Saturday 21 July 2018

திராவிடம் தீது - பாவாணர்

திராவிடம் தீது - பாவாணர்

பாவாணர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு "தமிழியற் கட்டுரைகள்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அதில் "திரவிடம் என்பதே தீது" என்ற தலைப்பில் பக்கம் 27 மற்றும் 28 இல் ஒரு கட்டுரை உள்ளது.

அதன் முக்கிய வரிகள் கீழே,

* தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்.
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

* தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

* பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல்,
வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது.

* தமிழ் தூய்மையான தென்மொழியென்றும் திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

* தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

* தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

* திரவிடம் முக்கால் ஆரியமாதலால், அதனொடு தமிழையும் இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம்.
பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

* வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும்,
பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

* தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

* தமிழ் வேறு திரவிடம் வேறு

* வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும்.

---------------------
முழு கட்டுரை அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.

'திரவிடம்' என்பதே தீது

நாடுகளெல்லாம் பெரும்பாலும் மொழி யடிப்படையிலேயே அமைந்திருப்பதனாலும்,
அதன் வழியாகவே முன்னேறுவதாலும்,
தமிழர் யாவரும் தமிழ்ப் பற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.

எந்நாட்டாராயினும், தமிழ்ப்பற்றுடையார் தமிழரே.
இந்நாட்டாராயினும், அஃதில்லார் அயலாரே.

தமிழ்ப் பெயரே தாங்குதலும்,
இயன்றவரை தூயதமிழிற் பேசுதலும், எழுதுதலும்,
திருமணமும், சடங்குகளும் கோயில் வழிபாடும் தமிழிலேயே நடப்பித்தலும்,
மக்கள் உலகத்தில் 'தேவமொழி'யில்லையென நம்புதலும்,
இந்திக் கட்டாயக் கல்வியைத் தமிழ்நாட்டில் அடியோடொழித்தலும்,
தமிழ் நாட்டிற்குத் தமிழ் நாடென்ற பெயரிடுதலும்,
தமிழன் என்பதற்கு அடையாளமாம்.

தமிழிற்கு இடைக்காலத்தில் நேர்ந்த இழிவினால் பல தென்சொற்கள் வழக்கற்றுப் போயின.
அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

  கால்டுவெல் கண்காணியார் முதன்முறையாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும்,
அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மையாலும்,
தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக்காட்டத் தேவையில்லா திருந்தது.

இக்காலத்திலோ,
ஆராய்ச்சி மிகுந்துவிட்டதனாலும்,  வடமொழியும் இந்தியும்பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழியாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும்,
தமிழென்றும், பிறஇனமொழிகளையே திரவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாததாம்.

  தமிழ் தூய்மையான தென்மொழியென்றும்,
திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழியென்றும் வேறுபாடறிதல் வேண்டும்.

பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல், வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழாகாது.

வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும்.

ஆதலால், வடசொல் சேரச் சேரத் திரவிடத்திற்கு உயர்வு;
அது தீரத்தீரத் தமிழிற்கு உயர்வு.

திரவிடம் என்ற மொழி நிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது.
அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும்.

தமிழ் தனித்தியங்கும்; திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

இங்ஙனம், வடமொழியை நட்பாகக் கொள்ளும் திரவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும், ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திரவிடம். திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

திரவிடம் அரையாரியமும் முக்காலாரியமு மாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் கெட்டுப் போம்.

பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்,
இந்தியா முழுதும் ஆரியமாய் விடும்.

தமிழ், திரவிட மொழிகளைப்போல ஆரியச்சார்பு கொள்ளாமை யாலும்,
வட மொழியையும் இந்தியையும் ஏற்காததாலும்,
தமிழ் நாட்டிற்கு மொழியியல் தன்னாட்சி (Lingusitic autonomy) பெறுதல் வேண்டும்.

போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு ஆகிய முத்துறையிலும், இந்தியக் கூட்டரசு அடங்கியிருக்கலாம்.

திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னுங்கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்ற கொள்கையைக் கடைப்பிடித்தும்,
தமக்குத் தாமே முட்டுக்கட்டையிட்டுக் கொண்டது.

இவை நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை.

தமிழ் என்னுஞ் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும், திராவிடம் என்னுஞ் சொல்லில் இல்லை.

திராவிடம் பனிமலை (இமயம்)வரை பரவியுள்ளது.
தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது.

தமிழ் வேறு, திராவிடம் வேறு.

தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே.

தமிழ்நாடு பிரிந்தபின், குறைந்தபட்சம் தென்னாட்டுத் திரவிடரெல்லாம் தமிழரொடு கூடி மிகப் பரந்த புலனங்களில் (விஷயங்களில்) ஒரு கூட்டொப்பந்தம் செய்யும்போதே தி.மு.க. சொல்லும் திரவிடம் தோன்றும்.

அதற்கு இன்று தமிழர் மட்டுமே முயல்வது, வானத்து மீனுக்கு வன்றூண்டிலிட்ட கதையேயாம்.

இதுகாறுங் கூறியவற்றால்,
உண்மை நிலையை உள்ளவாறுணர்ந்து,
நடைமுறைக் கொவ்வாத வீண் கொள்கைகளையும் வீறாப்புக்களையும் விட்டுவிட்டு,
எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றிபெறுதற் பொருட்டு,
பொதுநலத்தை முன்வைத்து ஒற்றுமையாகப் போராடி,
முன்னேற்றப் பாதையில் முனைந்து செல்க.

('தமிழ்' இதழில் வெளியான கட்டுரையிலிருந்து)

http://www.tamilvu. org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=28

No comments:

Post a Comment