Showing posts with label மணியரசன். Show all posts
Showing posts with label மணியரசன். Show all posts

Tuesday, 6 December 2022

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

 ஒரு இனம் தமது தாய்நில வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்துகொள்வது தமது அடுத்த சந்ததியை ஆளாக்கிவிடுவது வாழ்வியல் முறையாகும். நிலத்தின் வளங்களை மண்ணின் மைந்தர் அல்லாத பிறர் பயன்படுத்துவது முறையில்லை. ஒருவேளை அப்படி பிறர் பயன்படுத்தும்போது அப்பகுதி மக்களுக்கு அதில் வாழ்வாதாரம் தருவதே முறை! ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு நிலப்பகுதியை எடுத்துக்கொண்டு அதன் வளங்களைப் பயன்படுத்தும்போது அதில் அம்மண்ணின் மைந்தருக்கு வேலைவாய்ப்பு தருவதே முறை! அது அரசின் உதவியைப் பெறுமானால் அந்த அரசுக்கு வரி அளிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது ஒப்பந்தம் போன்ற வாழ்வாதாரங்களை அளிப்பதும் தார்மீகக் கடமை ஆகும். ஒரு இனம் தமது வளங்களின் மீது வாழ்வாதார உரிமை கோருவது தவறென்று ஆகாது. ஆங்கிலேயர் காலத்தில் வளச்சுரண்டல் உச்சத்தை அடைந்தபோது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு உருவாக்கியதே காங்கிரஸ். பின்னர் அதுவே இந்திய சுதந்திர குரலாக மாறியது.
 திராவிட இயக்கமும் சரி சிங்கள பேரினவாதமும் சரி ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் முறையாகப் படித்து தேர்வாகிப் பெற்ற வேலைவாய்ப்பைக் கண்டு எழுந்த பொறாமை உணர்வின் விளைவாகவே தோன்றியது.  முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர். இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது. 1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன. இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று தமிழர்கள் நிறைகின்றனர் (குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்) ஈழத்திலும் அவ்வாறே தமிழர்கள் கல்வி மூலம் உயர்பதவிகளை அடைகின்றனர் (குறிப்பாக யாழ் வெள்ளாளர்கள்). 
 தமிழர்கள் கல்வி மூலம் அடைந்த உயரத்தை பிறர் அரசியல் மூலம் அடைய திட்டமிடுகின்றனர். இவ்வாறே திராவிடமும் சிங்களப் பேரினவாதமும் பிறந்தன. ஆங்கிலேய ஆதரவுடன் திராவிடம் ஆட்சியைப் பிடித்து மறைமுகமாக செயல்பட்டது. ஆனால் சிங்களவர் நேரடியாகவே செயலில் இறங்கினர். 1956 இல் சிங்களம் திணிக்கப்பட்டு தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பபட்டு எல்லா அரசு வேலைகளிலும் ராணுவத்திலும் காவல்துறையிலும் சிங்களவர் நிறைகின்றனர். 1956 இல் 30% நிர்வாகப் பணிகள்,  50% எழுத்தர் பணிகள், 60% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 40% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் தமிழர் வசம் இருந்தன. ஆனால் 1970 இல் 5% நிர்வாகப் பணிகள்,  5% எழுத்தர் பணிகள், 10% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 1% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் மட்டுமே தமிழர் வசம் இருந்தன. இந்த வேலைவாய்ப்பு இழப்பே தமிழ் இளைஞர்கள் கொதித்தெழக் காரணம். இதேபோல ஹிந்தியர் ஹிந்தியைத் திணித்தபோது தமிழகம் ஈழத்தடிகள் தலைமையில்  எழுநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொடுத்து பெரும் போராட்டம் நடத்தித் தடுத்ததால் ஈழம் அளவுக்கு நிலை மோசமாகவில்லை. இந்த மொழிப்போரில் இடையில் புகுந்து இடையிலேயே விலகிவிட்ட திராவிடத் தலைவர்கள் இதன் பலனை மறைமுகமாக தமது மக்களுக்கு சாதகமாக மாற்றினர். ஆம்! திராவிடம் இந்த இருமொழிக் கொள்கையை "தமிழ் - ஆங்கிலம்" என்றில்லாமல் "தாய்மொழி - ஆங்கிலம்" என்றாக்கி தம் மக்களைக் காத்தது. 2005 இல் தமிழ் கட்டயாமாக்கப்படும் வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தமிழ் இல்லாமலேயே இயங்கின.  அவற்றின் எண்ணிக்கை.
- தெலுங்கு : 269 + 35
- உருது : 260 + 56
- மலையாளம் : 100 + 50
- கன்னடம் : 61 +1.

மாநில வேலைவாய்ப்பில் தமிழுக்கு மதிப்பெண்கள் அதிகம் தரப்பட்டு இருந்ததால் தமிழர்கள் அதை அடைவது எளிதாக இருந்தது. ஆனால் தமிழகத்தினுள் மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு  தமிழுக்கு மதிப்பெண்ணை குறைத்தனர். பின் தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்றாக்கினர்.
 இதைவிட ஒருபடி மேலே போய் 1.9.2016 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டத்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது எத்தனை பெரிய அநீதி?! 
 இதன் மோசமான விளைவுகளை தற்போது தமிழக இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
சில எடுத்துக்காட்டுகள் வருமாறு,

* தென்னக ரயில்வேயில் 196 SM காலியிடங்கள் நிரப்பப்பட்டபோது 2 மலையாளிகள், 194 பீகாரிகள், 0 தமிழர்கள்
(செய்தி 26.02.2017)

* மதுரையில் நடந்த தபால்துறை போஸ்ட்மேன் பணியிட நிரப்பலுக்கான தேர்வில் 300 காலியிடங்களுக்கு 50% வரை அரியானா மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் போக மகாராஷ்ட்ர மாணவர்களும் பெருமளவில் தேர்வாகியுள்ளனர்.  தமிழர்கள் 25%கூட தேர்வாகவில்லை
(செய்தி 17.03.2017)

* சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேரில் 5 பேர் மட்டுமே தமிழர்கள். அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்
(செய்தி 29.10.2018)

* தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வான 300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள்
(செய்தி 31.05.2019)

* மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 பேர் மட்டுமே தமிழர்
(செய்தி 18.09.2019)

* தென்னக ரயில்வே (தமிழகம் மற்றும் கேரள ரயில்வே சேர்ந்தது தென்னக ரயில்வே) பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள் (செய்தி 16.06.2020)

 இந்த நிலையை ஒப்பிட கர்நாடகம் வைத்திருந்த மொழிக்கொள்கையைப் பார்ப்போம். 1982 இல் கர்நாடகம் முழுவதும்  கன்னடம் திணிக்கப்பட்டு அதை எதிர்த்துப் போராடிய 4 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் வரை காணாமல் போயினர். தமிழ்ப் பகுதிகளுக்கு அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கர்நாடகத்தில் கன்னடருக்கே முன்னுரிமை என்று எழுத்தப்படாத சட்டம் 1986 இல் சட்டமாகவே ஆனது. சரோஜினி மகிஷி கமிஷன் பரிந்துரைகள் படி 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இதில் முக்கியமானவை வருமாறு,
1. 100% இடஒதுக்கீடு கர்நாடக மாநில அரசு பணிகளில் கன்னடர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
2. 100% இடஒதுக்கீடு மத்திய அரசு பணிகளில் "C", "D" எனும் ப்ளூ காலர் பணிகள் கன்னட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
3. மத்திய அரசின் "B" கிரேட் பணிகளில் 80% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
4. மத்திய அரசின் "A" கிரேட் பணிகளில் 65% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
5. 100% தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை. அப்படி கன்னடர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனும் நிலையில் பிறருக்கு வழங்கலாம்.
 இதில் கன்னடவர் என்பதற்கான வரையறையும் தரப்பட்டுள்ளது. அதாவது,
 பதினைந்து ஆண்டுகளுக்கு குறையாமல் கர்நாடகத்தில் இருந்திருக்க வேண்டும். கன்னடம் பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் (அதிலும் கன்னட மீடியத்தில் படித்திருந்தால் முன்னுரிமை) இந்த வரையறையில் வருபவர் கன்னடர். இந்த அடிப்படையில் செயல்பட்டதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். 
 கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர். 100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.  இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.
2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).

தப்பித் தவறி பிறருக்கு வேலை கிடைத்தால் கன்னடர் பெரும் எதிர்ப்பைத் தெரிவிப்பர். உதாரணமாக 1999 இல் மத்திய அரசு நிறுவனமான ஏ.ஓ.ஜி இல் கன்னடர் பெரும் போராட்டம் செய்து முறைப்படி தேர்வாகி வேலைபெற்ற 28 தமிழர்களை வெளியேற்றினர். 

 தமிழகத்தினுள் மாநில, மத்திய மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தமிழக மாநிலத்தாருக்கே கிடைக்கவேண்டும் என்று மாநில உரிமைகளை மீட்கும் நோக்கத்துடன் இயங்கும் பெ.மணியரசன் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார். 

 அரசாங்க வேலைவாய்ப்பு சரியாகப் பங்கிடப்படாதபோது அங்கே கலகம் வெடிக்கும் என்பது கண்கூடு! 

Tuesday, 27 November 2018

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தைப் புயல் தாக்குகிறது.
தமிழகக் குழு ஆய்வு செய்கிறது. இவ்வளவு சேதம் என்று கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறது.

இப்போது நியாயமாக நடுவணரசு என்ன செய்யவேண்டும்?

தமிழக அரசு கூறுவதை நம்பி நிவாரணம் அளிக்கவேண்டும்.

ஆனால் மத்திய அரசு வழக்கமாக  என்ன செய்கிறது தெரியுமா?

தனியே ஒரு மத்திய குழுவை அனுப்பி அந்த குழு திமிராகவும் எகத்தாளமாகவும் மேம்போக்காக ஆய்வு செய்து சாவகாசமாக "சேதமெல்லாம் ஒன்றுமில்லை" என்பது போல அறிக்கை அனுப்பி  தமிழக அரசு கோரியதில் கால்வாசியோ அல்லது அதற்கும் குறைவாகவோ பிச்சை போடும்.

இத்தனைக்கும் தமிழக அரசு வரி என்கிற பெயரில் மத்திக்கு கட்டும் மலை மலையான பணத்திற்கு முன் இந்த "பிச்சை" உண்மையிலேயே "பிச்சை" என்று கூடக் கூறமுடியாது அதற்கும் கீழ்.

உதாரணத்திற்கு 2012 ஆண்டு தமிழக அரசு மத்திக்கு கட்டிய 'வருமான வரி' மட்டும் 28000 கோடி (பிற வரிகளைச் சேர்க்கவில்லை).

ஆனால் 2011 இல் தானே புயல் தாக்கியபோது தமிழகம் கேட்டது வெறும் 5200 கோடி.

ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை 500 கோடி.

அதாவது ஒரு நபர் இன்னொரு நபரிடம் 280 ரூபாயை கொடுத்துவைத்து அதில் அவசரத் தேவைக்காக 50 ரூபாயை  கேட்கும்போது வெறும் 5 ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிந்தது போல.

இது மட்டுமில்லை மத்திக்கு நாம் கட்டும் கப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
2012 இல் 28000 வருமான வரி கட்டியதாக கூறினேன் அல்லவா?!
2016 இல் அது 67000 கோடியாக உயர்ந்துவிட்டது.

இதேபோல 2016 "வர்தா" புயல் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கோரியது 22000 கோடி.
மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 266 கோடி.

அடுத்த ஆண்டு 2017 ஒக்கி புயலின்போது,
தமிழ்நாடு கேட்டது 13000.
இந்திய அரசு பிச்சையிட்டதோ வெறும் 280 கோடி.

இப்போது புதிதாக GST போட்டு ஆறே மாதங்களில் 51000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டனர்.
(01.07.2018 அன்று GST ஆணையர் அறிவிப்பு)

ஆக இந்த நிதி ஆண்டு 1 லட்சம் கோடிக்கு மேல் GST வரி கட்ட உள்ளோம்.

பிற வரிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ தற்போதைய நிலைப்படி ஓராண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் மத்திக்கு கப்பம் செல்கிறது.

தமிழகத்தின் மொத்த கடனே அவ்வளவுதான்!

இது பகல்கொள்ளை அன்றி வேறில்லை!

விளைவு, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் 40,000 ரூபாய் கடனாளி.

ஆனால் நாம் பெற்றது என்ன?!

ஆற அமர வந்து பிணங்களை பொறுக்கி தரும் "மத்திய பேரிடர் மீட்பு" நடவடிக்கை மட்டும்தான்.

நிவாரண நிதியை விடுங்கள், தற்போதைய மோடி அரசு நமக்கு ஒதுக்கிய வழக்கமான நிதியைக்கூட இன்னும் தரவில்லை.

கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர்,
"தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,
தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும்
ஒதுக்கப்பட்டு இதுவரை வராத 19000 கோடி ரூபாய் நிதி பாக்கியைத் தாருங்கள்"
என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.
(இந்த பாக்கி தற்போது 21000 கோடியைத் தாண்டிவிட்டது)

தமிழகத்திற்கு உள்ளே ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு அதாவது மாநில அரசின் மொத்த செலவே 15000 கோடிதான்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு மாத ஊழியம் தராமல் ஏமாற்றுவது போலத்தான் இதுவும்!

சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரையில் "ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31% என்றும்
அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை வெறும் 3% என்று குறிப்பிட்டிருந்தார்"
(சான்று Times of India, 05.09.2018).

"நல்ல வாயன் சம்பாதிப்பதை நாறவாயன் தின்கிறான்" என்கிற பழமொழியை இனி  "தமிழகம் சம்பாதிப்பதை ஹிந்தியா தின்கிறது" என்று மாற்றிக் கொள்ளலாம்.

மக்கள் என்னதான் நிவாரணம் அனுப்பினாலும் ஒரு அரசு அளவுக்கு வராது.

கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நாம் கேட்பது 15000 கோடி.

ஆனால் வழக்கம் போல மத்திய அரசு "விளைவித்தவன் வாழைப்பழத்தை பிடுங்கித் தின்றுவிட்டு தோலை தூக்கி  முகத்தில் அடிக்கும்" ரவுடி போல எதையாவது வீசியெறிய உள்ளது.

சுரண்டலை நோக்கமாகக் கொண்ட ஆங்கிலேய பேரரசுக்கும் ஹிந்திய நடுவணரசுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா?!

தமிழர்கள் சிந்திப்பீர்!
-----------------

தகவல்களுக்கு நன்றி:
தோழர் க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கட்டுரை தலைப்பு:
“கசா” பேரழிவுச் சூழலிலும்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு!

Saturday, 20 October 2018

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்

“எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்!"

என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே,

//கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே "வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில்" தமிழகம் முதலிடம் //

 //2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்'  44 லட்சம்//

//தற்போது 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்//

//கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன//

//நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற 'இன்னர்லைன் பெர்மிட்' எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்//

//தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை//

//வடவர் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன//

//சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்//

//அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலைவாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு //

//சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு//

படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்! - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்

இதேபோல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,

"2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்" என்று தேடுக.

Wednesday, 8 November 2017

சென்னை மாகாணத்தை மொழிவழியாகப் பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா

சென்னை மாகாணத்தை மொழிவழியாக பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா

"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்"
- ஈ.வே.ரா விடுதலை 01.08.1948

ஈ.வே.ராமசாமி ஏதோ 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கி தமிழர் உரிமைக்காகப் போராடினார் என்றும்
தனித்தமிழ்நாடு கேட்டார் என்றும் திராவிடவாதிகள் கூறுகிறார்கள்.

ஆனால் அது பொய்.

(தேடுக: தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் வேட்டொலி

தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி வேட்டொலி)

தற்போது மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது.

2011 ல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது.
அது அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே (தேவிகுளம் - பீர்மேடு) தமிழர் பெரும்பான்மை மாவட்டம் ஆகும்.
தேனி தமிழரும் இடுக்கி தமிழரும் லட்சக்கணக்கில் திரண்டு இடுக்கி தமிழகத்துடன் இணைய பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

அப்போது தமிழ்தேசியப் பேரியக்கம் தலைவர் திரு.மணியரசன் பல்வேறு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்.

அப்பொது அவர் வெளியிட்ட அறிக்கையில் திராவிடம் பேசுவோர் அன்று முதல் இன்றுவரை தமிழர் இனவுணர்வை திசைமாற்றி எப்படியெல்லாம் இரண்டகம் செய்தனர் என்று விரிவாக கூறியுள்ளார்.

(அவற்றில் மேற்கண்ட சான்று மட்டும் இதுவரை எனக்கு காணக்கிடைக்காத ஒன்று.
அதனால் இங்கே பதிகிறேன்.

இது ' ஈ.வே ரா மண்மீட்பில் உதவினாரா? ' என்ற பதிவுடனும் சேர்க்கப்படும்)