Tuesday 11 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 5

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி - 5
இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
-----------
பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் இறந்தபிறகு பட்டத்திற்கு வந்தான் அவன் மகன் (இரண்டாம்) ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மன்.
அதாவது, நமது சிவாசிக்கனேசன் நடித்துக்காட்டிய வீரபாண்டியக் கட்டப்பொம்மனின் தகப்பன்!

இவனும் தன் தாத்தன், அப்பன் வழியைப் பின்பற்றி ‘பாண்டிய’ எனும் பின்னொட்டை தன் பெயரோடு இணைத்துக் கொண்டான்.
எந்தப் பாண்டிய மன்னன் இவர்களுக்கு அப்பனாக இருந்தான் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

இடைப்பட்ட காலத்தில், கம்மந்தான் கான்சாகிப்பாக மதம் மாறியிருந்த மருதநாயகம் பிள்ளை வசம் மதுரை மற்றும் திருநெல்வேலிச் சீமைகளை ஆங்கிலேயர் குத்தகைக்கு விட்டிருந்தனர்.
மருதநாயகம் பிள்ளை வீழ்த்தப்பட்ட பிறகு திருநெல்வேலியானது தளவாய் அழகப்ப முதலியார் என்பவர் வசம் சிறிது காலம் குத்தகைக்கு விடப் பட்டிருந்தது.
பிறகு 1765ல் ராஜாஹகுமத்ராவ் என்பவன் வசம் குத்தகைக்கு விடப்பட்டது.

இந்தக்காலங்களில் தெற்கத்திச் சீமைகளில் பெரும் சச்சரவு எழுந்தது. பாளையங்களுக்கிடையே அடிக்கடி கொள்ளைகளும், போர்களும் நிகழ்ந்துவகொண்டிருந்ததால் குடிமக்கள் பயிர்த்தொழில் மறந்தனர்.
ஆங்கிலேயருக்கு வரிப்பணம் வசூலாகவில்லை.
பாளையக்காரர்களை வழிக்குக் கொண்டு வர முடிவெடுத்தனர்.

மேற்குப் பாளையங்களின் தலைவன் பூழித்தேவர், கிழக்குப் பாளையங்களின் தலைவன் ஜெகவீரபாண்டியன் இருவரையும் வீழ்த்தினால் மற்ற பாளையங்கள் தாமாக வழிக்கு வரும் என்ற பழைய திட்டத்தையே தேர்ந்தெடுத்தனர்.

மேஜர் பிளிண்ட் என்பவன் தலைமையில் ஒரு பெரும் படை பாஞ்சாலங்குறிச்சிக்குப் படையெடுத்தது.
ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனை பெரிய அடியக்காரனாக நினைத்து படைதிரட்டி வந்த பிளின்ட்க்கு செம பல்ப் கிடைத்தது.
சமாதனமாகப் போவதற்கு ஜெகவீர பாண்டியனிடமிருந்து தூது வந்தது.
அவனின் தில்லாலங்கடி வேலைகளை ஏற்கனவே நன்கு அறிந்திருந்த பிளின்ட் சமாதானம் செய்ய வந்த ஜெகவீர பாண்டியனின் கோரிக்கையை நிராகரித்து அவனைக் கைது செய்வதில் உறுதியாக இருந்தான்.
ஜெகவீரபாண்டியன் சரணடைய தயாராக இல்லை.
தாக்கிப்பிடிக்க உத்தரவிட்டான் பிளின்ட்.

ஜெகவீரபாண்டியன் இரவோடிரவாக கோட்டையைவிட்டு தப்பியோடி தூத்துக்குடியிலிருந்த டச்சுக்காரர்களிடம் அடைக்கலமானான்.
ஜெகவீரபாண்டியன் ஓடி ஒளிந்த பின் கிழக்குப் பாளையங்கள் தாமாக மண்டியிட்டன.
பிறகு ஆங்கிலேயரின் கவனம் மேற்குப் பாளையங்களின் தலைவன் பூழித்தேவர் பக்கம் திரும்பியது!

1767மே 13ல் கர்னல் டொனால்டு கேம்பல் என்பவன் தலைமையில் ஒரு பெரும் பீரங்கிப்படை பூலித்தேவரின் வாசுதேவநல்லூர்க் கோட்டையை தாக்கின.
பீரங்கிக் குண்டுகள் தாக்கி ஏற்பட்ட விரிசரல்களை பூழியின் வீரர்கள் பனைநாரும் பச்சை மண்ணும் கொண்டு அப்போதைக்கப்போது அடைத்தனர்.
பனைநாரும் பச்சை மண்ணும் தீர்ந்த பிறகு மறத்தமிழர்கள் தங்கள் உடல்களாலேயே மறைத்து நின்று வீர மரனம் அடைந்தனர்.
தமிழன்னை பெற்றெடுத்த ய இந்திய சுதந்திரப் போரின் முதல் மாவீரன் பூலித்தேவன் அந்த மண்ணிலே வீரகாவியமானான்.

தூத்துக்குடியில் டச்சுக்காரர்களிடம் அடைக்கலமாகி இருந்த ஜெகவீர பாண்டியனுக்கு இயற்கை வேறு விதத்தில் ஆப்பு வைத்தது.
டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் தங்கள் பகையை மறந்து தற்காலிகமாக ஒன்றுசேர முடிவெடுத்தனர்.
பீதியான ஜெகவீர பாண்டியன் தூத்துக்குடியை விட்டு ஓடி ராமநாதபுர சேதுபதியிடம் தஞ்சமடைந்தான்.

ஜெகவீர பாண்டியன் திருநெல்வேலிக்குள் நுழைந்தால் அவனைக் கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க ஹகுமத்ராவ் உத்தரவிட்டிருந்தான்.
திருநெல்வேலி இருந்த பக்கம் தலைவைத்து உறங்குவதைக் கூட மறந்தான் ஜெகவீர பாண்டியன்.

இதையடுத்து திருநெல்வேலியை குத்தகைக்கு எடுத்திருந்த ராஜா ஹகுமத்ராவ் ஜெகவீர பாண்டியனின் உறவினன் ஒருவனைப் பிடித்து பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் தலைவனாக்கினான்.
சிறிது காலத்தில் ஆங்கிலேயர் ராஜா ஹகுமத்ராவை குத்தகையில் இருந்து நீக்கி விட்டு சையது முகமதுகான் என்பவனிடம் குத்தகையை ஒப்படைத்தது.
மேலும் இச்சமயத்தில் மைசூரிலும், வடநாட்டிலும் ஏற்பட்ட கலகங்களை சரிக்கட்ட ஆங்கில நிர்வாகம் விரும்பியது.
இன்னும் சிறிது காலத்திற்கு அவர்கள் திருநெல்வேலிப் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த ஜெகவீரபாண்டியனுக்கு புதுத்தெம்பு பிறந்தது.

தன்னுடன் மிச்சமிருந்த தெலுங்குப் படைகளுடன் பாஞ்சாலங்குறிச்சி புறப்பட்டான்.
அங்கு பதவியிலிருந்த தன் உறவினனை போட்டுத்தள்ளி விட்டு அரியனை ஏறினான்.
அதே வேளை வேறொரு காரியமும் செய்தான்.
திருநெல்வேலியை குத்தகைக்கு எடுத்திருந்த சையது முகமதுகான் காலில் விழுந்தான்.
வேன்டிய வெகுமதிகளை அளித்து அவனைக் குளிர்வித்தான்.
தான் இனிமேல் என்றென்றும் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்களித்தான்.

ஆனால் பரம்பரை குரங்குப்புத்தி போகவில்லை.
ஆங்கிலேயரை வீழ்த்த உதவுவதாக வாக்குக்கொடுத்து டச்சுக்காரர்களிடம் ரகசிய தொடர்பு கொண்டான்.
அவர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை வலுமிக்கதாக கட்டிக் கொண்டான்.
படைபலத்தைப் பெருக்கினான்.
அந்த மமதையில் பக்கத்துப் பாளையங்களிடம் காவல் பணம் கேட்கத் துவங்கினான்.
மறுத்த பாளையங்களை துணிந்து கொள்ளையடித்தான்.

ஜெகவீர பாண்டியன் டச்சுக்காரர்களிடம் நெருக்கமான விடயம் ஆங்கிலேயர் காதுக்குப் போனது.
கடுப்பான அவர்கள் ஜெகவீர பாண்டியனை பிதுக்கி எடுக்க முடிவெடுத்தனர்.
கர்னல் புல்லாட்டான் என்பவன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை தரை மட்டமாக்க ஒரு பெரும் ராணுவம் முற்றுகையிட்டது.

இதையறியாத ஜெகவீர பாண்டியன் அந்த நேரத்தில் சொக்கம்பட்டி எனும் ஒரு தமிழர் பாளையத்தைக் கொள்ளையடிக்கும் அரும்பெரும் பணிக்காக சென்றிருந்தான்.
தலைவன் இல்லாத பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள் கோட்டைக் கதவை இறுகச் சாத்திக் கொண்டனர்.
புல்லர்ட்டன் தாக்க உத்தரவிட்டான்.

தொடக்கத்தில் வடக்கு மூலையிலிருந்த கொத்தளத்தை பீரங்கியால் தாக்கினான்.
பிறகு பின்பக்கம் இருந்த சுரங்கத்தையும் தாக்கினான்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைச் சுற்றி அகழி எதுவும் கிடையாது.
இலந்தை முள்ளைத்தான் வேலியாகப் பரப்பி வைத்திருந்தனர்.
இலந்தை முள்வேலி நெருப்புக்கு இரையானது.
ஆங்கிலேயர் கோட்டையை நெருங்கித் தாக்கினர்.

ஒருபக்கத்துச் சுவர் முதலில் விழுந்தது.
சிறிது நேரத்தில் மறுபுறமும் விழுந்தது.
ஆங்கிலேயர்கள் உள்ளே புகுந்தனர்.
கிலியடைந்த பாஞ்சாலங்குறிச்சி ‘வீரர்கள்’ கோட்டையின் கிழக்கு வாசல் வழியாக ஓடினர்.
திரும்பி வரும் வழியில் தகவலறிந்த ஜெகவீரபாண்டியன் வந்த வழியே ஓடினான். செவல.. தாவுடா.. தாவு!

கோட்டை சோதனையிடப் பட்டது.
கோட்டைக்குள்ளே டச்சுக்காரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான ஆயுதங்களும், பீரங்கிகளும் கைப்பற்ற பட்டன.
கஜானாவிலிருந்து நாற்பதனாயிரம் டச்சு வராகன்கள் சிக்கின.
கோட்டைக்குள் அகப்பட்ட அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுள் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனின் மகளும் ஒருத்தி!
அடேய் ஓடுகாலிப் பொம்மா..
பெத்த பிள்ளையையும் விட்டுவிட்டா ஓடினாய்? பிரமாதம்.

எல்லாவற்றிற்கும் மேலாக டச்சுக்காரர்களும் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனும் செய்துகொண்ட உடன்படிக்கையின் மூலப்பத்திரம் சிக்கியது.
அதன் பிரதி எழும்பூர் ஆவணக்காப்பகத்தில் இன்றும் உள்ளது.

சொக்கம்பட்டி ‘வேட்டை’க்குப் போன நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் ஓட்டையைப் போட்டு புல்லார்ட்டன் ஆட்டையைப் போட்டதை அடுத்து ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் எடுத்த ஓட்டம் சிவகிரிப் பாளையத்தில்தான் வந்து நின்றது.

சிவகிரிப்பாளையத்திற்கு அதிகாரியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப் பட்டிருந்த கேப்டன் கிரகாம்பெல் என்பவன் படுகொலை செய்யப்பட்டிருந்தான்.
எனவே சிவகிரிக்கும் ஆங்கிலேயருக்கும் ஆகாது.
‘எதிரியின் எதிரி நன்பன்’ எனும் சித்தாந்தத்திற்கு ஏற்ப டச்சுக்காரர்கள் சிவகிரிப் பாளையத்திற்கு நிறைய அளவில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலிய உதவிகளை அளித்திருந்தனர்.
அந்தச் சிவகிரிப் பாளையத்தில்தான் ஜெகவீரபாண்டியன் அடைக்கலமாகி இருந்தான்.

ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் மீது அப்படி என்ன பாசமோ புல்லார்டானுக்கு.
சிவகிரிப் பாளையத்தையும் முற்றுகை இட்டான்.
பூவோடு சேர்ந்த நாரும் நாறிய கதையாக ஜெகவீர பாண்டியனுடன் சேர்ந்து சிவகிரிப் பாளையக்காரர்களும் சிவகிரியை கைவிட்டு விட்டு ஓடி கோம்பை வந்தனர்.

கோம்பையில் ஒரு பெரிய காடு.
காட்டைச் சுற்றி முள்வேலி.
புல்லார்ட்டன் விடவில்லை. அங்கும் முற்றுகையிட்டான்.
பாளையக்காரர்கள் முதலில் சமாதானமாகப் போவதற்கு முயற்சி எடுத்தனர்.
சமாதானப் புறாக்களை நெய்போட்டு பொன்னிறமாக நன்கு வறுத்துச் சாப்பிட்டான் புல்லார்ட்டன். போர் வெடித்தது.

கடுமையான தாக்குதலுக்குப் பிறகு காட்டின் பெரும்பகுதி புல்லார்ட்டன் வசமானது.
அந்தச் சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒரு தகவல் வந்தது.
திடீரென தின்டுக்கல் பகுதியில் நிகழ்ந்த மைசூர் மன்னனின் படையெடுப்பை சமாளிக்க வேண்டியிருப்பதால் உடனே திரும்பி வருமாறு ஆங்கிலேயர் உத்தரவு அனுப்பியிருந்தனர்.

கதைமுடிக்கும் நேரத்திலா இப்படி ஒரு உத்தரவு வரவேண்டும்?
கம்பெனியின் உத்தரவை மீற முடியாது.
வேறு வழியில்லை.
சிவகிரியானையும் ஜெகவீரபாண்டியனையும் நேரில் அழைத்தான். “நீங்கள் இருவரும் உடனே பணிந்து கப்பத்தொகை முழுவதையும் கட்ட வேண்டும்.
அப்படிக் கட்டாவிட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பேன் ” என்றான். இருவருக்கும் அந்த டீலிங் பிடித்திருந்தது.

ஒவ்வொருவரும் தத்தமது கப்பப் பாக்கியாக முப்பதாயிரம் சக்கரங்களை செலுத்தினர்.
பதினைந்தாயிரம் வராகன்களைக் கொடுத்து பழைய கோட்டைகளைத் திரும்பப் பெற்றனர்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கைது செய்து வைக்கப் பட்டிருந்த ஜெகவீர பாண்டியனின் மகளும் உறவினரும் விடுவிக்கப் பட்டனர்.

அன்றுமுதல் ஆங்கிலேயரின் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனான் ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன்.
அவ்வப்போது அவர்கள் காலால் இட்ட வேலைகளை தன் தலையால் செய்து காட்டி விசுவாசத்தை மெருகேற்றிக் கொண்டான்.
டச்சுக்காரனை நம்பி யார் தெருத்தெருவாக ஓடி ஒளிவது?
போதுமடா சாமி!

அதாவது, அவனின் விசுவாசம் எத்தகையது தெரியுமா?
மீண்டும் ஒருமுறை சிவகிரிப் பாளையத்திற்கும் ஆங்கிலேயருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆங்கிலேயர் சிவகிரி மீது படையெடுத்தனர்.
ஜெகவீர பாண்டியனும் சேர்ந்து கொண்டு சிவகிரி மீது படையெடுத்தான்.
சிவகிரி பாளையம் ஜெகவீர பாண்டியனுக்கு எத்தகைய உதவிகளை செய்து வந்தது என்பதை ஏற்கனவே அறிவோம்.
இத்தகைய செய் நன்றி மறவா பேராண்மை கொண்ட பேராளனை வரலாற்றில் எங்கும் காண இயலாது!

ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மனின் அலும்பு நாளுக்கு நாள் கூடியது.
ஆங்கிலேயரை எதிர்க்கும் பாளையங்களை எல்லாம் தாமே முன்னின்று எதிர்ப்பதாகக் கூறி, மிதிவண்டி இடைவெளியில் பக்கத்துப் பாளையங்களைக் கொள்ளையடிக்கத் துவங்கினான்.

அவனின் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க சம்பவம் அருங்குளம், சுப்லாபுரக் கொலை, கொள்ளை!
இரண்டு கிராமங்களையும் சூரையாடி தன் வசப்படுத்திக் கொண்டான்.
இந்த இரண்டு கிராமங்களும் எட்டயபுரத்துக்குச் சொந்தமானது.

எட்டயபுரத்தான் ஆங்கிலேயரிடம் முறையிட்டுப் பார்த்தான்.
ஆங்கிலேயரின் அல்லக்கையாக மாறியிருந்த ஜெகவீர பாண்டியனை அவர்கள் கண்டிக்க முன்வரவில்லை.
கப்பத்தை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டிருக்கிறான்.
தவிர கப்பத்தொகை தராத பாளையங்களிடம் இருந்து அவனே வசூலித்துக் கொடுக்கிறான்.
வீணாக கண்டித்து ஏன் அவன் உற்சாகத்தைக் குறைக்க வேண்டும்?
தவிர, நாம் வந்தது வரிவசூலுக்காக.
நீதி நேர்மையை நெட்டி நிமிர்த்த அல்ல. நோக்கம்தான் பெரிது.

1790 பிப்ரவரி 2ல் ஜெகவீரபாண்டியன் காலமானான்.
அப்போது ஆங்கிலேய அரசு ஒரு அனுதாபச் செய்தி வெளியிட்டது.
அது என்ன தெரியுமா?

“ஆங்கில ஆட்சி ஒரு விசுவாசமுள்ள ஊழியரை இழந்து நிற்கிறது!”.
இதுதான் அந்தச் செய்தி!

1 comment:

  1. இதற்கு அடுத்த பகுதி இல்லயா?

    ReplyDelete