Saturday 29 August 2015

வியட்நாம் பாண்டியன்

வியட்நாம் பாண்டியன்

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான் !

அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர் ஸ்ரீமாறன்.
தமிழில் இதை திருமாறன் என்று
சொல்லலாம் .

வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி , ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை .
கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ- சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION ) இது செதுக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை ) கல்வெட்டு குறிப்பிடுகிறது .
பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன .
கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன.

கல்வெட்டின் சில வரிகள் :-

. . . . . .. . ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . . . . . . . . . . .

ஸ்ரீ மாற லோ. . . . . ன. . . .. . . . குலதந்தனேன

க்ராபதிம் ஸ்வகன. . .. .. ச . . . . . . . .. .. ..

இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும் , அசையா சொத்து (ஸ்தாவர , ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான்.

எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான் .
இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . . . .. . .என்று பாதியில் முடிகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள்  “ஸ்ரீமாற ராஜகுல ” என்பதாகும் .
இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது .

ஆனால் வியட்னாம் , லாவோஸ் , கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது .

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN ) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY ) சீனாவை ஆண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா ’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர் .

சம்பா (CHAMPA ) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும் .
மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU ) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN ) என்றும் எழுதிவைத்துள்ளனர் .
இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO ) புதல்வன் என்றும் தெரிகிறது .

தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர் .
கி .பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது .
ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது .

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி ’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை .
எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN ) என்று முடிவதால் இதை ‘ வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர் .
ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது .

இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் "ஸ்ரீமாறன்", "வர்மன்" என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன .

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் "மூலவர்மன்" என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் 800 க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய ’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு ) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன :-

(1 ) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன் .
அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர் .
இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம் .

(2 ) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி )
ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம் .
பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

(3 ) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க காலமன்னன் "நிலந்தரு திருவில் பாண்டியன்" என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது .
பல நாடுகளை வென்று தந்ததால்  “நிலந்தரு” “ திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் .

(4 ) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்துமுறை ‘ மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் "முடித்திருமாறன்" .
நற்றிணை 105 , 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன் .

(5 ) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன .
அகத்தியர் “ கடலைக் குடித்த ”  கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “ கடலைக் குடித்தார் ” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “ குல குரு ” என்றும் கூறுகிறது .

(6 ) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன் ,
பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6–61 )

(7 ) புறநானூற்றுப் பாடல் (புறம் 182 ) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “ கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி .
இவன் வெளிநாடு செல்லும்போதோ , வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.

(8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி .பி . முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர் .

(9 ) தென் இந்தியாவை கி .மு இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது .

(10 ) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன .

(11 ) ‘ மிலிந்த பன்ன ’ என்ற கி . மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம் , குஜராத் , சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது .

(12 ) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன .

அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன .

ரோம் (இத்தாலி ) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே !

Reference :
(1 ) R. C . MAJUMDAR - CHAMPA : HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985 .

(2 ) SANGAM LITERATURE –
ETTUTHOKAI & PATHUPPATTU

(3 ) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL
VARALATRU KAZHAGAM ,
MADRAS 1967.

நன்றி : லண்டன் சத் சங்கம் செய்தி மடல் .
- ச . சுவாமிநாதன்

www.eegarai.net/t108461-topic

No comments:

Post a Comment