Showing posts with label தாமிரவருணி. Show all posts
Showing posts with label தாமிரவருணி. Show all posts

Sunday, 9 July 2017

கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்

கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்

இந்துத்துவ சார்புடைய ஒரு கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி
----------------------
அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
June 27, 2017
- ஆர். கோபிநாத்

மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் முதலாம் பராந்தகன் என்னும் சோழ மன்னன் காலத்தவன்.
இவன் காலம் பொ.பி. 10 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி பொ.பி.920 வரை ஆண்டதாக சொல்கிறார்கள்.
இவன் கல்வெட்டுகள் தான் சடைய மாறன் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.
இன்றைக்கிருந்து 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
(ஊர்மக்கள் சின்னக்கோவில் என்று அழைப்பர்)
அந்த கல்வெட்டு படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
படம் தெளிவாக இல்லாததால் அதை நானே இங்கு தருகிறேன்.

முள்ளிநாட்டு இளங்கோய்க்குடிக்கு மேற்கே புற்றும் தெற்றுமாக இருந்த ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அந்த பாழ் நிலத்தைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்.
பூவன் பறையனேன் என்று கல்வெட்டில் பெயரும் உள்ளது.

அரையன் அணுக்கர் என்பவர் அரசனின் மெய்க்காவல் படை வீரர்கள் அதாவது அந்தரங்க காவலர்கள்.
அரசனோடு அரண்மனை உட்பட அவன் போகும் இடம் அனைத்திலும் இருந்து அவனை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள்.
இத்தகைய உயர்ந்த இடத்தில் இருப்பவன் இந்த பூவன் பறையன்.
இவன் தன் பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதை தானமாக கோயிலுக்கு அளித்து, அதை கல்லில் வெட்டிக்கொள்ளும் உரிமையும் பெற்றுள்ளான்.
ஆக பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்..

தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.
வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்.

இப்படி இருந்தவர்கள் தான் ஏதோ ஒரு கால மாற்றத்தில் சமூகத்தில் தாழ்வு நிலையை சந்தித்துள்ளனர்.  தமிழகத்தின் மற்றொரு முக்கிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக பள்ளர்களைக் குறித்தும் இதே போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் காண்பிக்க முடியும்.
-------------------

'தமிழ் ஹிந்து' இணையத்தில் உள்ள இக்கட்டுரை மேற்கொண்டு இசுலாமிய ஆட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் குற்றம் சாட்டுகிறது.
  எனவே பறையர் தொடர்பாக நமக்குத் தேவையான பகுதியை மட்டும் இங்கே தந்துள்ளேன்.

கட்டுரையில் 'ஏதோ ஒரு கால மாற்றத்தில்' என்று மழுப்புவது தெலுங்கர் ஆட்சி காலத்தில் நடந்த மாற்றத்தைத்தான் (அவர்கள் ஹிந்து என்பதால்!)

// பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்//

அதாவது கி.பி.1000 வரை நல்லநிலையில் பறையர்கள் இருந்தனர்.
கிபி.1070 ல் இராசேந்திர சோழனின் மகள்வழிப் பேரனான சாளுக்கிய இளவரசன் சோழர் அரியணையைக் கைப்பற்றினான்.
அதாவது பாதி கன்னடன்.
அநாபய சாளுக்கியன் என்ற பெயரை குலோத்துங்க சோழன் என்று மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான்.

இதன்பிறகு தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கியது.
பாண்டியரும், சேரரும், பல சிற்றரசர்களும் கலகம் செய்யத் தொடங்கினர்.
கன்னட தெலுங்கு அரசர்களும் தமிழகத்தில் நுழைந்தனர்.
இருநூறு ஆண்டுகள் அதாவது கி.பி 1280 வரை இந்த குழப்பநிலை நீடித்தது.

அதன்பிறகு பாண்டியர் பேரரசு அத்தனை வேற்றினத்தவரையும் அகற்றிவிட்டு தமிழகம் மற்றும் ஈழம் வரை பரவினாலும் அது 100 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை.
பாண்டிய வாரிசுரிமைப் போர்களால் அது வலுவிழந்தது.
இந்த நேரத்தில் கி.பி.1330 ல் மங்கோலிய- துருக்கிய வம்சாவழி டெல்லி சுல்தான்களால் வட தமிழகம் கைப்பற்றப்பட்டது.
அதன்பிறகு தெலுங்கு அரசர்கள் நுழைந்தனர்.
வடதமிழகம் வேற்றின ஆட்சியிலே இருந்து பிறகு மீளவேயில்லை.

// தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்//

கிபி 1350 பிறகு தென் தமிழகத்தில் பரவியது விஜயநகர பேரரசு.
தெற்கே பாண்டியர்கள் தெலுங்கருக்கு அடங்கிய சிற்றரசுகளாக இருந்ததால் ஓரளவு தமிழர்கள் நிலை இருந்தது.
பாண்டியர் புகழ் மங்கி நலிவடைந்து கிபி 1600களில் பாண்டியர் அரசு மறைந்தது.
அதனால் 17ம் நூற்றாண்டில் தெற்கேயும் பறையர்கள் தெற்கேயும் வீழ்ந்தனர்.

சங்ககாலத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
ஆனால் மிக மோசமான அளவில் இருந்ததில்லை.
தமிழர் ஆட்சியில் சாதிய ஒடுக்குமுறைகள் இருந்ததேயில்லை.

தமிழகத்தில் வேற்றின அரசுகளே சாதிய ஏற்றத்தாழ்வுக்கு அடித்தளமிட்டன.

முதலில் விஜயநகரப் பேரரசு அதன் பிறகு ஆங்கிலேயர் என நிலவுடைமைச் சமூகம் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி முழுக்க சுரண்டப்பட்டு சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதன்பிறகு ஆங்கிலேயரும் நிலவுடைமை சமூகத்தை மேலும் வளர்த்துவிட்டு மக்களை ஒடுக்கி சுரண்டலை இன்னும் தீவிரமாக செய்தனர்.

தற்போது ஹிந்திய அரசு இன்னும் கொடூரமாக தனது அரசாங்க கட்டமைப்பின் மூலம் விவசாயத்தை இல்லாதொழித்து மண்ணுக்கு அடியிலுள்ள வளங்களையும் சுரண்டி விற்கத் தொடங்கிவிட்டது.

Tuesday, 21 March 2017

தாமிரபரணி நாடு

தாமிரபரணி நாடு

குறவருக்கும் (கௌரவர்)
பாண்டியருக்கும் (பாண்டவர்)
நடந்த போரே மகாபாரதம்.

இந்த பகையை முடித்து இருவரையும் சேர்த்து வைக்கத்தான் பாண்டிய மன்னனான முருகன் குறவர்களிடம் பெண் எடுத்தார்.

 சேரர் நடுநிலை வகித்தனர்.

இரு படைகளுக்கும் உணவு கொடுத்தவன் உதியஞ்சேரலாதன்.

 இதனாலே இவனை பெருஞ்சோற்று தியஞ் சேரலாதன் என்பர்.

இவனை புகழ்ந்து முரஞ்சியூர்முடி நாகராயர் பாடிய பாடலில் இதை அறியலாம்.

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலப்பூந் தும்பை 

யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்.

அப்போது இலங்கைத் தீவும் தமிழகமும் ஒன்றாக இருந்தன.
பொதிகை மலையில் தோன்றி நடு இலங்கை வரை பாய்ந்தது தென்பொருநை (தாமிரபரணி).

2000 ஆண்டுகள் பழமையான தாலமியின் (Ptelomy) உலக வரைபடத்தில் இலங்கைத் தீவு தாப்ரபேன் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில் ,

குந்தியின் மகனே!
மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு.

சோழர்கள் இலங்கையை ஆண்டபோது குற்றால குறும்பலா ஈஸ்வரர் கோயிலுக்கும் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கும் நித்திய தீப நிவந்தம் போன்ற ஆன்மீக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பழ.நெடுமாறனின் ஈழப் போர்முனையில் புலிகளுடன் என்ற 1985 ம் ஆண்டுகால புத்தகத்தில் படித்ததாக நினைவு.
மேலும் அறிய,

search
பாண்டவர் பாண்டியரே! கௌரவர் குறவரே!
வேட்டொலி

search
முப்பாட்டனின் படைமுகாமில் வேட்டொலி

Saturday, 23 July 2016

ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை

ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை

கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது,
கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை
காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம்.

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும். 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.

ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.

மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

1998ம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர்.
இந்நிலையில் தென்காசி பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர்.
ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையயை கேட்டறிந்த டாக்டர். கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார்.
தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது.
அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள்.
தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர்.

03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது.
மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர்.
கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர். 127தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.
ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது?
என கேள்வியெழுப்பியது.
பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது.

இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர்.
சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.
பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது.
பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர்.
தலைவர்களின் உயிருக்கும் குறைவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள்.
உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர்.
(இதற்காகவே தாமிரபரணியின் நீர்மட்டம் அன்று மட்டும் உயர்த்தப்பட்டிருந்தது)
தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை.

இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர்.
நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது.
இப்படுகொலை நடந்த சில் நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள்.

அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு.

பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார்.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி.
தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது.

நன்றி: வருண் ரங்கநாயகி கணேசன்

Wednesday, 13 April 2016

தாமிரபரணி அன்னையைக் காப்பாற்றுங்கள்

தாமிரபரணி அன்னையைக் காப்பாற்றுங்கள்

'திருநெல்வேலிக் காரன்டா' என்று வாய்ச்சவடால் விட்டால் மட்டும் போதாது,
கொஞ்சமாவது சூடு சுரணையும் வேண்டும்.

தாமிரபரணி நீர் மக்களுக்கே பத்தாமல் நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராமங்கள் தவித்துக் கொண்டிருக்க,
ஆற்றில் அணைகட்டி நீர்தேக்கி குடிநீர் பற்றாக்குறையை போக்க வக்கில்லாத அரசு,
விண்ணப்பம் அனுப்பிய பத்தே நாட்களில் பெப்சி ஆலை அமைக்க அனுமதி வழங்கிவிட்டது.

கங்கைகொண்டானில் வெறும் ரூ.3564 வாங்கிக்கொண்டு 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் கொடுக்கிறது.
இந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரூ.36 கோடி !!!!!

முப்பத்தியாறு கோடி எங்கே மூவாயிரத்தி ஐநூறு ரூபாய் எங்கே?

அதாவது ஒரு ஆண்டுக்கு வெறும் 36 ரூபாயில் இவ்வளவு பெரிய நிலத்தை பெப்சி வாடகைக்கு எடுத்துவிட்டது.

நிலம் போனதைவிட கொடுமை தாமிரபரணியின் நீர்வளம் விற்கப்பட்ட கொடுமை

ஆயிரம் லிட்டர் வெறும் 37 ரூபாய்.
அதாவது ஒரு லிட்டர் வெறும் 40பைசா.

ஒரு நாளுக்கு ஆயிரம் லிட்டர் இல்லை 15 லட்சம் லிட்டரை பெப்சி ஆலை உறிஞ்சும்.

ஏற்கனவே திருநெல்வேலி தொழிற்பேட்டையில் உள்ள கோ-கோ- கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்று நீரை நாள் ஒன்றுக்கு 9 இலட்சம் லிட்டரை, உறிஞ்சி வருகிறது.

இங்கே ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வீதம் பெப்சி நிறுவனம் கொடுக்கிறது.
அதாவது கங்கைகொண்டானை விட பத்துமடங்கு மலிவு.

எவனாவது 50 பைசாவுக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுப்பானா?
தமிழக அரசு கொடுக்கிறது.

பெப்சி நிறுவனத்தின் முகவராக இருந்து, திருநெல்வேலியில் குளிர்பான உற்பத்தி செய்யும் பணியைச் செய்யப்போவது 'பிரதிக்ஷா பிஸ்னஸ் சொலியூசன்' என்ற ஐதராபாத்தைத் தலைமையாகக் கொண்ட ஆந்திரா கம்பெனி.

ஏம்ப்பா அங்கேதான் இதை விட பெரிய ஆறு கிருஷ்ணா ஓடுகிறதே அதை உறிஞ்சி பெப்சி ஆக்கி கொள்ளை லாபம் பார்க்கலாமே?!

மற்ற மாநிலத்தான் எதிர்ப்பதெல்லாம் இந்தியாவின் குப்பைத் தொட்டியாகிவிட்ட தமிழகத்தின் தலையில் போடப்படவேண்டுமா?

மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் இரத்தனகிரி மாவட்டத்தில்  அமைக்கப்பட்டது.
உள்ளாட்சி நிர்வாகம் அந்த பன்னாட்டு ஆலையை எதிர்த்து நின்றது.
அனுமதியும் கொடுக்கவில்லை.
மராத்திய மக்கள் கடுமையாக போராட்டம் நடத்தி ஆலையை விரட்டியத்தார்கள்.
அங்கிருந்து வெளியேறி நேராக தூத்துக்குடிக்கு தமிழக அரசின் அபார வரவேற்போடு வந்து அமர்ந்தது ஸ்டெர்லைட்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை எண்ணற்ற உயிர் பாதிப்புகள், சுற்றுசூழல் பாதிப்புகள் அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

தமிழகத்தில் கேள்விகேட்க எவன் இருக்கிறான் என்ற எகத்தாளம்தானே இவர்களுக்கு.
தென்பாண்டி மக்கள் அவ்வளவு கையாலாகாத முண்டங்களாகிப் போனோமா?

ஆமாம் தென்தமிழகத்தில் என்ன அவ்வளவு தண்ணீர் செழிப்பா?

இல்லை.
நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.
பாசன உறுதி சட்டப்படி விளைநிலங்களுக்கு கிடைக்கவேண்டிய நீர்கூட முறையாக கிடைப்பது இல்லை.

நெல்லை-தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
நல்ல தண்ணீர் லாரி மூலம் மட்டுமே கிடைக்கிறது.
ஒரு குடம் தண்ணீர் ரூ.5.

மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீரை தடுத்து
விவசாயத்தின் மூலம் கிடைக்கும் உணவையும் தடுத்து
அவர்கள் வயிற்றிலடித்து
50 பைசாவுக்கு அதை அமெரிக்கா கம்பெனிக்கு தாரைவார்க்கும் கொள்ளைக்கார அரசுகளை என்னவென்று சொல்வது?

கருணாநிதியும் ஜெயலலிதாவும் வாய்க்கு ருசியாகத் தின்று கொழுக்க திருநெல்வேலிக்காரன் தண்ணீர்குடமேந்தி பிச்சை எடுக்க வேண்டுமா?

இதைத் தடுக்க என்ன வழி?
வழக்கு போடலாமா?

போடலாம்.
ஆனால் தொழிற்சாலை பற்றிய வழக்குகளில் கடந்த 15 ஆண்டுகளாக வந்துள்ள தீர்ப்புகள் ஆலைகளுக்கு சாதகமாகவே இதுவரை வந்துள்ளன என்பதே கசப்பான உண்மையாகும்.

கொள்ளைக்காரக் கூடாரமான தி.மு.க சார்பில் அப்பாவு என்பவர் வழக்குப் போட்டுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தீர்ப்பு எப்படியும் கம்பெனிக்குச் சாதகமாகத்தான் வரும் என்று உறுதி செய்துகொள்ள இதுவே போதும்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

கேரளாவில் பாலக்காடு மாவட்டம், பெருமாட்டி ஊராட்சியில் பிளாச்சிமடாவில் அமெரிக்காவின் கோக் ஆலை அமைக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரமான குடிநீர், விவசாயம், சுற்றுசூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஐந்து ஆண்டு காலம் மக்களின் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக கேரளா உயர்நீதிமன்றம் அந்த கொக்கோ கோலா ஆலைக்கு தடை விதித்தது.
ஆனால் டெல்லி உச்சநீதிமன்றம்
“அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது.
தொழில் வளர்ச்சிக்கு இது போன்ற ஆலைகள் தேவை”
எனக்கூறி கொக்கோ-கோலா ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

சோர்ந்து விடவில்லை கேரள மக்கள்.
இன்று வரை மக்கள் போராட்டம் மூலமே அந்த ஆலை (கொக்கோ கோலா) பிளாச்சிமடாவில் இயங்க முடியாமல் மூடப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தையே மண்ணைக் கவ்வ வைத்த மலையாள மண்ணின் மக்களைப் பார்த்தாவது சூடு சுரணை வரவேண்டாமா?
அங்கே விரட்டப்பட்டவன் நேராக தமிழகத்திற்கு வந்து பத்தே நாட்களில் அனுமதி பெற்று கட்டிட வேலைகளையும் தொடங்கிவிட்டான் என்றால் இன்றைய ஜெயலலிதா அரசின் பணவெறியை அறிந்துகொள்ளுங்கள்.

இவ்வளவு ஏன்?
ஈரோடு, பெருந்துறை சிப்காட்டில் கொக்கோ-கோலா நிறுவனம் 2015 ல் ஆலைக் கட்டுமான பணிகள் கூட தொடங்க முடியாமல் மக்களின் ஒன்றுபட்டு உறுதியாகத்  தொடர்ச்சியாகப்  போராடி விரட்டியடித்தார்கள்.

நீதிபதி-சந்துரு அவர்களே கூறிவிட்டார்.
மீத்தேன் பிரச்சனை பற்றி 2015 இல் பேசும் போது
"சட்டப்படி நீதி கிடைக்க நீதிமன்றம் செல்லுங்கள்.
தர்மப்படி நீதி கிடைக்க வேண்டும் என்றால் தெருவிற்கு வந்து போராடுங்கள்" என்று.

திருநெல்வேலிக் காரனெல்லாம் வெறும் வாய்ச்சவடால் விடத்தான் பிறந்தவனா?
உங்கள் உடலில் ஓடும் ரத்தம் தாமிரபரணித் தாய் ஊட்டிய பால் என்பதை மறந்துவிட்டீர்களா?
பெப்சி கோககோலா போன்றவை நம்மிடம் உறிஞ்சப்படும் ரத்தம் என்பதை இனியேனும் உணர்வீர்களா?

முழுக்க முழுக்க தமிழகத்தில் உற்பத்தி ஆகி,
நீராதாரத்திற்கு வேறெதையும் நம்பியிராத,
தமிழகத்தில் கடலில் கலக்கும் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரவருணி.

பாலாறைத்தான் தெலுங்கனிடமிருந்து காப்பாற்று துப்பில்லை.
காவிரியைக் கன்னடனிடமிருந்து காப்பாற்றத் துப்பில்லை.

தாமிரவருணியையாவது தெலுங்கு கம்பெனியிடமிருந்தும்,
கன்னட அம்மாவிடமிருந்தும் காப்பாற்றுவோம்.

போராடுவோம் திருநெல்வேலிக்காரர்களே!

போராடுவோம் தூத்துக்குடி மக்களே!

போராடுவோம் தமிழ் மக்கள் அனைவரும்.

#ImWithSeeman