Wednesday 26 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 7

கயவாளி கட்டபொம்மன்
பகுதி - 7
பதிவர்: ஆதி பேரொளி

"ஜாக்சன் துரை"
---------

1797 இல் கடைசிக் கட்டபொம்மன் பதவியேற்று ஏழாண்டுகள் ஆன நிலையில் தென்தமிழகத்துக்கு கலெக்டராக வருகிறான் டபிள்யூ. சி.ஜாக்சன் என்பவன்.

திமிர் பிடித்தவனாகவும் முன்கோப முரடனாகவும் அவன் இருந்தான்.

கலெக்டர் என்ற பதவி வரிகளை கலெக்ட் செய்யும் பதவியே ஆகும்.

வந்தவுடன் அவன் வரிப்பணம் எங்கெங்கு தேங்கி நிற்கிறது என்று பார்த்து அதற்கு காரணம் யார் யார் என்று பட்டியலிட்டான்.

ஆங்கிலேயருக்கு அடங்கிய பாளையக்காரர் பட்டியலில் வரியேய்ப்பில் முதலிடம் பிடித்திருந்தான் கட்டபொம்மன்.

வரி கட்டாமல் சாக்கு போக்கு சொல்லியும் வரிவசூலிக்க வருவோரை தாஜா செய்துமே அவன் காலத்தை ஓட்டி வந்துள்ளான்.
அதுவும் ஆறு ஆண்டுகளாக.
அந்த வரிப் பாக்கி ஆறாயிரம் சக்கரம் அளவு வளர்ந்திருந்தது.

ஜாக்சன் உடனே ஆலன் துரை என்பவனை அனுப்பினான்.
அவனை தடபுடலாக வரவேற்று எல்லா வகையிலும் திருப்தி செய்து வரிப்பணம் கொடுக்காமல் சாக்குபோக்கு சொல்லி திருப்பி அனுப்பினான்.

1798 ஜனவரி 30 அன்று ஆழ்வார்திருநகரியில் திருவிழா ஒன்று நடந்தது.
அப்போது இரவுநேரத்தில் அப்பகுதியைச் சுற்றிவளைத்தது கட்டபொம்மனின் கொள்ளைப்படை.

இத்தனை ஆண்டுகளாக பெரும்பொருள் ஈட்டியிருந்த அவன் நிறைய ஆயுதங்களும் ஆட்களும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலே புகுந்து ஆயிரக்கணக்கான மக்களை சுற்றிவளைத்து வெளிப்படையாக கொள்ளையடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்.

அப்பகுதி ஹாமில்டன் என்கிற அதிகாரியின் கட்டளையின் கீழ் இருந்தது.
அந்த அதிகாரியின் விடுதியையும் கட்டபொம்மன் ஆட்களால் சுற்றிவளைத்து கதவுகளைப் பூட்டி அவன் வெளிவராதபடி செய்திருந்தான்.

நள்ளிரவில் மக்களனைவரையும் கொள்ளையிட்டுவிட்டு பாஞ்சாலங்குறிச்சி திரும்பினான்.

கட்டபொம்மன் உண்மையிலேயே விடுதலை வீரன்தானோ என்று ஐயம் எழும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இது பற்றி மறுநாள் ஹாமில்டன் ஜாக்சனுக்கு கடிதம் எழுதி புகார் செய்தான்.

இதனால் ஜாக்சன் 03 பிப்ரவரி, 28 ஏப்ரல், 23 மார்ச், 08 ஏப்ரல் ஆகிய தேதிகளில் நான்கு  முறை கடிதம் எழுதியும் ஆளனுப்பியும் எந்த பயனும் இல்லாமல் போனது.

ஒரு ஆளை இவன் அனுப்பினால் கட்டபொம்மன் வந்த ஆளை தடபுடலாக வரவேற்று கழுவிவிடாத குறையாக உபசரித்து சாக்குபோக்கு சொல்லி வெறுங்கையுடன்   திருப்பி அனுப்பினான்.
போனவர்களும் கட்டபொம்மனின் விருந்தோம்பலில் மயங்கி திப்புவுடனான மோதல் நடந்து முடியும்வரையும் அது முடிந்தாலும் சில காலம்வரை படை நடவடிக்கை எதுவுமிருக்காது என்று அரசின் உள்விவகாரங்களை உளறிவிட்டு வந்தனர்.

இறுதியாக 18.08.1798 அன்று தன்னை இராமநாதபுரத்தில் வந்து நேரில் சந்திக்குமாறும் இல்லாவிட்டால் பாளையக்கார பதவி பறிக்கப்படும் என்றும் மிரட்டி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

'இதைப் பார்த்து அவன் பயந்து ஓடிவந்தால் அவன் நமக்கு அடிமை
இல்லன்னா நாம அவனுக்கு அடிமை' என்று ஜாக்சன் மனதில் நினைத்துக் கொண்டான்.

(அக்காலத்தில் எல்லா கடிதங்களும் இரண்டாக எழுதப்பட்டு ஒன்று அனுப்பப்படுவதும் ஒன்று ஆவணமாக சேகரிக்கப்படுவதும் வழக்கமாக இருந்ததால் இக்கடிதங்கள் நமக்கு கிடைத்துள்ளன.)

பதவியைப் பறித்துவிட்டால் கூடிய விரைவில் ஆங்கிலப் படையுடன் மோதல் வரும் என்று உணர்ந்த கட்டபொம்மன் அதற்குமுன்பே முழுதாக தன்னை தயார்படுத்திக் கொண்டு நாலாயிரம் பேர் கொண்ட படைபரிவாரத்துடன் இராமநாதபுரம் நோக்கி "போர்! ஆமாம் போர்!" என்று கத்திக்கொண்டு சென்றான்.

எதற்காக சென்றான் என்றால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கத்தான்.

எதை? வேறு எதை?! வரி பாக்கியைத்தான்.

ஆறாண்டு வரிப்பணம், வட்டி, அபராதம், பரிசுகள் இதையெல்லாம் ஆங்கிலேயரிடம் கொண்டு சேர்ப்பிக்கத்தான் நாலாயிரம் பேர்!

ஜாக்சன் தனக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டானென்று வைத்திருந்த வஞ்சத்தையெல்லாம் கொட்டி  அவனை 'வைத்துசெய்ய' முடிவெடுத்தான்.

கெட்டிபொம்மு ராமநாதபுரம் வரவும் கலெக்டர் குற்றாலம் புறப்பட்டு போய்விட்டான்.
கட்டபொம்மன் அங்கேயும் போனான்.
அவனை பார்க்காமல் காக்கவைத்த ஜாக்சன் சொக்கம்பட்டிக்கு கிளம்பினான்.
கட்டபொம்மன் படையும் பின்தொடர்ந்து போனது.

இப்படியே கட்டபொம்மன் கொள்ளையடித்த சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களுக்கு அடுத்தடுத்து சென்று முகாமிட்டான் ஜாக்சன்.
கெட்டிபொம்மனை ஊருக்கு வெளியில் காத்துக்கிடக்க வைத்து அவமானப் படுத்தினான்.

அப்பகுதி மக்களெல்லாம் கைகொட்டி சிரித்தனர்.
'கொள்ளைக்கார கெட்டிபொம்மு கும்பினிக் குண்டியைத் தாங்கும் அழகென்ன?' என்று எள்ளி நகையாடினர்.

இப்படி செய்தால் கட்டபொம்மு ரோசம் வந்து தன் பாளையம் போய்விடுவான்.
அவனை மேலிடத்தில் சொல்லி சிதைத்துவிடலாம் என்பது ஜாக்சனின் நோக்கம்.

கெட்டிபொம்முவோ "மானமா? பதவியா? பதவிதான்" என்கிற முடிவில் இருந்தான்.

அடுத்து பேரையூர், பவாலி, பள்ளிமடை, கமுதி என அலைக்கழித்தான் ஜாக்சன்.
கெட்டிபொம்மு நாயினும் கேடாக பின்னாலேயே அலைந்தான்.

ஆகஸ்டு 24 அன்று ஆரம்பித்த இந்த 'சுற்றோ சுற்று பயணம்' செம்டம்பர் 9 அன்று இராமநாதபுரத்தில் முடிந்தது.

அடுத்த நாள் கட்டபொம்மன் அழைக்கப்பட்டான்.
படைகள் கோட்டைக்கு வெளியே நிறுத்தப்பட்டு துணையாட்கள் கீழே நிறுத்தப்பட்டு கட்டபொம்மன்  இரண்டு பேருடன் மாடிக்கு சென்றான்.
தலையைத் தொங்கப்போட்டபடி பெட்டிப்பாம்பாக உள்ளே நுழைந்தான்.

கெட்டிபொம்மு மீது ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் குவிந்திருந்ததால் ஆங்கில மேலிடம் கட்டபொம்மனை விசாரிக்கும்போது அதை அப்படியே பதிவு செய்து ரிப்போர்ட் அனுப்புமாறு சொல்லியிருந்தது.
எனவே அங்கு நடந்தவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்சனின் முதல் கேள்வி "உன் கிஸ்தி பாக்கி எங்கே?" என்பது.
சல்லி பாக்கியில்லாமல் கொண்டுவந்துள்ளதாக கூறினான் கட்டபொம்மன்.

ஆனால் கட்டபொம்மன் பக்தர்கள் எப்படி எழுதியுள்ளனர்.
"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?" என்று தூய தமிழில் பேசியதாக கதைவடித்துள்ளனர்.

உண்மையில் "Heavens supplied earth with rain. our cattle ploughed the land. why we should pay?" என்று மதுரை கள்ளர் ஏற்படுத்திய 'தன்னரசு நாடு' எனும் அமைப்பு இவ்வாறு பேசியதாக ஆங்கிலேயர் குறித்துள்ளனர்.
(சான்று: East india magazine by R.Alexander
மற்றும் Edger Thurston)

பணம் கிடைத்துவிடும் என்றதும் சற்று சாந்தமடைந்த ஜாக்சன் தனது கெத்தை விடாமல் அதுவரை தான் எழுதிய கடிதங்களை படித்துக்காட்டச் சொல்லி அதற்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்டான்.

கட்டபொம்மன் தான் ஒரு கைநாட்டு என்றும் தனக்கு தமிழே ததிங்கினத்தோம் போடும் என்றும் எல்லாவற்றிற்கும் வாய்வார்த்தையாக பதிலளித்ததாகவும் கூறினான்.

சமாதானமடையாத ஜாக்சன் "இந்த ரிப்போர்ட் சென்னைக்கு போய் பதில் வந்த பிறகுதான் நீ இங்கிருந்து போக முடியும்.
அதுவரை இங்கேயே கிட" என்று மிரட்டினான்.

  ஜாக்சனின் முரட்டு தோற்றத்தையும் கணீரென்ற குரலையும் கண்டு வெலவெலத்துபோன கட்டபொம்மன் இங்கேயே இருந்தால் இவன் கொன்று தின்று விடுவானே என்று நடுநடுங்கினான்.
அப்போது அவன் வயிற்றில் கடமுடா என்று சத்தம் கேட்டது.

அவன் ஜாக்சனிடம் தனக்கு வயிற்றை கலக்குவதாகவும் 'ஆய்' வருவதாகவும் கூறினான்.

ஜாக்சன் 'கொல்லைப்பக்கம் ஓடு' என்று எரிச்சலுடன் கூறினான்.

மாடிப்படி இறங்கிய கட்டபொம்மன் பாதியிலேயே கழிந்துவிட்டான்.
பயத்தில் நாவறண்டு கண்கள் இருட்டிக்கொள்ள கைகால் விறைத்துக் கொள்ள அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.

கீழே இருந்த அவனது ஆட்கள், பீதியில் பேதியாகி நடுவழியில் நட்டுக்கொண்ட கட்டபொம்மனை விரைந்து சென்று அப்படியே தூக்கிக்கொண்டு தப்பித்தால் போதுமென்று ஓடினர்.

கோட்டையைக் கடக்கும்போது கோட்டைக் காவல்படை அதன் அதிகாரி லெப்டினன்ட் க்ளார்க் என்பவன் தலைமையில் கட்டபொம்மன் படையைத் தடுக்கப் பார்த்தது.
இம்மோதலில் இருபுறமும் பலர் உயிரிழந்தனர்.
கட்டபொம்மன் படை பெரிது.
அது கிளார்க்கை கொலை செய்துவிட்டு போட்டது போட்டபடி ஓட்டமெடுத்தது.

கட்டபொம்மனை ஆயோடு ஆயாக அள்ளிக்கொண்டு ஓடிய கதை பட்டிதொட்டியெல்லாம் பரவி மக்களெல்லாம் கைகொட்டி சிரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கட்டபொம்மன் பொதுமக்கள் மீது கோபத்தைக் காட்டினான்.
பாஞ்சாலங்குறிச்சி நோக்கி போகும் வழியெல்லாம் அவர்கள் கொள்ளையடித்தபடி சென்றனர்.

பாஞ்சாலங்குறிச்சி வந்ததும் தூத்துக்குடி கள்ளக்கடத்தலில் தனக்கு பழக்கமான ஒரு ஆங்கிலேய உளவாளியை அவன் வரவழைத்தான்.
டேவிசன் என்கிற அவன் யோசனைப்படி திருச்சியில் இருந்த ஆங்கிலேய உயரதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
அதில் ஜாக்சன் தனக்கு செய்த கொடுமைகளை விவரித்து 'இது நியாயமா?' என்று கேட்டு எழுதினான்.

இருவரையும் கும்பினி மேலிடம் 05.10.1798 அன்று திருச்சிக்கு அழைத்து விசாரணை நடத்தியது.

கட்டபொம்மன் ஆறு ஆண்டுகளாக விளைச்சல் சரியில்லை என்றும்
தானும் மக்களும் வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும்
கொள்ளையர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
அதனாலேயே வரியை கட்டவில்லை என்றும் கூறி திறமையாக நடித்தான்.
தான் உயிருக்கு பயந்தே ஓடியதாகவும் தப்பிக்க நினைக்கவில்லை என்றும் கண்ணீர்விட்டு காலில் விழாத குறையாக கெஞ்சினான்.

ஜாக்சனோ கட்டபொம்மன் தேர்ந்த ஒரு கயவாளி என்றும் இவனை நம்புவது நமக்கு பெருங்கேடாக முடியும் என்றும் வாதிட்டான்.

ஜாக்சனின் முரட்டு சுபாவத்தால் கோபமடைந்த கும்பினி நிர்வாகம் அவனை வேலையை விட்டு தூக்கியது.

இதற்கு அனுபவிப்பீர்கள் என்று கறுவிக்கொண்டு ஜாக்சன் போய்விட்டான்.

கட்டபொம்மன் அனைத்து பாக்கியையும் கட்டியதுடன் ஆங்கிலேயருக்கு அடிமைச் சாசனமும் எழுதிக் கொடுத்ததால் அவனுக்கு மன்னிப்பு வழங்கியதோடு அவனை தம்முடன் சில நாட்கள் தங்கச் செய்து விருந்தளித்தது கும்பினி மேலிடம்.

அவன் புறப்படும் முன்பு ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள முத்துமாலையையும் இருபுறமும் கூர்மையுள்ள ஆங்கிலக்கொடி முத்திரை பதித்த வடிவாள் ஒன்றையும் ஏழு குதிரைகளையும் பரிசாக அளித்து சூடாமணி என்ற பட்டத்தையும் மேலதிகாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு அளித்தனர்.

கட்டபொம்மு ஆங்கிலேயரோடு 'ஒன்றுக்குள் ஒன்றாக' ஆன இந்த திருச்சி படலம் கட்டபொம்மன் பக்தர்களால் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

கட்டபொம்மனைப் புகழ்ந்த அனைத்து புத்தகங்களும் ஜெகவீரபாண்டியன் என்ற தெலுங்கர் எழுதிய "பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டன.
அதிலேகூட திருச்சி நிகழ்வுகள் மறைக்கப்படவில்லை.

இவ்வாறு கட்டபொம்மன் முந்தைய குற்றங்கள் அனைத்திலிருந்தும் தப்பித்தான்.
என்னதான் இருந்தாலும் கொல்லப்பட்ட கிளார்க் ஒரு வெள்ளையன்.
எனவே அந்த கொலைவழக்கில் மட்டும் கட்டபொம்மன் பெயருக்கு சேர்க்கப்பட்டு சிறிதுகாலம் அலைக்கழிக்கப்பட்டான்.

"என்னையே தூக்கிக்கொண்டுதான் போனார்கள் நான் எப்படி கொலைசெய்வேன்?!
வேண்டுமானால் கிளார்க் குடும்பத்திற்கு நட்டயீடு தந்துவிடுகிறேன்" என்று கூறி விடுதலையானான்.

இதன்பிறகாவது அவன் ஒழுங்காக இருந்தானா?!
கட்டபொம்மன் என்கிற வேதாளம்  வரிபாக்கி, கொலை, கொள்ளை என மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

கலெக்டராக இருந்த லூசிங்டன் எடுத்த அலுவலக நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.

அப்போது கட்டபொம்மனுக்கு முடிவுரை எழுத வந்துசேர்ந்தான் ராணுவ அதிகாரி பானர்மேன்.

(தொடரும்)




1 comment:

  1. whats the source sir???where you are getting these info's?

    ReplyDelete