Sunday, 27 October 2024
இன்னொரு அஞ்சலை
Saturday, 17 August 2024
புளித்துப்போன தலித் படங்கள்
Friday, 14 September 2018
இனக்காப்பு
இனக்காப்பு
அந்த குளிர்மண்டல நாட்டின் ஒரு பெருநகரத்தில் 5 விண்மீன் விடுதியில் வெதுப்பூட்டப்பட்ட பெரிய அறையில் அந்த நாட்டுக்கு தொடர்பில்லாத ஒரு இனத்து மக்கள் கூடியிருந்தனர்.
அந்த நாட்டு இனத்தைச் சேர்ந்த சிலரும் அங்கே இருந்தனர்.
அது ஒரு திருமண விழாவின் மாலைநேர வரவேற்பு நிகழ்ச்சி.
பெண்கள் பலரும் தமது பண்பாட்டு உடையில் இருந்தனர்.
பல வண்ணங்கள் மின்னும் அவர்களது உடையும் அவர்கள் அணிந்திருந்த பெரிய பெரிய நகைகளும் கண்களைப் பறிக்கும் வண்ணம் இருந்தன.
சில பெண்மணிகள் மணப்பெண்ணை விஞ்சும் அளவுக்கு தங்கம் அணிந்திருந்தனர்.
பல பெண்மணிகள் குறைவாக அணிந்திருந்தனர்.
தங்கம் அணியாத பெண்மணி யாரும் காணப்படவில்லை.
ஆண்கள் பலரும் இந்நாட்டு உயர்தர உடையில் இருந்தனர்.
சிலர் பண்பாட்டு உடையிலும் இருந்தனர்.
ஆண்கள் அனைவரும் பெயருக்கு நகை அணிந்திருந்தனர்.
சிலர் அணியவில்லை.
மணமக்கள் அதிகம் பேசிக்கொள்ளாததில் இருந்து அவர்கள் முன்பே ஒருவருக்கொருவர் அதிக அறிமுகமில்லாதவர் என்பது தெரிந்தது.
ஆனாலும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர்.
மணமகன் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்.
மணமகளோ தாய்நிலத்தவர்.
அறிமுகமில்லாதவரை பெற்றோர் ஏற்பாட்டில் இத்தனை வேறுபாடுகளை மீறி எப்படித்தான் திருமணம் செய்துகொள்கின்றரோ தெரியவில்லை.
மணப்பெண் வீட்டார் அனைவரையும் விழுந்து விழுந்து வரவேற்றனர்.
மணமகன் வீட்டார் அனைவரையும் அதிகாரம் செலுத்தியபடி இருந்தனர்.
மணமகள் வீட்டாருக்கு இந்நாட்டு மொழியும் புரியவில்லை.
அதிக ஆட்களும் இல்லை.
அதனால் அவர்கள் அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தனர்.
பாட்டுக் கச்சேரி குழுவும் அவ்வினத்து மொழியில் அவ்வினத்து இசையில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.
என்னைப் பற்றி கூற மறந்துவிட்டேன்.
நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன்.
கல்லூரியில் பட்டம் பெறுவதற்காக இந்த இனத்து மக்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை அர்ப்பணிக்கவுள்ளேன்.
இந்த இனத்தில் எனக்கொரு நண்பர் உள்ளார்.
அவர் நெடுநாள் பழக்கம்.
அவரை நம்பியே இந்த ஆய்வில் இறங்கியுள்ளேன்.
அவர்தான் இங்கே அழைத்துவந்தார்.
நான் இவ்வினத்து இளம்பெண்களை நோட்டமிட்டபடி இருந்தேன்.
அதோ அங்கே ஒருத்தி இருக்கிறாள்.
அந்த கூடத்தில் ஏறத்தாழ அனைவரது கவனமும் அவள்மீது இருந்தது.
அவள் அந்த இனத்தவள்தான்.
பதினாறு அகவை இருக்கலாம்.
பொதுவாக கதைகளில் வரும் பெண்கள் அழகாக இருப்பார்கள்.
இந்த கதையிலும் அப்படித்தான்.
ஏனென்றால் அழகான பெண்களைப் பற்றித்தான் பெரும்பாலான கதை, கவிதை, காவியமெல்லாம் எழுதப்படுகிறது.
அவள் இயல்பினாலும் பருவத்தினாலும் அதியழகாய் இருந்தாள்.
ஆனால் அந்த இனத்தாரைப் போலில்லாமல் இந்த நாட்டு கவர்ச்சியான உடையில் இருந்தாள்.
ஒப்பனையும் சற்று தூக்கலாகவே இருந்தது ஆனாலும் அது அவளது அழகைப் பாதிக்கவில்லை.
நிறைய இளைஞர்கள் அவளைச் சுற்றிவந்தனர்.
அவளும் அவர்களைப் புறக்கணிப்பதாய் இல்லை.
அவள் தன்னினத்தாருடன் பேசும் மொழியில் இந்நாட்டு மொழியில் வார்த்தைகள் அதிகம் கலந்திருந்தன.
இளந்தலைமுறைப் பதுமையான அவள் மணமகனின் தங்கையாம்.
இவர்கள் இங்கே குடியேறி நான்கு தலைமுறைகள் ஆகிவிட்டதாகக் கூறினர்.
அப்படிப் பார்த்தால் இந்த தாக்கம் சற்று குறைவாகவே பட்டது.
திடீரென்று அனைவரும் விழுந்தடித்து வாசலுக்கு ஓடினர்.
ஒரு விலையுயர்ந்த மகிழுந்து வந்து நின்றது.
அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள்.
அவள் எளிமையான உடையிலும் நகைகள் எதுவும் அணியாமலும் இருந்தாள்.
அவரைப் பின்தொடர்ந்து மெய்க்காவலுக்கு இரண்டு ஆண்கள் நடந்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் உட்பட அனைவரும் அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று பணிவுடன் விருந்தோம்பல் செய்தனர்.
ஆனால் அந்த மூவரும் ஒருவித இறுக்கத்துடனே நடந்துகொண்டனர்.
என் நண்பரிடம் அவர்கள் யாரென்று கேட்டேன்.
அவர்கள்தான் அந்த இனத்திற்காக நாடுகேட்டுப் போராடிய தீவிரவாதக் குழு. இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியாட்சி நடக்கிறது.
ஆனால் இவர்கள் இன்னும் இயங்குகிறார்கள்.
இவர்கள் தமது நாட்டின் மக்கள்வாழாப் பகுதிகளிலும் புலம்பெயர் மக்கள் மத்தியிலும் தனியே ஒரு நிழல் அரசாங்கமே நடத்துகிறார்கள்.
பிற நாடுகளில் இம்மக்களுக்கு எந்த இடர்ப்பாடு என்றாலும் இவர்கள் சரிசெய்து கொடுப்பார்கள்.
இந்த நாட்டில் குடியேறிய மக்களுக்கு இந்த பெண்தான் பொறுப்பு.
இவர் தீவிரவாதப்படையின் முக்கிய தளபதியும் ஆவார்.
இப்போது பாட்டு நின்றது.
அனைவரும் இந்த கதையின் நாயகியைப் பார்த்தனர்.
அவள் மேடைக்கு சென்று ஒலிவாங்கியப் பிடித்து தொண்டையைச் செருமிக்கொண்டாள்.
மாறுபட்ட இசை ஒலிக்கத் தொடங்கியது.
அவள் தனது இனிமையான காந்தக் குரலில் பாடத் தொடங்கினாள்.
அனைவரது முகத்திலும் வியப்புடன் கலந்த மகிழ்ச்சியை என்னால் பார்க்கமுடிந்தது.
அதிலும் குறிப்பாக அந்த மூன்றுபேர் முகத்திலும் ஒரு இன்ப அதிர்ச்சி தெரிந்தது.
அங்க அசைவுகளுடன் சுதி ஏற்றியிறக்கி மெல்ல நடனமாடியபடி அவள் பாடி முடித்ததும் அனைவரும் சத்தமாக நெடுநேரம் கைகளைத் தட்டினார்கள்.
அப்படியென்ன பாடிவிட்டாள் என்று என் நண்பனிடம் கேட்டேன்.
அவள் முப்பது ஆண்டுகள் பழமையான ஒரு பாடலைப் பாடியுள்ளாள்.
அது ஒரு திரைப்படப் பாடல்.
அதில் ஒரு கன்னிப்பெண் இரவில் தனிமையில் தன் காதலனை நினைத்து ஏக்கத்துடன் பாடும் பாடல்.
நாட்டுப்புற நடையில் இருந்த அந்த பாடலை இந்த புலம்பெயர்ப் பதுமை மிக நேர்த்தியாகப் பாடியுள்ளாள் என்பதே இந்த கைதட்டலுக்குக் காரணம்.
ஆம். அவள் என் கண்களுக்கு முன்னே உண்மையிலேயே அந்த 'ஏங்கும் பெண்ணாகவே' மாறிவிட்டிருந்தாள்.
இப்போது அந்த தீவிரவாதப் பெண் எழுந்துசென்று அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாராட்டி தோளில் தட்டிக்கொடுத்தார்.
பிறகு விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார்.
போகும்போது ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டுப் போயினர்.
இப்போது ஒவ்வொருவராக அனைவரும் மேடை நோக்கி விரைந்தனர்.
அவள் வாழ்த்துமழையில் நனைந்தபடி மேடையை விட்டு இறங்கினாள்.
நானும் அவளைப் பாராட்டும் சாக்கில் அவளை நோக்கி சென்றேன்.
அருகில் நின்று அவளது முகத்தைப் பார்த்தேன்.
அந்த தீவிரவாதத் தலைவியின் முகச்சாயலே அதில் தெரிந்தது.
Monday, 2 April 2018
தென்கொரியத் தமிழர்களின் ஆதரவு
உலகின் மறுமூலையில்...
தென்கொரியா தலைநகர் சியோல் (seoul) நகரில் வாழும் தமிழர்கள்,
தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=1192340730869578&id=100002809860739
Wednesday, 14 June 2017
பர்மா தமிழர்களின் பரிதாப நிலை
பர்மா தமிழர்களின் பரிதாப நிலை
2008 ல் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.
1,00,000 தமிழர்கள் வீடிழந்தனர்.
நர்கீஸ் புயலில்.
மியான்மர் (பர்மா) அரசாங்கம் மருந்துக்கு கூட தமிழர்களுக்கு உதவவில்லை.
இந்த கொடுமை தாய்நிலத் தமிழர்களுக்கு கூட தெரியாது.
தமிழருக்கான அரசு இல்லாது போனாலும்
தமிழர்மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகம் கூட இல்லாததே இதற்குக் காரணம்.
2012 க்குப் பிறகு இணையப் புரட்சியால் முகநூல் ஓரளவு தமிழின ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது.
இது எத்தனை காலத்திற்கோ தெரியவில்லை.
நாடில்லாத இனம் நாதியற்று சாகும்.
தகவல்:
து.ரவிக்குமார்,
சட்டமன்ற உறுப்பினர்,
காட்டுமன்னார்கோயில்,
பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
(27-05-08 அன்று முதலமைச்சருக்கு எழுதிய மடல்)
Friday, 26 May 2017
காந்தியை உருவாக்கிய தமிழர்கள்
காந்தியை உருவாக்கிய தமிழர்கள்
காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.
ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.
அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.
ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.
ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.
இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.
அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.
அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.
அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.
ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.
காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.
ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.
ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.
வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.
மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.
1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)
1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.
அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.
1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.
1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.
1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.
பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.
இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.
அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.
மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.
கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.
1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.
1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!
லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர் கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.
ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.
சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.
தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.
1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.
மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.
ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.
படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்
Tuesday, 19 July 2016
புலம்பெயர் தமிழர்களின் நாடு எது?
புலம்பெயர் தமிழர்களின் நாடு எது?
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களே!
தமிழ் வம்சாவழி மக்களே!
நீங்கள் தமிழர்நாடு அமைய முடிந்த அளவு உதவி செய்து
தாய்நாடு தமிழர் சேனையின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் தமிழர்நாட்டில் குடியேறிக்கொள்ளவேண்டும்.
ஒருவேளை..ஒருவேளை உங்களால் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாவிட்டால் பரவாயில்லை.
அதில் பல தடங்கல்கள் உள்ளன.
எனவே வருத்தமில்லை.
ஆனாலும் தமிழர் என்ற உணர்வுடன் நீங்கள் என்றைக்கும் இருக்கவேண்டும்.
நாளையே சூழ்நிலை மாறலாம்.
நீங்கள் வாழும் நாட்டிற்கும் தமிழர் நாட்டிற்கும் போர் வரலாம்.
அப்போது நீங்கள் என்னதான் இனத்தால் தமிழராய் இருந்தாலும்,
என்னதான் தமிழ் உணர்வுடன் இருந்தாலும்,
(அந்த நாடு இனரீதியாகத் தமிழரை ஒடுக்காத நிலையில்) பிறந்து வளர்ந்த நாட்டின் சேனையில்தான் சேரவேண்டும்.
சேர்ந்து தமிழர்நாட்டுக்கு எதிராக போரிடவேண்டும்.
அது இல்லாமல் தமிழர் நாட்டுக்கு ஆதரவாக மாறக்கூடாது.
உப்பிட்ட மண்ணுக்கு இரண்டகம் செய்யக்கூடாது.
இந்த பதிவு இமயம் முதல் மாலைத்தீவுகள் வரை
சிந்து சமவெளி முதல் கங்கைக் கழிமுகம் வரை
வேற்றினத்தவர் ஆக்கிரமித்திருக்கும் தமிழர் பூர்விக மண்ணில் வாழும் தமிழருக்குப் பொருந்தாது.