ளனர்.

இதுபோக பிரெஞ்சு காலணியான பாண்டிச்சேரியில் இருந்து 5,33,600 பேர் பல்வேறு பிரெஞ்சு காலணிகளுக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் 1842 மற்றும் 1870 ஆகிய ஆண்டுகளில் 1,12,000 மட்டுமே திரும்பியுள்ளனர்.

1970களில் மீண்டும் வளைகுடா நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர்.

சமீபத்தில் 2006 வாக்கில் அதிகமாக இருந்தது.
2009 க்குப் பிறகு மிகவும் குறைந்துவிட்டது.
- - - - - - - - -
வெளிநாட்டு வருமானம் :

இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் மற்றும் கேரளா ஆகியன தமது உழைக்கும் இளைய சமுதாயத்தை இழந்து வருவதில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

வெளிநாட்டு தமிழகத்தாரால் 2015ல் மட்டும் ஏறத்தாழ 62000கோடி ரூபாய் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது (remittance).

கேரளாவுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு பணம் வருவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் ஆந்திராவும்
நான்காவது இடத்தில் உத்திர பிரதேசமும் உள்ளன.

வெளிநாட்டு பணம் அதிகம் வரும் மாவட்டங்கள்
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி என்றவாறு செல்கிறது.

இந்த பணத்தை தமிழக மக்களுக்கு பங்கிட்டால் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் மாதம் ரூ.708 கிடைக்கும்.
ஆண்டுக்கு ரூ.8500 கிடைக்கும்.
இதைச் சேர்த்து தமிழகத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000.

வெளிநாட்டு வருவாயைச் சேர்க்காத தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ 66,500 ஆகும்.
இதன்படி தமிழகம் எட்டாவது இடம்தான் என்றாலும்
இந்தியாவின் மொத்த தனிநபர் வருமானத்தைப் போல இது ஒன்றரை மடங்கு ஆகும்.

தமிழகத்தில் 10 ல் 1 வீட்டில் வெளிநாடு செல்பவர் உள்ளார்.

தமிழகத்தின் உள்ளக உற்பத்தியைப்போல வெளிநாட்டு வருமானம் 1/7 மடங்கு ஆகும்.
அதாவது வெளிநாடு மூலம் வரும் பணம் ஒரு ஆண்டு வருமானத்தை ஏழு ஆண்டுகளில் நிறைவு செய்யும்.

(ஒப்பீட்டுக்காக கேரளாவை நோக்கினால் வெளிநாட்டு கேரளத்தினர் தமிழர்களை விட சற்று அதிகம்,
2015ல் மட்டும் 68000கோடி அனுப்பியுள்ளனர்!)

வெளிநாடு போயிருப்போர் மற்றும் வெளிநாடு போகாதோரை ஒப்பிட்டால்
வெளிநாடு போயிருப்போர் சராசரியாக தலைக்கு
மாதத்திற்கு 17,500 ரூ சம்பாதிக்கிறார்.
வெளிநாடு போகாதோர் சராசரியாகத் தலைக்கு
மாதம் 12,000 ரூ சம்பாதிக்கிறார்.

அதாவது ஒரு வெளிநாடுபோனவர் மாத வருமானமானது, வெளிநாடு போகாத ஒருவரை விட சராசரியாக ரூ.5,500 அதிகம்.
- - - - - - - - -
வெளிநாடு பற்றிய கூடுதல் தகவல்கள் :-

வெளிநாடு போவோரில்
17% பொறியாளரும்
13% கணினி பொறியாளரும்
அடங்குவர்.

3ல் ஒரு பங்கினர் 20-34 வயதில் வெளிநாடு சென்றுள்ளனர்.

வெளிநாடு போக ஆகும் செலவு சராசரியாக தலைக்கு ரூ.1,08,000 ஆகிறது.

வெளிநாடு செல்வோரில் 5% ஆண்களும் 20% பெண்களும் படிப்பறிவில்லாதோர்.

வெளிநாடு போய் சம்பாதித்து திரும்பிவிட்டோர் அதிகமாக சவுதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் (துபாய்) போய்வந்துள்ளனர்.
இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா நாடுகள் வருகின்றன.

முதல்முறையாக வெளிநாடு போகும்போது பாதிக்கும் அதிகமானோர் திருமணம் ஆகியவராக இருந்தனர்.

கணவர் வெளிநாட்டில் இருக்கும் மனைவியர் எண்ணிக்கை தோராயமாக 10 லட்சம்

தமிழக இசுலாமியர் தமது சதவீதத்திற்கு ஏற்ப இந்துக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக வெளிநாடு செல்கின்றனர்.

கீழே இருப்பது குறிப்பிட்டோரை தேர்ந்தெடுத்து வினா-விடை முறையில் எடுத்த கணக்கெடுப்பு ஆகும்

வெளிநாடு போய்வருவோரில்
63% சரியான சாப்பாடு கிடைக்காமலும்
50% வரை இருப்பிடம் கிடைக்காமலும்
90% வரை மருத்துவ வசதி வழங்கப்படாமலும் உள்ளனர்.

91% தமிழகத்தார் தமக்கு வெளிநாடுகளில் பிரச்சனை வந்தபோது இந்திய தூதரகத்திற்கு செல்லவில்லை
[காரணம் அவர்கள் தமிழர்களுக்கு உதவமாட்டார்கள்].

வெளிநாடு போவோரில் முக்கால்வாசிப்பேர் மறுமுறை போவதில்லை.

திரும்பி வந்தோரில்
37% பேர் ஒப்பந்தம் முடிந்ததாலும்
19% பேர் மோசமாக நடத்தப்பட்டதாலும்
9% உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும்
8% பேர் சம்பளம் போதாமையாலும்  திரும்பிவிட்டனர்.

வெளிநாட்டு பணம்
31% வீடு கட்டுவதிலும்
15% (வரதட்சணை உட்பட) திருமணத்திற்கும் செலவு செய்யப்படுகிறது.

புலம்பெயர் தமிழகத்தாரில் 15% பெண்கள் ஆவர்.
பெண்கள் அதிகம் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
தற்போது செல்வோர் அதிகம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

பெண்களில் அதிகம் திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், தேனி மாவட்டத்தினர் ஆவர்.

வெளிநாட்டில் துணையை பிரிந்து இருப்போரில்
30% பேர் உறவு நல்லநிலையில் இருப்பதாகவும்
63% பேர் சரியாக இருப்பதாகவும்
7% பேர் உறவு முறிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

திருமணமானோரில் 54% பேர் இரண்டாம் முறை வெளிநாடு செல்வதில்லை.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தமது மகளுக்காக பெரும்பாலும் (80%) வெளிநாட்டு மாப்பிள்ளையை விரும்புவதில்லை.
---------------------------------------------------
தமிழகத்தின் உள்ளேயே இடப்பெயர்வு :-

தமிழகத்திற்கு உள்ளேயே (பெரும்பாலும் வேலைக்காக) இடம்பெயர்ந்தோர் 25% ஆவர்.
இதில் பாதியளவு பெண்கள் (திருமணம் காரணமான இடம்பெயர்வு).
இது இந்தியாவின் 'மாநிலத்திற்கு உள்ளேயான இடப்பெயர்வு சதவீதமான' 31% ஐ விட குறைவு.
கிராமப்புற மற்றும் நகரப்புற இடப்பெயர்வும் கூட 0.5% வேறுபாடே உள்ளது.

(ஆலைகளில் வேலைவாய்ப்பு பெற்றதால்) இடம்பெயர்ந்துள்ள பெண்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் திருப்பூர்(44%), நாமக்கல்(41%), கோவை(36%) ஆகியன.
அதாவது தமிழகத்தார் மாநிலம் முழுவதும் சீரான அளவில் உள்ளனர்.
கிராமங்கள் வளர்ச்சி இன்றி மக்கள் நகரங்களில் குவிவது மிகவும் குறைவாக உள்ளது.
--------------------------------------
தமிழகத்தில் வெளிநாட்டார் :-

2001 நிலவரப்படி தமிழகத்தில் குடியேறியுள்ள பிற நாட்டினர் மிக அதிகமாக
இலங்கை 80,000
[ஈழம் நமது தமிழர் நாட்டின் ஒரு பகுதி என்பதை மறக்கவேண்டாம்]
மியான்மர் 20,000
நேபாளம் 2600
மலேசியா 2400
------------------------------------
[முடிவாக,
பல இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் நல்லநிலையில் உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதுதான்.
தமிழக உரிமைகள் ஒன்றொன்றாகப் பறிக்கப்பட்டு நமது உடைமைகள் ஒவ்வொன்றாக இந்திய தேசியத்தின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய மத்திய அரசு தனது முழு பலத்தையும் தமிழகத்தின் மீது பயன்படுத்துகிறது.
உழைப்பும் திறமையும் தமிழருடையது, ஆனால் பங்கு மட்டும் எல்லாருக்கும் கொடுக்கவேண்டும்.
விளங்கும்படி சொன்னால் நாம் ஒரு ரூபாய் வரி கட்டி 34பைசா திரும்பப்பெறுகிறோம்.
இந்தி மாநிலங்கள் ஒரு ரூபாய் கட்டி 3,4 ரூபாய் வரை பெறுகிறார்கள்.
இதுதான் அப்பட்டமான உண்மை.
இதற்குப் பெயர்தான் இங்கே ஒற்றுமை.

தனிநாடாகும் அத்தனை தகுதிகளும் தேவைகளும் நமக்கு உள்ளன.
நாம் ஓரளவு வலிமையாக இருக்கும்போதே விழித்துக்கொள்வது நல்லது.
நமக்கு தண்ணீரோ பாதுகாப்போ கூட கொடுக்கமுடியாத இந்த இந்திய ஒன்றியத்தில் உழைத்துக்கொட்டியபடி நாம் ஒரு மூலையில் கிடக்கவேண்டுமா?]

No comments:

Post a Comment