Showing posts with label தேனி. Show all posts
Showing posts with label தேனி. Show all posts

Thursday, 27 June 2024

தமிழ்தேசியப் பார்வையில் ரயில் திரைப்படம்

தமிழ்தேசியப் பார்வையில் ரயில் திரைப்படம்

தேனி முக்குலத்து சொந்தங்களே!
 ரயில் திரைப்படம் உங்களைக் கேவலப் படுத்துவதை  அறிவீர்களா?!
நீங்கள் அழுக்கு பிடித்த குடிகார கபோதியாம்!
உங்கள் மனைவி வடயிந்தியனை வளைக்கப் பார்ப்பாளாம்!
ஒரு அப்பாவி வடயிந்தியனை கொன்றுவிட்டு பணத்தை திருடுவீர்களாம்!
ஒரு தேனி தெலுங்கன் இப்படி படம் எடுத்திருக்கிறான்!
இதைக் கேட்க நேரமில்லையா உங்களுக்கு?! 

 தேனி தமிழர்களே! காலம் காலமாக நம் உப்பைத் தின்றுவிட்டு நம் மீதே விசத்தைக் கக்கும் இந்த வந்தேறிகளைக் கண்டிக்க மாட்டீர்களா?!

 ரயில் படத்தின் கதை இதுதான். தேனியில் பல வடயிந்தியர்கள் தமிழர்களால் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கப் படுகிறார்கள். ஊர் நடுவில் ஒரு வீட்டில் தனியாக ஒரு வடயிந்தியன் வசிக்கிறான்.
 அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரனின் மனைவி இருக்கிறாள்.
 அந்த குடிகாரன் அழுக்குப் பிடித்த ஆண்மையற்ற வலிமையற்ற வெறிபிடித்த ஆள்.
அவன் தமிழன் என்பதைக் காட்ட கழுத்தில் எப்போதும் ஒரு முருகன் டாலர்.
 அவன் முக்குலம் என்பதைக் காட்ட அவன் அரிவாளுடன் நாங்கள்லாம் வீரப் பரம்பரை என்று போதையில் நாயிடம் பேசுவதாக ஒரு காட்சி.
 குடிகாரனின் நண்பன் இன்னொரு குடிகாரன் அவன் தமிழ் வாத்தியார் பையன்.
 இனம், சாதி, மொழி மூன்றையும் கேவலப் படுத்தி உள்ளனர்.
 அடுத்து வடயிந்தியனைக் காட்டும் விதம் அப்படியே நேர்மாறாக இருக்கிறது.
 அவன் காஷ்மீர் ஆப்பிள் போல இருப்பதாக பெண்கள் பேசிக் கொள்கிறார்கள். சுத்தமானவனாக, கலை ரசனை உள்ளவனாக, நல்லவனாக, பலசாலியாக இருக்கிறான்.
 வடக்கன் தன் மனைவியுடன் பேசுவது அந்த குடிகாரனுக்கு பிடிக்கவில்லை.
 அதிலும் அந்த மனைவியே கொஞ்சம் சலனப்பட்டாலும் வடயிந்தியன் கண்ணியமாக நடந்து கொள்வது போல ஒரு காட்சி வருகிறது.
 யாரோ அந்த வடக்கனைக் கொன்றுவிட்டு அவன் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
ஊரே கூடி அழுது அந்த வடக்கன் உடலை சகல மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்கிறது. 
 இதைச் செய்த்து தன் கணவன் தான் என்று மனைவி கண்டறிந்து உண்மையை வெளிக் கொண்டு வருகிறாள்.

 இது பற்றிய விரிவான விமர்சனம் கீழே

 

என் பார்வையில் ரயில் திரைப்படம்
பதிவு: இராஜா திருமுருகன் சு.செந்தில் குமரன்

வஞ்சக - வன்ம - விஷமச் சரக்கு 'ரயில்'

முன் குறிப்பு :

உண்மையில் நான் இதை எழுதித் தொலைக்க வேண்டாம் என்றே நினைத்தேன் . சொல்லப் போனால் ஆரம்பத்தில் இந்தப் படம் பற்றி எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன் . காரணம் சம்மந்தப்பட்ட பலரும் பழகியவர்கள் . தவிர திரைக்கதையிலோ இயக்கத்திலோ வெகு ஜன மக்களைக் கவரும் எந்த விசயமும் இல்லாத - கருத்தியல் நேர்மையோ ஆழமோ இல்லாத இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வந்தது தெரியாமல் கடந்து போகும் என்பதை, சென்ற திங்கள் அன்று இந்தப் படத்தைப் பார்த்தபோதே நான் முடிவு செய்துவிட்டேன் .
எனவே தான் படம் பார்த்து விட்டு நண்பர்கள் யாரையும் சந்திக்காமல் நழுவினேன் . நான் நினைத்ததுதான் நடந்தது ஆனால் கூலிக்கு மாரடிப்பது போல நட்புக்கு மாரடிக்கும் பலர் தப்புக்குத் தப்படிக்கும் கணக்காக இந்தப் படத்தை கொண்டாடிக் குதித்து குலவை போடுவதாக நினைத்துக் கூக்குரலும் கூச்சலும் இடுவதை பார்க்கப் பார்க்க, என் முடிவு மாறியது.
அதுவும் ஒருவர் இன்னொரு மகேந்திரன் கிடைத்து விட்டார் என்று ஒருவர் எழுதி இருந்தார் . உண்மையில் மகேந்திரன் உயிரோடு இருந்திருந்தால் அப்படி எழுதியவர் மேல் (படம் எடுத்தவர் மேல் அல்ல) மான நஷ்ட வழக்குப் போட்டிருப்பார் .
பல வருடங்களுக்கு முன்பே செத்துப் போன மகேந்திரனைத் தோண்டி எடுத்து தூக்கில் போடுவது போல ... இது எப்பேர்ப்பட்ட அநியாயம் . 
இல்லாத பிரம்ம ஹத்தி தோஷம் பிடிப்பதாகச் சொல்கிறார்களே... மாறாக 'இதய சுத்தி தோஷம்' என்று ஏதாவது ஒன்று இருந்து இவர்களை எல்லாம் அது பி(பீ)டி(டை)க்கக் கூடாதா என்று கூடத் தோன்றியது .
இந்த மண்ணுக்கு எதிராக இந்த மண்ணில் ஒரு படம் வந்தால் உடனே அப்படி எடுப்பவர்களைக் கொண்டாடி சரியனவர்களுக்குக் கூட கிடைக்காத அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் கூட அவர்களுக்குத் தர , ஒரு கூட்டம் எப்படி நாக்கை முட்டிக்கால் வரை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணம்.
உண்மையில் நண்பர்கள் தவறான ஒரு விஷயத்தை செய்யும்போது அவர்களுக்கு சொம்படிப்பது அல்ல நட்பு.
உரிமையோடு அதைக் கண்டிப்பதுதான் நல்ல நட்பு .
சரி.. நாமாச்சும் அந்த வேலையை செய்வோம் என்பதற்குதான் இந்தப் பதிவு.

தேனி மாவட்ட கிராமம் ஒன்று .
அங்கே உள்ள பல வேலையிடங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை தமிழ் முதலாளிகள் ரின் சோப் ஆலா எல்லாம் போட்டு கும்மிக் கசக்கிப் பிழிகிறார்கள். அங்கே வேலை செய்யும் ஒரு வட இந்தியத் தொழிலாளி (பர்வேஸ் மெஹ்ரு), புத்தன், ஏசு, காந்தி, சினிமா எம்ஜியார் ஆகியோரின் அடர்த்தியான கலவையாக இருக்கிறான் .
 அதோடு எஸ் பி பால சுப்பிரமணியம் , ரவி வர்மா இவர்களை வேறு கொஞ்சம் தனக்குள் ஆங்காங்கே தூவி வைத்து இருக்கிறான். கிராமத்தில் நடுவில் முற்றமும் மூன்று புறம் வீடுகளும் உள்ள ஒரு கட்டுமானத்தில் ஒரு வீட்டில் அவன் தனியாக குடியிருக்கிறான், மனைவி, மகள், அப்பா ,அம்மா வட நாட்டில் . அவன் இருக்கும் வீட்டின் மறுபுறம் ஒரு மண்ணின் மைந்தனான தமிழ்க் குடும்பம். மனைவி நல்லவள் (வைரமாலா). ஆனால் கணவன் (குங்கும ராஜ்) ஒழுங்காக சேவ் செய்யாத, தலை கூட சீவாத பார்க்கப் பிச்சைக்காரன் போல எப்போதும் இருக்கும் - கழுத்தில் முருகன் டாலர் போட்ட - ஒரு சதா சர்வகாலக் குடிகாரன். மாமனாரிடம் சண்டை போட்டுக் கொண்டு , தெருவெல்லாம் சுற்றிக் கொண்டு இருப்பான். அதனால் அந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை. ஆனால் வடக்கனுக்கு மனைவி , மகள், அம்மா, அப்பா எல்லாம் வட நாட்டில். (ஒரு காட்சியில் ஒரு பெண்மணி ஒரு பெரிய புல்லுக்கட்டை தூக்கி விடச் சொல்லி அழைக்க, அந்தக் குடிகாரக் கணவனால் முடியாது . ஆனால் அந்த வட இந்திய நபர் ஜஸ்ட் லைக் தூக்கி விடுவான்) . குடிகாரனின் மனைவி வட இந்திய நபரிடம் அன்போடு பழகுகிறாள் . அவனும் தீதி (அக்கா) என்று அழைத்துப் பாசத்தோடு பழகுகிறான். குடிகாரக் கணவனுக்கு அது பிடிக்காத நிலையில் (புல்லுக்கட்டு மல்லுக்கட்டு மட்டுமின்றி இரவில் மனைவியை சமாதானப் படுத்தி அவன் சுகிக்கப் போகும்போது, வட இந்திய இளைஞன் கதவைத் தட்டி அவளை அழைத்து, "என் மனைவி வீடியோ காலில் இருக்கா.. பேசுங்க ''என்று அவளிடம் சொல்வது உட்படப் பல காரணங்கள்.)
ஒரு நிலையில் அவனது குடிகார சில்லுண்டி நண்பன் ஒருவன் , "பேசாம அவன ஒச்சம் பண்ணிடுவோம் ( ஊனப்படுத்துதல்) என்கிறான் .
கணவனும் அது பற்றி யோசிக்கும் நிலையில் ,, வட இந்திய இளைஞன் ஒரு பையை 'தீதி'யிடம் கொடுத்து விட்டுப் போக, போனவன் பிணமாகிறான். வட இந்தியாவில் இருந்து வரும் அவனது குடும்பம் , அவன் சம்பாத்தித்து வைத்திருந்த ஐந்து லட்சம் பணம் எங்கே? என்கிறது .
மன சாட்சியுள்ள மனைவிக்கு, தனது கணவன் மேல் சந்தேகம் . நடந்தது என்ன என்பதே வடக்கன் என்று பெயரில் எடுக்கப்பட்டு பின்னர் ரயில் என்று பெயர் மாறிய இந்தப் படம்.

வெளியூரில் வேலைக்குப் போகிறவன் எல்லாம் அனாதையாகத்தான் சாவான் என்ற வருத்தம் போக்க, அந்த வட இந்திய இளைஞனுக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்து போஸ்டர் ஒட்டி , பல்லக்குப் பாடை செய்து அடக்கம் செய்வது, ஒரு வட இந்திய இளைஞனுக்கு தமிழ் நாட்டில் தென் மாவட்ட கிராம வழக்கப்படி சடங்குகள் நடப்பது என்று... அந்தப் பகுதி படத்தின் இமயம் .
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெரும் பணக்கார வட இந்தியர்கள் நிலம், இடம் வாங்கிப் போட்டு தொழில்களை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் காசுக்காகவும் கமிஷனுக்ககவும் எல்லாவற்றையும் அவனிடம் தூக்கிக் கொடுத்து விட்டு, வயிற்றுப் பாட்டுக்குப் பிழைக்க வரும் ஏழை வடஇந்தியர் மேல் கோபப்படுவது நியாயமா என்று படம் கேட்கும் கேள்வி அந்த இமயத்தின் சிகரம்.
பஞ்சம் பிழைக்கப் போறது கால கால விஷயம் தானே என்பது உட்பட, துபாய் வாழ் தமிழர் தன் உணர்வுகளைக் கூறுவது அந்த சிகரத்தின் மேல் உள்ள பூ மரம் (அதற்காக மனுசனாப் பொறந்த எல்லாருமே ஏ ஏ ஏ .. இந்த பூமிக்கு வந்தேறிதான் சார்ர்ர்ர்ரர்ர்ர்ர் என்று நெஞ்சை நக்குவது எல்லாம் அபத்தம் . ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வருவதுதான் வந்தேறி. மனுஷன் வேறு கிரகத்தில் இருந்தா பூமிக்கு வர்றான்? அவனை உருவாகும் அம்மா அப்பாவும் பூலோகவாசிகள் தானே?)
மற்றபடி இதை திரைப்படமாக ஆக்கி இருப்பவர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்தான். நடிக நடிகையர் தேர்வும் அவற்றில் பலரின் நடிப்பும் அடுத்த சிறப்பு. ரமேஷ் வைத்யாவின் பாடல் வரிகள் அற்புதம். இது போன்ற ஓரிரு விசயங்களைத் தவிர இந்தப் படம் முழுக்க கொட்டிக் கிடப்பது இன்டல்லக்சுவல் அர்ரகன்ஸ் எனப்படும் அறிவார்ந்த ஆணவமும் தமிழ் இனம், மொழி அடையாளங்களுக்கு எதிரான வன்மமும், துவேஷமும்தான்.

வட இந்தியத் தொழிலாளிகளை தமிழ் நாட்டு முதலாளிகள் கசக்கிப் பிழிகிறார்களாம்.
சாதாரணத் தமிழர்கள் குடிபோதையில் குலைந்து வேலையில் கவனம் செலுத்தாமல் போக, அறிவார்ந்த தமிழ் ஊழியர்கள் உரிய சம்பளம் கேட்க, உரிமைகள் பேச, இரண்டு தரப்பிலும் கொஞ்சம் சோம்பேறித்தனம் ஏற, தன் உழைப்பின் மதிப்பு தெரியாமல் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வந்த வட இந்தியர்களை லாபத்துக்கு ஆசைப்பட்டு வேலைக்கு வைத்த தமிழக சிறு முதலாளிகள்... இன்று அந்த வடக்கத்தியரின் பிடிக்குள் போய் விட்டார்கள். வட இந்திய ஆட்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. அவர்கள் சொன்னபடிதான் முதலாளிகள் ஆட வேண்டி இருக்கிறது. இன்று வட இந்தியத் தொழிலாளர்கள்தான் தமிழ் நாட்டில் முதலாளிகளையும் வாடிக்கையாளர்களையும் கசக்காமல் பிழிகிறார்கள். ஆனால் இது பற்றி இந்தப் படம் துளி கூடப் பேசவில்லை .

 குடிக்கப் போனாலும் குளிச்சு முடிச்சு தலை சீவி பவுடர் அடிச்சிட்டுப் போவான் நம்ம ஆளு. வரும்போதுதான் தூசியும் தும்புமாக வருவான் ஆனால் இந்தப் படத்தின் நாயகனை எப்போதுமே ஏதோ பன்றி கூட பக்கத்தில் வரப் பயப்படும் அளவுக்குக் கேவலமான தோற்றத்தோடு காட்ட வேண்டிய அவசியம் என்ன ?
மாறாக இன்னும் பான் பராக் பரட்டைத் தலை என்ற நிலையில் பல வட இந்தியத் தொழிலாளர்கள் இருக்க, இந்தப் படத்தில் வரும் அந்த வட இந்திய நபர் மட்டும், ' தங்கத் துகள் மேலே விழுந்தால் கூட தட்டி விட்டுவிட்டுதான் போவான்யா..' என்ற அளவுக்கு சுத்தத்திலும் சுத்தமாக மாசு மருவில்லாத மன்னவன் போலவே படம் முழுக்க இருக்கிறான். தவிர பாடுகிறான் . ஓவியம் வரைகிறான் . ப்ப்ப்பப்ப்ப்பப்பா.. ஏதோ வட இந்திய ஆவிகள் உள்ளே புகுந்து கூடிக் கும்மியடித்து எழுதி இருக்குமோ என்று சந்தேகமே படாமல் நம்பும் அளவுக்கு கதையும் காட்சிகளுமாகப் போகிறது படம்.
இதுல அவன் காஷ்மீர் ஆப்பிள் கணக்கா இருக்கான் என்று வசனம் வேறு. தேனி மாவட்டத்தில் எந்த கிராமத்தில், நடுவில் சதுர முற்றம் கொண்ட - ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி இருக்கும் வீடுகளில்- குடும்பம் இருக்கும் வீடுகளில் - யாரோ ஒரு வட இந்திய இளைஞனுக்கு தனியாக வசிக்க வீடு கொடுக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் பஹூத் அச்சாவாக இருக்கும் . ஆச்சா?

கணவன் குடித்து விட்டு மனைவியை அடிப்பானாம். உடனே இந்த வட இந்திய இளைஞன் கணவனை அடித்துத் தள்ளி வீழ்த்துவானாம். மறுநாள் வழக்கம் போல நகருமாம் . தேனி மாவட்டக் காரய்ங்களே .. ஹலோ.. ஹலோ.. 

படத்தின் ஒரு காட்சி ரொம்ப அயோக்கியத் தனமானது . வட இந்திய இளைஞன் குடிகாரனின் மனைவியை தீதி என்று அழைப்பான். அவளுக்கு மொழி புரியாது .( புரிந்தாலும் தாய் மொழியில் பேசும்போது கிடைக்கும் உணர்வைத் தராது. தமிழில் கெட்ட வார்த்தை பேசப் பிடிக்காமல் வேறு வழி இல்லாத சூழலில் ஆங்கிலத்தில் பேசும் வழக்கம் இருக்கே.. அப்படி)
ஒரு காட்சியில் அவள் வீடெங்கும் தீபம் ஏற்றி பட்டுப் புடவை கட்டி அழகாக இருப்பாள். அவளை வட இந்தியன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பான். அவள் ஒரு நிமிடம் 'சிலிர்ப்பான' உணர்வுக்குப் போய், ' என்ன அப்படிப் பாக்கிற?' என்று கேட்பாள் "அழகு" என்று அவன் சொல்லி விட்டு.. சட்டென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் பண்ணுங்க என்பான் .
அவள் துடிதுடித்துப் போய் 'நிதானத்துக்கு' வந்து ஆசீர்வாதம் செய்வாள். அதன் பிறகுதான் படத்தில் 'அவன் என் தம்பி' என்றே சொல்வாள்.
இந்தக் காட்சியின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புரியவில்லை எனில் புல்லுக் கட்டு காட்சியை இணைத்துப் பார்த்தால் புரியும் .
அதாவது அவள் கூட ஒரு நொடி இந்த மன்மதனைப் பார்த்து சலனப்பட்டு விட்டாளாம். 
ஆனால் அந்த வட இந்திய இளைஞன் உத்தம புத்திரனாம். சத்திய சந்தனாம் . 
அதாவது அவளை உணர்வு பூர்வமாக அக்காவாக ஆக்குவதே அந்த வட இந்திய அண்ணல் தானாம். தக்காளி காலி.

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது ? பாவம் பார்த்து வட இந்திய ஆட்களுக்கு சகோதர பாசத்தோடு உதவும் பெண்களை வட இந்திய இளைஞர்கள் ஏமாற்றும் சம்பவங்கள் எத்தனை . இதே சென்னையில் அபார்ட்மென்ட் காவலாளியாக வந்த ஒரு வட இந்திய இளைஞன் மேல் பிள்ளை இல்லாத ஒரு முதியோர் குடும்பம் பாசம் காட்ட, அதை சாக்காக வைத்து அந்த இளைஞன் சலுகைகள் பெற்று , இன்னொரு பக்கம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைரக் கடத்தல் செய்யும் கூட்டத்தில் ஒருவனாக இருக்க, போலீஸ் பிடிக்க, அந்தக் குடும்பமே போலீசிடம் சிக்கி அல்லல் பட்டதுதானே வரலாறு.
எத்தனை கொலை கொள்ளைக் கடத்தல், பாலியல் வன் சம்பவங்கள், வட இந்திய ஆட்களால் நடக்கிறது?
இதே தமிழ் நாட்டில் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு வடக்கத்திக் கும்பல் நிறுத்தி கிண்டல் செய்து கலாய்த்து அடித்து அனுப்பிய வீடியோ வைரல் ஆனது எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் இந்தப் படம் எடுத்த யாருக்குமே தெரியவில்லை, செலக்டிவ் அம்னீஷியாவா? இல்லை செல்ஃபிஷ் அம்னீஷியா?
 ஒரு கதை அல்லது கற்பனை என்பது உண்மையாக இல்லாமல் இருக்கலாம். அது படைப்பாளியின் உரிமை . ஆனால் உண்மைக்குப் புறம்பாக உண்மைக்கு துரோகம் செய்யும்படி இருக்கலாமா?

தேனி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஒரு சமுதாய மக்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இன்னொரு சமுதாய மக்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் . இந்தப் படத்தை எழுதி இயக்கிய பாஸ்கர் சக்தி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர் . எனவே அதே மண்ணைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் மீதான வன்மம், வஞ்சம், குரோதம் படம் முழுக்க பாம்பு விஷம் போல துப்பப்பட்டு இருக்கிறது .

குடிகார நாயகன் அழுக்குக்கே உமட்டும் அளவுக்கு அழுக்காக இருப்பான் . ஆனால் அவன் கழுத்தில் உள்ள முருகன் படம் போட்ட சதுர வடிவ பெரிய டாலர் மட்டும் எப்போதும் பளிச்சென்று சுத்தமாக இருக்கும் . அவன் குட்டிக்கரணம் அடித்தாலும் அது கழுத்துக்கு நடுவிலேயே படம் பார்க்கும் எல்லோருக்கும் தெரியும்படியாக இருக்கும். அந்த முருகன் டாலர் எல்லா ஷாட்களிலும் நாயகன் கழுத்தில் நட்ட நடுவாட்டமாய் பளிச் என்று தெரிய வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் முக்கியமான டைரக்ஷன் வேலையாகவே இருந்திருக்கிறது.
(''யப்பா... அந்த முருகன் டாலர் நல்லா தெரியுதா? நேரா வை. நடுவால வை. பளிச்சுன்னு துடைச்சு கொடு. பத்தலன்னா ஒரு 5 கே வி லைட்டைப் போடு. ஒகே ஷாட் போலாம்)
எப்போதும் குடித்து விட்டு எக்குத்தப்பாகப் பேசிக் கொண்டு இருக்கும் அந்த நண்பன் கதாபாத்திரத்திடம் ஒரு காட்சியில் ஒரு பெண் "உங்கப்பா தமிழ் ஆசிரியர் ன்னு எனக்கு தெரியும்பா . அதுக்காக இப்படி எல்லாம் பேசாதப்பா " என்கிறது . அங்கே தமிழ் ஆசிரியர் மகன் என்ற அடையாளம் எதற்கு? உடனே அந்தக் குடிகார நண்பன், '' நான் குடிகாரன் தான் ஆனா.. என்று நீட்டி முழக்கும்படி ஒரு சப்பைக்கட்டு வசனம் . இப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை ஆங்காங்கே செய்து இருக்கிறார்கள். 

 நாயகனும் அந்த நண்பனும் எப்போது பார்த்தாலும் "நாங்க எல்லாம் வீரப்பரம்பரைல்ல.. அரிவாள எடுத்தா கீழ வைக்க மாட்டோம் "என்று நாயைப் பார்த்து எல்லாம் வசனம் பேசுகிறார்கள். எனில் அவர்கள் எந்த சமூகம் என்று மறைமுகமாக சொல்லப்படுகிறார்கள்? அப்போ அந்த நாய் யாருக்கான குறியீடு? 

 வடக்கத்தியர்கள் இங்கு வந்து உழைக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டு இளைஞர்கள் -- தமிழ் மற்றும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட பல சமூக இளைஞர்கள் உட்பட - எல்லாப் பயல்களும் குடித்து விட்டு வீணாப் போறாங்க என்று சொல்லலாம் . அது நேர்மை .ஆனால் வடக்கத்தி இளைஞன் சம்பாதித்த பணத்தை இவன் மொத்தமாகத் திருடிக் கொண்டதோடு அவனைக் கொலை செய்யவும் முயன்றான் என்று சொல்வது என்ன நியாயம்? இந்தப் படத்தை பார்க்கும் வட இந்தியர்கள் நாளை என்ன நினைப்பார்கள். 'பாருங்க . ஒரு ' தமிழர் ' எடுத்த படத்திலேயே என்ன சொல்றாங்க பாருங்க என்று கேட்பார்களா இல்லையா? அப்போது இந்தப் படத்தின் பின்னால் உள்ள நோக்கம் என்ன?

 இந்தக் கதையை அப்படியே மாற்றி யோசிப்போம் . தேனிக்கு பதிலாக ஒரு வட இந்தியக் கிராமம் . குடிகார வட இந்தியன் . அவனது நல்ல பொண்டாட்டி. பிழைக்கப் போன தமிழ் இளைஞன் . அவனுக்கு அந்த வீடு வாடகைக்கு கிடைக்குமா? புல்லுக்கட்டு சீன் முடிந்த பிறகு தமிழனால் அந்த ஊரில் நடமாட முடியுமா? வடக்கத்திய மனைவியை அடிக்கும் வடகத்திக் குடிகாரனை தமிழ் இளைஞன் வீழ்த்திய அடுத்த சம்பவமாக ஊரே ஒன்று சேர்ந்து தமிழ் இளைஞனை அடித்தே கொல்வார்கள். அதுதானே நடக்கும். எனில் இந்தப் படம் யாருக்குக் குடை பிடிக்க ?

''இருக்கட்டுங்க .... நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும் . வட நாட்டில் இருந்து இங்கு வந்து பிழைக்கும் தொழிலாளிகளை ஆதரித்து ஒரு படம் இருக்கக் கூடாதா ? எடுக்கக் கூடாதா? அது என்ன அவ்வளவு பெரிய குத்தமாய்யா?' என்று யாராவது கேட்கலாம் .

காலகாலமாக தமிழர்கள் மட்டும் கடல் கடந்து போகவில்லையா என்ற ரீதியில் இந்தப் படம் கூட ஒரு கேள்வி கேட்கிறது . தப்பில்லை . இல்லாதவன் பிழைக்க வரட்டும் . தப்பில்லை. ஆனால் அப்படி வருபவர்கள் இயல்பாக இல்லாமல் ரயில் ரயிலாக முழுக்கக் கொண்டு வந்து கொட்டப்படுகிறார்களே .. இந்த மண்ணுக்குள் திணிக்கப்படுகிறார்களே அது ஏன் ? அப்படி வந்தவன் பாத் ரூம் போய் வருவதற்குள் அவனுக்கு ஆதார் கார்டும் ரேஷன் கார்டும் கொடுக்கப்படுகிறதே .. அதுவும் பேரை மாற்றி தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டு அவை எல்லாம் உடனடியாகக் கிடைக்கிறதே . அது எப்படி?

இந்த மண்ணின் மக்களின் மொழியைக் கற்காதவனுக்கு.. கற்க முடியாது என்று ஆணவமாகச் சொல்பவனுக்கு அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பதவிகள் வழங்கப்படுகிறதே அது எதற்காக ?

மற்ற மாநிலங்களில் நாடுகளில் பிழைக்கப் போன நம்மவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கவில்லையே ஏன்? மண்ணைத் திருத்தி பொன்னாக்கி பல நாடுகளை நம்மவர்கள் முன்னேற்றும் வரையில் பொறுத்திருந்து, பிறகு தமிழர்களின் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்து விரட்டவும் கொல்லவும் செய்தார்களே .. ஏன்?
இன்னும் ஆந்திராவில் செம்மரம் வெட்டும் தெலுங்கு முதலாளிகளை காப்பாற்ற அந்தத் தெலுங்கு போலீஸ்.... மரம் வெட்டக் கூலி வேலைக்குப் போகும் தமிழர்களை குற்றவாளி என்று சொல்லி சுட்டுக் கொன்று கணக்கு முடிக்கிறதே. 

ரயில் என்று படம் எடுத்தவர்களுக்கு துயில் என்ற பெயரில் அதைப் படமாக எடுக்கும் நேர்மை இருக்கா?
தமிழர்கள் எந்த மாநிலத்தில் நாட்டில் எந்தக் காலத்தில் இப்படி மண்ணை ஆக்கிரமிக்கக் கொண்டு போய் திணிக்கப்பட்டான்? எந்த மாநிலத்தில் எந்த நாதாரி அவனுக்கு உடனே ஆதார் கார்டு ரேஷன் கார்டு எல்லாம் வாங்கிக் கொடுத்தான் ? 
அந்த மாநில மொழி தெரியாத தமிழனுக்கு யார் அங்கே முக்கியமான மக்களோடு புழங்கும் வேலைகளை உடனடியாகக் கொடுத்தார்கள்?
அப்படி இருக்க ஒரு பிரச்னையை நடுநிலமையாக நேர்மையாக சொல்ல வேண்டிய புல்லுக் கட்டைத் தூக்கும் தெம்பு இல்லாமல் திராணி இல்லாமல் சுய நல வன்ம விஷம போதையில் மல்லாந்து விட்டு, இப்படி படத்தை கேடு கெட்ட படத்தை எடுப்பது என்ன நியாயம் ?

பின் குறிப்பு:-
படத்தின் இயக்குனர் பாஸ்கர் சக்தியை சுமார் இருபது வருடங்களாக தனிப்பட்ட வகையில் அறிவேன் , தயாரிப்பாளர் வேடியப்பனும் பழகியவரே . கடந்த ஒரு வாரமாக இந்தப் படத்தைக் கொண்டாடி சமூக வலைதளங்களில் எழுதும் பலரில் எனக்குத் தெரிந்தவர்கள் பழகியவர்கள் நெருங்கிய நண்பர்கள் உண்டு . ஆனாலும் நண்பர்கள் என்பதற்காக அவர்களின் தவறை நியாயப்படுத்துவதோ மூடி மறைப்பதோ எப்போதும் என் வேலை அல்ல. அதே போல என்னைப் அவமதித்தவர்கள் என்றால் கூட அவர்களின் படைப்பு நன்றாக இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூச்சம் இல்லாமல் கொண்டாட நான் தவறியதே இல்லை. எனக்கு சுயநலம் தெரியவில்லை. வன்மம் வரவில்லை .
இது எனது பலமா? பலவீனமா? இல்லை முட்டாள்தனமா ? அதைக் காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டேன் .
பதிவு: Raja Thirumurugan Su Senthil Kumaran

Saturday, 4 April 2020

தொடரும் வன ஆக்கிரமிப்பு

தொடரும் வன ஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை  ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி  வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக -- கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா -
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு... தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]

Friday, 23 June 2017

தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி கேரள எம்.பி அட்டூழியம்

கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்
கேரள எம்.பி ஆதரவாளர்கள் அத்துமீறல்

இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் 

பிறகு இன்று அந்த 14 கற்களையும் பிடுங்கி எறிந்தனர் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் ஆதரவாளர்கள்.

செய்தி: தினகரன் 23.06.2017

தேனி மாவட்டத்தை விழுங்க நினைக்கும் மலையாளிகள்,
என்ன செய்யப்போகிறோம் நாம்?

Sunday, 23 April 2017

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு!

தேனி மாவட்டம், கம்பமெட்டில் கடந்த சில மாதங்களாகவே கேரள அதிகாரிகள் தமிழக எல்லையோரத்தைச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழக வனப்பகுதிக்குள் கேரளாவின் கலால் மற்றும் ஆயத்தீர்வு துறையினர் கம்பமெட்டு எல்லையைக் கடந்து அத்துமீறி நுழைந்து சோதனைச் சாவடி அமைத்தனர்.

அதைத் தடுக்க முயன்ற தமிழக சோதனைச் சாவடி பணியாளர்களை, கேரள போலீஸார் தள்ளிவிட்டுக் கண்டபடி தாக்கியுள்ளனர்.
இதனால் பிரச்னை ஏற்பட்டது.

மேலும், தமிழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் கேரள அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.

பின்னர், இருமாநில அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப்பின்னர், இரண்டு மாநிலத்தவர்களின் முன்னிலையில் சர்வே பணிகள் மும்மரமாக நடந்தன.

சோதனைச் சாவடி தமிழக எல்லைப் பகுதியில் இருப்பது இறுதியில் உறுதியானது.
இதனால், கேரள அதிகாரிகள் அமைதி காத்தனர்.
இதனால் கேரள சோதனைச் சாவடி தமிழக பகுதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு, கேரள ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், தமிழக எல்லைப்பகுதியில் கொடிக்கம்பம் நட்டு கட்சிக்கொடி ஏற்றினர்.
இதனையறிந்த வனத்துறை ஊழியர்கள் கொடிக்கம்பம் ஊன்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கட்சிக்காரர்களுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், இப்பிரச்னை குறித்து தமிழக வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் நேற்று மாலை உத்தமபாளையம் டிஎஸ்பி அண்ணாமலை தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் தமிழக எல்லைப்பகுதியில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனால் ஆளுங்கட்சியினர் சிலர் கோஷம் எழுப்பினர்.
மேலும் தமிழக காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், கேரள காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் எல்லைப் பகுதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த தமிழக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது கேரள ஆளுங்கட்சியினர் மற்றும் கேரள காவல்துறையினர், தமிழக பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசி தாக்க முயற்சிசெய்தனர்.
இதனால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

நன்றி: மின்னம்பலம் இணையம்

Thursday, 17 November 2016

இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்

இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்

"தேவிகுளம் பீர்மேடு பகுதி கி.பி.1889 வரை திருவிதாங்கூர் நாட்டைச் சேர்ந்த பகுதியல்ல.
திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில் திரு.நடராஜபிள்ளை தனது அறிக்கையில் பூஞ்சார் ராஜா பாண்டிய மரபினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் திரு-கொச்சியின் வரலாற்று ஆசிரியர்கள் பூஞ்சார் மன்னன் பாண்டிய மரபினன் என்றும், அவன் 'மீனாட்சி சுந்தரம்' என்றே ஒப்பமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பூஞ்சார் மன்னரின் பற்றுச் சீட்டுகள் அனைத்திலும் 'மதுரை மீனாட்சி துணை' என்ற முத்திரை காணப்படுகிறது.
பாண்டிய மன்னரின் கீழ் மதுரை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே தேவிகுளம், பீர்மேடு இருந்து வந்துள்ளது.
1889வரை திருவிதாங்கூரின் பகுதியே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும்.
கண்ணன் தேவன் மலை விளைபொருள் உற்பத்திக் கம்பெனியாரின் முன்னோடிகள் முதலில் 1879இல் பூஞ்சார் இராஜாவுடன் தான் உடன்படிக்கை செய்தனர்.
1889இல் பெரியாறு நீர்த்தேக்கத் திட்டத்தினைச் செயல்படுத்திய போது இந்திய அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருடன் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இந்த மாற்றம் 1879 முதல் 1889 வரையிலான இடைப்பட்ட காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது.
அக்கால கட்டத்தில் பூஞ்சார் இராஜாவிடமிருந்து குத்தகை அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறிருக்க, 1935ம் ஆண்டு வரை தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குத் திருவிதாங்கூரிலிருந்து சென்று சேர பாதையே இல்லை.
இவ்விவரம் 1951இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் வழியாக தேவாரம், குமுளி, போடி நாயக்கனூர், கம்பம் மற்றும் சிறுமலைக் கணவாய் வழியாகத்தான் தேவிகுளம் பீர்மேட்டிற்குச் செல்ல முடியும்.
மாநில எல்லை ஆணைக்குழுவானது அப்பகுதியின் மக்கள் 'குடியேறிவர்கள்' என்றும், 'வந்து சென்று போகக் கூடியவர்கள்' என்றும் ஆதாரமற்ற வகையில் தகவல் கூறப்பட்டுள்ளது"

மார்சல் நேசமணி அவர்களின் நாடாளுமன்ற உரை (1955, டிசம்பர் 14,15,16)

ஆக முல்லைப் பெரியாறு அமைந்துள்ள மாவட்டமே தமிழர் பகுதி ஆகும்.
மலையாளிகள் அங்கே சென்றுவர பாதையே 1935ல் தான் போடப்பட்டது.
பூஞ்சார் அரசிடமிருந்து திருவிதாங்கூர் அரசின் கைக்கு முல்லைப்பெரியாறு பகுதி எப்படி மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆங்கிலேயர் பூஞ்சார் ராஜாவிடம் போகாமல் தவறுதலாக திருவிதாங்கூருடன் ஒப்பந்தம் போட்டதாகவும் ஊகிக்கலாம்.

தற்போது முல்லைப்பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் அணை தமிழகத்திற்கு சொந்தமாக இருக்கிறது.

முல்லைப்பெரியாறு தமிழர்கள் கையில் இருப்பதைக் காணச்சகியாய மலையாளிகள் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்து கூடுதல் குத்தகைப் பணமும் நிர்ணயித்துக்கொண்டனர்.
1896 முதல் 1970 வரை தமிழகம் கேரள அரசுக்கு ஏக்கருக்கு 5ரூபாய் என 8100 ஏக்கருக்கு ரூ.40500 கொடுத்துவந்துள்ளது.
1970 ல் ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்திக்கொண்டது.
ஆங்கிலேயர் காலத்தில் போட்ட 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் இப்போது செல்லாது என்று மழுப்பும் மலையாளிகள் 1970ல் அவ்வொப்பந்தத்தை தாங்கள் புதுப்பித்ததை மறந்துவிட்டனர்.

ஆக 100 வெள்ளையர்கள் உட்பட 422 பேர் உயிரிழந்து பல இன்னல்களைத் தாங்கி பென்னிகுக் தமிழர்களுக்காக தமிழரை வைத்து தமிழ்பகுதியில் கட்டிய அணைக்கு மலையாளிகள் கப்பம் வாங்குகிறார்கள்.

1976ல் இடுக்கியில் அணையின் நீர் ஓட்டத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதற்கு போதுமான தண்ணீர் வரவில்லை.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு போகும் தண்ணீரை தடுத்து கடலில் விட்டு அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று மலையாளிகள் நினைக்கிறார்கள்.

மலையாள மனோரமாவில்  1978 ல் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் வந்ததாக பொய்யான செய்தி வெளியிடப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை பலவீனமான இருப்பதாகவும் அது உடைந்தால் பல ஊர்கள் அழியும் என்றும் வதந்தியைப் பரப்பினர்.
பிறகு 1979ல் அணையின் தேக்கும் அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கவைத்தனர்.
அங்கே மலையாள போலீசை காவலுக்கு நிறுத்தி அவர்களுக்கு தமிழகமே சம்பளம் கொடுக்குமாறு செய்தனர்.

தமிழக அரசு 18 கோடி செலவளித்து அணையை பலப்படுத்தும் பணியைத் தொடங்கியது.
மலையாளிகளின் பல்வேறு குடைச்சல்களுக்கு மத்தியில் 1994ல் பலப்படுத்தும் பணி முடிவடைந்தது.

அணை பலமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததும் மீண்டும் மலையாளிகள் தமது பழைய பொய்பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
அணை நீர்மட்டத்தை உயர்த்துவதை எதிர்த்தனர்.
தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
2000 ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அணையை ஆராய ஒரு வல்லுநர் குழு அமைத்தது.
வல்லுநர் குழு அணையை நன்கு ஆராய்ந்து அது பலமாக இருப்பதாக கூறியது.
2006ல் அணை பலமாக இருப்பதாகவும் அணை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்தது.

அணை உடைந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உண்மை.
ஏனென்றால் 8 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் அந்த நீர் 70 டி.எம்.சி பிடிக்கும் பெரிய இடுக்கி அணைக்கே தண்ணீர் வந்து சேரும்.
இடையில் மக்கள் வாழும் பகுதி எதுவுமே இல்லை.

அரசியல் சட்டத்தின் 262ஆம் பிரிவுப்படி, இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் தமது மாநிலத்திற்கு தனியாக “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006”, என்ற சட்டத்தை இயற்றினர்.

டேம்999 என்று திரைப்படம் கூட எடுத்து ஊரே வெள்ளத்தில் போவதுபோலக் காட்டினார்கள்.

இடுக்கி தமிழர்களையும் அங்கே வேலைக்கு வரும் தமிழகப் பெண்களையும் கீழ்த்தரமாக நடத்தினர்.
தமிழ்நாடு வாகனங்கள் தாக்கப்பட்டன.
500 தமிழ்ப் பெண்களை சிறைபிடித்து வைத்துக்கொண்டனர்.
தேனி மக்கள் சாலை மறியல் செய்ததும் 'கட்டப்பன' பகுதி இன்ஸ்பெக்டர் ஜிஜிமோன் தமிழ் பெண்களை கொண்டுவந்து  ஒப்படைத்தார்.

கேரள எல்லையில்  2011 டிசம்பரில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பிய 'எவிடன்ஸ்’ அமைப்பின் தலைவர் கதிர், ''ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது.
உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல் எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள்.
கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தாக்கப்பட்ட பெண்கள் தேனிக்கு தஞ்சம் வந்தனர்.
அவர்களை தேவாரம் எனுமிடத்தில் தங்கவைத்தனர் தேனி மக்கள்.

தேனி மாவட்டமே முல்லைப்பெரியாறை நம்பி இருக்கிறது.
5 மாவட்டங்களில் 2 லட்சத்து 8,144 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
30 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் அந்த ஆறை நம்பி இருக்கிறது.

தமிழரின் பஞ்சம் போக்க தன் சொத்துக்களை விற்று அணை கட்டிய மாமனிதர் பென்னி குக் அவர்களுக்கு மண்டபம் கட்டி விழா எடுக்கும் தேனி மக்கள், தன் பிள்ளைகளுக்கு பென்னிகுக் என்ற பெயரைவைக்கும் தேனி தமிழர்கள்,
கேரள அரசின் நடவடிக்கைகளைப் பொறுக்கமுடியாமல் 2011 டிசம்பரில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு கேரளாவில் நுழைந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மலையாள கட்டிடங்கள் தாக்கப்பட்டன.

தமிழக போலீஸ் ஐ.ஜி ராஜேஸ் தாஸ் மற்றும் தமிழக போலீஸ் துணை தலைமை இயக்குனர் ஜார்ஜ் ஆகிய மலையாளிகள் தமிழ் மக்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றனர்.
பல இடங்களில் தடியடி நடத்தி கலைத்தனர்.
4000 தமிழக காவலர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு மலையாளிகளைப் பாதுகாத்தனர்.
அங்கே பார்வையிட வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அடித்து விரட்டினர் மக்கள்.
இடுக்கி தமிழர்களும் பெரிய அளவில் திரண்டு தமிழகத்துடன் இணைய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மலையாளிகள் 2012 சனவரியில் சபரிமலைக்கு போன சாந்தவேலு என்ற தமிழர்மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றனர்.

தமிழக அரசு தொடுத்த வழக்கில் 136 அடியில் இருந்து முதல்கட்டமாக 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்தி கொள்ள தமிழகத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை உம்மன்சாண்டி நடக்கவிடவில்லை.
பிணராய் விஜயன் விடுவேன் என்றார்.
ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றிப்பேசுகிறார்.
ஆக மலையாளிகள் நீதிமன்றத்தை மதிப்பதேயில்லை.

முல்லைப்பெரியாறின் கதை இவ்வாறிருக்க 1981ல் தமிழகத்தின் எல்லைக்குள் புகுந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டுச் சென்றது மலையாள வனத்துறை.

சிவகிரி விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு 8 வார காலத்திற்குள் அணைகட்டித் தர 03.08.2006 அன்று உத்தரவிடப்பட்டது.
பத்து ஆண்டுகளாக அந்த தீர்ப்பை மதிக்கவில்லை மலையாள
அரசு.
உச்சநீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை.
தமிழக திராவிட அரசுகள் என்ன செய்தன தெரியுமா?

செண்பகவல்லி அணை 1773ல் சிவகிரி ஜமீனால் கட்டப்பட்ட அணை ஆகும்.
  கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து அணையை உடைத்துவிட்டு போனபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் இதைத் தட்டிக்கேட்கவில்லை.
எப்படி கேட்பார்?

அவர் ஒரு மலையாளி.
முல்லைப் பெரியாறு பிரச்சனையிலேயே அவர் கேரளாவுக்கு சாதகமாகத்தான் நடந்துகொண்டார்.

25.11.1979ல் முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேச தமிழகத்திலிருந்து 47 பேரும் கேரளாவிலிருந்து 47 பேரும் சென்றனர்.
இதில் தமிழகக் குழுவில் 46 மலையாளிகளும் 1 தமிழரும் இடம்பெற்றிருந்தனர்.
அந்த தமிழர் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது.
அவர் அணை மட்டத்தைக் குறைப்பதை கடுமையாக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
94ல் 93பேர் ஆதரவுடன் முல்லைப்பெரியாறு அணையின் மட்டம் குறைக்கப்பட்டது.
அது அதன்பிறகு உயர்த்தப்படவில்லை.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தெலுங்கரான கருணாநிதி 1987-1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைத்த செண்பகவல்லி அணையை நீங்களே கட்டித்தாருங்கள் என்று.

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கன்னடவரான ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.
பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாள அரசு.
வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள், சிவகிரி பகுதியில் 33 குளங்கள் நிரம்ப நீராதாரமாகவும்,
சங்கரன்கோயில் வட்டத்தில் 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு மக்களுக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை இன்று இல்லை.
2016 மே மாதம் அணையின் மீதமிருந்த தடுப்புச் சுவரையும் இடித்தது மலையாள அரசு.

இதே போல நெய்யாறு பிரச்சனையும்.
நெய்யாறு தண்ணீரைத் திறந்துவிடவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று கேட்டது கேரளா.
1999ல் நெய்யாறு கேரளாவுக்கு மட்டுமானது இருமாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல என்று அறிக்கவித்தது.
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இப்பிரச்சனையில் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும் தேவைப்பட்டால் மத்திய நீர் ஆணையத்திடம் உதவி கோருமாறும் கூறி 2003ல் நழுவிக்கொண்டது.

2004 லிருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட கேரளா திறந்துவிடவில்லை.

2007 ல் கேரளா மீண்டும் பணம் தந்தால் திறந்துவிடுவதாக கூறியது.
நெய்யாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 12.90 சதுர கி.மீ தமிழகத்தில் இருக்கிறது.
எனவே இது இருமாநில நதிதான் என்று வாதிட்ட தமிழக அரசு ஒரு புதிய ஒப்பந்தத்தை தயாரித்து 19.05.2009 அன்று  கேரள அரசுக்கு அனுப்பியது.
  கேரள அரசு பணம் கேட்டு 11.01.2010 அன்று வேறு ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து தமிழகத்துக்கு அனுப்பியது.
தமிழக அரசு அதை நிராகரித்தது.
பிறகு இருமாநில அதிகாரிகளும் 06.05.2011அன்று திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கேரளா பணம் தராமல் தண்ணீர் தரமுடியாது என்று மறுத்துவிட்டது.
தமிழக அரசு 30.05.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.
இன்றுவரை இழுபறி தொடர்கிறது.
அபரிமிதமான நெய்யாற்றுத் தண்ணீர் திருவனந்தபுரத்தை அடுத்த பூவாறு எனும் ஊரில் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

மலையாளிகளின் இனவெறிப்போக்கு இதோடு முடியவில்லை.
கோவை மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனம் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் (பி.ஆர்.பி) மூலம் வரும் நீரை நம்பியுள்ளது.
இந்த திட்டம் வீணாகக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பிவிட 1958ல் போடப்பட்டது.
இத்திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவுக்குள் உள்ளன.
(இவ்வணைகள் இருக்கும் பகுதி அனைத்தும் தமிழகம் இழந்த எல்லைப் பகுதி ஆகும்)
இவ்வணைகளைக் கட்டியது தமிழக அரசே ஆகும்.
இதனை பராமரிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது.
  தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கேரளாவிற்குள் இருக்கும் பரம்பிக்குளம் அணைக்கு பராமரிப்பு பணிக்காகச் செல்லும் தமிழக ஊழியர்களை அவமானப்படுத்துவது சிறைபிடித்து வைப்பது திருப்பியனுப்புவது என கேரள அரசு செய்யும் அட்டூழியம் சொல்லிமாளாது.


40 ஆறுகள் ஓடும் கேரளாவில் பஞ்சமோ தண்ணீர் பற்றாக்குறையோ இல்லை.
8% தண்ணீர் மட்டுமே மலையாள மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதி மன்றத்தை மதிக்காத,  அப்பாவி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும்
பிடுங்கும் மலையாள அரசு,  இதன் மூலம் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பகையைத்தான் காட்டுகிறது.

  மலையாளிகளின் உணவுத்தேவை 90% தமிழகத்தை நம்பி உள்ளது.
ஒரு வாரம் உணவு செல்வதைத் தடுத்தால் கேரளா பணிந்துவிடும்.

தமிழக முதல்வர் நினைத்தால் இது முடியும்.
ஆனால் தமிழகத்தை தமிழர் ஒருவர் ஆளவே முடிவதில்லையே!