Sunday 2 November 2014

தமிழியத்தின் பிரித்தாளுதல்

தமிழியத்தின் பிரித்தாளுதல்.

இனவெழுச்சி மூன்று படிகளில் நிகழ்கிறது.

1)வேறுபாடுகளை மறந்து தாய்நிலத்தில் நிலைகொள்தல்.

2)அருகாமை இனங்களை அடக்குதல்

3)தொலைதூரம் வரை ஆதிக்கத்தை பரப்புதல்.

எந்த ஒரு இனமும் முதலில் தனக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து எழுச்சிகொண்டு அருகாமை இனங்களை அடக்கி மேலும் எழுச்சி அடைந்து பிறகு தொலைதூரத்திற்கு தமது ஆதிக்கத்தை பரப்பத் தொடங்குகிறது.

சிறிதுகாலம் அந்த ஆதிக்கம் தொடர்கிறது. பிறகு தலைமாற்றி எல்லாம் நடக்கிறது. முதலில் அது தொலையாதிக்கத்தை இழக்கிறது. பிறகு அருகாமை இனங்களின் மீதான ஆதிக்கத்தை இழக்கிறது. பிறகு தாய்நிலத்தை இழக்கிறது. பிறகு அடையாளம் இழந்து அழிந்துபோகிறது.

ஆனால், அழிந்துபோகுமுன் விழித்துக்கொள்ளுமேயானால் அது தாய்நிலத்திற்குள் வலுவான அரசாக உருப்பெருகிறது.

தமிழியம் மற்ற பழமையான இனங்கள் போலவே பல நூற்றாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி அழியும் நிலைக்கு வந்தபிறகு கடைசி நேரத்தில் விழித்துக்கொள்ளும்.

முதலில் அது தம்மையொத்த இனங்களோடு திரட்டி,  கண்டம் கடந்த தொலையாதிக்கத்தை ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கி தொலையாதிக்கத்தை வெல்லும் .(ஆங்கிலேய ஆட்சி முடிவு, இந்திய ஒன்றியம் தோன்றல்).

பிறகு அது அடிமையாயிருந்த இனங்களை இரண்டாகப் பிரித்து ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாகப் பயன்படுத்தும் (இது வடயிந்திய- தென்னிந்திய வேறுபாட்டுக்கான திராவிட ஆதரவு)

பிறகு தன்னையும் தனது கூட்டாளி இனங்களையும் ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கும் அந்த பிரிவிலிருந்து தன்னை விடுவிக்கும் (அதுதான் இப்பொது நடந்துவரும் தமிழின-அண்டை இன மோதல்கள்).

இதோடு நிற்காது.

தாய்நிலத்திற்கு வெளியே மற்றவர்களை ஓரம்கட்டியபிறகு தனக்குள்ளே ஒரு போரைத் தொடங்கும்.

அது சாதிகளை ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கி இருவரின் குறைகளையும் வெளிக்கொணர்ந்து இருவரையும் முறியடிக்கும்

மதங்களை ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கி இருவரையும் முறியடிக்கும்.

வேறுபாடுகளை களையெடுத்தபின் தமிழியம் தனது ஆற்றலைத் திரட்டும்.

பிறகு அது அண்டையினங்களை அடக்கும்.

பிறகு தொலைதூரம்வரை தனது ஆதிக்கத்தைப் பரப்பும்.

ஆனால், இது தொடர்ந்தால் எல்லாம் தலைமாற்றி நடந்து மீண்டும் அழிவு வரலாம்.

எனவே, எப்போது தமிழியம் தன் தாய்நிலத்தில் தனது ஆற்றலைத் திரட்டி தொலையாதிக்கத்திற்கு ஆதிக்கத்திற்கு ஆயத்தமாகிறதோ அந்த இடத்தில் நாம் நின்றுகொள்ளவேண்டும்.

தமிழியத்தை அதன் வழியில் தனது ஆற்றலை தொலையாதிக்கத்திற்கு பயன்படுத்த விடக்கூடாது.
நம் தாய்நிலத்தில் அந்த ஆற்றலைத் தக்கவைத்துகக் கொள்வோமேயானால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி.
நாம் ஒரு வலிமையான அரசாகத் திகழ்வோம்.

கி.மு.வில் பேரரசாக எழுந்த கிரேக்கரும், ரோமானியர்களும், மௌரியர்களும் மற்றும் பலரும் இன்று வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே இருக்கின்றனர்.

1200களில் உலகின் கால்வாசியையும் உலக மக்களில் நால்வரில் ஒருவரையும் ஆண்ட மங்கோலியர் இன்று அழிவுநிலையில்

உலகில் கால்வாசிப்பகுதியையும் உலக மக்களில் மூன்றில் ஒருவரையும் ஆண்ட ஆங்கிலேய அரசு இன்று தாய்நிலத்திற்குள் சுருங்கிவிட்டனர்.

பேரெழுச்சி பெற்று விரிந்த ரஷ்ய இனமும் தாய்நிலத்திற்குள் சுருங்கிக்கொண்டு வருகின்றனர்.

மாபெரும் அரசை ஏற்படுத்திய பாரசீகரும் ஓட்டோமான்களும் அடையாளம் இழந்து இன்று தாய்நிலத்தில் அழிவுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

குறுகிய காலத்தில் பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஜெர்மனியும், ஜப்பானும், ஸ்பெயினும் தாய்நிலத்திற்குள் சுருங்கி அழிவு நிலைக்கு வந்ததும் விழித்துக்கொண்டதால் இன்று வல்லரசாகத் திகழ்கின்றனர்.

தொலையாதிக்கத்தைப் பரப்பிவரும் அமெரிக்காவும், சீனாவும் விரைவில் தலைமாற்றி நடக்கும் நிகழ்வுகளால் தாய்நிலத்தில் சுருக்கப்படுவர்.

என்றென்றைக்கும் எக்காலமும் நீடித்திருக்கும் ஒரு வல்லரசை யாராலும் அமைக்கமுடியவில்லை.

மூடிய பாத்திரத்தில் ஆற்றலை நிரப்புவதே எளிது.
வரையறுக்கப்பட்ட தாய்நிலத்தில் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வதே எளிது.

எனவே, தாய்நிலத்தில் வல்லரசை நிறுவவிருக்கும் தமிழர்களே, நீங்கள் ஆற்றலை தாய்நிலத்திற்கு வெளியே தேவையின்றி பயன்படுத்தாதீர்கள்.

ஆனால், உலகின் மறுமூலையில் ஒரு படையெடுப்பை நிகழ்த்தி வெல்லும் அளவு ஆற்றலை உங்களுக்குள்ளே தேக்கிவைத்திருங்கள்.

எப்போது நம்மை சீண்டுகிறார்களோ அவர்களுக்கு முன் நாம் முந்திக்கொண்டு படையெடுத்து செல்ல எந்நேரமும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.

எதிரிகளை முறியடித்து அவர்கள் நிலத்தைக் கைப்பற்றிய பிறகு தொடர்ந்து அதை கைக்குள் வைத்திருக்க நினைக்கக்கூடாது. எதிரி இனத்தில் தகுந்தவர்களிடம் அதை ஒப்படைத்துவிட்டு தாய்நிலம் திரும்பிவிடவேண்டும்.

எவரிடமும் ஒரு பிடி தாய்மண்ணையும் விட்டுக்கொடுக்காமல் எவருடைய தாய்நிலத்திலத்திலும் ஒரு பிடி மண்ணைக் கவர்ந்துகொள்ளாமலும் நாம் இருக்கவேண்டும்.

அப்படி நடந்துகொண்டால் நாமே நிலைத்திருக்கும் பேரரசு.

(படம்: தொண்ணூறே ஆண்டுகளில் மங்கோலியர் கைப்பற்றிய நிலப்பரப்பு)
https://m.facebook.com/photo.php?fbid=509316365838688&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr#509318922505099

No comments:

Post a Comment