Wednesday 9 May 2018

சிங்கள அரசு வாங்கிய ஆயுதங்களை கடத்திக் கொண்டுவந்த புலிகளின் உளவுத்துறை

சிங்கள அரசு வாங்கிய ஆயுதங்களை கடத்திய புலிகளின் உளவுத்துறை

1997-05-13 அன்று புத்த பிக்குகளால் பிரித்தோதி, நல்ல சுபமுகுர்தம் பார்த்து, முப்படைகளின் திட்டமிடல், மற்றும் வல்லரசுகளின் ஆலோசனைகளுடனும் ஆரம்பிக்கப்பட்டது ஜெயசிக்குறு (OPERATION JAYASIKURU) இராணுவ நடவடிக்கை.
ஆரம்பம் என்னவோ பெரும் விளம்பரத்துடன் நன்றாகத்தான் இருந்தது.
ஆனால் சண்டையின் போக்கு தான் எதிரிக்கு சாதகமாக இருக்கவில்லை.

புலிகளின் தொடர் முறியடிப்பு தாக்குதலால் எதிரி திணறடிக்கப்பட்டான்.
உலகின் நீண்ட இராணுவ நடவடிக்கையாக (108நாட்கள் ஜெர்மன் படைகளால் ரசியாவுக்கு எதிராக 2ம் உலகப்போரின் போது மேற்கொள்ளப் பட்ட இராணுவநடவடிக்கை) பதிவு செய்யப்பட்ட "பப்ப ரோசா" நடவடிக்கையையும் தாண்டி,
நீண்ட நாட்கள் நடந்த இராணுவ நடவடிக்கை என்ற பெயரை அது எடுத்தது.

தினமும் எதிரி இழப்புகளை சந்தித்தபடி இருந்தான்.
இந்த இழப்புகளை குறைக்கும் முடிவில், அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையின் பெயரில், பெருமளவில் மோட்டாரை பயன்படுத்தி, புலிகளுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணிவிட்டு முன்னேறித் தாக்குவது தான் அவர்களின் உத்தியாக இருந்தது.

இதற்குமுன் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நேட்டோ படைகளால், விமானம், மற்றும் கனரக ஆட்லறி, மோட்டர், ஏவுகணைகள் கொண்டு தாக்கி, பெரும் சேதத்தை எதிரிக்கு உண்டு பன்னிவிட்டு, முன்னேறி இடங்களை பிடிக்கும் திட்டமே அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது.
இதன் மூலம் தங்கள் பக்க இழப்பை குறைக்க முடியும், அடுத்தது எதிரியின் உளவுரணை பெருமளவில் சிதைக்க முடியும் என நம்புகின்றனர்.
இந்த திட்டத்தைத்தான் எமது எதிரிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே, அவர்கள் போட்டு கொடுத்து முன்னேற வைத்தனர்.

இதில் அமெரிக்கருக்கு வெற்றி கிடைத்தது என்னவோ உண்மைதான்.
ஆனால், புலிகளிடத்தில் அவர்கள் திட்டம் சாத்தியப் படவில்லை.
மாறாக அவர்களது திட்டத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பிவிட்டனர் புலிகள்.
இது எம் தலைவரின் மதிநுட்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

சிங்கள அரசின் வெடிபொருளின் உச்சப்பாவனையால் குறைந்து வரும் கையிருப்பை நிரப்புவதற்காகவும், புலிகளின் வேகத்தை முறியடிக்கவும், சிங்கள அரசு சிம்பாவே நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பெரும் தொகை மோர்ட்டார், மற்றும் அதற்கான எறிகணைகள் (120MM மோட்டர்,81MM மோட்டர்) 32,000மும் எதிரியால் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதற்கான பணமும் கைமாறிய பின் அந்த ஆயுதங்களை சிறிலங்காவிற்கு கொண்டுசெல்வதற்கு சிங்கள அரசால் உலகில் உள்ள கப்பல் கம்பனிகளிடம் இருந்து "டெண்டர்" கோரியிருந்தது.
(சிங்கள அரசு அந்த நேரத்தில் வாடகை கப்பலில் தான் ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர்)
ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகள் பாதுகாப்பு நிமித்தம், அந்த விபரங்களை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பது வழமை.
இதை எப்படியோ புலிகளின் சர்வதேச ஆயுத வலையமைப்பினர் மணந்து பிடித்துவிட்டனர்.

உடனே சர்வதேசப்புலிகள் போலியான கப்பல் கம்பனி ஒன்றை உருவாக்கி, குறைந்த பணத்திற்கு "கோர்ட்"பன்னியிருந்தனர்.
இது புலிகளின் கப்பல் என்று தெரியாது, தனியார் நிறுவனம் என நம்பிய சிங்கள அரசு அனுமதி வழங்கியது.
1997 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் மொசாம்பிக்கில் உள்ள "பெய்ரா" துறைமுகத்தில் வைத்து புலிகளின் கப்பலான "லிமசோல்" இல் ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.

அன்று இரவு சிங்கள அரசால் பணம் செலுத்தப்பட்ட ஆயுதங்களை ஏற்றியபடி, அவர்களின் வைர எதிரியான புலிகளின் கப்பல் இரவு சிறிலங்காவை நோக்கி புறப்பட்டது.
இங்கே யுத்தம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது.
புலிகளின் எதிர் தாக்குதலினால் புலிகளது ஆயுத கையிருப்பும் கணிசமான அளவு குறைந்துவிட்டிருந்தது.
மேலதிக ஆயுத வழங்கல் கிடைக்காவிட்டால் நிலமை மோசமாகும் சந்தர்ப்பமே அதிகமாக இருந்தது.

எம்மை போலவே பணத்தை கட்டிவிட்டு ஆயுதங்களுக்காக எதிரியும் காத்திருந்தான்.!

ஆனால் அவனுக்கு ஜூன் இறுதியில் வந்து சேரவேண்டிய ஆயுதங்கள் வந்து சேரவில்லை.
ஆனால் அதே போல ஒரு வாரத்தினுள் இன்னுமொரு ஆயுதத் தொகுதிக்கு சிங்கள அரசு பணம் செலுத்தி, அதே கப்பல் கம்பனியின் (புலிகளின் கப்பலில்) இன்னொரு கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.

முதல் கப்பல் புறப்பட்டு ஒரு வாரத்தில் இரண்டாவது கப்பலும் சிறிலங்காவை நோக்கி புறப்பட்டு இருந்தது.
ஆனால் சேரவேண்டிய நேரத்தில் கப்பல் போய்ச் சேராததினால், சிங்கள அரசால் கப்பல் கம்பனியை தொடர்பு கொண்டு விபரம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்களால் (புலிகளால்) காலநிலையை காரணம் காட்டி அவகாசம் கேட்கப்பட்டது.
இப்படியே சிங்கள அரசுக்கு போக்கு காட்டி விட்டு, கொழும்பில் இறக்கவேண்டிய இரண்டு கப்பல் ஆயுதங்கலும் முல்லைத்தீவில் வைத்து புலிகளால் இறக்கப்பட்டது.

தொடந்து சிங்கள அரசால் கப்பல் கம்பனியில் உள்ளவர்களுடன் பேசிய போதும் மழுப்பலான பதிலே வந்தது.
அடுத்த நாளும் சிங்கள அரசு தொடர்பு கொண்டது.
ஆனால், தங்கள் வேலை கச்சிதமாக முடிந்த காரணத்தால் புலிகள் அந்த தொடர்பை துண்டித்து விட்டிருந்தனர்.

அப்போது சந்தேகமடைந்த சிங்கள அரசு அமெரிக்காவின் உதவியை நாடியிருந்தது.

அவர்களின், விசாரணைகளின் மூலம் அந்த ஆயுதங்கள், புலிகளின் கப்பலில் ஏற்றப்பட்டது தெரிய வந்தது.
இது தெரிய வந்த போது, புலிகளின் சாதுரியத்தையும், சிங்களரின் முட்டாள்த்தனத்தையும் எண்ணி நிச்சயம் அமெரிக்கர்கள் வாய் விட்டு சிரித்திருப்பார்கள்.
அதன் பின்பு தான் சிங்கள அரசு சொந்தமாக கப்பல்களை கொள்முதல் செய்து போக்குவரத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், 1994 லேயே புலிகள் அமைப்பு வளர்ச்சி அடைந்திராத நேரத்திலேயே, புலிகள் சொந்தமாக கப்பல்களை கொள்முதல் செய்து, வர்த்தகத்திலும், ஆயுத விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

தமிழர் பெருமைகளில் இதுவுமொன்று!

பதிவுக்கு நன்றி: ரகுநந்தன் வசந்தன்

படம்: எங்களுக்கும் சேர்த்து அவரே வாங்கிவிட்டார் என முன்னே ஆயுதம் சுமந்தபடி போகும் ஜனாதிபதியை சுட்டிக்காட்டி புலிவேடமிட்டவர் கடைக்கார்ரிடம் கூறும் கார்ட்டூன்
(நன்றி: Padmanaban)

No comments:

Post a Comment