Showing posts with label சப்பான். Show all posts
Showing posts with label சப்பான். Show all posts

Saturday, 11 March 2017

மண்ணைக் காக்க ஜப்பானைப் பகைத்துக்கொண்ட புலிகள்

இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராகப் புலிகள் உள்ளூர் வன்னி மரம் கடத்தல் பொருளாதார ரௌடிகளுக்கு மட்டுமன்றி பொருளாதார வல்லரசு என்றும் பார்க்காமல் ஜப்பானுக்கு சுளுக்கெடுத்த நிகழ்வும் உண்டு.

இது குறித்து புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர் தராகி சிவராம் எழுதிய கட்டுரை,
6–12 ஜூன் 2003 ஈழநாடு பத்திரிக்கை.

ஜப்பானுக்கு ஏன் இந்த அக்கறை?

புலிகள் டோக்கியோ போவார்களா இல்லையா என்பதே இலங்கையின் அண்மைக்கால அரசியலின் முக்கிய கேள்வியாக இருந்தது.
‘அவர்கள் ஜப்பானின் தலைநகரத்திற்குச் செல்வதிலேயே தமிழரின் எதிர்காலம் தங்கியுள்ளது' என்ற வகையில் செய்திகளும் ஆய்வுகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன.
புலிகள் டோக்கியோவிற்கு எப்படியாவது போய்விட வேண்டுமென்று உள்ளார்ந்த எதிர்பார்ப்போடு பலர் ஆரூடம் கூறவும் தலைப்பட்டனர்.

டோக்கியோ.. ஜப்பானுக்கு எங்கள் சிக்கலைத் தீர்த்து வைப்பதில் ஏன் இவ்வளவு அக்கறை..?
1983 இல் இருந்து இலங்கையில் தமிழர் சிக்கல் ஒரு பெரும் போராக உருமாறி நடைபெற்று வருகின்றது.
இதிலோ 1990 இலும் 1995 இலும் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுகளிலோ எந்த ஒரு வெளிப்படையான ஈடுபாடுமின்றி வாழாவிருந்த ஜப்பான் இன்று எமது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் வலுவுள்ள ஒரு நாடாக கிளம்ப முனைவது ஏன்?

கொக்குத் தொடுவாய்க்கும் புல்மோட்டைக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியிலேயே உலகில் அதிகூடிய டைட்டேனியம் செறிவுள்ள தாதுப் பொருள்களான இல்மனைட், றூட்டைல் என்பன காணப்படுகின்றன.
இன்றைய உலகின் இயக்கத்துக்கு இன்றியமையாத ஒரு உலோகம் டைட்டேனியமாகும்.
உலகில் உற்பத்தியாக்கப்படும் அனைத்து வானூர்திகள், விண்வெளிக் கலங்கள் ,செயற்கை விண்கோள்கள் போன்றவற்றை டைட்டேனியம் உலோகமின்றி தயாரிக்க முடியாது.
இது உருக்கைவிட நான்கு மடங்கு உறுதியுள்ளதாகவும் ஆனால் உருக்கினுடைய நிறையைவிட மிகக் குறைந்த நிறையுள்ளதாகவும் காணப்படுகின்றது.
இதனாலேயே இது மேற்படி உற்பத்திகளுக்கும் அடிப்படையாக உள்ளது.
இதுமட்டுமின்றி டைட்டேனியம் ஈரொட்சைட் செயற்கை வண்ணங்களின் தயாரிப்புக்கு மிக இன்றியமையாத இரசாயன மூலமாக உள்ளது.
இதன் காரணமாகவே அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் டைட்டேனியம் தாதுக்களான இல்மனைட் மற்றும் றூட்டைல் ஆகியவற்றை கேந்திர மூலப் பொருட்களாக வகைப்படுத்துகின்றது.

இல்மனைட்,றூட்டைல் ஆகிய தாதுக்களில் இருந்து டைட்டேனியம் உலோகத்தையும் டைட்டேனியம் ஈரொட்சையும் உற்பத்தியாக்குகின்ற நவீன விஞ்ஞானமுறை அமெரிக்காவின் இரு நிறுவனங்களிடம் மட்டுமே தனியுரிமையாக உள்ளது.
இத்தனியுரிமை அமெரிக்காவுக்கு உலகப் பொருளாதாரத்தின் மீது ஒரு பிடியைக் கொடுக்கிறது.
இந்தத் தொழில் நுட்பத்தின் தனி உரிமையை ஜப்பானோடு அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது.
இதன் காரணமாகவே ஜப்பான் உலகில் டைட்டேனியம் ஈரொட்சைட் உற்பத்தியில் முன்னிற்கின்றது.

புல்மோட்டையில் உற்பத்தியாகும் இல்மனைட் மற்றும் றூட்டைல் தாதுக்களை ஜப்பானே கொள்வனவு செய்து வருகின்றது.
இக்கொள்வனவுக்கு ஒரு தமிழ் வர்த்தக நிறுவனமே இடைத்தரகராகச் செயற்பட்டுவந்தது.
இந்நிறுவனம் நீண்டகாலமாக சர்வதேச கேள்வி நடைமுறைகள் இல்லாது டைட்டேனியம் தாதுக்களை ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி குறைந்தபட்சம் ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களையாவது சம்பாதித்திருக்க வேண்டும்.

எம் மண் இவ்வாறு பகல் கொள்ளை அடிக்கப்பட்டதை தமிழ் அரசியலாளர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
புல்மோட்டையில் நடைபெற்றுவந்த இம்மண் கொள்ளையை ஆராய்ந்தறிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் 1997 இல் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.

ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு இல்மனைட் மண் ஏற்றப்பட்டிருந்த கப்பல் ஒன்று புல்மோட்டைக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜப்பானுடைய கவனம் விடுதலைப் புலிகளை நோக்கியும் வடக்குக் கிழக்குப் போர் நிலமைகள் மீதும் குறிப்பாகத் திரும்பலாயிற்று.

நன்றி: நடேசபிள்ளை சிவேந்திரன்

Saturday, 24 December 2016

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

காலம்: 1942
இடம்: நோங் பிளாடூக்கி, சயாம்.

"அடிமைகளே! இங்கே சயாமில் தொழிலாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலாய் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையாக உழைக்கும் திறனைப் பற்றி கேள்விப்பட்டே உங்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம்.
நீங்கள் போரில் எங்களுடன் தோற்ற வெள்ளைக்கார அடிமைகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.
உங்களுக்கு சம்பளம் என்பது சாப்பாடு மட்டுமே.
உயிரோடு இருக்க நினைப்பவர்கள் ஒழுங்காக உழைக்கவேண்டும்.
தினமும் மூவாயிரம் டன் தோண்டவேண்டும் என்பது இலக்கு.
ஜப்பான் முழு ஆசியாவையும் ஆளும் காலம் வந்துவிட்டது.
ஆக எங்களுக்கு அடங்கியிருப்பதே உங்களுக்கு நல்லது"

"அதிகாரி சொன்னதைப் புரிந்துகொண்டீர்களா?
நீங்கள் வழித்தடத்திலுள்ள மரங்களை வெட்டுவது, மேட்டைப் பள்ளமாக்குவது, பள்ளத்தை மேடாக்குவது, பாறைகளை உடைப்பது, தண்டவாளத்தைப் பொருத்துவது, கட்டைகளை அடிப்பது, ஜல்லி உடைப்பது, அதைக் கொட்டுவது என அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும்.
சூரியன் உதிக்கும்போது நீங்கள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் சொல்லும் வரை வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும்.
நண்பகலில் அரைமணிநேரம் உணவு இடைவேளை.
இடையில் எங்கும் போகக்கூடாது.
பேசக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்"

வேலை தொடங்கியது.
அந்த நாள் முழுவதும் வேலை.
உணவு இடைவேளை வந்தது.
உட்காரக்கூட அனுமதியில்லை.
கையிலே உணவைத் தந்தனர்.
பரங்கிக்காய் சூப்பும் சுண்ணாம்பு அரிசியும் புண்ணாக்கும் புழுக்களும் விரவிக்கிடந்தன.

வாயில் வைத்ததும் வாந்தி எடுத்தனர்.
முதுகில் சவுக்கால் அடி விழுந்தது.
கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினர்.
மீண்டும் வாந்தி எடுத்தோரை சோப்பு நீரை குடிக்கச்செய்து மேலும் வாந்தியெடுக்க வைத்தனர்.

சிறுநீர் கழிக்குமிடத்தருகே தண்ணீர் குடிக்கும் இடத்தருகே ஒரு ஜப்பானியன் உட்கார்ந்திருப்பான்.

சிறுநீர் கழிக்கவோ தண்ணீர் குடிக்கவோ சென்றவர்கள் அடிவாங்காமல் அதைச் செய்யமுடியாது.
தண்ணீரும் அசுத்தமானதாகவே இருந்தது.
அதனால் நோய்வந்து இறந்தோர் பலர்.

சிறிய தவறு செய்தாலும் கொடூர தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
கட்டிவைத்து அடிப்பார்கள்.
பிறகு முசிறு எறும்புகளை உடலில் விடுவார்கள்.
கால் சோர்ந்து உட்கார்ந்தால் வாயில் பெட்ரோல் ஊற்றினார்கள்.
ஒரு நொடி அசையாமல் இருந்தாலும் துப்பாக்கிக் கட்டையால் இடித்தனர்.
எதிர்த்து ஒரு பார்வை பார்த்தாலும் பெரிய டின்களில் மண் நிரப்பி தோளில் போட்டவாறு வேலை செய்யச்சொன்னார்கள்.
மண் சுமந்தபடி நிழலில் ஒதுங்கி நடந்தோரை உச்சிவெயிலில் நிற்க வைத்தனர்.
இரண்டு கையாலும் வேலை செய்யாதோரின் ஒரு கையை வெட்டினர்.
தண்டவாளப் பலகைகள் செய்ய தேக்கு மரங்களை வெட்டி வெறும் தோளில் தூக்கிச்செல்ல கட்டாயப்படுத்தினர்.
பலர் பூச்சிக் கடியிலும் அட்டைக்கடியிலும் உடல் ரணமாகி சாய்ந்தனர்

அந்த நாள் பொழுதுசாய்ந்தும் வேலை நடந்தது.
இரவு முழுவதும் வேலை நடந்தது.
ஒரே நாளில் 2 கி.மீ இரயில் பாதை உருவானது.
மறுநாள் விடிந்தும் வேலை நடந்தது.
பலர் மயங்கி விழுந்தனர்.
வேலையை நிறுத்த வேண்டியோர் எலும்பு நொறுக்க அடிவாங்கினர்.

அன்று மதியம் உணவு இடைவேளை வந்தது.
உணவை முழுதாக உண்ணும் முன்பே மீண்டும் வேலைக்குத் துரத்தினர்.

அன்று இரவு வேலை நிறுத்தப்பட்டபோது பலர் ஆங்காங்கே கிடந்தனர்.
அதில் பலர் இறந்திருந்தனர்.
வெட்டவெளியில்தான் படுக்கவேண்டும். எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.

அன்றிரவு அங்கே வந்த ஜப்பானியர் இளம்பெண்களை இழுத்துக்கொண்டு சென்றனர்.
பெண்களின் கதறல் இரவு முழுவதும் கேட்டது.
காலையில் அவர்கள் நிர்வாணமாக பிணமாக கிடந்தனர்.
ஓடிப்போக முயற்சி செய்தோரைப் பிடித்து தூணில் கட்டிவைத்திருந்தனர்.
அவர்கள் சாகும் வரை அப்படியே விடப்பட்டனர்.

இரயில் பாதை நீள நீள அருகருகே ஒரு குழியும் தோண்டப்பட்டு  பிணங்கள் போடப்பட்டு கொண்டே இருந்தன.
அக்குழிகள் அங்கே வேலை முடிந்த பிறகே மூடப்பட்டன.

ஆனால் மலேயாவிலிருந்து தமிழர்கள் இறக்குமதி ஆகிக்கொண்டே இருந்தனர்.
போகப்போக பெண்களும் இளம்வயதினரும் கொண்டுவரப் பட்டனர்.

பலருக்கு காலரா மலேரியா போன்ற நோய்கள் வந்தன.
நோய் வந்தவர்களை வேலைசெய்யும் நேரம்போக மீதிநேரம் தனியாக ஒதுக்கி வைத்தனர்.
அங்கே யாரும் போகவோ பேசவோ முடியாது.
நோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
பல முறை சீக்காளிகளை மொத்தமாக எரித்துவிடுவர்.

கண்முன்னே தன் சொந்தங்கள் துடிதுடித்து இறந்துபோனதை பலர் தூரத்தில் இருந்து பார்த்தனர்.
பலருக்கு மனநலம் பாதித்து பைத்தியமாகினர்.
ஆனால் ஜப்பானியர் அனைவரையும் வேலை வாங்கினர்.

வேலை செய்தபோது பிள்ளை பெற்ற பெண்ணை உடனடியாக வேலை செய்யவைத்ததும் நடந்தது.

மெசாலி என்ற இடத்தில் தொழிலாளர் முகாமில் உள்ளே நுழைந்த ஓனோ டெரா என்ற சப்பானிய அதிகாரி பத்தொன்பது வயது தமிழ் பெண்ணை தொழிலாளர்கள் முன்பே வல்லுறவு செய்து சில தொழிலாளர்களையும் அவளை வன்புணரச் செய்தார்.
அன்று இரவு மனம் சிதைந்த அந்த பெண் தானே மாண்டுபோனார்.

ஆம்புலன்ஸ் பிரிவின் தலைவர் மேஜர் குடோ என்பவர் தொழிலாளர்களை மிக கொடூரமாக கொடுமைப்படுத்தியுள்ளார்.
பல தமிழ்ப்பெண்களை சீரழித்தார்.
பெண்களை ஜப்பானியர் முன் நிர்வாண நடனம் ஆடச்செய்தார்.
பிறகு அப்பெண்கள் கூட்டாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு எப்போதாவது சிறிது ஓய்வும் கருவாடோடு வாகரிசிக் கஞ்சியும் கிடைத்துள்ளது.

தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி 5 ஆண்டுகளில் நடக்கவேண்டிய வேலை வெறும் ஒன்றரை ஆண்டில் முடிக்கப்பட்டது.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர்.

இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள்.

அங்கே மரணமடைந்த போர்க் கைதிகளுக்கு அவரவர் நாட்டைச் சேர்ந்தோர் அழுத்தம் கொடுத்து நினைவிடம் எழுப்பியுள்ளனர்.
ஆனால் அங்கே இறந்த தமிழர்களுக்கு என்று நினைவிடம் இல்லை.
எத்தனை பேர் இறந்தனர்.
அவர்களின் அடையாளம் என்ன? எதுவுமே தெரியவில்லை.

கொடுமை இதோடு முடியவில்லை.
1945ல் ஜப்பானை விரட்டிவிட்டு மீண்டும் ஆங்கிலேய ஆட்சி நடந்தது.
அப்போதும் தொழிலாளர்களை நசுக்குவது தொடர்ந்தது.

1949ல் மலாயா எஸ்.ஏ.கணபதி, வீரசேனன் ஆகியோர் தூக்கில் போடப்பட்டு கொல்லப்பட்டனர்.

1967ல் இந்த படுபாதக செயலுக்காக ஜப்பான் மலேசியாவிடம் இரண்டரை கோடி வெள்ளிகள் இழப்பீடு கொடுத்ததாக அறிவித்தது.

அந்த இழப்பீடை தங்களுக்குத் தர சீனரும் மலாயரும் சங்கம் அமைத்து போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழர்கள் அடைந்த துன்பத்திற்கு முன் அவர்கள் அடைந்த துன்பம் ஒன்றுமேயில்லை.
 
ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததால் அந்த நட்ட ஈடும் கிடைப்பதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

மலேசியாவில் 1940 களில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர் போராட்டம் நடத்திய தமிழர் மலாயா கணபதிக்கு அன்று இருந்த தமிழ்ச்சங்கமான 'மலாயா மத்திய இந்தியர் சங்கம்' எந்த உதவியும் செய்யவில்லை.

காரணம்  அதில் வந்தேறிகளே பொறுப்புகளில் இருந்தனர்.
அன்று இருந்த தொழிற்சங்கமான 'தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்' எந்த உதவியும் செய்யவில்லை.
காரணம் அன்று அதன் தலைவர் ஆங்கில அடிருடி மலையாளி பி.பி.நாராயணன்.
இந்த மலையாளி 50 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
இவருக்கு பிறகு பதவிக்கு வந்த முகுந்தன் நாயர் என்ற மலையாளி இன்றும் அதிகாரத்தில் உள்ளார்.

மலேசியத் தமிழ்ச் சங்கத்தை அன்று நடத்தி வந்தோரும் தெலுங்கு வந்தேறிகளே.
1940களிலும் 1950களிலும் ஈ.வே.ராவையும் காமராசரையும் மலேசியா அழைத்து தமிழ் மாநாடு நடத்தியது கோவிந்தராஜூலு நாயுடு என்ற தெலுங்கரே.

மலேசியாவின் தமிழர்களுக்கான கட்சியாக இன்று விளங்கும் 'மலேசிய இந்திய காங்கிரஸை' 1946ல் தொடங்கியவர் ஒரு தமிழர்.
அதன்பிறகு  50களில் தலைமையில் இருந்தவர் கே.எல்.தேவாசர் என்ற வடயிந்தியர்.
அதன்பிறகு 1955ல் அது தமிழர்கள் கைக்கு வந்தது.
 
அன்று இன்றும் மலேசிய இந்தியரில் 90% தமிழர்கள்.
இன்றும் 80% மேல் தமிழர்கள்.

தமிழர் கட்சியின் தலைமை ஏற்றபிறகு தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் இந்தியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வேற்றினத்தவர் ஊடுருவ வழிசெய்யப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு
மலேசிய அரசின் இசுலாமிய ஆட்சிக்கெதிராக இந்து என்ற அடையாளத்தை ஏற்காமல் இன அடையாளத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு
தம்மோடு விரவி இருக்கும் தமிழ்பேசும் வேற்றினத்தவரை ஒதுக்கிவிட்டு
தமிழராக ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் தற்போதைய நிலையை விட சிறப்பான ஆட்சியை நடத்தவேண்டும்.

Friday, 23 December 2016

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 1/2)

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 1/2)

காலம்: 1800 களின் நடுப்பகுதி
இடம்: கெடா, மலேயா.

இரண்டு ஆங்கிலேயர்கள் பேசிக்கொண்டனர்.

"கரும்பை நிறுத்திவிட்டு தேயிலையையும் காபியையும் விளைவிக்க உத்தரவு போட்டாலும் போட்டார்கள்.
இங்கே விளையவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
மலாய்காரன் எவனுக்கும் உழைக்கும் உடலோ புரிந்துகொள்ளும் மூளையோ இல்லை.
இந்த அழகில் ரப்பருக்கான தேவை பெருகிவருவதால் இங்கே அதனை விளைவிக்க திட்டம் போடப்பட்டுள்ளது"

"சீனர்களைப் பயன்படுத்தலாமே"

"சீனர்கள் மூளையுள்ளவர்கள்தான். ஆனால் அதிகம் மூளையுள்ளவர்கள்.
துணிச்சல்காரர்கள் அதே நேரத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
டச்சுக்காரர்கள் வரும் முன்பே இங்கு குடியேறி சுரங்கத்தொழிலில் இறங்கி முன்னேறிய நிலையில் உள்ளனர்"

"மண்ணின் மைந்தர்களான மலாய்களை விடவா முன்னேறியவர்கள்?"

"ஆம். என்னது மலாய் இம்மண்ணின் மைந்தனா?
நாசமா போச்சு.
அவர்கள் வந்தேறிகள்.
இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஓரங் அஸ்லி இனத்தவர்.
அவர்களை காட்டுக்கு விரட்டிவிட்டு நாட்டையே கைப்பற்றிவிட்டனர் மலாய்கள்.
பர்மா-தாய்லாந்து கலப்பினத்தோடு இந்தோனியாவின் ஆர்ச்சிபெலாகோ இனமும் கலந்து உருவான கலப்பினத்தவரே மலாய் இனத்தோர்.
இங்கே அராபியரும் சோழர்களும் கூட ஆட்சி செய்துள்ளனர்.
மலாய்கள் எத்தனை இனம் கலந்து உருவாகினர் என்று கூறுவது மிகக் கடினம்"

"சிலோனில் தமிழர்களை கண்டி மலைப்பகுதிகளில் குடியேற்றி வேலைவாங்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளதே!
அதைப் போல இங்கே செய்யமுடியாதா?"

"ஆம், நானும் அதைத்தான் யோசிக்கிறேன். மெட்ராஸ் மாகாணத்தில் பஞ்சம் நிலவுகிறது. இங்கே அழைத்துவருவது கடினமில்லை.
இருந்தாலும் இந்திய வைசிராய்க்கு அங்கே விளையும் உணவை மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்யச்சொல்கிறேன்.
மக்கள் பட்டினி கிடக்கட்டும்.
உணவை நமக்காகப் போர்செய்யும் போர்வீரர்களுக்காக ஆப்கானிஸ்தானுக்கோ பர்மாவுக்கோ அனுப்பச் சொல்கிறேன்"
_____________________
காலம்: 1800களின் இறுதி
இடம்: தமிழகம்

ஆங்கிலேய அரசாங்க அதிகாரி ஊர் மக்களை கூட்டியிருந்தார்.

"மக்களே! உங்களுக்கு என்ன குறை என்று கேட்டு தீர்த்துவைக்க அரசு என்னை அனுப்பியுள்ளது"

"இன்னும் என்னையா குறை வரும்? ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்தே பல ஆண்டு ஆகிவிட்டது.
இரவில் கேழ்வரகு மாவில் கூழ்காய்ச்சி ஒரு கை வழித்து சாப்பிட்டு மீதியை உருட்டி தண்ணீரில் போட்டு காலையில் அதை கரைத்து கால்வயிறு குடிக்கிறோம்.
நாள்முழுவதும் பட்டினி கிடக்கிறோம்
விளைச்சலை கொண்டுபோகும் அரசாங்கம் எங்களுக்கு அதில் பாதியாவது தருவதில்லை"

"நாட்டில் பஞ்சம் விளைச்சலை அரசாங்கம் பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டுள்ளது.
உங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மலேயா போய் கரும்பு தோட்டங்களில் வேலை.
பயணச்செலவு அனைத்தும் அரசு ஏற்கும். சம்பளம் 12 காசுதான். ஆனால் போகப்போகக் கூடும்.
மீதியை அரசு நியமித்துள்ள ஒப்பந்த கண்கானிகள் உங்களுக்கு விபரமாகக் கூறுவார்"
_____________________
காலம்: 1911
இடம்: கிள்ளான் நகரம், சிலாங்கூர், மலாயா.

பெரிய ஊர்வலம் சென்றதைப் பார்த்து வீதியில் கடைக்காரர்கள் பேசிக்கொண்டனர்.

"இந்தியாவிலிருந்து வந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களை விட மிகவும் கொடுமைப்படுத்தப் படுகின்றனராம்.
அதனால் இன்று வேலையை நிறுத்திவிட்டு ஊர்வலம் செல்கிறார்கள்"

"ஏ அப்பா! என்ன ஆக்ரோசமான கோசங்கள். நான்கு ஆண்டுகள் முன்பு ஒப்பந்தக்கூலி முறையை போராட்டம் செய்து ரத்து செய்யவைத்தார்களே!
இந்த முறையும் அரசாங்கம் பணிந்துவிடும் போலிருக்கிறதே!"

"ஆங்கிலேயனாவது பணிவதாவது?!
கங்காணிகள் அழைத்துவரும் செலவை செய்தார்கள்.
இங்கே வந்ததும் கிடைக்கும் நாள்கூலி சம்பளம் வயிற்றுக்கே போய்விடும்.
50 காசில் அவனால் எப்படி மிச்சம்பிடிக்க முடியும்?
ஊர்திரும்ப பணம் இருக்காது.
அதைத்தான் போராடி பெற்றுள்ளனர்.
மற்றபடி எதுவும் மாறவில்லை"

" இங்கே அடிக்கடி வருவானே மதுரா, அவன் கங்காணிதான். ஒரு ஆளை கப்பலில் ஏற்றிவிட்டால் இவ்வளவு என பணம் கொடுப்பார்கள்.
முதலில் வரும்போது பரதேசி மாதிரி இருந்தான்.
இப்போது அவன் கழுத்தில் நான்கைந்து தடிச்சங்கிலிகள் மினுங்குகின்றன"

"ஏன்தான் இவர்களை இறக்குமதி செய்துகொண்டே போகிறார்களோ?!

வந்த அன்றே கொசுக்கடியில் மலேரியா வந்து பாதிபேர் செத்துவிடுகிறான்"
________________________

காலம்: 1930கள்
இடம்: மலேயா தோட்டம்

காலை 5:30 மணிக்கே கள்ளுக்கடை வாசலில் காத்திருந்த இரண்டு தமிழர்கள் பேசிக்கொண்டனர்.

"என்னப்பா? புதுசா நீ?"

"இல்லண்ணே ஏற்கனவே வேறொரு தோட்டத்துல 10வருசம் வேல செஞ்சேன். அஞ்சு வருசம் முன்னாடி திருப்பி அனுப்புனாங்க.
இப்ப மறுபடி வந்திருக்கேன்"

"ஆமா உலக சந்தை விழுந்துட்டுனு பாதிப்பேரை திருப்பி அனுப்பினாங்க. ஆனா உண்மையான காரணம் இங்கே நடந்த போராட்டம்தான்.
அதான் புது ஆட்களை எறக்கிருக்கான்"

"ஆமாண்ணே வந்து எறங்குனதும் ஒரே ஊர் ஒரே குடும்பத்து ஆட்களை தனித் தனியா பிரிச்சுதான் நம்பர் போட்டான்.
என் தங்கச்சி பக்கத்து தோட்டத்துல வேலைல சேந்திருக்கு"

"தோள்பட்டையும் உள்ளங்கையும் இப்பவும் காய்ச்சு போய் இருக்கேப்பா?! திரும்பி வர எப்டி மனசு வந்தது?"

"நான் நாடகத்துல ராஜபார்ட். நாடகம் நலிஞ்சுபோச்சு. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிவைக்க இங்க வந்தேன்.
அது நடக்கல.
பெத்தவங்க பசில செத்துட்டாங்க.
மறுபடி நடிக்க போனப்ப நோஞ்சிபோன கிழவன ராஜபார்ட்டா போடமுடியாது சொல்லிட்டாங்க.
தங்கச்சிக்கு வேற யாருமில்ல.
வேற வழி தெரியாம இங்கயே வந்துட்டோம்"

"அடடா! பொம்பளைங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்களா?!
மூணு ஆம்பளைங்க வந்தா ரெண்டு பொம்பளைங்க வரணும்னு சட்டம் போட்டதா சொன்னாங்க.
நடு காட்டுல பொம்பளைஙகளுக்கு பாதுகாப்பே இருக்காதப்பா?!
கவலைப்படாத! இங்க ரொம்பநாளா வட்டித்தொழில் பாக்குற செட்டியாருங்க உண்டு.
நான் ஒன்ன கூட்டிட்டு போறேன்.
கடன் வாங்கி ஓ தங்கச்சிக்கு கல்யாணத்த பண்ணு"

"ஆமாண்ணே எப்படியாவது இங்கயிருந்து போயிரணும்.
6 மணிக்கு வேலைக்கு போகணும். இருட்டின பெறகும் வேலை பார்த்துட்டு வீட்டுக்கு போய் தூங்கவே நடுராத்திரி ஆயிடுது.
குறுக்கு ஒடிய வேலை இருக்குது.
வெளிச்சமில்ல. பாதை இல்ல.
பத்து பத்து வீடா நடுக்காட்டுல இருக்குற குடியிருப்புல வாழணும்.
கரண்ட் இல்ல. கொசுக்கடி. பூச்சிக்கடி. ஒரே ஒரு கழிப்பறைதான்.
முன்னயாவது பால்மரம் சீவிட்டு இருந்தேன்.
இரண்டு வாளிய காண்டா கம்புல கோர்த்து தோள்ல தூக்கிட்டு மூணுமைல் நடக்கறது மட்டும்தான் கஷ்டம்.
இப்ப புதுசுங்கறதால வெளிக்காட்டு வேலைல போட்டுட்டாங்க.
செடி கொடி வெட்டுறது சுத்தப்படுத்துறது மருந்து அடிக்கிறதுன்னு. மூணு ஏக்கர் நான் வேலை செய்யணும்"

"அடடா! குனிஞ்ச முதுகு நிமிரமுடியாதே! வேலை வாங்குற கங்காணியாவது அனுசரனயா நடந்துக்கிறானா?"

"எங்கண்ணே! அந்த சீனாக்கார கங்காணி நம்மள மனுசனா கூட மதிக்கறதில்ல. அவனுஙகளுக்கு நம்ம கிட்ட வேலை வாங்கிற விட நம்மள கொடுமபடுத்துறதுதான் முதல் குறி. போனதடவ வேல செஞ்ச கங்காணி நம்ம ஊரான்.
அவன் இவன விட மோசம். அவனுகள அப்டி பழக்கிவச்சிருக்கான் வெள்ளைக்காரன்.
நமக்கு ஒரே ஆறுதல்  வெள்ளக்காரன் நமக்குன்னே நடத்துற  இந்த கள்ளுக்கடைதான்"

"ஆமாப்பா பொறந்தா சீனாக்காரனாவோ வெள்ளக்காரனாவோ மலாயாவோ பொறக்கணும். தமிழனா மட்டும் பொறந்திடக்கூடாது"
____________________
1940, 1941ல் மீண்டும் போராட்டம் மலேயா எஸ்.ஏ.கணபதி என்ற இளைஞர் தலைமையில் உச்சநிலையை அடைந்தது.

இந்த நிலையில்தான் ஜப்பானிய இராணுவம் மலேயாவில் கால்பதித்தது.

1942ல் ஜப்பானிய ராணுவம் ஆங்கிலேயரைத் தோற்கடித்து முழுமையாக மலேயாவைக் கைப்பற்றியது.

ஜப்பானியர்கள் நேர்மையான ஒழுக்கமான இனம் என்று தெரிந்திருந்த மலேயா மக்கள் அவர்களை "ஜப்பான் சூடா டாத்தங்" என்று மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

ஆனால் "ஆசியா ஆசியர்களுக்கே" என்ற முழக்கத்துடன் இரண்டாம் உலகப்போரில் குதித்த ஜப்பானியர்களின் நேர்மையும் ஒழுக்கமும் ஆசிய பாசமும் காணாமல் போய் போர்வெறி அவர்களை பீடித்திருந்தது.

ஆங்கிலேயரை விட மோசமாக அமைந்தது ஜப்பானியரின் காலம்.
__________________
காலம்: 1942
இடம்:  ஒரு ரப்பர் தோட்டம்

"வெள்ளக்காரன் கொடுத்த அரிசி தீந்துபோச்சு. பிள்ள பசில அழுவுறான். சுண்ணாம்பு அரிசிய புள்ளைக்கு எப்பிடி குடுக்கிறது.
எதாவது பண்ணுங்களே!"

"இரு தாயி. பக்கத்து தோட்டத்துல ரப்பர் மரங்களுக்கு நடுவுல மரவள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு போட்டுருக்காங்களாம்.
நா போய் கொஞ்சம் வாங்கிட்டு வரேன்.
நாம கேப்பையும் சோளமும் போட்ருக்கோம். வெளஞ்சதும் கொடுத்திரலாம்"

"ஊர்ல கூழாவது கால் வயிறு கிடைச்சது. இங்க வந்தும் நெலம மாறலயே. எதாவது பெரியவங்க கிட்ட கூழ்கிண்டுறது எப்பிடினு கேட்டு வாங்க"

"ஐயா! நான் முருகேசன். பக்கத்து தோட்டத்துல இருந்து வந்துருக்கேன். பிள்ள பசியில அழுவுது. கெழங்கு தந்தீங்கன்னா உதவியா இருக்கும்"

"போப்பா! இங்க கிழங்கு எங்களுக்கு பத்தல. பச்சையா கேப்பை கருதை வாட்டி கருப்பட்டி கலந்து சாப்பிட்டு இருக்கோம். ஆடுமாடு திங்கிற தளைய பறிச்சு அவிச்சு திங்கறோம்.
பக்கத்து தோட்டத்துல போய் பாரு"

"நாங்களே நத்தை, ஊமச்சி, ஒத்தக்கால் நண்டுனு எதை எதையோ பிடிச்சி தின்னுட்ருக்கோம்.
அணில், எலி, உடும்பு னு எதையாவது பிடிச்சு சாப்டு.
நகரத்துக்குள்ள போகாத.
ஜப்பான்காரன் தலைய வெட்டிட்டு அம்மணமாக்கி நடுத்தெருவுல போட்டுருவான்"

"சீனாவுக்கே திரும்ப முடியாம முழிக்கிறோம்.
பாதி சீனாவ ஜப்பான் புடிச்சிருச்சு.
பன்னிக்கு வச்சிருந்த கஞ்சிய நாங்க குடிக்கிறோம்.
சாக்குதான் உடுத்தறோம்.
எங்க பசி கொடும பொறுக்காம எங்க மகன் ஜப்பான்காரன் கிட்டயே எடுபடியா சேந்திட்டான்.
சயாம் வரை நீளமான தண்டவாளம் போடுறாங்களாம்"
____________________
காலம்: 1942 ஜூன்
இடம்: கெடா நகரம்

நகரத்தின் முக்கிய வீதியில் பல தலைகள் வெட்டி வைக்கபட்டிருந்தன.
அதில் அதிகம் தமிழர்களின் தலைகள்.
அருகே அமர்ந்து ஒரு ஜப்பானிய சிப்பாய் அந்த தலைகளின் முடியை சீப்பால் படிய வாரி சீவிக்கொண்டிருந்தான்.
கீழே "இதுதான் கடையில் திருடுவோருக்கு மகாஜப்பான் அளிக்கும் தண்டனை" என்று எழுதியிருந்தது.

இளைஞர்கள் பலர் பிடித்து இழுத்துவரப்பட்டு அங்கே ஒரு மைதானத்தில் நிறுத்தப்பட்டனர்.
பெண் வேடமிட்டு நடமாடிய சில மலாய் இளைஞர்கள் மட்டுமே தப்பினர்.
அந்த கூட்டத்தில் 60% தமிழர்கள்.

"சயாம் நீங்கள் 3 மாதம் வேலை செய்யவேண்டும்.
நாட்டில் உள்ள அத்தனை இளைஞர்களும் எங்களுக்கு வேண்டும்.
இல்லையென்றால் பசியால் சாவுங்கள்"

ஒரு ஜப்பானிய அதிகாரி கூறியதை அவருக்கு கங்காணியாகிவிட்டோர் மொழிபெயர்த்துக் கூறினர்.
___________________
1942 ஜூனிலிருந்து இளைஞர்களும் போர்க்கைதிகளும் கப்பலிலோ அல்லது ரயிலிலோ அனுப்பப்பட்டனர்.
சயாமில் பான் போங் சென்றடைய 7 நாட்கள் பயணம்.
இடையில் வண்டி எங்கும் நிற்காது.
வழியில் யாருக்கும் அவசர தேவை வரக்கூடாது என்பதற்காக பட்டினி போட்டபிறகே அழைத்து செல்லப்பட்டனர்.
மலவாயில் ஒரு மருத்தை திணித்து அடைத்துவிடுவார்கள்.
இதனால் பயணம் முடிந்த பிறகும் மலம் கழிக்கமுடியாமல் மரணவலி அனுபவித்தோர் பலர்.

பயணம் முடிந்து 160.கி.மீ கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிறகு எண் வழங்கபட்டு ஐந்தைந்தாக பிரிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
____________________
மலேசியத் தமிழர்களின் வலி நிறைந்த வரலாறின் இரண்டாவது பகுதி விரைவில்..