Sunday 7 May 2017

பாலக்காட்டு சித்தூரில் தமிழ்த் திருவிழா

பாலக்காட்டு சித்தூரில் தமிழ்த் திருவிழா

பாலக்காட்டில் பேசப்படுவது தமிழே.
அது மலையாளத் தொனியில் இருக்குமே ஒழிய அது சோழநாட்டுத் தமிழே ஆகும்.

உண்மையான (தமிழ்ப்)பார்ப்பனர் தஞ்சையில் இருந்து தொடர்ச்சியாக பாலக்காடு வரை கிழக்கு மேற்காக இருந்தனர். இருக்கின்றனர்.
இந்த வட்டார வழக்குதான் பார்ப்பனத் தமிழ்.

பிறகு கற்கோயில்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டன.
பார்ப்பனர்களும் தமிழ்மண் முழுவதும் பரவினர்.

பெருங்கோயில்கள் கட்டப்பட்டபோது பிராமணர்கள் வேலைவாய்ப்பு கிடைப்பதால் குடியேறினர்.

பிறகு தமிழனல்லாத குலோத்துங்கன் காலத்தில் பிராமணர் குடியேற்றம் பெருமளவில் நடத்தப்பட்டு பார்ப்பனர்களை விட பிராமணர் அதிகமாயினர்.

அதன்பிறகு வேற்றின ஆட்சி பார்ப்பனர்களை ஓரங்கட்டி பிராமணர்களை எழுச்சிபெறச் செய்தது.

பாலக்காட்டுப் பார்ப்பனர்கள் சோழிய (முன்குடுமி) பார்ப்பனரே ஆவர்.

பாலக்காடு தமிழ்ப்பகுதியாயிருக்க தமிழை மறக்காத இவர்கள் முக்கிய காரணம்.

பாலக்காட்டில் இன்றும் நடத்தப்படும் இராமாயண தொல்பாவைக் கூத்து கம்பராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆயிரம் (தமிழ்ப்)பாடல்களைக் கொண்டது.

பாலக்காடு மாவட்டம் நல்லேபள்ளி நகரத்தில் சுணங்கியம்மன் கோவில் ஆலயவிழாவில் பாடப்படும் ஒரு தமிழ்ப்பாட்டு இராசேந்திரன் காலத்தில் பாலக்காட்டில் குடியேறிய தமிழர்கள் பற்றி கூறுகிறது.
அதாவது ஏற்கனவே இருந்த தமிழர்கள் மத்தியில் தமிழர்கள் குடியேறினர். (பார்க்க: படம்)

இதே பாலக்காடு மாவட்டத்தில் தமிழக எல்லைக்கு அருகே உள்ள சித்தூரில் மாசி மாதம் ஒரு விழா கொண்டாடடப் படுகிறது.
அதன் பெயர் கொங்கன்படை.

இது கி.பி. 1592 ல் கொங்கு நாடு வழியாக நாயக்கர் படை சித்தூரைத் தாக்கிய போது அப்படையை எதிர்த்து போரிட்டு வென்ற நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை.

இதன் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் அக்காலம் வரை தூய தமிழ்ப் பகுதியாக பாலக்காடு மாவட்டம் இருந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட போருக்குப் பிறகு சித்தூர் மட்டும் கொச்சி அரசு செய்த உதவிக்கு நன்றிக்கடனாக பாலக்காட்டு அரசனால் கொடுக்கப்பட்டு கொச்சி அரசுக்கு வெளியே சிறு துண்டாக கொச்சியின் பகுதியாக 1947 வரை இருந்தது.

போருக்குப்பிறகு மலையாளக் குடியேற்றம் நடந்துள்ளது.
அதன்பிறகு தெலுங்கரும் கன்னடரும் குடியேறினர்.
பிறகு மராத்தியரும் குடியேறினர்.
பிறகு குடகு ஜைனரும் துளு பிராமணரும் குடியேறினர்.

முதலில் தமிழ்ப் பகுதியாக இருந்த பாலக்காடு தற்போது பல்வேறு இனங்கள் வாழும் பகுதியாகிவிட்டது.

தமிழர்களின் பழமையான துறைமுகங்களான தொண்டி,  முசிறி ஆகியவற்றில் வந்திறங்கும் வணிகப் பொருட்கள் பாலக்காடு கணவாய் வழியாக தமிழகம் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டன.
அதாவது நில அமைப்பாலும் வணிக கட்டமைப்பாலும் பாலக்காடு தமிழகத்துடன் தொடர்பில் எப்போதும் இருந்தது. இருக்கிறது.

1500களில் தமிழகம் முழுவதும் வேற்றின ஆட்சியில் இருந்தது.
அப்போது மதுரை நாயக்கரின் கட்டுப்பாட்டில் கொங்கு பகுதியைக் கவனித்து வந்தவர் (இளையங்குடி) வீரப்ப நாயக்கர் என்பவர்.
இவரது அதிகாரி இரணியமூர்த்தி பிள்ளை.
இவருக்கு வந்த வணிகப்பொருட்களை சித்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள வாளையாற்றுக் கானலில் சிலர் கொள்ளையடித்தனர்.

மதுரை நாயக்க மன்னர் சித்தூர்க்காரர்கள்தான் இந்த கொள்ளையை நடத்தியதாக தவறாக நினைத்து
கொள்ளையர்களை ஒப்படைக்காவிட்டால் போர் தொடுப்போம் என்று பாலக்காட்டை ஆண்ட சேகரிவர்மருக்கு ஓலை அனுப்புகிறார்.
நாயக்க மன்னர் அனுப்பிய எச்சரிக்கை ஓலை தமிழில் எழுதியிருந்தது.
இதை ஓலைமுறி என்று அழைக்கின்றனர்.
சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் விரவி கொச்சையான தமிழில் இது எழுதப்பட்டுள்ளது.

சேகரிவர்மர் ஆட்சியில் பாதைக் காவலராக இருந்தோர் சம்பத்து மன்றாடியார்கள்.
இவர்களுக்கும் ஓலையின் மற்றொரு படிவம் அரத்தி என்ற பறையர் பெண் மூலம் கொடுக்கப்பட்டது.
உடனே சித்தூரின் நூறுவீட்டு நாயகர்களுடன் கலந்துரையாடிய மன்றாடியார்கள் சேகரிவர்மருக்கு தகவல் அனுப்பினர்.

பதில் அனுப்ப ஒரு வாரக் கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
சேகரிவர்மர் படையோ மிகவும் சிறியது.
அவர் உடனே கொச்சி அரசர் கேசரிராமவர்மனிடம் உதவி கேட்டு ஓலை அனுப்பினார்.
ஆனால் பதில் எதுவும் வரவில்லை.

கெடு முடிந்ததும் வீரப்ப நாயக்கர் படைகள் மணலியாற்று வடகரையில் மணலித்துறை என்ற இடத்திற்கு வந்து கூடாரம் அடித்தன.
இருட்டிய பிறகு மதுரை படை ஊருக்குள் நுழைந்தது.

எருமை மீது அமர்ந்தபடி ஊருக்குள் நுழைந்த நாயக்க மன்னனை அப்பகுதி நாட்டுப்பாடல் கீழ்க்கண்டவாறு (தமிழில்) விவரிக்கிறது,

வெத்திலை போட்டு இருவழியா ஆறொழுகும்
வெத்திலைச் சாறு எச்சில்பட்ட செம்பொன்தாடி
பெரும்தலையும் போண்டிவயிறு குறுங்கழுத்தும்
செங்கடையும் செகசெகத்த செம்மீன்பல்லும்

சேகரிவர்மரின் சிறியபடை நாயக்க படையை எதிர்க்கமுடியாமல் சிறிதுநேரத்திலேயே சிதறியது.

எதிர்பாராத விதமாக கொச்சி அரசர் அனுப்பிய உதவிப்படை அங்கு வந்து சேர்ந்தது.
இதை எதிர்பார்க்காத நாயக்கபடைகள் நிலைகுலைந்தன.
படையை வழிநடத்திய ஊத்துக்குளி பாளையக்காரர் காலிங்கராயர் கொல்லப்பட்டார்.
நாயக்கப்படை பின்வாங்கி ஓடியது.

காலிங்கராயர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு சித்தூர் அம்மனுக்கு கோவில் கட்டினர்.
ஊத்துக்குளி பாளையப்பட்டு வம்சாவழிகள் இந்த சித்தூர் பகவதிக்கு திருப்பணி செய்துள்ளனர்.
இந்த பகவதி முதலில் மூகாம்பிகை என்றே அறியப்பட்டாள்.
இதற்கு நாயர்கள் பூசாரிகளாக உள்ளனர்.

இந்த கோயிலுக்கு முன்பு சேகரிவர்மரின் குலதெய்வமான பழையனூர் காளிக்கு ஒரு சிறுகோவில் கட்டினார்.
இதில் எம்பிரான்திரி எனும் மலையாள பிராமணர் பூசாரியாக உள்ளனர்.

சித்தூரில் கொங்கன்படை விழாவை நடத்துவோர் சம்பத்து மன்றாடியார்கள்.
தமிழர்களான இவர்கள் தற்போது தமிழை மறந்துவிட்டனர்.

இப்போது விழா பற்றி பார்ப்போம்.

முதலில் கணியார் அல்லது கணியன் (பறையர்) அழைக்கப்பட்டு திருவிழா இடையூறின்றி நடக்குமா என்று 'விரிச்சி' பார்ப்பார்கள்.

பிறகு 'கும்மாட்டி',
இதன் பொருள் என்ன என்று கணிக்கமுடியவில்லை.
இதில் போர்க்கொடி ஏற்றப்படும்.
ஆண்கள் நீண்ட கழிகளில் காட்டுப்பூக்களை இலைதழையுடன் கட்டி எடுத்துவருவர்.
மாலை அம்மன் ஊர்வலத்தோடு இளைஞர்கள் போருக்கு ஊர்வலமாகச் செல்வது போல பேரொலி எழுப்பியவாறு செல்வர்.

அடுத்தது 'பாணன் - பாட்டி',
இது கொள்ளையர்களைப் பிடிக்க எடுத்த முயற்சியில் பாணனையும் அவனது மனைவியையும் சந்தேகத்தின் பெயரில் நாயர்கள் பிடித்துவந்து சம்பத்து மன்றாடியார்களிடம் விசாரணைக்காக நிறுத்திய நிகழ்வு நாடகமாக நடிக்கப்படும்.
பாணன் தனது ஊர் திருச்சிவப் பேரூர் (திருச்சூர்) என்றும் தன் மனைவியின் ஊர் அங்காடிபுரம் என்றும்
குருநாடு, குப்பநாடு, நெடியிருப்பு, தாளியூர், ஆலத்தூர், வில்லுபுத்தூர், காஞ்சிரப்புழை, காட்டூர், மஞ்சளூர், பல்லாவூர், கண்ணாடி ஆகிய ஊரில் உள்ள பாணர்களுக்கு தான் தலைவன் என்று கூறுவான்.
(மேற்கண்ட ஊர்கள் பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ளன)

அடுத்து இதேபோல இரண்டு நம்பூதிரிகள் விசாரிக்கப்பட்டமை நடித்துக்காட்டப்படும்.
இதில் நம்பூதிரிகள் தனது வீட்டில் திருட்டு போனதாகவும் மாந்திரீகம் செய்யும் பெரும்பாணனைப் பார்த்து குறிகேட்க வந்ததாகவும் கூறுவர்.

அடுத்து 'ஆசாரிவேலை', இதில் ஒரு தச்சாசாரியை பிடித்து வந்து விசாரித்ததை நடித்துக்காட்டுவர்.

பிறகு நாயக்கப்படை உளவாளிகள் ஊருக்குள் வந்து திருடியதை மாங்காய் திருடன், தேங்காய் திருடன், பலாப்பழத் திருடன் முதலிய பெயர்களில் வேடமிட்டு நடித்துக்காட்டுவர்.

பிறகு அரத்தி எனும் பறைச்சி மன்றாடியார்களிடம் போர் ஓலையைக் கொடுப்பது காட்டப்படும்.
இதை 'அரத்தி காவு தீண்டல்' என்பர்.

கொங்கன்படை படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு சித்தூர் மற்றும் நெம்மாறை ஆகிய தாலுகாக்கள் கொச்சிக்கே கேசரிவர்மரால் பரிசாகக் கொடுக்கப்பட்டன.

சித்தூரை ராணுவமயமாக்க நாயர்கள் சித்தூரில் குடியேற்றப்பட்டனர்.
அந்த விபரங்கள் கீழே,
காவல் பாடியில் இருந்து எழுவத்து வீட்டார் மற்றும் புறையத் வீட்டார்,
வெள்ளிநாழியிலிருந்து அம்பாட் வீட்டார்,
பாலக்காட்டிலிருந்து சிற்றிடத்து வீட்டார் மற்றும் தச்சாட்டு வீட்டார்,
செறுவத்தூரிலிருந்து செறுவாலைக் குடியினர்,
கண்ணாடி பகுதியிலிருந்து வாக்கையில் எனும் வீட்டார்.

பின்னால் குடிவந்த இவர்களே கொங்கன்படை விழாவின் காரியதரிசிகளாக அவ்விழாவை பொறுப்பேற்று நடத்துகின்றனர்.
குறிப்பாக அம்பாட்டு, தச்சாட்டு, பொறையத்து, எழுவத்து என நான்கு வீட்டு மலையாளிகள்.

முக்கியநாளான அன்று,
முதலில் 'பறையெடுப்பு',
இப்பொது பறைக்குப் பதில் செண்டைமேளம் அடித்து யானைகளை ஊர்வலமாக அழைத்துவருகிறார்கள்.

அடுத்து "தாயம்பாகை',
  இதில் மாரார்கள் ஒரு வித செண்டை மேளம் அடிப்பர்.
  பிறகு பூசாரி மீது அம்மன் வந்து திருநீறு பூசும்.
பிறகு 'கோலக்குழந்தைகள்',
அதாவது ஆண் அல்லது பெண் போல வேடமிட்ட குழந்தைகள் பெரியவர்கள் தோளில் அமர்ந்தபடி ஊர்வலமாகச் செல்வர்.
இதை நாயர் மற்றும் பிராமணர் செய்கிறார்கள்.

அதன் பிறகு 'தட்டின்மேல் கூத்து',
மூங்கில் களி மற்றும் தப்பைகளால் செய்யப்பட்ட பெரிய தட்டின் மீது வேடமிட்ட சிலர் ஆட அதை எட்டுபேர் தூக்கியபடி செல்வர்.
இதோடு 'என்னடி சிங்கி ஏதடி சிங்கி' என்று பாடியபடி சிங்கன்-சிங்கி நாடகத்தின் ஒரு காட்சியை வேடமிட்டு நடிப்போர் உண்டு.
'என்ன செய்வேன் ஏது செய்வேன் என் மகனே' என்று சந்திரமதி வேடமிட்டு ஒரு பெண் புலம்பியபடி வருவாள்.

பிறகு இருபது பேர் மார்பில் தோல்பட்டை கட்டி இடுப்பில் கத்தியை செருகி ஈழுவர் வேடமிட்டு ஊருக்குள் ஓடி வந்து கொங்கன்படை வந்ததைக் கூறுவர்.

பிறகு ஊர்வலம் சித்தூரம்மன் கோவிலை வந்தடையும்
கோலக்குழந்தைகள் பழையனூர் கோயிலுக்குப் போவார்கள்.
மாலை ஆகியிருக்கும் இப்போது 'பாண்டிமேளம்' அடிப்பார்கள்.
பிறகு வானவேடிக்கை நடக்கும்.

அதன்பிறகு 'படைமறித்தல்',
இரவு சிற்றிடத்து வீட்டார் கொங்கன்படை வேடமிட்டு குதிரை மீதமர்ந்து வெடிகளை வெடித்தபடி ஆரவாரமாக வருவர்.
இதற்கு தாரை தப்பட்டம் பாலத்துள்ளி பறையர்கள் முழக்குவார்கள்.

கொங்கப்படை பகவதி கோயிலை வலம்வந்து ஒரு கொங்கன் போர் ஓலையை வாசிப்பான்.
இதை வழிவழியாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு வருவதால் மளமளவென கூறுவான்.

பிறகு கொங்கன் வேடமிட்ட ஒருவன் தலைமையில் படை பந்தங்களுடன் ஊருக்குள் நுழையும்.

அடுத்த நிகழ்வு 'படை ஓட்டம்',
இதில் இரண்டு படைகளும் மோதுவது போல நடிப்பார்கள்.
நாயர்படையில் நாயர்பெண்களும் ஆண்வேடமிட்டு கையில் கிடைத்த ஆயுதங்களுடன் போரில் கலந்துகொண்டதை நடித்துக்காட்டுவர்.
சிலரை கட்டிலில் கிடத்தி தூக்கிச் செல்வர்.
சிலர் ஒப்பாரி வைப்பர்.
கொங்கன் எருமை போல மரத்தில் செய்து அதன் தலையை வெட்டுவார்கள்.

அடுத்து 'பொன்வேலை',
இதில் இரவு மூன்று மணி அளவில் தாயம்பகை அடித்து சித்தூருக்கு திரும்புவார்கள்.
பிறகு வானவேடிக்கை நடக்கும்.
பிறகு சேகரிவர்மர் வந்து போர்நடந்த இடத்தைப் பார்வையிட்டதை ஒரு மன்றாடியார் நடித்துக்காட்டுவார்.

இதன்பிறகு 'அச்சனும் மகனும்',
இது மலபாரின் இராமந்தளியில் இருந்து ஒரு பாணனும் அவரது மகனும் போர்பயிற்சி அளிக்க சித்தூர் வந்தது நடித்துக்காட்டப்படும்.

அடுத்து மலமையும் தெய்யாட்டமும்,
இதை தரக மன்றாடிகள் நடத்துவர்.
மலமைக் களி எனும் பாடலின் தாள கதிக்கு ஏற்ப கால்வைத்து ஆடும் விளையாட்டே இது.

இதற்கடுத்து தெய்யாட்டு,
பகவதி பிரதிஷ்டை செய்த நிகழ்வைக் குறிக்கும்.
கணபதி பாடல் பாடி தொடங்குவர்.

கற்றைச் செஞ்சடை முடியோன் கறைக்
கண்டன் மகன் பிள்ளையோன்
ஒற்றைக் கொம்புடையதொரு கணபதிக்கு
அபயமே ஞான்

பிறகு பகவதியுடன் சிவனை காண்பதாக

கண்டங்க கொண்டு ஞொஞ்சுடுத்து
அம்ம கையில் வளையிட்டுக் கண்ணெழுதி
கிண்டியில் நீர் கோறிக் கால்கழுகி
அம்ம சிளிவரி வெத்திலை கைபிடித்து
கைலாசத்துக்குச் சென்று
ஏழுவலம் கொண்டு நின்று
ஐயஞ்சு பூதி தெளிஞ்சம்மே
அரியிட்டுக் கைதொழுதாளே
பின் பூதப்படைகளுடன் சேர்ந்து
அவ்வண்ணம் அவளிருந்தாளே
அம்ம அக்கணத்தோடிருந்தாளே

என்ற பாடல் பாடப்படும்.

இதன்பிறகு 'பரிசைமுட்டு',
நூற்றைம்பது ஆண்டுகள் முன்பு சீக்கு எனும் முஸ்லீம் பாடிய பாடல்கள்.
இவை காலம் செல்லச்செல்ல வடிவம் மாறிவிட்டன.
இதை 'படைவெட்டுப் பாடல்கள்' என்கின்றனர்.
கோவை அப்பாச்சி கவுண்டன்பதியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஆறுமுகம் பிள்ளை கொங்கப்படை பற்றி தமிழில் எழுதியுள்ளார்.
அது (சில பாடல்கள் தவிர) இன்று கிடைக்கப்பெறவில்லை.

அடுத்து 'பள்ளு',
பள்ளர்கள் பாடும் பாடலே பள்ளு ஆகும்.
இதில் ஆடு பலியிடுவது சமீபகாலம் வரை நடந்தது.

பிறகு நான்குமணி அளவில் அனைவரும் கூடிநிற்க அம்மன் பூசாரி மீது வரும்.
மன்றாடியார் முன்னிலையில் நான்கு வீட்டு மேனோன்மாரும் வரவு செலவு கணக்கு வாசித்து அம்மனிடம் ஒப்புதல் வாங்குவார்கள்.

இதோடு விழா முடியும்.


உண்மையில் போரில் ஈடுபட்ட தமிழ் வெள்ளாளர்களுக்கு செம்பனாம்பதி, நெல்லியம்பதி, வலிய வள்ளம்பதி, கோழிப்பதி, குன்னங்காட்டுப்பதி, சர்க்கார்பதி, எடுத்தேன்பதி, தேனம்பதி, வடகரைப்பதி, பாலார்பதி, ஒழலப்பதி, பெரும்பதி, ஆட்டையாம்பதி என சித்தூர் மன்னரால் அளிக்கப்பட்ட நிலம் இன்றும் அவர்கள் கையில்தான் உள்ளது.
இவர்கள் கொங்கு வேளாளர் உறவின்முறை ஆவர்.

இராமபட்டினம், ஊத்துக்குழி, முத்தூர் ஆகிய ஊர்களின் கவுண்டர்கள் திருவிழாவிற்கு சமீபகாலம் வரை குதிரை அனுப்பியுள்ளனர்

பாலக்காடு மாவட்டத்தில் நடைபெறும் ஒரு திருவிழா இன்றும் தனது தமிழ் வடிவத்தை இன்றுவரை தக்கவைத்துள்ளமை அது நமது மண் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.

பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி:
கொங்கன்படை - வரலாற்று அடிப்படைகளும் திருவிழா நடைமுறைகளும் (1993)
_ பேரா. கு. அருணாசலக் கவுண்டர்
(Tamilheritage ebook)
 

No comments:

Post a Comment