Monday 22 July 2019

தனி நாடு கோரிக்கை சட்டப்படி குற்றம் ஆகாது

தனி நாடு கோரிக்கை அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று

"அனைத்து நாடுகள் சட்டப்படியும் ,
உலக ஒன்றிய நாடுகள் (U.N.O) அமைப்புறுதிப்படியும்,
கூட்டுச்சேரா நாடுகளின் (1964) ஆம் ஆண்டு அறிவிப்புப் படியும்,
தமிழ் மக்கள் தனிநாடு கோருவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்கள்.

'சட்ட அடிப்படையான தன்னுரிமைக்காக, தன்மானமுள்ள தமிழர்கள் நடத்தும் தமிழக விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு குற்றமாகக் கணிப்பது அடிப்படை மக்கள் உரிமையைப் பறிக்கும் சட்டப்புறம்பான செயலாகும்’ என ஈழத்தமிழ்நாடு அமைத்திட அரும்பாடுபட்டு வரும் தமிழர்களுக்கு உதவிகள் செய்து பெரும்புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வழக்குரைஞர் இருவர், இந்தியத் துணைக்கண்ட அரசு கொணர்ந்த பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி பிரிட்டனில் உள்ள தமிழர் முன்னேற்றக் கழகம்’ (T.M.K) கேட்டிருந்த சட்ட விளக்கம் பற்றி ஆய்ந்து கருத்தறிவித்துள்ளதாக அங்கு நடந்து (Voice of Tamils Anti-official Newsletter Published by T.M.K) என்னும் செய்தியேடு தன் ஆகத்து 1977 இதழில் ஆசிரியவுரை எழுதியிருக்கின்றது.

அக்கட்டுரையில் அதன் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
தங்கள் சொந்த ஊதியம் (நன்மை) கருதி அதிகாரத்தில் உள்ள வடஇந்தியக் கட்சியினர் கொண்டு வந்த பிரிவினைத் தடைச்சட்டம் அம்பேத்கார் குழுவினர் வகுத்தளித்த இந்திய அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாவதாகும்.

ஐம்பது ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டுப் பிரிவினை கோரும் தமிழர்களைக் கருத்தில் கொண்டு கொணர்ந்த தடைச்சட்டமாகையால், அதற்குத் தமிழ்மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அப்பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு சட்டவலு இருக்க முடியும்.

'இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும்,
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுமைக்கும் பொருந்தும் எனவும் கூறுவதை அனைத்து நாடுகள் சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேநேரத்தில்,
அதே அனைத்து நாடுகளின் சட்டத்தின் கீழ் தன்னாட்டு உரிமைக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் சட்ட நிறைவானவை என்பதையும் எவரும் மறுத்தற்கியலாமற் போகும்.

எனவே தமிழன் - நிலப்பிரிவினைக்குக் குரல் கொடுக்கும் எவரும் அனைத்துநாட்டு சட்டப்படி குற்றவாளியல்லர்.

அம்பேத்கார் குழுவினர் ஆக்கிய இந்திய அரசியல் சட்டப்படி 'இந்திய ஒன்றியத்தில் (Union) சேர்ந்துள்ள நாடுகள் பிரிந்து போகும் உரிமை வரையறுக்கப்பட்டிருப்பதால்
இந்திய அடிப்படை அரசியல் சட்டப்படியும் தன்னாட்டு உரிமை கோருதல் குற்றமாகாது.

கூட்டுச்சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்றபோது தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு என்று தீர்மானம் அங்கு நிறைவேற்றப் பெற்றது.

அத்தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தங்களுக்கென ஒரு நாடும் அரசும் இல்லாத பாலத்தீனியர்களின் தன்னமைப்பு உரிமைக் கோரிக்கையை இந்தியா உட்படப்பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது,
தங்களுக்கென ஒரு நாடு இருந்தும் அரசுரிமையற்றிருக்கும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை எந்த வகையில் தவறானதாகும்?

இருநாடுகளின் சட்டமன்றங்கள் அல்லது மக்களால் தெரிவு செய்யப்பெற்றபடி நிகராளிகள் விரும்பிச் சட்டமியற்றி,
ஒரே நாடாக இணைவதற்கு அதிகாரம் அளிப்பதன் வழியும்,
ஒருநாடு மற்றநாட்டை வலிந்து (seized by violence or occupied by force) தனது அரசுரிமையை மற்றநாட்டிற்கு உரிமைப்படுத்திக் கொடுப்பதன் வழியும்,
இருநாட்டு மக்களின் விருப்பத்தின் வழியாகவும் தான்,
இருநாடுகள் ஒரு நாடாக ஆக முடியும்.

ஆனால் சேர, சோழ, பாண்டிய நாடு எனப் பண்டையக் காலத்தில் அழைக்கப் பெற்றுவந்த தமிழ்நாட்டு மக்களின் ஏற்பு ஒப்புதலை (acceptance) பெறாமலேயே இந்தியத் துணைக்கண்டத்தினுள் வந்தேறியவர்களாகிய ஆரிய ஆட்சியாளர்களால் பிரிவினைத் தடைச்சட்டம் அவர்களின் அடிமைகள் நிரம்பிய நாடாளுமன்றத்தில் தன் இன நலம் காத்திட இயற்றப்பட்டதாகும்.

அதனைத் தமிழ் மக்களின் தொண்டைக்குள் வலிந்து சட்டப் புறம்பாகத் (illegal) திணித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் 1947-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்ட ஆட்சியுரிமையை ஆரியர்களிடம் ஒப்படைத்தமையால் தமிழர்கள் தமது நாட்டுரிமையை இழந்தார்களே தவிர ,
தமிழ்மக்களின் ஒப்புதல் படி அவர்கள் இந்திய ஒன்றியத்தில் (Indian Union) சட்டப்படி இணைக்கப்படவில்லை என்பது நமக்கு உதவ முன்வந்துள்ள சட்ட வல்லுநர்களின் (Q.C) கருத்தாகும்.

இக்கருத்துகளின் அடிப்படையில் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்குக் கீழ்வரும் வேண்டுகோளைக் கொடுத்துள்ளது.

'நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர். நாங்கள் அனைத்திந்திய கட்சியினர்’ எனக் கூறிவரும் திரைப்படக் கவர்ச்சியும் அறியாமையும் மிக்க மக்களும்;
தமிழர்கள் எனக் கூறிக்கொள்ள வெட்கப்பட்டு இந்தியத் தேசியம் பேசி அரசியல் ஊதியம் பெறும் வீடண அநுமன்களும்;
"நாங்கள் அன்று பிரிவினை கேட்டோம், இப்பொழுது உண்மையாகக் கேட்கவே இல்லை;
உறுதியிட்டுக் கூறுகிறோம். நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்’ என்று சொல்லுக்குச் சொல், கூட்டத்திற்குக் கூட்டம் இந்திய தேசியத் திருப்பாட்டுப் பாடித் தாம் வாழ வழிதேடிக்கொண்ட தமிழ்ப் பதடிகள் சிலரும்;
எக்கட்சியும் சாராத தன்மானமுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும்;
ஆசிரியப் பெருமக்களும், மாணவ மணிகளும் ஆங்கில வழக்குரைஞர்களின் பரிந்துரையை எண்ணிப்பார்க்க வேண்டுமெனவும்,
கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிக் கிடப்போர் இதுநாள் வரை தமிழ் இனத்திற்குச் செய்த மாபெரும் வஞ்சகத்திற்கு மன்னிப்புப் பெறும் வகையில்,
தாம் தமிழர் என்பதையுணர்ந்து தமிழ்த்தரையின் விடுதலைக்குப் போரிட வாருங்கள்'
எனவும் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் அறைகூவி அழைக்கிறது.

- தென்மொழி
(சுவடி : 14,
ஒலை 5-6,
1977)

நன்றி: அழகன் தமிழன்
--------------
மேற்கண்ட பதிவில் ஆரியர் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்தோ-ஆரிய மொழி பேசுவோர் என்கிற அடிப்படையில் வடயிந்திரையே என்று ஊகிக்கலாம்

No comments:

Post a Comment