Saturday 6 December 2014

ஹோ சி மின் பெற்றுத்தந்த இனவிடுதலை

ஹோ சி மின் பெற்றுத்தந்த இனவிடுதலை

ஹோஹோஹோஹோஹோஹோ

கம்யூனிசம் என்பது முதலில் ஒரு தேசிய இனம் தனக்கான நாட்டை அமைத்தபிறகு நடக்கவேண்டியது என்பதை வியட்நாம் நமக்கு உணர்த்துகிறது.

உலக வல்லரசு என மார்தட்டிய அமெரிக்காவை போரில் மண்ணைக் கவ்வ வைத்த மாபெரும் தலைவர் வியட்நாமின் தந்தை ஹோ சி மின்,
முதலில் தேசியவாதி பிறகுதான் பொதுவுடைமைவாதி என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

1930ல் அவர் இந்தோ-சீனாவில் (அப்போது பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட நிலப்பகுதி) இருந்த பொதுவுடைமைக் கட்சிகளை அழைத்து மூன்று மொழிபேசும் மக்களுக்காக மூன்று கட்சிகள் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தி,
அன்னாம், டொன்கின், கொச்சின்சீனா என மூன்றாகப் பிரிந்துகிடந்த வியத்நாமிய கம்யூனிஸ்டுகளை ஒரே கட்சியாக இணைத்தார்.

இரண்டாவதாக இன்னொரு எடுத்துக்காட்டைத் தரமுடியும்.

இரண்டாம் உலகப்போரின்போது 1945ல் ஜப்பானியர்கள் இந்தோசீனாவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றிக்கொண்டனர்.
யப்பான் தோற்றபிறகு
வியட்நாமியர்கள் மக்கள் புரட்சி மூலம் அரசு அலுவலகங்கள் அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டனர்.

1945, செப்டம்பர், 2.
பா-டின்ஹ் சதுக்கத்தில் ஹோசிமின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார்.

அதில் அவர் ஐக்கிய அமெரிக்கா 1776ல் வெளியிட்ட சுதந்திரப் பிரகடனத்தையும், பிரெஞ்சு புரட்சியையும் மேற்கோள் காட்டியுள்ளாரேயன்றி இரசிய புரட்சியையோ, ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசைப் பற்றியோ கூறவேயில்லை.
தமது தாய்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த சப்பானியர்களையும், பிரெஞ்சுக்காரர்களையும் எதிர்த்துப்போராடிய நாட்டுப்பற்று கொண்ட மக்களின் தலைவனாகத்தான் அங்கே அவர் நின்றுகொண்டிருந்தார்.

அந்த பிரகடனத்தில் கூறுகிறார்,
"அவர்கள் (சப்பானிய, பிரெஞ்சு ஆட்சியாளர்கள்) மனித விரோத சட்டங்களை கொண்டுவந்தனர்.
*தேசபக்தர்களை* ஈவிரக்கமின்றி கொன்றனர்.
கருத்துக்களைக் கூறவிடாமல் வாய்ப்பூட்டு போட்டனர்.
கஞ்சாவையும் மதுவையும் கொடுத்து *நம் இனத்தை* பலவீனப்படுத்தினர்.
இயற்கை வளங்களை அபகரித்தனர்.
புதுப்புது வரிகளை விதித்தார்கள்.
நமது ஏற்றுமதி இறக்குமதியை அவர்கள் கைகளில் வைத்துக்கொண்டனர்.
விவசாயிகளை வறுமைக்குத் துரத்தினார்கள்.
*நமது தேசிய முதலாளிவர்க்கம் வளம்பெறாமல் தடுத்தார்கள்*
நம் தொழிலாளர்களைச் சுரண்டினார்கள்".
(மேற்கண்ட சுரண்டல் நிலையில்தான் தமிழினம் இன்று இருக்கிறது).

ஆக நாட்டுப்பற்று கொண்ட ஒரு தலைவன் தமது இனத்தை ஒன்றுதிரட்டி அந்நியர்களின் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் தமது தாய்நாட்டை புரட்சி மூலம் விடுவித்து அதன் பிறகு தமது இனத்திற்குள்ளே இருக்கும் முதலாளி வர்க்கத்தை கட்டுக்குள் கொண்டுவர கம்யூனிசத்தைப் புகுந்துவதுதான் சரியான வழி.
ஹோசிமின் காட்டிய வழி.

சாதிப் பிரச்சனை, மதப்பிரச்சனை, வர்க்கப் பிரச்சினை, சீர்திருத்தம் ஆகியன தாய்மண்ணின் விடுதலைக்குப் பிறகு நடந்தேறவேண்டியவையே.

அந்நிய ஆட்சியில் இருந்துகொண்டு இந்த மாற்றங்களை எதிர்பார்ப்பது அடிமுட்டாள்த்தனம்.
இங்கே என்ன நடக்கிறது?
ஹிந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் சுரண்டலில் கொள்ளைபோய்க்கொண்டு இருக்கும் தமிழினத்தில்,
தலித் அமைப்புகள் இனம்தாண்டி கைகோர்க்க முனைகின்றனவேயன்றி தனது தேசியவிடுதலைக்கு உழைப்பதில்லை.
சாதிய அமைப்புகளும் அப்படியே.
எப்படி வியட்நாம் மூன்றாக பிறகு இரண்டாக துண்டாடப்பட்டதோ அப்படியே தமிழ்மண்ணும் ஈழம்-தமிழகம் என்று துண்டாடப்பட்டுள்ளது.
மத அமைப்புகளும் அப்படியே.
அடிமையாக இருக்கும் நாட்டுக்குள் இருந்துகொண்டு அவர்கள் வீசியெறியும் சொற்ப அதிகாரத்தைக் கைப்பற்ற அடித்துக்கொள்கிறார்களே ஒழிய நாட்டுவிடுதலையை தமிழ்த்தேசிய கட்சிகள் உட்பட யாரும் கவனத்தில்கொள்ளவில்லை.

விடுதலைக்குப் பிறகு நடக்கவேண்டிய மாற்றங்களை முன்னரே வலியுறுத்துவதன் மூலம் விடுதலையையும் மாற்றத்தையும் தாமதப்படுத்துகிறார்கள்.
அடித்தளம் கட்டும் முன்பே கதவுகளைப் பற்றி யோசிக்கிறார்கள்.

அன்று வியத்நாம் இருந்தநிலையில் நாம் இன்று இருக்கிறோம்.
தமிழ் கம்யூனிஸ்டுகளே!
உங்களுக்குள் ஒரு ஹோசிமின் எப்போது வரப்போகிறார்????

(ஏட்டுச் சுரைக்காய் பொதுவுடைமை
https://m.facebook.com/photo.php?fbid=403019206468405&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

No comments:

Post a Comment