Monday 22 October 2018

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை என்றாலே ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

வடக்கே வேதங்கள் என்றாலே ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்றுதான்.
ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வேதம் மூன்று (வேதம் த்ரியே) என்றே வருகிறது.
நாம் "நான்மறை" என்றழைப்பதுபோல வடவர் "த்ரிவேதா" என்றே அழைக்கின்றனர்.
(திரிவேதி எனும் வடயிந்திய பிராமணப் பட்டம் இதைக் குறிப்பதே)
‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116)

உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.
--------------

கி.பி.1050 இல் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை அந்தணர்கள் நான்மறையை எழுதிவைக்காமல் வாய்வழிக் கல்வியாகவே கற்பித்துவந்தனர்.
(குறுந்தொகை 156 பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது)
அந்த மறைகளை வள்ளுவர் முப்பாலாக எளிமையாக எழுத்தில் எழுதினார் என்று உள்ளது.

"ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

இதிலிருந்து வள்ளுவர் இயற்றிய திருக்குறள் அந்தணர் கற்பித்துவந்த நான்மறைதான் என்பது தெளிவாகிறது
----------------------

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பார்ப்பனரான திருஞானசம்பந்தர் இதையே கூறியுள்ளார்.

"...சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு
அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே"

அதாவது அந்தணர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு சொல்லிக்கொடுத்த சிவனை போற்றுகிறார் அவர்
----------

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மறை ஓதும் பார்ப்பனரை 'வண்டமிழ் மறையோர்' என்று குறிப்பிடுகிறது.

இது பற்றிய கட்டுரைக் காதை பாடல் வருமாறு,

"வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு"

இதன் பொருள்,
பார்ப்பனரான பராசரன் என்பவர் வளமான தமிழ்மறைகளில் வல்லவரான மறையோருக்கு வானளவு பொருள் கொடுத்து உதவிய, உறுதியான வளமிகுந்த நீண்ட வேலுடைய, சேரனைக் காண காடு, நாடு, ஊர் என அனைத்தையும் கடந்து உயர்ந்த பொதியமலையும் பின்னால் இருக்கும்படி (கடந்து) வெகு தூரம் சென்று அவனைச் சந்தித்தார்.

இதிலிருந்து மறைகள் தமிழில் இருந்தது என அறியலாம்.
அவற்றை ஓதிய பார்ப்பனருக்கு சேரன் கொடையளித்ததைக் கேட்டு பராசரன் எனும் பார்ப்பனரும் அவனை நாடிச் சென்றதையும் அறியலாம்.
-------------
  தொல்காப்பியம் (பிறப்பியல் 20) கூறுகிறது,

"..வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே"

அதாவது ஒரு எழுத்தின் உச்சரிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை அந்தணர் ஓதும் மறைகளை வைத்து முடிவு செய்யுமாறு கூறுகிறது.

பழமையான தமிழின் முதன்மையான இலக்கண நூலே அந்தணரின் ஓதும் உச்சரிப்பை வரையறையாகக் கூறுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
------------

என்றால் சமஸ்கிருதம் எப்படி ஓதப்படும் மொழியாக ஆனது?!

வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன.
அதற்கு பொருளே தெரியாமல் இருந்ததால் யாரும் அவற்றை விரும்பவில்லை.

(நம்மாழ்வார் இயற்றிய நான்கு பாசுர நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நால்வேதத்தின் சாரமாக இருப்பதாகக் கூறி அவரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று மதுரகவியாழ்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேற்கண்ட பாசுர நூல்களுக்கும் சமஸ்கிருத வேதங்களுக்கும் பொருத்தம் இல்லை)

இன்று நான்கு வேதங்களுக்கு கிடைக்கும் ஒரே விளக்க உரை சாயனர் எனும் கன்னடர் எழுதிய விளக்க உரை மட்டுமே!

இவர் யாரென்றால் வேதாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார்.

வேதாரண்யர் யார்?!

கிபி 14 ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் வேதாரண்யர்.
கன்னடரான இவரும் வடமொழியில் சிறந்த புலவர்.
சம்ஸ்கிருதத்தில் பல படைப்புகளைத் தந்தவர்.

இவரே தமிழகத்தில் வடுகர் ஆட்சி அமையக் காரணமானவர்.
பாண்டியப் பேரரசு வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தபோது டெல்லி சுல்தான்கள் பாண்டியரை வீழ்த்தி மதுரை வரை முன்னேறினர்.
அப்போது மதுரை சுல்தானிய படைத்தளபதிகளான ஹரிஹர, புக்கரை மனம் மாற்றி மதுரை மீது ஏவியர் வேதாரண்யரே!
அவர்கள் துருக்கியரை விரட்டி மதுரையைக் கைப்பற்ற காரணமானவர்.
விஜயநகர பேரரசு க்கு அடித்தளமிட்டவர்.

கோயில்கள் பிராமண மயமானதர்க்கும் சமஸ்கிருத மயமானதற்கும் மூல காரணம் விஜயநகர பேரரசு மற்றும் அதன் வழிவந்த நாயக்கர் அரசுகளே!

தமிழகத்து நாயக்கர் ஆட்சியை சமஸ்கிருதத்தின் பொற்காலம் என்றே கூறலாம்.

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழ்ப் பார்ப்பனர் இன்றும் தமிழில் ஓதிதான் அந்நாட்டு மன்னருக்கு முடிசூட்டுகின்றனர்.

ஆக தமிழ் மறைகளை புறக்கணித்து சமஸ்கிருதத்தைப் புகுத்தியது தமிழரல்லாத ஆட்சியே!
----------
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
-----------

4 comments:

  1. "உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்."

    அப்படியாயின், திருக்குறளில் வீடு விடுபட்டிருப்பது ஏன்? காணாமல் போயிற்றா?

    ReplyDelete
    Replies
    1. Aram, porul, mattrum inbam moonrum adaindavarku veedu paeru thaanaga kittum. Ithanal thaan kuralil veedu aendra athigaaram illai.

      Delete
  2. அவ்வை இயற்றிய குறள் காண்க..

    ReplyDelete
  3. சின்ன மாற்றம் பார்பான் என கூறுவதை விட அந்தணர் என கூறல் மேல்

    ReplyDelete