Wednesday 7 February 2018

தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக பேசிய டி.கே.ரங்கராஜன்

புதுதில்லி;
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று டி.கே. ரங்கராஜன் பேசியதாவது:
நம் குடியரசுத்தலைவர் உரையானது, இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து, ஏராளமான புள்ளி விவரங்களை உள்ளடக்கி இருக்கிறது. தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு, தன்னுடைய தலையங்கத்தின் தலைப்பில், “குடியரசுத் தலைவர் கோவிந்த் அல்லது எகனாமிக் சர்வே” என்று குறிப்பிட்டிருக்கிறது. “இந்த அரசாங்கம், புள்ளி விவரங்களைத் தயாரிப்பதற்கு ஆணை பிறப்பித்திருக்கிறது,” என்று முன்னாள் பாஜக நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா இதுகுறித்துக் குறிப்பிட்டிருக்கிறார். இது எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. இவ்வாறு நான் கூறவில்லை என யஷ்வந்த் சின்கா கூறுகிறார்.
நீட் தேர்வு விலக்கு
என்னுடைய நண்பர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், “நீட்” தேர்வு குறித்துக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிவைத்த தீர்மானம் எப்படிக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று விளக்கினார். அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஒருவர் சென்னை வந்திருந்தபோது, “நீட்” தேர்விற்கு ஓராண்டு காலத்திற்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம் என்று உறுதியளித்தார்.
அதன்பின்னர்தான் அந்தச் சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட பின் அது குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிடும் என்று நாங்கள் நினைத்தோம். பின்னர் நான் ஒரு கடிதம் குடியரசுத் தலைவருக்கு எழுதினேன். குடியரசுத் தலைவர் அதற்கு எனக்குப் பதிலளித்திருக்கிறார். “உள்துறை அமைச்சகம் அந்தச் சட்டமுன்வடிவை எனக்கு அனுப்பவில்லை,” என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும் கிராமப்புற மாணவர்கள் “நீட்” தேர்வை எழுத முடியாது.
அவர்கள் வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, குஜராத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி அல்லது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. இம்மாநிலங்களில் வாழும் கிராமப்புற மாணவர்களால் இந்தத் தேர்வினை எழுத முடியாது.
எனினும் இதற்கு எதிராக தமிழ்நாடு தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இதேபோன்றுதான் ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் வெளிப்படுத்தியது. நீங்கள் தமிழ்நாட்டை எப்போதுமே வித்தியாசமாகத்தான் கருதுகிறீர்கள். மீண்டும் ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சனையானது. ஓர் அமைச்சர் மதுரை வந்திருந்தபோது, ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் “உங்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம்,” என்று கூறினார்கள்.
பாஜகவுடன் நாங்கள் என்றில்லை, உங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளே மகிழ்ச்சியற்று இருக்கின்றன. சிவ சேனை, தெலுங்கு தேசம் தங்கள் மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்தி இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் தன் உரையில் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்துப் பேசியிருக்கிறார். அமித்ஷா கூட இங்கே உரையாற்றும்போது, விவசாயிகள் பற்றிக் கவலைப்பட்டார். இவ்வாறு விவசாயிகள் குறித்து இந்த அரசாங்கம் மட்டுமா கவலைப்பட்டது? இல்லை. இதற்கு முன்பு, லால் பகதூர் சாஸ்திரியும் கவலைப்பட்டார். “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்று கோஷத்தைக் கூட அவர் உருவாக்கி இருந்தார். அவருக்குப்பின் வந்த அரசாங்கங்கள் அனைத்துமே விவசாயிகள் பற்றி கவலைகளைத் தெரிவித்திருக்கின்றன.
ஆனால் எதுவுமே அமல்படுத்தப்பட்டதில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஒவ்வோராண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது குடியரசுத் தலைவர் அவர்கள், மேலும் நான்கு ஆண்டுகளுக்குக் காத்துக் கொண்டிருங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்குள் விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வது பலமடங்கு அதிகரித்திருக்கும். எப்படி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப் போகிறோம்?
காவிரிப் பிரச்சனை
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் பாசனம் தொடர்பான பிரச்சனைகளை பலமுறை இந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு, காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் தேவை. தொடர்ந்து இருந்து வரும் அரசாங்கங்கள் காவிரி ஆற்று நீரில் சட்டப்பூர்வமாக அளிக்க வேண்டிய உரிய பங்கைத் தமிழ்நாட்டிற்கு அளிப்பதற்கு இன்றுவரை தவறிவிட்டன. மத்திய அரசாங்கம், காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரையிலும் அமைத்திடவில்லை.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடுக என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள போதிலும்கூட, அதை செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று ஒரு மத்திய அமைச்சரே, (ஆனந்த்குமார்) பேசுகிறார். அவர் ஒன்றும் கர்நாடக மாநிலக் குடிமகன் அல்ல. அவர் ஓர் மத்திய அமைச்சர். தமிழ்நாட்டில் பத்து லட்சம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் தேவை. இவ்வாறு பத்து லட்சம் ஏக்கரில் பாசனம் செய்வதற்குத் 15 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். கர்நாடகா ஏற்கனவே 80 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதார அவசியத்தைப் பரிசீலிப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் நிர்ப்பந்தங்களை பரிசீலிக்கின்றனர். இந்த அரசியல் நிர்ப்பந்தங்கள் காவேரிப் பிரச்சனையின் தலைவிதியைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.
ஞாயிற்றுக் கிழமையன்று பிரதமர் மோடி கர்நாடகாவில் ஒரு பேரணிப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் நம் சகோதரர்கள்தான், அவர்களுக்கு தண்ணீர் அளித்திடுங்கள் என்று அறிவுரை கூறியிருக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடக மக்களுக்கு அவர் அறிவுரை கூறியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவர் செய்திடவில்லை. இவ்வாறு அரசியல் நிர்ப்பந்தங்கள் அவர்களை ஆட்டிப்படைக்கின்றன. விரைவில் அங்கே தேர்தல் வர இருக்கிறது. எனவே மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் “தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் இல்லை” என்று கூறுகின்றன.
மத்தியஅரசு, தமிழ்நாட்டை, இந்தியாவின் ஓர் அங்கம் என்று கருதுகிறதா, இல்லையா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது, தமிழ்நாட்டில் உள்ள காவேரிப் பாசனப் பகுதி விவசாயிகளாவர். தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற அனைத்துப் பொருள்களுமே நம் நாட்டிற்காகத்தான். ஆனால் அவர்களுக்கு உரிய பங்கை அளித்திட நீங்கள் மறுக்கிறீர்கள். வேளாண் உற்பத்தித்திறன் மீது பருவநிலைசெலுத்திடும் தாக்கம் குறித்து பொருளாதார ஆய்வறிக்கை அதிகமாகவே கூறியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் 2022இல் இரட்டிப்பாகும்? நிச்சயமாக இது ஒரு மடத்தனமான கூற்றாகும். மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு சொல்லப்படுகிறதே தவிர, வேறல்ல.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு குறித்தும் ஏராளமாகக் கூறியிருக்கிறீர்கள். 2015-16 வேலையின்மை ஆய்வறிக்கையின்படி, நாட்டில் உள்ள தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரிபாதிப்பேர் – அதாவது 46.6 சதவீதத்தினர் – சுய வேலை பார்ப்பவர்கள். சுய வேலைபார்ப்பது என்பது மோசமான ஒன்று என்று நான் பார்க்கவில்லை. ஆனால் அவர்களை “பக்கோடா விற்பவர்கள்” என்று சொல்ல மாட்டேன். சுய வேலை பார்ப்பவர்களின் வருமானம் மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய். ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவு.
அவர்களால் உயிர்பிழைத்திட முடியுமா? ஒரு கணவன், ஒரு மனைவி, இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ள குடும்பம் எப்படி பிழைக்க முடியும்.
முறையான வேலைவாய்ப்பு கிடைக்காததால் மக்கள் சுய வேலை செய்பவர்களாக மாறுகிறார்கள். இன்றைய தினம், ஆட்டோரிக்சா ஓட்டுநர்களில் பி.ஏ., எம்.ஏ., படித்தவர்கள் பலரை நீங்கள் பார்க்க முடியும். நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவால் வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குறைந்த ஊதியத்திலான முறைசாரா தொழிலாளர்களையும், முறைசார்ந்த தொழில்களில் ஒப்பந்த ஊழியர்களையும் தான் இதுஉருவாக்கி இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட இப்போது ஒப்பந்த அடிப்படையில்தான். பொருளாதார மந்தமும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் வேலை வாய்ப்புகளையே அழித்து ஒழித்துவிட்டது. கிராமப்புற வேலைவாய்ப்புகள் சுருங்கி இருப்பதும் நிலைமையை மோசமாக்கி இருக்கின்றன. இத்தகு பின்னணியில், வேலைவாய்ப்பு தொடர்பாக அரசு அளித்துள்ள விவரங்களுக்கும் உண்மை நிலைக்கும் வெகுதூரமாகும்.
இந்தியா தலையிட மறுப்பது ஏன்?
குடியரசுத் தலைவர், தன்னுடைய உரையைத்தொடங்கும்போது, “வாசுதைவ குடும்பகம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது வேறொன்றுமில்லை. நாம் கூறும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதுதான். ஆனால் பர்மாவிலிருந்து அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை திருப்பித் துரத்தி அனுப்புகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும், நாம் ரோஹிங்யா பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒருபங்களிப்பினைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்பிரச்சனையில் மவுனம் சாதிக்கிறது. பிரச்சனையை எதிர்கொள்ள மறுத்து, திரும்பிக்கொள்கிறது. ஏன்? போப், தாக்காவிற்குப் போகிறார்.
அமெரிக்கா தன் அமைச்சர் ஒருவரை அனுப்பி வைக்கிறது. கிரேட் பிரிட்டன், கனடா அமைச்சர்களும்கூட அங்கே போகிறார்கள். ஆசிய நாடுகள் போகின்றன. ஆனால் இந்தியா போக மறுக்கிறது. இந்தியா தலையிட மறுக்கிறது. ஏன்? இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு சீனா முயற்சிக்கிறது. அவர்கள் சமாதானக்காவலர்களாக வெளிப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு எதிர்மறையாக இருக்கிறது. ஏன் அவ்வாறு இருக்கிறது? அவர்கள் பின்பற்றுகிற வகுப்புவாத சித்தாந்தத்தின் நிர்ப்பந்தம்தான் இவ்வாறு அவர்களை ஆட்டுவிக்கிறது. ரோஹிங்யாக்கள் அனைவரும் முஸ்லீம்கள். அதுதான் காரணம்
சீனா ஒரு மத்தியஸ்தர் பங்களிப்பினை மிகச்சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது. சீன அயல்துறை அமைச்சர் அங்கே சென்று அனைத்துக் கட்சிகளுடனும் பேசியிருக்கிறார்.
ஏழ்மை நிலை
குடியரசுத்தலைவர் உரையில் ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்களின் வளர்ச்சிகுறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 2017இல் இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருப்பவர்கள் 73 சதவீத செல்வத்தையும், 99 சதவீதமாக இருப்பவர்கள் மீதம் உள்ள 47 சதவீதத்தைப்பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கிறார்கள். உலகில் பட்டினி கிடப்போர் அட்டவணையில் இந்தியா மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. ஆனால் இது குறித்து குடியரசுத்தலைவர் உரை மவுனம் சாதிக்கிறது. அதேபோன்று ஊட்டச்சத்துக் குறைவும் மிக மோசமான அளவில்இருக்கிறது. நாட்டில் 14.6 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாக நோய்க்கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
கீழடி அகழாய்வு
நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதால் தமிழ்நாடு தொடர்பாக ஒருசிலவற்றைக் குறிப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறேன். மதுரை அருகே கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தொடர்ந்து ஒரு சதவீத வேலைகூட செய்யப்படவில்லை. அங்கே தொடர்ந்து 2018இல் அகழ்வாராய்ச்சிப்பணியைத் தொடர மத்திய அரசால் அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு அனுமதியை அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதனை நான் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும்நேரத்தில் இந்த அவையில் எழுப்பியபோது துணைத்தலைவர் உட்பட அனைத்துக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் என்னுடன் இணைந்துகொண்டார்கள். மாநில அரசாங்கம், அந்த இடத்தில் கீழடியில் அகழ்வாராய்ச்சியின்போது எடுக்கப்பட்ட 5000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை, கைத்திறன் பொருட்களை அருங்காட்சியகம் ஒன்றை நிறுவி அதில் வைப்பதற்காக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுநாள்வரை அந்த இடத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆரம்பவேலைகளைக்கூட மத்திய அரசு இன்னமும் துவங்கவில்லை. கீழடியில் கண்டுள்ள விவரங்கள் மனிதகுல நாகரிக வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும். எனவே, இந்த அரசாங்கம் மதிப்பிடற்கரிய அகழ்வாராய்ச்சிப்பணிகளைத் தொடர இதுதொடர்பாக உரிய ஆணைகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பட்டாசுத் தொழிலாளர்கள்
பட்டாசுத் தயாரிப்புக்குத் தடை விதிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தமிழ்நாட்டில் சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எட்டு லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. அங்கே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியஅதே சமயத்தில் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. பண்டிகைக் காலங்களில், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்திட முன்வர வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் சிலை
நிறைவாக ஆனால் மிக முக்கியமான ஒன்று. நாம் நம் நாட்டில் தேசியப் பறவை, தேசிய மலர் என்று அறிவித்திருப்பதுபோல மதிப்பு மிக்க கருத்துக் கருவூலங்களையும் மனிதகுல முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் முறையிலும் அமைந்துள்ள தமிழர்களின் புனித நூலான திருக்குறளை, தேசியப் நூலாக அறிவிக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருவள்ளுவரின் சிலையை நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நிறுவிடவும் இந்த அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழில்: ச.வீரமணி
நன்றி: தீக்கதிர் (07.02.2018)

No comments:

Post a Comment