Sunday 26 October 2014

பணக்காரத் தீவிரவாதி (2/2)

'பெரும்பாலும் மக்களுக்கு வரும் பிரச்சனைகள் சிலரால்தான் வரும். பிரச்சனை வரும்போதுதான் அவர்களை தீர்த்துக்கட்டி தேவையானதைப் பறித்துக்கொள்ள நல்லவாய்ப்பு அமைகிறது. மக்களுக்கும் நல்லது நடக்கிறது. மற்றபடி நாங்கள் மக்களுக்கு எந்த உதவியும் செய்வதே கிடையாது. மக்கள் எங்களுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை'.

'இதுவரை கைதாகியிருக்கிறீர்களா?'
'இல்லை, என் கூட்டாளிகளில் ஒருவரைக் கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.ஒன்று பணம் கொடுத்து அவர் குற்றமற்றவர் என்றாக்க வேண்டும் அல்லது தாக்குதல் நடத்தி காவலை உடைத்து மீட்கவேண்டும் என்ற நிலை. பணம்கொடுத்து சட்டநடவடிக்கை மூலம் அவரை மூன்று மணிநேரத்தில் வெளியேகொண்டுவர ஆணை பிறப்பிக்கவைத்தேன். ஆனால், அவர்கள் விடுதலை செய்யுமுன் அதிரடி நடவடிக்கை மூலம் அவரை மீட்டிருந்தேன். அதன்பிறகு பெரிய படையை அனுப்பினார்கள். எங்களுடன் மோதியதில் அதில் ஒருவர்கூட மிஞ்சவில்லை. அதன்பிறகு  பட்டாளத்தை அனுப்பினார்கள் கடுமையான சண்டைக்குப் பிறகு பேச்சுவார்தை நடத்தி போர்நிறுத்தம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்'.
'எப்படி?'
'நேர்மையான ஒருங்கிணைக்கப்பட்ட படையாகவும் எங்களால் இயங்கமுடியும், நேர்மை இல்லாமல் குறுக்குவழியில் தீவிரவாதிகளாகவும் இயங்கமுடியும். உயிரைப்பற்றி கவலையும் இல்லை, ஈவிரக்கம் காட்டுவதும் இல்லை. எங்களுக்கு ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகளே உள்ளன.
உலகில் நவீனமாக சந்தைக்கு வரும் தொழில்நுட்பத்தை கள்ளசந்தையில் உடனடியாக வாங்கிவிடுவோம்.  இந்த வீட்டுக்கு மேலே கூட இரண்டு தாக்குதல் வானூர்திகள் உள்ளன'
'எப்படி இதையெல்லாம் செய்தீர்கள்?'
'நேர்வழியில் இது முடியாது, குறுக்குவழியில் வந்ததுதான். அதுவும் பத்தே ஆண்டுகளில்'.
'நீங்கள் இயங்கும் பகுதிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?'
'என்மொழி பேசும் மக்கள் வாழும் இடம் அத்தனையும் சில பகுதிகள் நேரடியாகவும் சில பகுதிகள் மறைமுகமாகவும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கே நான் என்ன நினைக்கிறேனோ அது நடக்கும். எந்தவொரு தலைவனுக்கும் அவன் மொழி, வட்டாரம், சாதி, மத மக்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கவே செய்யும்'.
'அரசியலில் உங்கள் பங்கு என்ன?'.
'ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு ஆதரவு வழங்குகிறேன். அவர்கள் நேரடியாக அரசியல்கட்சியாக இல்லாமல் அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள்தான் எங்கள் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். மற்றபடி நான் தீர்மானிக்கும் கட்சிதான் ஆட்சிக்கு வரும்'.
'உங்களுக்கு அஞ்சாதவர்களும் உண்டா?'
"உயிர் இருக்கும் எவனும் எனக்கு அஞ்சிதான் ஆகவேண்டும்".
'உங்கள் முன்மாதிரி யார்?'
'உலகில் பட்டாளத்தையே முறியடித்த நிழலுகப் பெருந்தலைகள் இருந்திருக்கிறார்கள். எல்-சாப்போ, வீரப்பன் போன்றவர்கள் என் முன்மாதிரிகள்'.
'போதைப்பொருட்களை கடத்துவதாகச் சொல்கிறார்களே?'.
'ஆம், ஆயுதம் வாங்கும் கள்ளச்சந்தையில் சிலசமயம் போதைப்பொருட்களையும் கைமாற்றவேண்டிவரும். மற்றபடி போதைப்பொருட்களை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் சொத்துக்களில் சரிபாதி போதைப்பொருள் விற்றவர்களிடம் பறித்ததுதான்.
எங்கள் குழுவினர் எந்த தீயபழக்கமும் இல்லாதவர்கள். அவர்களுக்கு போதை அவர்கள் வாழும் வாழ்க்கைதான்'.
'யாரும் வழிதவறியதே இல்லையா?'.
'இல்லை, குழுவில் சேருமுன் போதைக்கு அடிமையாக இருந்தவர்களை பயிற்சி மூலம் விடுவிப்போம். சிலர் வழிதவறியதால் விண்ணுலகம் அனுப்பிவிட்டோம்'.
'கொலைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று நினைக்கிறீர்களா?'.
'வேறு தீர்வே இல்லாத சிலருக்கு, தெரிந்தே வரம்பு மீறும் சிலருக்கு, உயிர்வாழத் தகுதியில்லாத சிலருக்கு ஒரே எளிதான தீர்வு ஒரு தோட்டா உடனடி மரணம்'.
'உங்களுக்கு எதிரிகள் உண்டா?'
'எதிரியாக வரலாம் என்று யாரையெல்லாம் சந்தேகிக்கிறேனோ அவர்களை தீர்த்துவிடுவேன்.ஆனாலும், பல எதிரிகள் இருக்கிறார்கள். சரிக்கு சரியான எதிரிகள் சிலர்தான். அவர்களையும் விரைவில் ஒழித்துவிடுவேன்'.
'இது எத்தனை நாளைக்கு?'
'தெரியவில்லை, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நடைமுறை மாறும்வரை'.
'நீங்கள் அதிகம் பகட்டாக இருப்பதாகத் தோன்றுகிறதே? கொஞ்சம் மக்களுக்கும் கொடுக்கக்கூடாதா?'.
'ஏழை போலவும் எளிமையாக இருப்பதாகவும் பிரபலங்கள் நடிக்கிறார்கள். ஏனென்றால், இங்கே ஏழைகள் அதிகம். ஏழைகளே இல்லாத நாட்டில் ஏழையாக நடிப்பது பலனளிக்காது அல்லவா? யாரும் விரும்பி ஏழையாக இருப்பதில்லை. மக்கள் எப்போதும் உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையில் இடையூறு செய்யாமல் இருந்தால் அவர்கள் வாழ்ந்துகொள்வார்கள். என்னுடைய நோக்கம் தவறான வழியில் சேர்த்துவைப்பவன் இருக்கக்கூடாது. இருந்தால் விட்டுவைக்கமாட்டேன். நாங்கள் பறிப்பதை நாங்களே வைத்துக்கொள்கிறோம். மக்களிடம் பறிப்பது எளிது. ஆனால் பணமுதலைகளிடம் பறிப்பது உயிரைப் பொருட்படுத்தாமல் துணிந்தால்தான் நடக்கும். உயிரைப் பணயம் வைத்து செயல்படுகிறோம். பெரிதாக எதாவது கிடைத்தால்தான் நாங்கள் பெரிதாக செயல்படமுடியும்'.
'உங்களுடைய இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'.
'நான் ஏன் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, என்னைப் போன்று எங்கள் குழுவினரைப்போன்று வாழாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையே அல்ல.ஏதோ செய்கிறேன். ஆனால் செய்வது சரி என்றுமட்டும் சொல்வேன்'.

No comments:

Post a Comment