Tuesday 8 August 2017

சக்கரவியூகம்

சக்கரவியூகம்

2012 ல் ஹிந்தியில் சக்ரவியுஹ் என்ற நக்சலைட் பற்றிய ஒரு படம் வந்தது.

சமீபத்தில்தான் அது நினைவுக்கு வந்தது.
விட்மேட் ல் பதிவிறக்கம் செய்து பார்த்தேன்.
பிரகாஷ் ஜ்ஹா என்ற பிராமணர் தயாரித்து இயக்கிய அந்த படம் உண்மையில் நான் எதிர்பார்த்தது போல இல்லை.

பொதுவாக இந்தி படம் எல்லாமே ஒரே கதைதான்.
கதாநாயகன் அல்லது கதாநாயகி வேறொருவருடன் காதலில் இருப்பார்.
அவரை ஓரங்கட்டி தான் இடம் பிடிப்பதுதான் ஒன்லைன்.

எல்லா இந்தி படங்களும் ஏதோ ஹிந்தியா செல்வத்தில் கொழிப்பது போலவும்
அவர்களுக்கு வரும் பணக்கார பிரச்சனைகளை மையமாக வைத்துமே இருக்கும்.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் முழுக்க முழுக்க நக்சலைட்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருந்தது சக்ரவியுஹ்,
ஆதிவாசிகள் தரப்பு நியாயங்களை பாமரருக்கும் புரியும்படி சொல்லி,
கார்ப்பரேட் மீதும்
அது இயக்கும் அரசியல்வாதிகள் மீதும்
அதற்கு அடிமைவேலை செய்யும் காவல்துறை மீதும் கோபம் வருமாறு செய்கிறது.

கம்யூனிசம் என்பதையெல்லாம் தாண்டி எளிமையாகக் கூறவேண்டுமென்றால்
ஆதிவாசிகள் கிராமம் மொத்தமே 50 மண்வீடுகள் வரை கொண்டவை.
கிராமங்கள் காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எந்த அடிப்படை வசதியுமற்று இருக்கின்றன.
அந்த நிலத்தின் கீழே கனிமங்கள் இருக்கின்றன.

அந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காத அரசாங்கம் அவர்களது கிராமத்தை காலி செய்யக் கூறுகிறது.

ஆதிவாசிகள் மறுக்கிறார்கள்.
அரசாங்கம் வன்முறையில் இறங்குகிறது.
தமது நிலத்தை காத்துக்கொள்ள வேறு எந்த வழியும் இல்லாத ஆதிவாசிகள் ஆயுதம் தூக்குகிறார்கள்.

அரசும் ஆயுதம் தாங்கிய துணைராணுவத்தை களத்தில் இறக்குகிறது.

மேற்கண்ட படத்தில் ஆயுதக் காவல்படைக்கு தலைவனாக இருக்கும் சட்டத்தை நம்பும் நேர்மையான அதிகாரி ஒருவன்
தனது நண்பனை உளவாளியாக நக்சலைட்களுக்குள் அனுப்புகிறான்.
அவன் சிறையிலிருந்து தப்பிபோவதுபோல் தப்பித்து நக்சலைட்களிடம் தஞ்சமடைந்து அவர்களோடு சேருகிறான்.

அதன்பிறகு நக்சலைட் நடவடிக்கைகளை அவ்வப்போது துப்பு கொடுக்கிறான்.
இதன் மூலம் முக்கியமான நக்சலைட் தளபதி பிடிபட்டு அவர்களின் ஆயுதக் கொள்வனவும் பணப்பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது.

காலப்போக்கில் உளவாளி நக்சலைட் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக மாறுகிறான்.
தன்னால் ஏற்பட்ட இழப்பை தானே ஓரளவு சரிசெய்து தளபதியை மீட்டுக்கொண்டு வந்து இறுதியாக தான் பலியாகிறான்.

இந்த படத்தில் ஆதிவாசிகள் மீது அரசாங்கம் நடத்தும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் அப்படியே காட்டியுள்ளனர்.
நியாயமான வழியில் போராடும் நக்சலைட்டுகள்,
அவர்களை எதிர்த்து சிறிதும் நியாயமற்ற முறையில் கோழைத்தனமாக குறுக்குவழியில் எந்த தரைமட்டத்துக்கும் இறங்கி அடிக்கும் மனிதத்தன்மை அற்ற அரசாங்க படை
என உண்மையை முகத்தில் அறைகிறது இந்த படம்.

அதன்பிறகும் இந்த படம் ஹிந்தியாவில் ஓடுமா?
படம் தோல்வியைத் தழுவியது.

ரெட் அலர்ட் என்று ஒரு படம் பார்த்தேன்.
ஒரு அப்பாவியை நக்சலைட்கள் பிடித்துக்கொண்டு போய் வலுக்கட்டாயமாக ஆயுததாரி ஆக்குவது போலவும்
அவன் பிறகு அரசிடம் சரணடைந்து அவர்களைக் காட்டிக்கொடுப்பது போலவும் எடுக்கப்பட்ட அந்த படம்
நக்சலைட் தரப்பு நியாயங்களை ஓரளவு சொல்லியிருக்கிறது.
அதுவும் கூட வெற்றிப்படம் என்று கூறமுடியாது.

இதேபோல ஹய்தெர் என்ற ஒரு படம் காஷ்மீர் பற்றி வந்தது.
அதிலும் முடிந்த அளவு காஷ்மீர் மக்களின் நியாயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.
இதை இயக்கியவரும் விஷால் பரத்வாஜ் என்ற பிராமணர்தான்.
அது ஓரளவு வெற்றியடைந்தது.

ஹய்தெர் படம் பார்க்கவிட்டாலும் சக்ரவியூஹ் படம் கட்டாயம் பாருங்கள்.
மொழி புரியாவிட்டாலும் புரியும்.
சப் டைட்டிலுடன் பார்த்தால் நன்கு தெளிவாகப் புரியும்.

No comments:

Post a Comment