பாரதியார் கொண்டிருந்த தமிழினப்பற்று
தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் பாரதியார் கொண்டிருந்த பற்றைப் பரலி சு. நெல்லையப்பர் அவர்களுக்கு அவர் எழுதிய கடிதம் மூலம் அறியலாம்.
பாதுகாக்கப் பட்டுள்ள அந்த பாரதியார் கடிதம் பின்வருமாறு:
புதுச்சேரி
19.07.1915
"தம்பி தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங் களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வாழ்க என்றெழுது.
தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு.
அதன்பெயர் தமிழ் ஜாதி.
அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக் குழந்தை என்றெழுது.
ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.
பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது
தமிழ் - தமிழ் - தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும் தம்பி.
நான் ஏது செய்வேனடா?
தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்த முண்டாகிறது.
தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை.
தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என்மனம் புண்படுகிறது.
தம்பி! உள்ளமே உலகம்!
ஏறு! ஏறு! ஏறு!
மேலே, மேலே, மேலே!
நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.
உனக்குச் சிறகுகள் தோன்றுக.
பறந்து போ.
சி. சுப்பிரமணிய பாரதி
No comments:
Post a Comment