Sunday, 29 June 2025

நீளும் காவல்கொலை பட்டியல்

நீளும் காவல்கொலை பட்டியல்  

  RTI மூலம் பெறப்பட்ட தகவல் படி 2022 லிருந்து 2025 ஜூன் வரை  24 பேர் காவலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 அதில் குறிபிடத் தகுந்தவை

ஜனவரி 2021 
 21 வயது சூர்யா எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் கொலை

ஆகஸ்ட் 2021 
 சத்யவாணன் தஞ்சாவூர் காவல்நிலையத்தில் கொலை

ஆகஸ்ட் 2021  
தடிவீரன் திருநெல்வேலி கொலை 

மேற்கண்ட மூவரும் பட்டியல் சாதியினர் 

 2021 டிசம்பர் மணிகண்டன் என்ற இளைஞர் ராமநாதபுரம் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட சில மணிநேரங்களில் கொலை

 ஐனவரி 2022
டெய்லர் பிரபாகரன் துன்புறுத்தி கொலை 

 ஏப்ரல் 2022
சென்னை 25 வயது விக்னேஷ் கொலை

 பெரும் அதிர்வலைக்குப் பிறகு விக்னேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் அறிவித்து 'இனி ஒரு காவல் கொலை கூட நடக்காது' என்று முதல்வர் அறிவித்த ஒரு மாதத்திற்குள்  3 காவல் கொலைகள்

மே 2022
திருவண்ணாமலை குறவர் தங்கமணி படுகொலை 

ஜூன் 2022 
 கொடுங்கையூர் 30 வயது ராஜசேகர் கொலை 

ஜூன் 2022 
 நாகப்பட்டினம் சைக்கிள் கடை சிவசுப்பிரமணியம் கொலை

 இதைவிட மோசமானது 

ஜனவரி 2023 
செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளி 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமான சித்திரவதை செய்து கொலை 

 ஏப்ரல் 2023
 ஜெய்பீம் படப்பாணியில் ஏழை சமையல்காரர் ராஜா மனைவி கண் முன்னே துன்புறுத்தி கொலை 

மார்ச் 2024 
2014 ல் நடந்த அண்ணா நகர் இளைஞர் கொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் உட்பட 8 கொலைகார போலீசுக்கு பதவி உயர்வு 
மதுரை நீதிமன்றம் கண்டனம்

 ஜூலை 2024
 12 நாட்களில் அடுத்தடுத்து 4 காவல்கொலைகள்  மதுரை கார்த்திக், விழுப்புரம் ராஜா, சென்னை சாந்த குமார்,  விருதுநகர் ஜெயக்குமார்


ஜூன் 2025 
 காவல் நிலையத்தில் இளைஞர் அஜித் குமார் கொலை

 இதை விமர்சிக்க அதிமுக வுக்கு தகுதி இல்லை.
 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் கிட்டத்தட்ட 100 காவல் மரணங்கள் நடந்துள்ளன.
 2018 இல் மட்டுமே 78 காவல்கொலைகள் நடந்துள்ளன.
 ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை அதில் குறிப்பிடத் தக்கது
 
 ஒரே ஒரு ஆறுதல் 1993 இல் நடந்த ஒரு காவல்கொலை வழக்கு (மேல அலங்காரத்தட்டு வின்சென்ட்) நிறைவு பெற்று 25 ஆண்டுகள் கழித்து 8 போலீசாருக்கு தண்டனை கிடைத்தது.
 இதுவே தமிழக வரலாற்றில்  இறுதித் தீர்ப்பு வரை சென்ற ஒரே காவல்கொலை வழக்கு ஆகும்.
 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன அல்லது கைவிடப்பட்டன.

 பாஜக வுக்கும் இதைக் கண்டிக்கத் தகுதி இல்லை.
 உத்தர பிரதேசம் இல் 2020-2022 இல் ஏறத்தாழ 4,400 காவல்கொலை நடந்துள்ளது. தமிழகத்தைப் போல 3.5 மடங்கு மக்கட்தொகை கொண்ட உ.பி யில் சதவீத அடிப்படையில் இது மிக அதிகம்!

Thursday, 26 June 2025

அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதாக நமக்கு சொல்லப்படுவது 
"கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!"
 ஆனால் இது திரிக்கப்பட்டது!
அதாவது "educate! organise! agitate!" என்று அவர் கூறவில்லை!
 "educate! agitate and organise" என்பதே அவர் கூறியது.
அதாவது "கற்பி! (சிந்தனையைத்) தூண்டிவிடு! ஒன்றிணை!" என்பதே இதன் பொருள்! 
 அவரது நோக்கம் ஒன்றிணைவது தான் தூண்டிவிடுவது (agitate) அல்ல! 

 [ “Dr Babasaheb Ambedkar Writings and Speeches” Vol-17, Part-3, Pages – 273 & 276

The All India Depressed Classes Conference was held at Nagpur from 18th to 20th July 1942. Dr Ambedkar addressing the Conference on 20th July 1942 as under:-
 “My final words of advice to you is Educate, Agitate and Organise; have faith in yourselves and never lose hope. 
I shall always be with you as I know you will be with me.
 For ours is a battle, not for Wealth or for Power.
 It is a battle for Freedom!
It is a battle for the Reclamation of Human Personality which has been suppressed and mutilated by the Hindu social system”.]

மார்க்ஸ் கூறியதும் திரிக்கப்படுகிறது "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்று அவர் கூறவில்லை "உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்றுதான் அவர் கூறினார்.

 தேவர் கூறியதும் திரிக்கப்படுகிறது 
"தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்" என்று அவர் கூறவில்லை!
"தேசியம் உடல் தெய்வீகம் உயிர்" என்றுதான் கூறினார்.

மாடு என்பது சொத்து

மாடு என்பது சொத்து 

 மாடு எனும் சொல் செல்வம் அல்லது சொத்து எனும் பொருள் தரும்.
 இந்த சொத்து பொன்னாக இருக்கலாம் அல்லது அசையாத சொத்தான இடம், நிலம், வீடு ஆகியனவாகவும் இருக்கலாம்.

 உதாரணமாக "மாடை" என்பது தங்கத்தை குறிப்பாக தங்க நாணயத்தைக் குறிக்கும் சொல்.
 "மாடு" எனும் சொல்லுக்கு சூடாமணி நிகண்டு பொன் என்று பொருள் தருகிறது.
 
 மாடி, மாடம், மாடவீதி போன்றவை இன்றும் கட்டிடம் சார்ந்த சொற்கள்.
 
 பிற்பாடு கம்பராமாயணம் தான் மாடு என்பதை எருது என்ற பொருளில் தருகிறது.

 அகராதி நிகண்டும் சீதனம் எனும் பொருள் தருகிறது.

 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை 
 எனும் குறளில் உண்மையான செல்வம் கல்வியே மற்றவை (நிலையான) சொத்துகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.

 குறளில் வரும் மாடு எனும் சொல் கால்நடையை நேரடியாக் குறிக்காது ஆனால் அது ஆகு பெயராகி பிற்பாடு கால்நடைகளைக் குறித்தது.

 இந்த குறளைப் பயன்படுத்தி கால்நடைகளின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க முயற்சிப்பவரை இது கால்நடையைக் குறிக்காது என்று இழிவு செய்வது மூடத்தனம்! 

  கால்நடை என்பதும் ஒரு மாடு (சொத்து) தான்! 

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.’ (குறள் எண் 560) 
 ஒரு நாட்டில் காவல் (பாதுகாப்புத்துறை) சரியாக செயல்படாவிட்டால் முதலில் பாதிக்கப்படுவது கால்நடைகள் மூலம் வரும் வருமானம் என்று கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும் வள்ளுவர் கூறுகிறார்.
இதிலும் கல்வியையும் கால்நடைகளையும் ஒப்பிடுகிறார்!

 ஆடு மாடுகள் காப்போம்! 

Wednesday, 25 June 2025

யார்தான் ஆரியர்

யார்தான் ஆரியர்?
19.03.2017

ரொம்ப யோசிக்கவேண்டாம்
விடை அருகிலேயே உள்ளது.
இன்றும் கைபர்(khyber) போலன் (bolan) கணவாய்களின் அந்தப்பக்கம் வாழும் இனம் எது?

பெர்சிய மொழி பேசும் ஈரானிய இனம்தான்!

ஈரான் மக்கள் தம்மைத்தாமே ஏரியா (Aryia) என்றே இன்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

ஈரானிய மொழியில் ஏர்யன்(aryia) என்றால் உயர்ந்த அல்லது மாண்புள்ள என்றவாறு பொருள்படும்

இரான் (iran) என்ற சொல்லே ஏர்யன் என்ற சொல்லின் திரிபு என்கிறார்கள் (etymology of iran - Wikipedia). 

  இந்த ஏரியன் என்ற சொல்லைத்தான் ஆர்ய என்ற சொல்லுடன் திரித்து ஆங்கிலேயர் தமது அரசியலுக்காகப் பயன்படுத்தினர்.

(ஆங்கிலேயர் Aryan என்பதை ஏர்யன் என்றே உச்சரிப்பர்.
இது அரையர் என்ற தமிழ்ச்சொல்லுடனும் ஒத்துப்போகிறது.
தமிழகத்தில் அரிய என்று தொடங்கும் ஊர்களும் உண்டு.
அரியநாடு திருப்பதிக்கு அப்பால் அருவா என்றும்
அதற்கும் வடக்கே ஆரிய என்றும் திரிந்ததாக செந்தமிழ் பேரகராதி யில் பாவாணர் கூறுகிறார்)

ஆங்கிலேயர் கூறியபடி ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியே வந்தனர்.
இன்றும் ஈரானியப் பேரினமே கைபர் போலனுக்கு அந்தப் பக்கம் வாழ்கிறது.

இன்றும் கைபருக்கு அந்தப்பக்கம் ஈரானிய மூலமொழியான பெர்சிய மொழி.
போலனுக்கு அந்தப்பக்கம் பஷ்த்தோ எனும் ஈரானிய கிளைமொழி.
(பார்க்க: படத்தில் சிவப்புக்குறி)

(வேதகால)சமஸ்கிருதம் உட்பட அனைத்து வடஹிந்திய மொழிகளும் indo-aryan பிரிவின் கீழ் உள்ளன.
இந்த இந்தோ-ஆரியன் பிரிவே indo-iranian என்ற பிரிவின் கீழேதான் வருகிறது.
என்றால், ஆரியம் என்றாலே அது ஈரானுக்கு அடங்கியதுதான்.
அவற்றில் சமஸ்கிருதமும் உண்டு.

ஆரிய படையெடுப்பு என்பது 2600 ஆண்டுகள் முன்பு பாரசீக மன்னன் சைருஸ் (cyrus) இந்தியா மீது படையெடுத்து சிந்து நதிவரை கைப்பற்றியதைக் குறிக்கலாம்.
அல்லது அவருக்கு முன் ஈரானிய பழங்குடிகள் சிறிய அளவில் படையெடுத்திருக்கலாம்.

ஈரானியர் மட்டுமன்றி கிரேக்கத்திலிருந்து அலெக்சாண்டரும் தனது அரசாட்சியை ஹிந்தியா வரை பரப்புகிறார்.
இவர்களைப் பின்பற்றி பலரும் அடுத்தடுத்து மேற்கு ஹிந்தியாவை படையெடுத்து ஹிந்தியாவிற்குள் முன்னேறுகிறார்கள்.

ஹிந்தியாவின் முதல் ஆரிய அரசு ஆர்யாவர்த்த (Aryavarta) எனப்படும் அரசு இது கைபர் போலன் கணவாய்களுக்கு சற்று தள்ளி இன்றைய ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உருவாகிறது (அதாவது சிந்து சமவெளி).

அதாவது ஈரானிய இனம் தன் தாய்நிலத்தைத் தாண்டி சிந்து சமவெளிக்கு வருகிறது.
நாளடைவில் அது தாய்நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அருகாமை பூர்வகுடிகளுடன் (தமிழர்களுடன்) கலந்து தனி இனமாக உருவாகிறது.

பிறகு தனக்கென தனி அரசையும் நிறுவிக்கொள்கிறது.
தாய்நிலத்தின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களைத் தழுவி தனக்கென தனி கலப்பு மொழியையும் தனி சமயத்தையும் அது ஏற்படுத்திக்கொள்கிறது.
(பாவாணர் கூற்றுப்படி சமஸ்கிருதத்தில் 5ல்2 பங்கு தமிழ்)

தம் மொழியில் உயர்ந்த சொல்லான ஏரியரைத் தழுவி ஆரியர் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிறது.
ஆரியவர்த்த என்று தனது அரசாட்சிக்கு பெயரிடுகிறது.
பின்னர் நாளடைவில் அரசாட்சி வீழ்ந்து பூர்வகுடிகளுடன் கலந்து கரைந்துவிடுகிறது.

இவர்கள் கலவையாக உருவாக்கியதே இன்றைய அடிப்படை ஹிந்து மதம்.

ஈரானிய மொழிச்சொல்லான ஹிந்த், ஹிந்தூ, ஹிந்துஸ் போன்ற சொற்களே ஹிந்து என்பதன் வேர்ச்சொல்.
இவர்கள் தமிழ்க் கடவுளரை எடுத்துக்கொண்டு புதிய சமயத்தை உருவாக்கி வேதங்களை எழுதியுள்ளனர்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே இன்றைய ஹிந்து மதத்தின் அடிப்படை.

இதேபோல தமிழிலிருந்து வேர்ச்சொற்களை எடுத்து இவர்கள் உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே வடயிந்திய மொழிகளுக்கு அடிப்படை.

மேலே சொன்னது ஈரானியர் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே.

இதே போல கிரேக்கர், சகர்கள் (ஈரானியர்), பார்தியர்(ஈரானியர்), குஷாணர் (சீனர்), ஹூனர் (துருக்கிய மங்கோலியர்), அராபியர், முகலாயர் (துருக்கிய மங்கோலியர்) என வடக்கிலிருந்து பலரும் வரிசையாக மேற்கிலிருந்து படையெடுத்து கைப்பற்றி ஆட்சி செய்து தமது மொழி, மத, கலாச்சார அடையாளங்களைக் கலந்துவிட்டு காணாமல் போயினர்.

(வடக்கை ஆண்ட ஒரு சில மன்னர்கள் தெற்கு வரை முன்னேறினர்.
ஆனால் தமிழகத்தை என்றுமே கைப்பற்றியதில்லை)

 வடக்கே இமயமலை, தெற்கே விந்தியமலை வரை இந்த இனகலப்பு அதிகம் நடந்து நடந்து வடயிந்திய இனமே கலப்பினமாக மாறிவிடுகிறது.
 இதனால்தான் மரபணு படி தற்போதைய இந்தியாவின் வடயிந்தியருக்கும் தென்னிந்தியருக்கும் சம்பந்தமில்லை என்றே ஆய்வுகள் சொல்கின்றன.

பிறகு கடந்த 500 ஆண்டுகளாக ஐரோப்பியரின் கடல்வழி படையெடுப்பு நடந்தாலும் இனக்கலப்பு தவிர மற்ற தாக்கங்கள் இருந்தன.

ஆக வரலாற்றில் ஆரியர் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக சிறிய அளவிலானது.
ஆரியர் சிந்து சமவெளியை படையெடுத்து கைப்பற்றியதாகத் தோன்றவில்லை.
இயல்பான குடியேற்றம்தான் நடந்திருக்கவேண்டும்.
(சிங்களவர் இலங்கையில் குடியேறியதுபோல)

ஆரியர் என்பார் பழங்கால ஈரானியரே!

பிராமணரெல்லாம் ஆரியர் வம்சாவழிகள் என்பதே எந்த அடிப்படையும் இல்லாத கருத்து.

அதிலும் தமிழ்ப் பார்ப்பனர்?????

வாய்ப்பேயில்லை.

(பார்ப்பனர்கள் சோழர் காலம் வரை தமிழில் வழிபாடு செய்தனர்.
தாய்லாந்து வரை தமிழிலேயே சைவத்தைப் பரப்பினர்.
சமஸ்கிருதம் அவர்கள் மீது பிறகுதான் திணிக்கப்பட்து.
ஆனாலும் அவர்கள் தமிழை விட்டுக்கொடுத்ததே இல்லை).

ஐரோப்பியர் தமது ஆட்சியை நியாயப்படுத்த "நாங்கள் ஆரியர், ஏற்கனவே நாங்கள் ஆண்டோம், பிராமணர் எங்கள் இனம்" என்று மேக்ஸ்முல்லர் மூலம் கதைகட்டிவிட்டனர்.

 "ஆரியரை எதிர்த்தோர் திராவிடர், அவர்கள் வழிவந்தோரே தென்னிந்தியர்" என்று கால்டுவெல் மூலம் கதைகட்டி பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.

ஆரிய கருத்தியல் ஹிட்லர் போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ
திராவிடக் கருத்தியல் கருணாநிதி போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை.
இதே போலவே சமஸ்கிருத ஹிந்து சமயத்தை உருவாக்கிய ஆரியரும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகித்திருக்க வாய்ப்பில்லை.

இன்று நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு என்றோ ஒழிந்துபோன ஆரியரை இழுப்பதும்,
ஆரியருக்கு தொடர்பே இல்லாத பார்ப்பன சமூகத்தின் மீது சாதிய வன்மத்தைக் கொட்டுவதும் எந்த வகையில் தீர்வாகும்?

தென்னிந்தியர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த வடயிந்திய ஆதிக்கமே நடைமுறை ஆரியம் என்று கொள்க.

   தமிழர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த தென்னிந்திய கூட்டு ஆதிக்கமே நடைமுறை திராவிடம் எனக்கொள்க

மேலே கூறிய கதை(?) நம்பும்படியாக இல்லையா!

கீழே உள்ள கதையைப் படிக்கவும்.

ஆரியர்கள் கைபர் போலன் வழியே ஆடுமாடு ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
பெரிய அரசாங்கம் நடத்திய தமிழர்களை ஏமாற்றி பதவிகளில் அமர்ந்தனர்.
அவர்கள் சிவப்பாக இருந்தார்கள்.
அதனால் தமிழர்கள் அவர்கள் அழகில் மயங்கிவிட்டனர்.
அவர்கள் சமஸ்கிருதம் பேசினார்கள்.
அதிலே மந்திரம் எழுதி இதுதான் கடவுளுக்குப் புரியும் என்றனர். உடனே எல்லாரும் ஒத்துக்கொண்டனர்.
மனுதர்மம் என்ற நூல் எழுதினார்கள்.
அதில் சாதியை படைத்தனர்.
அதைப் படித்துவிட்டு எல்லாரும் உடனே சாதி படிநிலையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
பிறகு அவர்கள் பூணூலைப் போட்டுக்கொண்டு பூசாரி ஆகி அனைவரையும் சாதியாகப் பிரித்து தொடர்ந்து இன்றுவரை ஆள்கிறார்கள்.
 இன்றும் சிவப்பாக இருக்கிறார்கள்.

இரண்டில் எதை நம்புவீர்கள்?!

திரைப்படத்தில் வாஞ்சிநாதன் வரும் காட்சிகள்

திரைப்படத்தில் வாஞ்சிநாதன் வரும் காட்சிகள்

 திரைப்படமாக வெளிவந்த ம.பொ.சி யின் படைப்பான "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் "செங்கோட்டை வாஞ்சிநாதன்" வ.உ.சி க்கு நேர்ந்த கொடுமைக்காக பழிவாங்க ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றதை காட்டியிருப்பார்.
 இதில் கலவரத்தை அடக்க ஆஷ் நேரடியாக தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபடுவதையும் காட்டியிருப்பார்.
 வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சுயசரிதையில் ஆஷ் மரணத்தை ஒரு காவலர் வந்து தன்னிடம் சொன்னதாகவும் அதைக் கேட்டு தான் மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டிருப்பார்.
 ஆனால் படத்தில் ஒரு டாக்டர் சொல்வது போல வருகிறது.
 அதேபோல வ.உ.சி தண்டிக்கப்பட்ட வழக்கில் பாரதியார் விசாரிக்கப்படவில்லை ஆனாலும் விசாரிக்கப்பட்டதாக காட்சி வைத்திருப்பார்.
 இதில் பாரதியாராக நடித்தவரும் செங்கோட்டையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா அவர்கள்தான்! 

Sunday, 22 June 2025

அன்றைய காதல்

அன்றைய காதல்  

 அந்த பெரிய வீட்டில் அந்த பகுதியில் அதிகம் வாழும் ஒரு சமூகத்தின் பெரியவர்கள் கூடியிருந்தார்கள்.
 வீட்டின் பின்புறம் இருந்த வெற்றிடத்தில் அசைவ உணவு ஆக்கிக் கொண்டிருந்தது அங்கு வீசிய நறுமணத்திலிருந்து தெரிந்தது.
 நாலு பேர் நாலு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 வீட்டின் பின்பக்கம் பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
 அந்த வீட்டின் பெரியவர் கூடத்தில் நடுவே அமர்ந்திருந்தார் அவரை சுற்றி பெரியவர்கள் அமர்ந்து அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
  அவர் அவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கியது போல மௌனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
 அப்போது பின் கட்டில் இருந்து அவரின் மனைவி கூடத்தின் வாசலுக்கு வந்து "என்னங்க..!" என்று அழைத்தார்.
  இவரும் போனார்.
 "என்னங்க அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்! இவ தான் வார்த்தையை விட்டிருக்கா! அதனாலதான் மாப்பிள்ளை கையை நீட்டிட்டார்!
 அவர் ஏடாகூடமான ஆள்!
 நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க!" என்று கூறினார்.
  பெரியவர் கோபத்துடன் "அதுக்குன்னு இப்படி போட்டு அடிக்கலாமா?" என்று கேட்கவும் அங்கே வந்த இவர்களது இளைய மகன் "அவன் இன்னைக்கு வரட்டும்! ஒழுங்கா மன்னிப்பு கேட்கலைனா இங்கேயே அவனை வகுந்திடுவேன்" என்று கூறினான்!
 அந்த அம்மாளோ "கூறுகெட்டவனே! உனக்கு ஒன்னும் தெரியாது! நீ பேசாம இரு! அவர ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது! மீறி வாயத் தொறந்தே இனி வீட்டுக்குள்ள வரக்கூடாது" என்று சொன்னாள்.
 இதையெல்லாம் அங்கே ஓரமாக அமர்ந்திருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 அந்த இளைஞன் அவளருகே போனான் "அக்கா அவன் உனக்கு சரிப்பட மாட்டான்! அவன் வந்ததும் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு தாலிய கழட்டி எறிஞ்சிடு! எதாவது பண்ணுனான்னா நா பாத்துக்கிடுறேன்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வெளியே போனான்.
 அவள் எதுவும் பேசாமல் வாயை இருக்க மூடியபடி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
 அவளது தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 அவளுடைய அம்மா அருகே போனாள்.
 "ஏம்மா அத்துவிடுறதுன்னே முடிவு பண்ணிட்டியா கடைசிய ஒரு தடவ யோசிச்சு பாரேன்!" என்று கூறினாள்.
 அந்த பெண் எதுவும் பேசவில்லை!
"சரிம்மா! கோவம் மட்டும் படாத! மீதிய அப்பா பாத்துக்குவாரு!"
 இப்போது கூடத்துக்கு வந்த பெரியவர் அங்கிருந்த பெரியோர்களைப் பார்த்து "அவங்க வீட்டிலிருந்து யார்லாம் வாராங்கன்னு தெரியல! அவங்க கொஞ்சம் ஏறுமாறா பேசினாலும் நீங்க பொறுமையா பேசுங்க! பொண்ணு பிள்ள விசயம்! அத்துவிடுறதுனாலும் முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்க பாருங்க!" என்று சொன்னார்.
"சரிப்பா! அன்னைக்கு அவங்க வீட்டுக்கு சமாதானம்  பேசப் போனப்ப என்ன பேச்சு பேசுனாங்க! பரவால்லப்பா! எங்களுக்கு என்ன?! முடிவு உன்னோடது தான்! நாங்க ஒரு ஆதரவுக்காக தான் வந்தோம்! நீ பேசு! நாங்க இடைல எதுவும் பேசலை!" என்று சொன்னார்கள்.
 தூரத்தில் மோட்டார் பைக் வரும் சத்தம் கேட்டது.
 அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண் பரபரத்தாள்!
 எழுந்து வாசலைப் பார்த்தாள்.
 ஆம் அது அவன்தான்!
 அந்த பெண் பின்வாங்கி ஓரமாக நின்றுகொண்டாள்.
 அவன் ஒற்றை ஆளாக வந்திருந்தான்!
நிதானமாக குடித்து இருந்தான்!
 அதனால் அதிகம் தள்ளாடாமல் நடந்தான்!
 சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டே அவர்களையெல்லாம் கடந்து நடுக்கூடத்திற்கு போனான்.
 நட்ட நடு கூடத்தில் நின்று கொண்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தான்.
"சாந்தி! ஏ.. சாந்தி!" 
அந்தப் பெண் மெதுவாக மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.
 அவளைப் பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு குறுநகை தென்பட்டது.
 "வா! நம்ம வீட்டுக்கு போலாம்" என்று சொன்னான்.
 அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
 "என் சந்தனமில்ல! வா வீட்டுக்கு போலாம்! வா! வா! வா!" என்று அவன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.
 அந்தப் பெண் மெதுவாக நடந்து வந்து அவனுடைய கையில் தன்னுடைய கையை வைத்தாள்.
 அவன் திரும்பி புறப்பட எத்தனித்தான்.
 அவள் நகரவில்லை!
 அவன் திரும்பி அவளைப் பார்த்தான்!
அவள் அவளுடைய தந்தையை ஏறிட்டு பார்த்தாள்!
 அவருடைய தந்தையோ சரி போ என்பது போல் தலையை ஆட்டி விட்டு தலையை குனிந்து கொண்டார்.
 அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாசல் வரை கொண்டு போய் நிறுத்தி வண்டியில் ஏறி அதை உதைத்து உறுமவிட்டான்.
 அவள் அதை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள்!
"ஏறுடி!" என்றான்!
 அவள் அவனுடைய தோளில் கைவைத்து ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
எதிரே நான்கு நண்பர்களோடு நின்றுகொண்டிருந்த அவளது தம்பி முகத்தில் ஈயாடவில்லை!
 பைக் சத்தம் தூரமாகச் சென்று மறைந்தது.
 அங்கே இருந்த எல்லோரும் எதிர்பார்த்தது நடக்காதது போல கோபமாக அந்த பெரியவரை பார்த்தார்கள்.
 அந்த பெரியவர் கால்களை லேசாக ஆட்டிக்கொண்டே "சரி! வந்தது வந்துட்டீங்க! எல்லாரும் சாப்பிட்டு போங்க! ஏம்மா எலைய போடு" என்றபடி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று பின்பக்கம் போய்விட்டார்.

அரசியலில் முருகன் சீமான் முதல் பாஜக வரை

அரசியலில் முருகன்
 சீமான் முதல் பாஜக வரை

 2015 இல் சீமான் வீரத் தமிழர் முன்னணி எனும் பாசறையைத் தோற்றுவித்து முப்பாட்டன் முருகன் என்று முருக வழிபாட்டை தமிழ்தேசிய விழாவாக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறார்.

 திருமுருகப் பெருவிழா எனும் பெயரிட்டு நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த விழாக்கள்

2016 திருப்பரங்குன்றம்
2017 திருத்தணி
2018 திருச்செந்தூர்
2019 கோவை 
2020 சுவாமி மலை 
2021 திருப்போரூர்
(இவற்றில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு 2021 தைப் பூசம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது)

2022 லிருந்து தொகுதி வாரியாக விழா நடக்கிறது.

2025 இல் திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்க மாபெரும் பொதுக்கூட்டம்!
 அதன் விளைவாக குடமுழுக்கு தமிழிலும் நடக்கும் என்று அறிவிப்பு! 

 இதெல்லாம் முடிந்த பிறகு இன்று பாஜக நடத்தும் "முருகன் மாநாடு" நடக்கிறது.