Showing posts with label உலகக்குடிமகன். Show all posts
Showing posts with label உலகக்குடிமகன். Show all posts

Wednesday, 9 March 2016

தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?

தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?

தமிழர்கள் தோன்றிய வரலாறு பழமையானது
-மனிதன் தோன்றிய வரலாறு அதைவிட பழமையானது.

தமிழ் முதலில் தோன்றிய மொழி
-மனிதன் குரல் எழுப்பி வார்த்தைகளைப் பரிமாறிய ஒலிகள் அதைவிடப் பழமையானது.

தமிழர்கள் வீரம் மிக்கவர்கள்
-தமிழர்களை விடவும் வீரமானவர்கள் பல இனங்களில் தோன்றியுள்ளனர்.

தமிழர்கள் வல்லரசாகத் திகழ்ந்தவர்கள்
-மனித வரலாறு அதை விடவும் பெரிய பெரிய அரசுகளைப் பார்த்துள்ளது.

தமிழர்கள் அறிவாளிகள்
-மனித இனத்தில் தமிழரை விடவும் பல அறிவாளிகள் தோன்றியுள்ளனர்

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிய இனம்
-மாந்த இனம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி உள்ளது.

என்றால் எல்லாமனிதனும் ஒரே இனம்தானே?

தமிழ் இனத்திற்கு மற்ற இனங்களிடம் இல்லாத சிறப்பு என்னதான் உள்ளது?

எவனாவது இப்படி வாதாடுவான் என்று நானும் பார்க்கிறேன்.
எவனுமே இல்லை.

அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக சர்வதேசியத்தை,
தமிழியத்திற்கு எதிராக மாந்தநேயத்தை நிறுத்துவது.

அப்படி நிறுத்தினால் நமது கொள்கைகள் தோற்றுப்போகுமா?

தமிழியம் என்பது அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மாந்தர் ஒன்றுபட தடைக்கல்லா?

இல்லை. உண்மையில் தமிழியம் உலக ஒற்றுமையின் முதல் படி ஆகும்.

தமிழினம் சிறந்த இனமென்றால் மற்ற இனங்கள் கீழானவையா?

இல்லை. தமிழினமும் மற்ற இனங்கள் அளவுக்கு தன்னகத்தே பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.

எனவே, நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று கூறவே எங்கள் பெருமைகளை வெளிக்கொணர்கிறோம்.

எந்த இனமும் கீழானதோ மேலானதோ கிடையாது.

இன்று உலகமே ஒரு சிற்றூர் எனுமளவுக்கு சுருங்கிவிட்டது.
தகவல்தொடர்பும் போக்குவரத்தும் தொழில்நுட்பமும் பல மடங்கு முன்னேறி இன்று மனிதர்கள் ஒரே இனமாகவும் உலகமே ஒரே நாடாகவும் ஆகும் சூழல் உருவாகிவருகிறது.

வரலாற்றுப்படி பார்த்தால் முதலில்
1)மாந்தன் தோன்றினான்.

2)பிறகு இனங்கள் தோன்றின.
(நாடு என்பது காலத்துக்கு காலம் மாறுவது)

3)பிறகு சாதி தோன்றியது.

4)பிறகு பொருளாதார ஏற்றத்தாழ்வு தோன்றியது.

5)பிறகு மதம் தோன்றியது.

6)கடைசியாக சாதிய உட்பிரிவுகள் தோன்றின.

இவ்வாறு பல பிளவுகள் தோன்றி தோன்றி எண்ணிலடங்கா பிரிவுகள் உண்டாகிவிட்டன.

மாந்த ஒருமைப்பாட்டை நிறுவ இதைத் தலைமாற்றிச் செய்யவேண்டும்.

முதலில் சாதிய உட்பிரிவுகளைக் கடந்து சாதியாக இணைதல்.

பிறகு மதங்களைக் கடத்தல்.

பிறகு சாதி, மதம் கடந்து இனமாக இணைதல்.
(இதைத்தான் தமிழியம் வலியுறுத்துகிறது)

பிறகு (தமக்கான அரசை நிறுவி) பொருளாதார வேறுபாட்டினை ஒழித்தல்.
(இது தமிழ்தேசியம் வலியுறுத்துவது)

அதன் பிறகு இனங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் ஓரினமாதல்.

இது கட்டாயம் நடந்தே தீரும்.
மனிதர்கள் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவர்கள்.
உலகில் எந்த மூலையில் பிறந்த ஆணும் எந்த மூலையில் பிறந்த பெண்ணும் இணைந்து குழந்தை பெற முடியும்.

ஒரு மனிதன் புன்னகைப்பது இன்னொரு மனிதனுக்குப் புரியும்.
எந்த ஒரு மனிதனாலும் எந்த ஒரு மனித மொழியையும் கற்றுக்கொள்ளமுடியும்.
மனிதருக்கான உணர்ச்சிகள் பொதுவானவை.
பிற இனம் கலவாத 100% தூய்மையான இனம் என்று எதுவும் கிடையாது.

உலக மாந்தர் தமக்குள்ளான வேறுபாடுகளைக் கடந்து
எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்
எந்த நாட்டிலும் குடியேறலாம்
எந்த தொழிலையும் செய்யலாம்
எந்த வாழ்க்கை முறையையும் பின்பற்றலாம் என்ற நிலை உருவாகி
ஒரே மொழி, ஒரே நாடு என ஓரினமாக ஒன்றிணைதல் காலத்தின் கட்டாயம்.

தமிழினம் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமையமுடியும்.

இனிவரும் காலத்தில் சாதியை ஒழிப்பதுதான் எளிது
அதைக் காப்பாற்றுவதே கடினம்.

மனிதன், தான் ஒரு மாந்த இனம் என்ற வரையறைக்குப் பிறகு,
இனம் என்ற வரையறைக்குள் வருகிறான்.

இனம் என்பது இயற்கையான எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தாய்நிலத்தில்
பொதுவான மொழி,
பொதுவான பழக்கவழக்கங்கள் கொண்ட மக்களைக் குறிக்கிறது.

ஒரு இனம் தன் தாய்நிலத்தை (ராணுவ பலத்தால்) பாதுகாத்துக்கொள்வதும்
தமது நிலத்தின் வளங்களை (சரியான முறையில்) பயன்படுத்தி வாழ்ந்துகொள்வதும்
அடிப்படை உரிமை ஆகும்.

ஒரு இனத்திற்குள் இருக்கும் மக்கள் சாதி, மதம், பொருளாதாரநிலை ஆகியவற்றைக் கடந்து ஒரே அடையாளத்தை ஏற்பது மிக மிக எளிது.

உலகின் ஒரு மூலையில் இருக்கும் இனம் மற்றொரு மூலையில் இருக்கும் இனத்துடன் ஒரே அடையாளத்தின் கீழ் இணைவது சற்று கடினம்.

ஆனால் இரு இனங்கள் தத்தமது அடையாளத்துடன் ஒற்றுமையாக இருக்கமுடியும்.

இனங்களின் ஒற்றுமை நீடிக்க நீடிக்க அருகாமை இனங்களிடையே கலப்பும் பொதுமைத் தன்மையும் இயல்பாக ஏற்படும்.

தமிழியம் மாந்தவியத்தின் முதல்படியே ஆகும்.

முதல்படியில் ஏறி இரண்டாவது படியில் மனித ஒற்றுமையை அடைந்துவிடமுடியும்.

Thursday, 10 July 2014

மாந்தரைக் கொன்று நேயத்தை நிறுவி...



பால்வெளி அண்டத்தில் நாம் கண்டுபிடித்திருக்கும் 'உலகம்' என்ற கோளில் இருந்து நம் உளவாளி நீம்மோ அனுப்பிய செய்தி::::::::::

நண்பர்களுக்கு வணக்கம், நல்லவேளையாக நாம் இந்த கோளுடன் நட்புறவு கொள்ளும் முன் ஒருமுறை உளவு பார்ப்பது என்று முடிவெடுத்தோம்; இங்கே நிலஅமைவு, காலநிலை, பலவகை உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஏற்கனவே அனுப்பிவிட்டேன்; இப்போது முக்கியமான உயிரினமான மாந்தர்கள் பற்றி தற்போது கூறுகிறேன்; நான் இங்கே வந்து 183நாட்கள்(1006 உலகநாட்கள்) ஆகிவிட்டன; பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மாந்தரை சந்தித்துவிட்டேன்; இவர்கள் தோற்றம் சற்றேறக்குறைய நம்மைப்போல இருந்தாலும் இவர்கள் அறவே தெம்பில்லாதவர்கள்; பத்து நிமிடங்கள் தொடர்ந்து நிற்கமுடியாது; ஒரு நாளைக்கு மூன்றில் ஒரு பங்குதான் வேலை செய்யமுடியும்; இவர்கள் சராசரி ஆயுள் 60 ஆண்டுகள்; அதில் 20 ஆண்டுகள் பெற்றோரிடம் வாழ்கிறார்கள்; 20ஆண்டுகள் தானே வாழ்கிறார்கள்; 20ஆண்டுகள் பிள்ளைகள் கவனிப்பில் வாழ்கிறார்கள்; அதாவது பெரும்பாலான பகுதி உழைக்காமல் சோம்பேறியாக வாழ்கிறார்கள்; ஒரு நாளில் செலவளிக்கும் ஆற்றலைவிட அதிகம் உணவை உட்கொண்டு கழிவாக்குகிறார்கள்; மூளையும் திறனில்லாதது; பத்து இலக்க எண்ணைக்கூட நினைவுவைக்க முடியவில்லை(ஆனால், பத்து இலக்க தொடர்பு எண் பயன்படுத்துகின்றனர்); நான்கு இலக்க எண்களை கூட்டவோ பெருக்கவோ கூட முடியாது, கருவியின் உதவியோடுதான் செய்கின்றனர்; இவர்கள் உடலும் அழுக்கானது; இவர்கள் கண்,காது,மூக்கு,வாய்,பிறப்புறுப்புகள்,தோல்,உடலிடுக்குகள் என அனைத்திலிருந்தும் கழிவுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன; முதலில் இவர்கள் உடல் எனக்குத்தான் வீசுகிறது என்று நினைத்தேன்; ஆனால், இவர்கள் உடல் இவர்களுக்கே வீசுகிறது; இந்த அழுக்கு உடலோடு இவர்கள் உடலுறவும் கொள்கின்றனர்; இதை ஆராயப்போய் எனக்கு வாந்தியே வந்துவிட்டது; ஆனால், இவர்கள் அதில் அதிக நாட்டம் உள்ளவர்களாக உள்ளனர்; இதனாலேயே உலகத்தின் உயிர்ச்சங்கிலியில் (இயற்கைக்கு) இவர்களின் தேவையான எண்ணிக்கையைவிட அதிகம் பெருகிவிட்டனர்; அதனால் பற்றாக்குறை ஏற்பட்டு அடித்துக்கொள்கின்றனர்; நாடு, இனம், மதம், சாதி, நிறம், பாலினம் என பல காரணங்களால் பல நூறு பிரிவுகளாகப் பிரிந்து தம்மைத்தாமே அழித்துவருகின்றனர்;
சுருக்கமாக, நம் கோளில் யார் கெட்டவனோ அவன்தான் இங்கே நல்லவன்; உலக நிலப்பரப்பை ஒழுங்கற்றவகையில் நாடுகள் என்று பிரித்து வைத்துவைத்துள்ளனர்; வலிமையான நாடு எளிய நாட்டை அடக்கியாள்கிறது, எளிய நாடு அதனினும் வறிய நாட்டை அடக்குகிறது; அதைவிட வேடிக்கை, நிலம் அனைத்தும் பலகோடி துண்டுகளாக்கப்பட்டு ஒவ்வொருவர் பெயரில் காகிதம் எழுதப்பட்டு சொந்தமாக்கப்பட்டுள்ளது; அதாவது உலகத்தில் சில ஆண்டுகள் மட்டும் வாழப்போகும் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காகிதப் படிவம்(பத்திரம் என்கிறார்கள்) இருந்தால் நிலம் சொந்தமாம்; சிலர் பெரிய நிலத்தை வைத்துள்ளனர்; சிலருக்கு நிலமே இல்லை; எதையும் அதிகம் வைத்திருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தருவதில்லை, இது ஏனென்று புரியாதபோது ஆராய்ந்தேன்; 'அதிகம் வைத்திருப்பவர்'களில் சிலர் ஒருகாலத்தில் 'இல்லாதவனாக' திரிந்தவர்கள்;

'இருப்பவன்' என்றாலும் 'இல்லாதவன்' என்றாலும் 'கொடுப்பதற்கு மனமில்லாதவர்கள்'தான் எல்லாரும்.

ஒவ்வொரு நிலத்துண்டும் பெற்றோருக்குப் பிறகு பிள்ளைகள் பெயருக்கு மாற்றப்பட்டு மேலும் துண்டாடப்படுகிறது; அதாவது சிலருக்கு வீடு கட்டிக்கொள்ள இடமேயில்லாமல் தெருவில் வாழ்கிறார்கள் அவர்கள் அருகிலேயே சிலர் 'நூறுபேர் வசிக்கக்கூடிய வீட்டில்' ஓரிருவராக வசிக்கின்றனர்; சிலரிடம் பல வீடுகள் உள்ளன; ஆனால் வீடில்லாதவர்களுக்கு அவ்வீடுகளை கொடுக்கமாட்டார்கள்; அவ்வாறு கொடுத்தாலும் 'வீடில்லாதவர்கள்' 'வீட்டுக் காகிதம் வைத்திருப்பவருக்கு' பணம் கொடுக்கவேண்டும்; ஆம், பணம் என்பது வேடிக்கையான ஒன்று; இது காகிதத்திலோ உலோகத்திலோ செய்யப்பட்டு அதில் எண்கள் எழுதப்பட்டு அந்த எண்ணிற்கு ஏற்ப அதன் மதிப்பு உள்ளது; அதாவது ஒரு மாந்தர் தனக்கு பசிக்கிறது என்றால் பணம் கொடுத்துதான் உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்; அது இல்லாவிட்டால் கண்முன் உணவிருந்தாலும் சாகவேண்டியதுதான்; இந்த பணம் மேலே சொன்னேனே நாடு அதைப் பொறுத்து வெவ்வேறு மதிப்பு மாறுபாட்டுடன் உள்ளது; அதாவது ஒரு நாட்டில் ஒருவர் ஒரு காலணி வாங்கக்கொடுக்கும் தொகை இன்னொரு நாட்டில் ஒருவர் ஐம்பது காலணிகள் வாங்கத் தரும் தொகைக்கு நிகரானது; இந்த காரணத்தால் ஏழை நாட்டில் இருப்பவர்கள் தன் உறவினர்கள் அனைவரையும் பிரிந்து பணக்கார நாட்டிற்கு வந்து வேலைசெய்து பணத்தை தன் நாட்டிற்கு அனுப்புகின்றனர்;பணக்கார நாட்டினர் சிறிதளவு பணம் கொடுத்தே ஏழை நாட்டினரிடம் அதிகம் வேலைசெய்விக்கின்றனர்; இதிலிருந்தே இவர்களுக்கு பணம்தான் குறி என்பது புரிகிறது; பலரிடம் ஒருவேளை உணவுக்கு பணமில்லை; சிலர் 'பலநூறுபேருக்கு உணவளிக்கும் அளவு' பணத்தை சும்மா சேர்த்துப் பூட்டிவைத்துள்ளனர்; சிலர் பணமாக, சிலர் தங்கமாக பூட்டி வைத்துள்ளனர்; தங்கம் என்பது இன்னொரு வேடிக்கை; இது மஞ்சள் நிற பளபளப்பான உலோகம்; இதை உருக்கி பல வடிவங்கள் செய்து தன் அழுக்கு உடலில் மாட்டிக்கொள்கின்றனர்; அழகுக்காகவாம்; ஆனால் அது அழகைவிட பகட்டாகத்தான் பார்க்கப்படுகிறது; பலநூறுபேர் சேர்ந்து பல நாட்கள் குழிதோண்டினால் ஒருவர் அணிந்துகொள்ளும் தங்கம் கிடைக்கிறது; 'ஒருவர் அணியும் தங்கம் பலபேருக்கு உணவளிக்கும்' அளவு மதிப்புள்ளது என்று அதை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்; அழகுக்காக ஆயிரம் பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறபோது ஏன் தங்கத்தை எடுக்க மண்ணைத்தோண்டி நிலத்தை பாழாக்கி, நேரத்தையும் உழைப்பையும் வீணாக்குகிறார்களோ தெரியவில்லை; இவர்கள் மண்ணையும் நீரையும் காற்றையும் பாழாக்கிவருகிறார்கள்; நெகிழிப்பை என்ற ஒன்றை நாள்தோறும் பயன் படுத்துகிறார்கள்; இது மண்ணில்போட்டால் மக்கவே மக்காது; ஆனால், அதை பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போடுவதில் இவர்களுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை; இவர்களின் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மரங்களையும் இவர்கள் தயங்காமல் வெட்டிவிடுகின்றனர்; தமக்குத் தேவையானதை உருவாக்க, ஆற்றலை உற்பத்தி செய்ய கண்டதையும் எரித்து புகையாக்கி காற்றையும் மாசுபடுத்திவிட்டார்கள்; உலகத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் காற்றுமண்டலத்திலேயே ஓட்டை விழுமளவுக்கு சுற்றுசூழலை நாசமாக்கிவிட்டார்கள்; கண்டதையும் கழிவுகளையும் கலந்து நீரை மாசாக்கி, குடிநீரை குடிக்க பயன்படுத்தாமல் பல கேடு ஆலைகளுக்கு பயன்படுத்தி, நிலத்தடி நீரை வரம்பின்றி உறிஞ்சி இவர்கள் செய்யும் அடாவடி கணக்கில்லாதது;
உடன் வாழும் விலங்குகளையும் உணவுக்காக மட்டும் கொல்வதில்லை ஆடம்பரங்களுக்காக கொல்வது, கொடுமைப்படுத்தி வேலைவாங்குவது, அடிமையாக உடன்வைத்துக்கொள்வது, பணத்திற்காக கூடவைத்துக்கொள்வது(வளர்ப்பது என்கின்றனர்) என்று உயிரினங்கள் அனைத்துக்கும் அட்டூழியம் செய்கின்றனர்;
இவர்கள் மடையர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக.இவர்களின் இன்னொரு வேடிக்கையும் உள்ளது; அதுதான் கடவுள் என்பது; பல நாட்களாக எனக்கு இது புரியவில்லை; கடவுள் என்பதே எல்லாவற்றையும் இயக்குவதாகவும் அற்புத ஆற்றல்கள் பெற்றது என்றும் நம்புகிறார்கள்; அதன் உருவத்தை பலவாறு செய்து அதற்கு வீடு கட்டி (கோயில் என்கின்றனர்) பணம், பொருள், உடலுழைப்பு என்று அனைத்தையும் வாரியிரைக்கின்றனர்; இந்த செயல்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு மதம் என்ற ஒன்றை உருவாக்கி அதிலும் பிரிந்துகொண்டு அடித்துக்கொள்கின்றனர்; இத்தனை தீவிரமாக கடவுளை நம்புகிறார்கள் ஆனால் இவர்களில் யாருமே கடவுளைப் பல தலைமுறைகளாகப் பார்த்ததே கிடையாது; நமது கோளைவிட வளமான இந்த உலகத்தில் ஒவ்வொரு பத்துநொடிக்கும் ஒரு குழந்தை பசியால் இறக்கிறது என்றால் எத்தனைக் கேடடைந்துள்ளது இந்த உலகம் என்று புரிந்துகொள்ளுங்கள்;
என்னிடம் கேட்டால் நாம் ஒரு 300பேர் போதும் தொழில்நுட்பத்தில் பலமடங்கு பின்தங்கியுள்ள 'தட்டிக்கேட்க யாருமில்லாத தலைசிறந்த உயிரினம்' என்ற திமிர் பிடித்த இந்த மாந்தரைக் கொன்று நேயத்தை நிறுவிவிடலாம்; மாந்தரில்லா உலகம் பலகோடியாண்டுகள் செழித்து நிலைத்திருக்கும்; இவர்களுடன் பழகியதில் நானும் மடவெறியனாக மாறிவருவது போலத் தெரிகிறது; சிந்தனைககளும் மாறிவருகின்றன; விரைவில் திரும்பிவிடுகிறேன்; இவர்களை நம் கோள்வாழ் மக்களுடன் தொடர்புபடுத்தவேண்டாம்; 'எல்லாமும் எல்லார்க்கும் பொது' என்று எல்லாம்பெற்று வாழும் நம் மக்களும் கெட்டுவிடுவார்கள்; இவர்களை இப்படியே விட்டுவிடலாம் அழகான உலகத்தையும் அழித்து இவர்களும் அழிந்துவிடுவார்கள்; வேண்டுமானால் ஒன்று பண்ணலாம், இவர்கள் பற்றி ஒரு கதை எழுதி நம் குழந்தைகளுக்குப் பாடமாக வைக்கலாம்; எப்படி வாழக்கூடாது என்று கற்றுக்கொள்வார்கள்.
https://m.facebook.com/photo.php?fbid=429633653806960&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739