Showing posts with label பூலித்தேவர். Show all posts
Showing posts with label பூலித்தேவர். Show all posts

Tuesday, 11 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 4

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி -4
பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்
---------------
(வெறும்) கட்டப்பிரமையா 1736ம் ஆண்டு மாண்டான்.
அவனுக்குப் பிறகு அவன் மகன் 'பொல்லாப் பாண்டிய கட்டப் பொம்மன்' பட்டத்திற்கு வந்தான்.

அதென்ன பொல்லாப் பாண்டிய?!
முதலாம் ஜெகவீரபாண்டியனாக பெயர் மாற்றி வைத்துக் கொண்டிருந்த கட்டப்பிரமையாவிற்குப் பிறகு அவன் வம்சத்தில் பட்டத்திற்கு வந்த அனைவரும் ‘வீரபாண்டிய’ எனும் பின்னொட்டை பல்கலைக் கழகத்தில் படித்து வாங்கிய பட்டத்தைப் போல் வைத்துக் கொண்டனர்.

சமீபகாலம் வரை கூட தெலுங்கர்கள் தமிழக அரசியலில் தங்களுக்குச் சம்மந்தமே இல்லாத தமிழ்ப்பெயரை வைத்துக் கொண்டு குறளி வித்தை காட்டும் வடுகர்களின் உருமாறி பச்சோந்தித் தனம் கட்டப்பிரமையா காலத்திலேயே துவங்கியிருக்கிறது போலும்.

படத்தில் நாம் பார்த்த கட்டப்பொம்மனின் தாத்தாவான இந்த பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன் காலத்தில் மராட்டியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது.
ஒரு புறம் நவாபுகள் வீழ்ச்சியடைய மறுபுறம் மராட்டியர்கள் வெற்றிக் கொடி நாட்டி வந்தனர்.

தர்ம சங்கடம் பொல்லாப் பாண்டியனுக்கு..
தன் பரம்பரைக்கு சின்ன நவாபு பட்டம் வழங்கி சிறப்பித்த ஆற்காடு நவாபுகள் பக்கம் சாய்வதா? இல்லை வெற்றி முரசு கொட்டி வரும் மராட்டியர்கள் பக்கம் சாய்வதா?
தான் சார்ந்த பக்கம் தோற்று விட்டால் அதன் பின்பு தன் பதவி?
சிவலோகப் பதவிதான்!

குழம்பவில்லை. பிராடுத்தனம் மரபணு வழியே கடத்தப்பட்டு அவன் ரத்தத்தில் ஊறி இருந்தது.
எளிமையாக ஒரு முடிவெடுத்தான்.
ஆற்காடு பிரதிநிதி சாதிக்கானுக்கு ஒரு சிறிய படைப்பிரிவை உதவிக்கு அனுப்பினான்.
மறுபுறம், மராட்டிய தளபதி முராரிராவுடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு சாதிக்கானின் படைபலத்தையும் போர்த்திட்டங்களையும் போட்டுக் கொடுத்தான்.
எவன் வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை.
செய்த உதவியைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளலாம். ராசதந்திரம்!

போரில் சாதிக் கான் தோற்றான்.
சாதிக்கானின் அண்ணன் சந்தாசாகிப் திருச்சிராப்பள்ளி கோட்டைக்குள்ளிருந்து போரிட்டுக் கொண்டிருந்தான்.
மராட்டியர்கள் எவ்வளவோ முயன்றும் அவனை வெளியில் இழுக்க முடியவில்லை.
போரில் தோற்ற சாதிக்கானின் தலையை வெட்டி கோட்டைக்குள்ளிருந்த சந்தாசாகிப்பிற்கு அனுப்பி வைத்தான் முராரி ராவ்.
சந்தா சாகிப் எதிர்பார்த்த படியே வெளியில் வந்து போரிட்டு தோல்வியடைந்தான்.
சந்தாசாகிப் ஆண்ட அனைத்து நிலப்பகுதியும் மராட்டியர் வசமானது.

அந்த நிலப்பகுதிகளில் வரிவசூலிக்க மராட்டிய பிரதிநிதியாக திருநெல்வேலிச் சீமைக்கு வந்து சேர்ந்தவன் அப்பாஜிராவ்.
மராட்டியர் ஆட்சி இன்னும் உறுதியாக நிலைபெறாததால் தென்பாண்டி நாட்டுப் பாளையங்கள் கப்பம் கட்ட மறுதளித்தன.
இரண்டொரு தெலுங்குப் பாளையங்கள் கூட வரி கொடுக்க இசையவில்லை.

ஆனால், இதனைப் போன்று கப்பம் வசூலிக்க வருபவர்களுக்கு உதவுவதற்கென்றே ஒரு 'வனங்காமுடிப்' பரம்பரை பாஞ்சாலங்குறிச்சியில் இருந்தது.
அப்பாஜிராவைச் சந்தித்து முராரிராவுக்கு செய்த உதவிகளைக் காரணம்காட்டி அப்பாஜிராவின் அல்லக்கையானான் பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன்.
மற்ற பாளையங்களில் வரி வசூலித்து அதில் ஒரு பகுதி தரகுப் பணத்தை தான் வைத்துக் கொண்டு மீதியை மராட்டியர்களுக்குச் செலுத்தும் ‘கமிஷன் ஏஜென்ட்’ அதிகாரத்தை பொல்லாப் பாண்டியனுக்கு மராட்டியர்கள் அளித்தனர்.

மராட்டியர்களின் சார்பாக கப்பம் வசூலிக்க மேல்படாகை தமிழர் பாளையங்களுக்குள் ஆவலுடன் நுழைந்த பொல்லாப் பாண்டியனின் படைகளுக்கு மூக்கை உடைத்து அனுப்பின தமிழர் பாளையங்கள்.
அவமானமடைந்த பொல்லாப்பாண்டியன் ஒரு பெரும்படையை அனுப்பி வைக்குமாறு திருச்சியிலிருந்த முராரிராவுக்கு, அப்பாஜிராவ் மூலம் கடிதம் எழுதினான்.
ஆனால், இயற்கை வேறு விதமாக இருந்தது.

இந்த நேரத்தில் இரண்டு லட்சம் போர் வீரர்களும்,என்பதனாயிரம் குதிரை வீரர்களுடனும் நிஜாம் உல்முகின் தென்னாட்டின் மீது படையெடுத்தான்.
மராட்டியர்கள் விழிபிதுங்கி நின்றனர்.
இந்த லட்சனத்தில் பொல்லாப் பாண்டியனுக்கு எங்கிருந்து படையனுப்புவது?
சாமியே சைக்கிளில் போகும் போது பூசாரிக்குப் புல்லட்டா?

உல்முகின் படையெடுப்பை தாக்குப்பிடிக்க முடியாத மராட்டியர் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடினர்.
மீண்டும் தென்னகம் ஆர்காடு நவாப் வசமாகியது.
முகமதலி திருச்சிக் கோட்டையில் அமர்ந்தான்.
அன்வர்கான் என்பவனை திருநெல்வேலிச்சீமைக்கு வரி வசூலிக்க அனுப்பி வைத்தான் முகமதலி.
இந்த நேரத்திலும் அன்வர்கனின் முதல் அடிமையாக உருமாறி வரிவசூலிக்க உதவி நின்ற ஆபத்பாந்தவன் அதே பொல்லாப் பாண்டிய கட்டப் பொம்மன்தான்.
வித்தியாசமான பிறவிதான்!

அடுத்த சில ஆண்டுகளில் தென்னாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து பிரஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான நேரடி யுத்தம் வரை வந்து நின்றது.
இரு நாடுகளும் போருக்கு ஆகும் செலவை இங்கேயே வரியாக ஈட்டிக் கொள்ள முடிவெடுத்தன.
பிரஞ்சுக்காரர்களுக்கு வரிவசூலிக்க திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தவன் கனகராய முதலியார்.
அவனை பாஞ்சாலங்குறிச்சிக்கே அழைத்துச் சென்று விருந்தளித்து குளிர்வித்தான் பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன்.

கனகராயமுதலியார் அங்கிருந்தபடியே பிரஞ்சுத்தளபதி டூப்ளேக்கு ஒரு கடிதம் எழுதினான்.
அக்கடிதத்தில் “தென்பாண்டி நாட்டில் பிரஞ்சுப்பேரரசை வளர்த்து பிரஞ்சுக் கொடியைப் பறக்க விடுவதற்கு மிகவும் உதவ பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன் காத்திருக்கிறார்.
முகமதலியையும், ஆங்கிலேயரையும் வென்று திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றும் வரை அந்த உதவிகள் மிகவும் இரகசியமாக இருக்க வேண்டுமென கட்டப்பொம்ம நாயக்கர் கேட்டுக் கொள்கிறார்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

கனகராய முதலியார் எழுதிய அந்தக் கடிதம் இன்றைக்கும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருப்பதாக தமிழ்வாணன் குறிப்பிட்டிருக்கிறார்!

ஆங்கிலேயர் 1751ல்தான் முதன்முதலாக இந்திய மன்னர்களிடம் வரிவசூலிக்கத் துவங்கினர்.
லெப்டினன்ட் இன்னிஸ் என்பவன்தான் முதன் முதலில் தென்பாண்டி நாட்டுக்கு வரி வசூலிக்கச் சென்றவன்.
இன்னிஸ் ஒரு பெரும்படையோடு வந்திருப்பதை அறிந்ததும் பிரஞ்சுக் காரர்களுக்காக வரி வசூலிக்க வந்திருந்த கனகராய முதலியார் இரவோடிரவாக பாண்டிச்சேரிக்கு ஓடிவிட்டான்.

ஏற்கனவே பிரஞ்சுக்காரர்களுக்காய் பாய்விரித்துக் காத்திருந்த பொல்லாப் பாண்டியக் கட்டப் பொம்மனுக்கு இச்செய்தி பேதியைப் புடுங்கியது.

என்னது..? ஓடிவிட்டானா..?! ஐயகோ..! மோசம் போனோமா!?

வேறுவழியில்லை. வழக்கம் போல் மீன்டும் ஒரு அந்தர் பல்டி அடித்தான்.
ஆங்கிலத் தளபதி இன்னிஸ் காலடியில் முட்டி தேயும் வண்ணம் மண்டியிட்டான்.

அந்நேரத்தில் கிழக்குப் பாளையங்கள் எனப்படும் கம்பளத்து பாளையங்கள் எல்லாம் பொல்லாப் பாண்டியன் தலைமையில் அனிவகுத்து நின்றன.
தலைவனே ஆங்கிலேயனுக்கு அன்னக்காவடி ஆகிவிட்ட பிறகு அவர்கள் மட்டும் என்ன செய்வது?
தலைவன் எவ்வழியோ அவனை நம்பிய பாளையங்களும் அவ்வழியே சரணடைந்தன.

அதே நேரத்தில் மேற்குப் பாளையங்கள் எனப்படும் தமிழர் பாளையங்கள் நெற்கட்டுஞ் செவ்வல் பாளையக்காரரான பூழித்தேவர் தலைமையில் அணி வகுத்திருந்தன.
உடனடியாக இன்னிஸ் திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லையெனில் அவன் துரத்தியடிக்கப் படுவான் என அறைகூவல் விடுத்தன.
இந்தியா என்னும் நாடாக இன்று உருப்பெற்றிருக்கும் அன்றைய மாபெரும் நிலப்பரப்பிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து ஆண்மை மிக்க முதல் முழக்கம் நெற்கட்டுஞ் செவ்வலில் இருந்துதான் எழுந்தது.
அதேநேரத்தில் இன்னிஸ் திருச்சிக்கு திரும்பி வருமாறு கேப்டன் சான்டர்சிடம் இருந்து உத்தரவு வந்தது.
இன்னிஸ் தாமாக திருச்சிக்குத் திரும்பினான்.

பின்பு 1755பிப்ரவரியில் திருச்சியிலிருந்து கர்னல் கெரான் என்பவன் தலைமையில் ஒரு பெரும் படை வரிவசூலுக்காக புறப்பட்டது.
மார்ச்சில் திருநெல்வேலி வந்து சேர்ந்தது.
எல்லாப் பாளையங்களுடனும் போரிட்டு நேரத்தை விரயமாக்குவதை விட அவற்றிற்கு தலைமைதாங்கும் பாளையங்களை வீழ்த்தினால் மற்றவை தானாக வீழும் எனக் கணக்கிட்ட கெரான், தன் படையிலிருந்த மகபூஸ்கான் என்பவன் தலைமையில் ஒரு படையை நெற்கட்டுஞ் செவ்வலுக்கு அனுப்பினான்.
மீதிப்படைகளுடன் அவன் பாஞ்சாலங்குறிச்சி நோக்கிப் புறப்பட்டான்.

கர்னல் கெரானின் படைகளை எல்லை நாயக்கன் பட்டி எனும் இடத்தில் தடுத்து நிறுத்தினான் பொல்லாப் பாண்டியன்.
எப்படித் தெரியுமா?
இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தில் வடிவேல் வெள்ளைக்கொடியுடன் வெளிவந்து போரை நிறுத்துவார் அல்லவா?
அதே தொழில்நுட்பம்!

ஆனால் கர்னல் கெரானிடம் வெள்ளைக் கொடியெல்லாம் வேலை செய்யவில்லை.
மரியாதையாக முதலில் உன் கப்பத்தொகை எல்லாவற்றையும் கட்டிவிட்டு பிறகு பேசு என்றான்.
பொல்லாப் பாண்டியன் கெஞ்சினான். கதறிப்பார்த்தான்.
என் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் இந்தப் பருவத்தில் மழையில்லை.
எங்கும் பஞ்சம்.
கையில் பணமில்லை. தயவுசெய்து ஒரு தவனை கொடுங்கள்.
தவனைப்படி கட்டி விடுகிறேன் ஆண்டே!

கெரான் இதற்கெல்லாம் மசியவில்லை.
இறுதியில் வேறு வழியின்றி கப்பத்தொகையில் ஒரு பகுதியை செலுத்தி விட்டு மீதிக்கு தவனை கேட்டு நின்றான்.
அதற்கும் அசையாத கெரான், நீ பாக்கித்தொகையைக் கட்டும் வரை இவர்கள் என்னிடமே இருக்கட்டும் எனக்கூறி பொல்லாப்பாண்டியனின் இரண்டாவது மகன் சின்னப் பொம்முவையும், பொல்லாப் பாண்டியன் தம்பியையும் பிணையாளாகப் பிடித்துக்கொண்டான்.

பெற்ற மகனையும் உடன்பிறந்த தம்பியையும் கப்பத்தொகைக்கு பிணையாக விட்டுச் சென்ற இவர்களைத்தான் வீரப்பரம்பரையாகப் புளகாங்கிதப்பட்டுக் கொள்கின்றனர்.

பொல்லாப் பாண்டியன் வகுத்த வழியைப் பின்பற்றி எட்டயபுர பாளையமும் ஒருபகுதி கப்பத்தைக் கட்டி விட்டு மீதிக்கு பிணையாளை விட்டுச் சென்றன!

இதற்கிடையில் மகபூஸ்கான் தலைமையில் நெற்கட்டுஞ் செவ்வலுக்கு வரி வசூலிக்கச் சென்ற படைகளுக்கு வழியை மறித்து பூழித்தேவர் படைகளால் பூசை கொடுக்கப் பட்டது!
ஆங்கிலேயப் படைகள் தங்கள் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பீரங்கிகள் என எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டு விட்டு தலைதப்பினால் போதும் என ஓட்டம் பிடித்தன.
இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து முதல்குரல் எழுப்பியது மட்டுமல்ல.
முதல் வெற்றியும் பதிவு செய்யப்பட்டது ஒரு தமிழனால்தான்!

தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய துரோகம், அடிக்க வேண்டிய கொள்ளை, அடிக்க வேண்டிய பல்டிகளை எல்லாம் தன் ஆட்சிக்காலத்தில் அடித்து விட்டு கடைசியாக 1760ம் ஆண்டு மாண்டான் பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன்.

Saturday, 8 November 2014

பூலித் தமிழனும் கெட்டி வடுகனும்

பூலித் தமிழனும்
கெட்டி வடுகனும்

கட்டபொம்மன் ஆன கெட்டிபொம்மு நாய்க்கென்:

கெட்டிபொம்மு நாய்க்கெனின் முப்பாட்டன் ஜெகவீர கெட்டிபொம்மு நாய்க்கென் என்ற தெலுங்கன் பெல்லாரி என்ற இடத்திலிருந்து வந்தவன். இவன் குறுக்குவழியில் பாஞ்சாலங்குறிச்சி அரசைக் கைப்பற்றினான்.
வந்தேறிகள் அப்போது தமிழர்களை வரைமுறையில்லாமல் சுரண்டிக்கொண்டிருந்த காலம்.
ஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாக வீரப்போரைத் தொடங்கிய பூலித்தேவன் மற்றும் பெரிய காலாடி, சின்னக்காலாடி, வாண்டாயத்தேவன் கூட்டணிக்கு எதிராக கெட்டிபொம்முவின் தாத்தா (அவர் பெயரும் கெட்டிபொம்மு) ஆங்கிலேயருடன் இணைந்து போர்நடத்தினார்.
பூலித்தேவன் வீரமரணமடைந்து (1767) இருபத்தி மூன்று ஆண்டுகள் கழித்துதான் 1790ல் கட்டபொம்மன் என்றழைக்கப்படும் கெட்டிபொம்மு ஆட்சிக்கு வருகிறான். தாத்தா காலத்திலிருந்து வெள்ளையனுக்கு ஆதரவாக இருந்தவன் அடாவடியாக வரிகொடுக்க மறுக்கிறான்.
கலெக்டர் ஆலன்துரை கெட்டிபொம்மு மீது படையெடுக்கிறான். ஆனால், கெட்டிபொம்முவைத் தோற்கடிக்கமுடியவில்லை. பொம்மு தன் ஆட்சியின் கீழுள்ள மக்களைக் கொடுமைப்படுத்தி கொடுங்கோலாட்சி புரிகிறான்.பக்கத்து பாளையமான எட்டயபுரத்தைப் பலமுறைக் கொள்ளையடிக்கிறான். இதுகுறித்து எட்டையபுர மன்னர் ஆங்கிலேயரிடம் முறையிடுகிறார். அப்போது புதிதாக வந்த மாவட்ட கலெக்டர் ஜாக்சன்  கெட்டிபொம்முவை எச்சரிக்கிறான். வரியோடு வந்து தன்னை நேரில் சந்திக்குமாறு உத்தரவிடுகிறான்.
வரியோடு வந்த கெட்டிபொம்முவுக்கு பாடம் கற்பிக்கும்வகையில் 23நாட்கள் அவனை ஒவ்வொரு இடமாக அலைக்கழித்து இராமநாதபுரம் வரை வரவைக்கிறான். இந்த சந்திப்பின்போது ஜாக்சனுக்கும் கெட்டிபொம்முவுக்கு வாக்குவாதம் வந்து அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கெட்டிபொம்மு தப்பிவிடுகிறான். உடனே பானர்மேன் தலைமையில் ஆங்கிலேயர்கள் கெட்டிபொம்முவை தோற்கடித்து, தப்பியோடிய அவனை புதுக்கோட்டை மன்னன் உதவியுடன் சிறைபிடித்து தூக்கிலிடுகின்றனர்.
இதற்கெல்லாம் கெட்டிபொம்மு மீது எட்டையபுர மன்னர் அளித்த புகார்கள் இன்றும் சான்றாக உள்ளன. எட்டப்பன் கெட்டிபொம்முவைக் காட்டிக்கொடுத்ததாக எந்த சான்றும் இதுவரை இல்லை.
கெட்டிபொம்முவால் மக்களுக்கு நன்மை நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. ஆங்கிலேயருக்கும் நாயக்கர்களுக்கும்  மக்களைச் சுரண்டுவதில் ஏற்பட்ட போட்டியே இது.
ஆனால், இவனை வெள்ளையரை முதன்முதலாக எதிர்த்தவன் என்று திரிக்கின்றனர்.

காத்தப்ப பூலித்தேவனார்:

1755ல் மாபூஸ்கான்(ஆற்காடு நவாப் பரம்பரை) கர்னல் ஹீரான்(ஆங்கிலேயர்) கான்சாகிப் (மருதநாயகம்) ஆகியோர் கூட்டணி அமைத்து பாளையங்களாகச் சிதறிக்கிடந்த தமிழகத்தை கைப்பற்றத் தொடங்கினார்கள். பல பாளையங்கள் அடிபணிந்தன. முதன்முதலாக அந்த பெரிய நவீனமான படையை எதிர்த்து போர்புரிந்தவர் பூலித்தேவனே ஆவார்.
பக்கத்தில் இருந்த பாளையங்களுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலேயர் படையை 1755ல் தோற்கடிக்கிறார். 12மாதங்கள் கழித்து1756ல் மீண்டும் பெரிய படையோடு வந்தவர்களை திருநெல்வேலியில் மீண்டும் தோற்கடிக்கிறார்.
1759ல் மீண்டும் கான்சாகிப் தலைமையில் நாகப்பட்டினத்தில் இருந்து படை, திருச்சியில் இருந்து படை, தூத்துக்குடியில் இருந்து படை, பாளையங்கோட்டையில் இருந்து படை, மதுரையில் இருந்து படை, திருவனந்தபுரத்தில் இருந்து படை என பெரிய படையைத் திரட்டிக்கொண்டுவந்து போரிட்டனர்.
ஆனால், பூலித்தேவரிடம் எதுவும் பலிக்கவில்லை, போரில் பூலித்தேவர் மாபெரும் வெற்றிபெற்றார்.
ஆற்காடு நவாப் மாபூஸ்கான் உட்பட பலர் பூலித்தேவர் வீரத்தைப் பார்த்து வியந்து அவருடன் சேர்ந்துகொள்கின்றனர்.
1760ல் மீண்டும் கான்சாகிப் படையெடுத்துவந்தான். இம்முறையும் நான்காவது முறையாகப் பூலித்தேவனார் அவனைத் தோற்கடித்தார்.
1761ல் மீண்டும் பெரிய படையுடன் கான்சாகிப் ஆங்கிலேயர் ஆதரவுடனும் போரிட்டான். இம்முறை பூலியார் தோற்றுவிட்டார்.
(தோற்கடித்த கான்சாகிப் அதாவது மருதநாயகம் ஒரு தமிழன் என்பதை நினைவில் கொள்க. இவனே வெள்ளையருக்கு பெரும்சவாலாக விளங்கிய ஹைதர் அலியையும் தோற்கடித்தவன், பிற்காலத்தில் ஆங்கிலேயருடன் முரண்பட்டு மதுரையைத் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். ஆங்கிலேயர் சூழ்ச்சிசெய்து தொழுகையின்போது இவனைக் கைது செய்து பின் தூக்கிலிட்டனர்)

பூலியார் நற்செயல்கள்:

சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியுள்ளார், தெப்பக்குளமும் வெட்டியுள்ளார்.
கரிவலம் வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன்மண்டபம் கட்டியுள்ளார், ஆலயத்துக்குத் திருத்தேரும் வெள்ளி ஆசனங்களும் செய்தளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்க நகைகள், வைரஅட்டிகைகள் செய்துதந்துள்ளார்.
தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்தவந்தார். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால்தலையில் பூலுடையார் கோவில் மண்டபம் கட்டியவரும் அவரே.
நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டியவர் பூலித்தேவரே.

பூலித்தேவனார் கெட்டிபொம்மு ஒப்பீடு:

புலித்தேவன் படையில் காலாடிப்பள்ளர்கள் இருந்தது போல கெட்டிபொம்முவின் (கொள்ளையடிக்கும்)படையில குடும்பப்பள்ளர்கள் இருந்ததையும் ஒப்பிட்டு இருவரும் ஒரே சிந்தனையைக் கொண்டவர்களாகப் பொய்யுரைக்கிறார்கள்.
'ஆப்பநாட்டு கொண்டயங்கோட்டை மறவனான' புலித்தேவன் தன் நண்பன் காலாடிக்கு நடுகல் நட்டு பெருமைப்படுத்தினான். புலித்தேவன் சிந்தில் காலாடி, ஒண்டிவீரன் உட்பட அனைவரைப் பற்றிய பாடல்களும் உண்டு.
கெட்டிபொம்மு குடும்பப் பள்ளருக்கு நடுகல் நட்டானா? சிந்து பாட வைத்தானா? இல்லை புலித்தேவன் காலாடிப் பள்ளன் வீரமரணம் அடைந்தபோது தன் மடியில் கிடத்தி ஊர்கூட்டி ஒப்பாரி வைத்தது போல் குடும்பனை மடியில் கிடத்தி ஒப்பாரி வைத்தானா?
பூலித்தேவனார் வீரம்கண்டு வியந்த மிடேமியா என்ற இசுலாமியர் ஆற்காட்டு நவாபிடமிருந்து வெளியேறி பூலியாருடன் சேர்ந்தவர்களில் ஒருவர். அவர் மார்பில் குண்டுவாங்கி பூலியார் மடியில் உயிர்விட்டவர். அவருக்கும்கூட நடுகல் நட்டுள்ளார் பூலித்தேவனார்.
வாசுதேவநல்லூரில்
அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. இங்கேதான்  மாபூஸ்கானும் அவரது இசுலாமிய வீரர்களும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பூலியார் அவர்களுக்கு பள்ளிவாசலும் கட்டிக்கொடுத்தார். அவர்களுக்கு முன்பே பூலியார் படையில் பீர்முகமது சாயபு என்ற இசுலாமியத் தளபதி இருந்துள்ளார்.
கெட்டிபொம்மு எப்படி இவருக்கு ஈடாவான்?

இன்று:
வந்தேறிகள் ஆட்சியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படமானது தெலுங்கரான பந்துலு என்பவரால் பணம்போட்டு இயக்கி வெளியிடப்பட்டு தமிழக மக்களை முட்டாளாக்கிவைத்துள்ளது.
பூலியார் பற்றிய ஒரு குறும்படம் கூட இல்லை.
கெட்டிபொம்முவின் இடிந்த கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு உள்ளே தொல்பொருள்(?!)ஆய்வுமையமும் உள்ளது.
இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கிவருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன.
அவன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் நினைவிடமும், நினைவுத்தூணும், கல்வெட்டும், உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளன.
பூலித்தேவனுக்கு நெற்கட்டும்செவலில் ஒரேயொரு நினைவு மண்டபமும் அவரது பெயரில் திருமண(?!)மண்டபமும் உள்ளது. அதன்வாசலில் ஒரேயொரு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கெட்டபொம்முபயன்படுத்திய ஆயுதங்கள், அவன் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு 'அரசு அருங்காட்சியகத்தில்' பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவனுக்கு அஞ்சல் தலைகூட வெளிவந்துள்ளது.
பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அவரது நினைவுமண்படத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
அவை எந்த அரசுத்துறையின்கீழும் இல்லை. ஆய்வுகள் எதுவும் நடைபெறவும் இல்லை.

வந்தேறிகள் வரலாற்றையே வளைத்துவிட்டனர். செந்தில், கருணாஸ், அருண்பாண்டியன், கார்த்திக் போன்ற நடிகர்களை அழைத்துவந்து ஒரு சாதிக்கூட்டம் பூலியாருக்கு விழா எடுக்கிறது.
புலியாரும் பூலியாரும் வரலாற்றின் சில பக்கங்களை பிச்சைகேட்டு நிற்கும் நிலை இனியும் தொடருமா?

https://m.facebook.com/photo.php?fbid=511482995622025&id=100002809860739