Tuesday 6 June 2023

அம்பேத்கர் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரா

அம்பேத்கர் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரா 

 இந்திய அளவில் ஜாதி, மதம், மொழி, பிறப்பிடம் என அனைத்தையும் கடந்து தலித் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று நினைப்பது நடக்காத காரியம் ஆகும்.
  இத்தகைய தலித்திய - தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் தலித் மக்களை ஒரு போலியான இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பது இந்திய ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்திற்கு வசதியான ஒன்று.

  அம்பேத்கராலேயே இந்த 'இந்திய- தலித்திய ஒருமைப்பாடு' சாத்தியப் படவில்லை.
 அவர் காலத்திற்குப் பிறகு இந்திய அளவில் செல்வாக்கு பெற்ற தலித் தலைவர் யாரும் இதுவரை உருவாகவில்லை.
 அம்பேத்கர் கூட தனது அத்தனை முயற்சிகளிலும் தோல்வியையே அடைந்தார்.
 அவர் ஆளும் வர்க்கத்துக்கு அடிபணிந்து (ஆங்கிலேயர் அல்லது காங்கிரஸ்) அந்த ஆதரவின் மூலம் சில விடயங்களைச் சாதித்தாரே தவிர மக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்ததே இல்லை.

  இதனை நாம் தற்போது ஆராய்ந்து பார்ப்போம்.
 அம்பேத்கர் தனிமனிதனாக இந்திய அரசியலில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் (அவரது 20 ஆண்டுகால நோக்கமான) பௌத்த மதமாற்றம் ஆகும்.
 அன்று பௌத்த மத மாற்றம் இன்றைய இந்தியாவில் பௌத்தம் மூன்று மடங்கு வளர காரணம் என்கின்றனர்.
 அவருடைய மதமாற்றம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏறத்தாழ சுழியமாக (1951 இல் 0.01%)  இருந்த பௌத்த மதத்தை ஏறத்தாழ 7% ஆக சதவிகிதமாக உயர்த்தியது.

  அதாவது அவர் தனது செல்வாக்கில் உச்ச நிலையில் இருந்த போது தன்னுடைய சொந்த பலத்தில் செய்த ஒரே காரியம் பௌத்த மதமாற்றம் மட்டுமே.
 இந்த ஒரு நிகழ்வை வைத்தே அவருக்கு எந்த அளவு மக்கள் செல்வாக்கு இருந்தது என்பதை நாம் கணக்கிட முடியும்.

 1956 இல் அம்பேத்கர் பௌத்த மதமாற்றம் செய்த போது அவருடன் மதம் மாறியவர்கள் ஏறத்தாழ 6 லட்சம் பேர்!
 இன்று இந்தியாவில் உள்ள பௌத்தர்களில் 78% இவர்களே!

 உண்மை என்னவென்றால் இவர்கள் அனைவரும் அம்பேத்கரது சொந்த ஜாதிக்காரர்கள் மட்டுமே!
  அன்று மகாராஷ்டிராவில் அவருடைய சொந்த ஜாதியான மஹர் சாதி 9% இருந்தனர்.
 அதாவது அம்பேத்கர் தலித்துகளுக்கு பௌத்த மதத்திற்கு மாற அழைப்பு விடுத்த பொழுது அவருடைய சொந்த இனத்தில் அவருடைய சொந்த ஜாதியில் 80% அதைச் செய்தனர்.

 இந்த வட்டத்திற்கு வெளியே அப்போது பௌத்தத்திற்கு மாறியவர்கள் மிகமிக சொற்பம்!

 இந்த ஆதரவுக்கும் காரணம் அம்பேத்கர் தனது ஜாதிக்கு (ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்ததன் மூலம்) ஒரு படையணியை உருவாக்கி கொடுத்தார்.
 (இந்தியாவிலேயே சாதியின் பெயரால் ஒரு படையணி இருக்கிறது என்றால் அது மகர் படையணிதான்!)
 அதன் மூலம் மகர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
 (அதற்கு முன்பே பழைய பாம்பே மாகாணத்தில் 25% ராணுவ சிப்பாய்கள் மகர் சாதியினர்தான்,  இவர்கள் அம்பேத்கரால் தனியான ஒரு படையணியாக மஹர் என்ற பெயரிலேயே இடவொதுக்கீடு போல பெற்றனர். அதன் மூலம் ராணுவத்தில் மகர்களுக்கான பணியிடங்கள் உறுதி செய்யப்பட்டது.
 ஆனால் இன்று அம்பேத்கர் ரசிகர்கள்தான் நாம் சாதியின் பெயரிலேயே இடவொதுக்கீடு கேட்டால் சாதிவெறியன் என்கின்றனர்).
 இதனாலும் இயல்பான சாதிப்பற்றாலும் மகர் சாதியினர் மட்டுமே அவருக்கு முழுமையான ஆதரவை அளித்துள்ளனர்.
 பௌத்த மதமாற்றம் நடந்த போது அன்று மகாராஷ்டிராவில் இருந்த இவரது சொந்த ஜாதினர் முற்று முழுதாக மதம் மாறி இருந்தால் கூட 9% வந்திருக்க வேண்டும்.
 ஆனால் 7% தான் பௌத்தம் எட்டியது.
 இதிலிருந்தே அவரது சொந்த ஜாதினர் கூட 100% அவரை ஆதரிக்கவில்லை எனலாம்.
 தன் சொந்த மாநிலத்தில் தன் சொந்த ஜாதியினரையே 100% திரட்ட முடியாத ஒரு தலைவரை தான் இந்திய அளவிலான தலைவராக தலித்திய வாதிகள் பிம்பப் படுத்துகின்றனர்.

 இவருடன் காந்தியையோ ஜின்னாவையோ நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் காந்தி மக்களுக்கு அழைப்பு விடுத்த போது இந்தியா முழுவதும் மக்கள் அந்த அழைப்பை ஏற்று அவர் சொன்னதை செய்துள்ளனர்.
 ஜின்னா இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த போது இனம், மொழி தாண்டி இஸ்லாமியர்கள் போராட்டங்களிலும் கலவரங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
  ஆனால் அம்பேத்கர் இந்திய அளவில் அழைப்பு விடுத்த போது அவ்வாறு நடக்கவில்லை.
 எனவே அம்பேத்கரை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் "இந்திய - தலித்தியம்" எனும் கருத்து ஆளும் வர்க்கத்திற்கும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் சாதகமானது.
 இப்படி மதம் மாறிய அம்பேத்கரிய பௌத்தர்கள் கூட கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடையவில்லை.
 
 இதுவே அம்பேத்கர் தனது இனத்திற்குள் மட்டும் அரசியல் செய்திருந்தாலோ அதிலும் ஒருவேளை மகாராஷ்டிரா தனிநாடு ஆகியிருந்தால் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பார் அல்லவா?!

 நான் ஏற்கனவே கூறியது போல!
தமிழின தலித்துகள் தனித் தமிழர்நாடு அடைய ஆதரவு தர வேண்டும்!
 இனவாத தேசியத்துடன் தலித்திய அரசியல் தீர்வைத் தர வல்லது.
 இனம் தாண்டிய எந்த அரசியலும் எந்த மக்களுக்கு நன்மை பயக்காது.

 அம்பேத்கர் வாழ்க்கையே இதற்கு சான்று! 

பி.கு: இந்த கட்டுரையில் தலித் என்கிற சொல் எளிமையாகப் புரிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
 இது Scheduled caste பிரிவில் உள்ளவர்களைக் குறிக்கும்.
 

No comments:

Post a Comment