Sunday 26 October 2014

பணக்காரத் தீவிரவாதி (1/2)

பணக்காரத் தீவிரவாதி

terrorist,rebellion, smugler,businessman, don,leader, murderer,revolutionist, billioner,gangster, racist, humantarian, god father, politician and
ANY PERSONALITY THAT IS EXTREME

அந்த பரவலான தலைவரை பேட்டிகாண பெருமுயற்சி செய்து இசைவு கிடைத்தது,
தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.
மறைவிடத்தில் இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரது வீடு ஒரு நகரத்தின் நடுவில் இருந்தது முதல் வியப்பு.
அந்த வீடைப் பார்க்கவேண்டுமே மிகப்பெரிய வீடு, சுற்றி தோட்டம், ஆயுதம் ஏந்திய காவல், பகட்டின் உச்சம் அதையும் மிஞ்சும் கலைநயம். இந்தவீடு அவர் அவ்வப்போது வந்து போவதாம். இதைவிடப் பத்துமடங்கு பெரிய வீடுகள் பல்வேறு நகரங்களில் இருக்கிறதாம்.
ஒரு அறையில் காத்திருக்கச்.சொன்னார்கள். அங்கே அவரது படங்கள் இருந்தன.
அவரைப் பற்றி பலரும் எச்சரித்தார்கள். அதிலும் நான் ஒரு பெண். இருந்தாலும் துணிந்து சென்றேன். அவர் வரைந்த ஓவியங்களும் இருந்தன. அதெப்படி சாதனை நாயகர்கள் அனைவரிடமும் வரையும் பழக்கம் இருக்கிறது?!
'அவர் வந்துவிட்டார்' என்று உடனிருந்தவர் கூற வாசலைப்பார்த்தேன்.
அவர் ஒரு இருசக்கரவண்டியில் கறுப்புகண்ணாடியைக் கழட்டியவாறு வந்திறங்கினார்.
நான் எழுந்து நிற்க, அவர் என்னைக் கடந்துசெல்லும்போது முறைப்பது போல் கூர்மையாகப் பார்த்துவிட்டு ஒரு அறைக்குள் சென்றார். 'மரியாதைக்காக எழுந்துநிற்பது அவருக்குப் பிடிக்காது' என்றார் உடனிருந்தவர். 'அப்படியா? ஏன்?' 'அது அப்படித்தான். எழுத்து நிற்பது, சல்யூட் அடிப்பது, காலில் விழுவது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. வணக்கம்கூட லேசாக தலையை அசைத்தால் போதும்'.
அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தார்.
இருக்கையில் அமர்ந்தார்.
உயர்தரமான ஆடைகள் ஆனால் நகைகள் எதுவும் அவர் அணிந்திருக்கவில்லை.
ஆனால் அத்தனை மிடுக்கு.
பால் கலக்காத தேநீரை அவரே தயாரித்து எடுத்துவந்திருந்தார்.
'நாங்கள் பால் பயன்படுத்துவது கிடையாது, அது கன்றுக்காக தாய்ப்பசு சுரப்பது, தவிர பாலில் உள்ள லாக்டோஸ் செறிக்கவும் முடியாமல் கழிவாக வெளியேறவும் முடியாமல் உடலிலேயே தங்குகிறது. இது உடல்நலத்துக்குக் கேடு. இன்று பெண்கள் சீக்கிரமே வயதுக்கு வருவதும் மற்ற விலங்குகளை விட மனிதர்களே அதிகம் பாலியல் வல்லுறவு செய்வதற்கும் பாலருந்துவது ஒரு காரணம். ஏனென்றால் கன்றுதான் விரைவில் பருவமடையும்' என்று கூறினார்.
எனக்கு நான் பார்க்கவந்த ஆள் இவர்தானா? என்று ஐயமேற்பட்டது.
'எந்த மொழியில் பேட்டியை வைத்துக்கொள்ளலாம்?' என்று கேட்டார். 'எனக்கு உங்கள் மொழி நன்றாகத் தெரியும், அதிலேயே வைத்துக்கொள்ளலாம்' என்றேன். 'இல்லை எங்கள் தாய்மொழியை வேற்றுஆட்களுடன் நாங்கள் பேசுவதில்லை, தொடர்புமொழியில் வைத்துக்கொள்ளலாம்' என்றார்.
அதன்பிறகு ஆங்கிலத்தில் பேட்டி தொடர்ந்தது.
'உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?'
"என் செயல்பாடு உயிரை எடுப்பது, அவன் யாரோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும், என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன், இதுதான் நான் செய்வது, பல
உயிர்களை வாழ வழிசெய்ய சில உயிர்களை நான் கொல்கிறேன்,
இதுதான் என் செயல்பாடு".
'உங்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி கவலையில்லையா?'.
'இல்லை, அரசாங்கத்தை விட நவீனமான ஆயுதங்கள் என்னிடம் இருக்கும்வரை, சொல்லப்போனால் அரசாங்கமே நான் நடத்துவதுதான்'.
'இருசக்கரவண்டியில் சுற்றுகிறீர்களே, பாதுகாப்பு தேவையில்லையா?'.
'இல்லை, நான் போகும் முன்பே என் உளவு ஆட்களும் பாதுகாவலர்களும் அங்கே பாதுகாப்பை உறுதி செய்திருப்பார்கள்'.
'இதுவரை எத்தனைபேரைக் கொன்றிருப்பீர்கள்?'.
'தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருக்கும்'.
'ஏன்?'.
'என் வழியில் குறுக்கே வருபவர்களை, எதிர்ப்பவர்களை, அவர்கள் தலைதூக்கும் முன்பே நான் தீர்த்திருப்பேன்'.
'வெளிப்படையாகக் கூறுகிறீர்களே பயமில்லையா?'.
'இல்லை'.
'பேட்டி வெளியானபிறகு அரசாங்கம் படையெடுத்து வரலாம்'.
'தோற்றுப்போவார்கள்'.
'எப்படி?'.
'நான் உருவாக்கியுள்ள கூட்டம் அப்படி, அவர் தங்கள் பெருமையை, திமிரைக் காப்பாற்றவேணும் உயிரை பணயம் வைத்து போராடுவார்கள்'.
'எப்படி இதை உருவாக்கினீர்கள்?'.
'அடுத்தவனுக்காக உழைக்காமல், எவனுக்கும் அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி கொள்ளைக்காரர்களிடம் கொள்ளையடிக்கிறோம். அந்தப் பணத்தைக்கொண்டு நன்றாக வாழ்கிறோம். இப்படி ஒரு வாழ்க்கைக்கு உயிரையே கொடுக்கலாம் என்று எண்ணுபவர்கள் என் படையினர்'.
'எத்தனைபேர் இருப்பார்கள்?'.
'துல்லியமாகத் தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்'.
'எங்கிருந்து இது தொடங்கியது?'.
'நான் உலகத்தின் புரட்சியாளர்களைப் படித்து புரட்சிகரமாக எதையாவது செய்யவேண்டும் என்று செயல்பட்டு குற்றவாளியானேன். ஆனால், பெரிய அளவில்  குற்றம்புரிபவர்கள் வாழ்வாங்கு வாழ்வதைப் பார்த்தேன். பணக்கார முதலாளிகள்தான் போரையும், வெற்றி தோல்வியையும், பேச்சுவாழ்த்தையையும், தீர்ப்புகளையும்,ஒப்பந்தங்களையும், புரட்சிகளையும், ஆட்சிகளையும், வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக மாற நினைத்தேன். வழி அவர்கள் வழிதான். உயிரைப் பற்றி கவலைப்படாமல், எதற்கும் துணிந்த கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, ஆயுதங்களை பயன்படுத்தி பணத்தை பறிப்பது, அவர்களுக்கே எதிராக அதைப் பயன்படுத்துகிறேன். அவர்கள் சராசரி மக்களைக் கொள்ளையடித்து சேர்த்துவைந்திருப்பதை நான் பிடுங்கிக்கொள்கிறேன். இன்று உலகத் தீவிரவாத அமைப்புகளில் பணக்காரக் குழு நாங்கள்தான்'.
'இதற்கு தலைவனாக எப்படி ஆனீர்கள்?'
'முதலில் நான்தான் சில நண்பர்களுடன் தொடங்கினேன். தப்பான வழியில் பணம் சேர்ப்பவர்களை கொள்ளையடித்து, கடத்தி, மிரட்டி, கொன்று பணத்தை எடுத்துக்கொள்வோம். இது பெரும்பாலான இளைஞர்களை ஈர்க்கவே குழு பெரிதானது.எங்கள் குழுவிலேயே சிலர் மக்களைத் துன்புறுத்தத் தொடங்க அவர்களை நான் தீர்த்துக்கட்டிவிட்டேன். பிறகு சிலர் தனியே பிரிந்து குழு தொடங்கினர். அவர்களையும் ஒழித்துக்கட்டியபிறகு வேறுவழியில்லாமல் என்னையே தலைவனாக்கிவிட்டனர்'.
'நீங்கள் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கிறீர்களா?.

No comments:

Post a Comment